உரை
 
2. இலாவாண காண்டம்
 
20. சண்பையுள் ஒடுங்கியது
 
          பிரிவுதலைக் கொண்ட எரிபுரை வெந்நொய்
          தலைமை நீரில் தண்ணெனத் தெளித்து
          முலைமுதற் கொழுநன் நிலைபெற வேண்டும்
     50   உள்ள ஊர்தி ஊக்கம் பூட்டக்
          கள்ளக் காதல் தாங்கினள ஆகி
          இமிழ்வினை விச்சையின் இடுக்கட் பட்ட
          மகிழ்மணி நாகர் மடமகள் போல
          யூகி நீதியிற் பேதை பிணிப்புண்டு
     55   வேண்டுவயிற் சென்றகாலை
 
        47 - 55 ; பிரிவுதலைக்கொண்ட...................சென்றகாலை
 
(பொழிப்புரை) வாசவதத்தையினது பிரிவாற்றுமை என்னும் வெவ்விய நோயாகிய தீயினை யூகி தனது தலைமைத் தன்மையுடைய மொழியாகிய நீரினைத் தெளித்து அவித்து  மேலும் அவள் கொழுநன் நன்கு நிலைபெறுதல் வேண்டும் என்னும் ஊக்கமாகிய எருதினை அவளது நெஞ்சமாகிய தேரிற் பூட்டாநிற்ப, அவளும் தன் காதலை அகத்தே கரந்து மறைத்தவளாய்க் கட்டுந்தொழிலையுடைய மந்திரத்தாலே கட்டுண்டதொரு நாககன்னி்கை போன்று அவ்வியூகி கூறிய நீதி மொழிகளானே பிணிப்புண்டு அவன் விரும்பிய வழியிலே செல்லா நின்றபொழுது என்க,
 
(விளக்கம்) 47. எரிபுரை - தீயை ஒத்த.
    48. நீரை ஒத்த தன் மொழியாலே குளிரும்படி தெளியச் செய்து எனக.  தண்ணென - குளிரும்படி.
    49. முலை முதலுக்குரிய கொழுநன் என்க.
    50. உள்ள ஊர்தி. நெஞ்சாகிய தேர்; ஊக்கமாகிய குதிரையை எனினுமாம்,
    51, கள்ளக் காதல்-பிறர் அறியாதபடி மறைக்கப்பட்ட காதல் என்க.
    52. இமிழ்வினை விச்சை - கட்டுந் தொழிலையுடைய மந்திரம்