தொடக்கம்
அயோத்தி அரசனுடைய சிறப்பியல்புகள் (168-172)
168.
அம் மாண் நகருக்கு அரசன்
அரசர்க்கு அரசன் :
செம் மாண் தனிக் கோல் உலகு ஏழினும்
செல்ல நின்றான் :
இம் மாண் கதைக்கு ஓர் இறை ஆய
இராமன் என்னும்
மொய் மாண் கழலோன் தரும் நல்
அற மூர்த்தி அன்னான்
1
உரை
169.
ஆதி மதியும், அருளும்,
அறனும், அமைவும்,
ஏது இல் மிடல் வீரமும், ஈகையும்,
எண்ணில், யாவும்,
நீதி நிலையும், இவை
நேமியினோர்க்கு நின்ற
பாதி; முழுதும் இவற்கே
பணி கேட்ப மன்னோ!
2
உரை
170.
மொய் ஆர்கலி சூழ் முது பாரில்
முகந்து தானக்
கை ஆர் புனலால் நனையாதன
கையும் இல்லை;
மெய் ஆய வேதத் துறை வேந்தருக்கு
ஏய்ந்த, யாரும்
செய்யாத யாகம் இவன்
செய்து மறந்த, மாதோ!
3
உரை
171.
தாய் ஒக்கும், அன்பில்;
தவம் ஒக்கும், நலம் பயப்பில்;
சேய் ஒக்கும், முன் நின்று ஒரு
செல்கதி உய்க்கும் நீரால்;
நோய் ஒக்கும் என்னின், மருந்து ஒக்கும்;
நுணங்கு கேள்வி
ஆயப் புகுங் கால் அறிவு ஒக்கும்
எவர்க்கும், அன்னான்.
4
உரை
172.
ஈய்ந்தே கடந்தான் இரப்போர் கடல்;எண்
இல் நுண் நூல்
ஆய்ந்தே கடந்தான் அறிவு என்னும்
அளக்கர்; வாளால்
காய்ந்தே கடந்தான் பகை வேலை;
கருத்து முற்றத்
தோய்ந்தே கடந்தான் திருவின்
தொடர் போக பௌவம்.
5
உரை
அயோத்தி அரசன் பெயர் தசரதன்
173.
வெள்ளமும் பறவையும்
விலங்கும் வேசியர்
உள்ளமும் ஒரு வழி
ஓட நின்றவன்
தள் அரும் பெரும் புகழ்த்
தயரதப் பெயர்
வள்ளல் வள் உறை அயில்
மன்னர் மன்னனே.
6
உரை
உலகம் முழுவதையும் தசரதன் எளிதில் ஆளுதல்
174.
நேமி மால் வரை மதிலாக நீள் புறப்
பாமம் மா கடல் கிடங்கு ஆகப் பல் மணி
வாமம் மாளிகை மலை ஆக மன்னற்குப்
பூமியும் அயோத்தி மா நகரம் போன்றதே.
7
உரை
தசரதன் வேலின் சிறப்பு
175.
ஆ வரும் வன்மை நேர்
அறிந்து தீட்டலால்
மேவரும் கை அடை
வேலும் தேயுமால்;
கோ உடை நெடு மணி
மகுட கோடியால்
சே அடி அணிந்த பொன்
கழலும் தேயுமால்.
8
உரை
தசரதனின் வெண்கொற்றக் குடை
176.
மண் இடை உயிர் தொறும்,
வளர்ந்து தேய்வு இன்றித்,
தண் நிழல் பரப்பவும்,
இருளைத் தள்ளவும்,
அண்ணல் தன் குடை
மதி அமையும்; ஆதலான்,
விண் இடை மதியினை,
மிகை இது என்பவே.
9
உரை
உலகின் உயிர்களுக்குத் தசரதன் ஓர் உடம்பு
177.
வயிர வான் பூண் அணி
மடங்கல் மொய்ம்பினான்
உயிர் எலாம் தன்
உயிர் ஒப்ப ஓம்பலால்,
செயிர் இலா உலகினில்
சென்று நின்று வாழ்
உயிர் எலாம் உறைவது ஓர்
உடம்பும் ஆயினான்
10
உரை
தசரதன் திகிரியின் சிறப்பு
178.
குன்று என உயரிய
குவவுத் தோளினான்
வென்றி அம் திகிரி,
வெம் பரிதி ஆம் என,
ஒன்று என, உலகு இடை
உலாவி, மீ மிசை
நின்று நின்று, உயிர்தொறும்
நெடிது காக்குமே.
11
உரை
தசரதன் உலகைக் கருத்துடன் பாதுகாத்தல்
179.
எய் என எழு பகை
எங்கும் இன்மையால்,
மொய் பொரு தினவு உறு
முழவுத் தோளினான்,
வையகம் முழுவதும்,
வறியன் ஓம்பும் ஓர்
செய் எனக் காத்து இனிது அரசு
செய்கின்றான்.
12
உரை