உரை
 
2. இலாவாண காண்டம்
 
20. சண்பையுள் ஒடுங்கியது
 
          செங்கோ லாளன் சேதியம் பெருமலைத்
          தாண்முதல் தழீஇ நாண்மதுக் கமழும்
          கற்சுனை நீலமுங் கணிவாய் வேங்கையும்
    60    நற்சினை நறவமு நாகமு நந்தியும்
          பருவம் அன்றியும் பயன்கொடுப் பறாஅப்
          பலவு மாவுங் குலைவளர் வாழையும்
          இருங்கனி நாவலும் இளமா துளமும்
          ஒருங்குடன் கஞலி உள்ளம் புகற்றும்
    65    மாசின் முனிவரொடு மகளிர் குழீஇயதோர்
          ஆசில் பள்ளி அறிந்துமுன் நாடி
 
         [ ஒரு தவப்பள்ளியின் மாண்பு. ]
    56 - 66 : தண்கோல்....................அறிந்து முன்னாடி
 
(பொழிப்புரை) தண்ணிய அறமல்லது வெவ்விய மறம் புகாமைக்குக் காரணமான செங்கோன்மையையுடைய விசயவாவேந்தன் ஆளாநின்ற அங்க நாட்டின்கண் உள்ளதும், அருகன் திருக்கோயில் அமைந் ததுமாகியதொரு பெரிய மலையின் எய்தி அம்மலையின் பாங்கர் உள்ளதும், புதுத்தேன் மணக்கும் சுனை நீலமலரும் கணித்தொழிலையுடைய வேங்கையும், நல்ல கிளைகளையுடைய நறவமும், நாகமும், நந்தியாட்டமும், பருவமல்லாத காலத்தும் பயன் தருதல் தவிராத பலாவும், மாவும், நெடிய குலைகளையுடைய வாழையும், கரிய கனியையுடைய நாவலும், இளமையுடைய மாதுளமும் ஒருங்கே நெருங்கிக் கண்டோரை விரும்பச் செய்யும் இயல்பையுடையதும் குற்றமற்ற துறவோரும் மகளிரும் கூடி உறைவதுமாகியதொரு தவப்பள்ளியை அடைந்து அதன் இயல்பெலாம் முன்னர் ஆராய்ந்து அறிந்து என்க,
 
(விளக்கம்) 56. தண்கோல் வெங்கோல் என்பன ஆகுபெயர்கள்.
  அவை நிரலே அறம் மறம் என்னும் பொருள் குறித்து நின்றன.
    57. செங்கோலன் என்றது அந்நாட்டு மன்னனாகிய (123)
  விசயவரனை என்க, சேதியம் - அருகன் கோயில்,
    58, தாள்முதல் - அடிப்பகுதி, நாள்மது - புதுத்தேன்,
    59. கல்சுனை நீலம் - மலையிடத்தமைந்த சுனையிலுள்ள நீலமலர்.   கணிவாய் - கணித்தொழில் வாய்ந்த; குறிஞ்சிநில மாக்கள் வேங்கை மலரும்   நாளிலே திருமணஞ் செய்து கொள்ளுதல் மரபு, இதனை ''இளவேங்கை நாள் உரைப்ப'' எனவரும் திணைமாலையானும் (திணைமாலை.18)
    ''கணிவாய் வேங்கை'' எனவரும் நற்றிணையானும் (373) அறிக.
    61. கொடுப்பு அறாஅ - கொடுத்தலிற் றவிராத.
    62. இருங்கனி - கரியபழம்; பரிய பழமுமாம்.
    63. கஞலி - நெருங்கி, புகற்றும் - விரும்புவிக்கும்.
    64. ஆசு - குற்றம். முன்நாடி அறிந்து என மாறுக.