சனகனின் விருப்பம்

750.“மாற்றம் யாது உரைப்பது?
    மாய விற்கு நான்
தோற்ற ஆறு என, மனம்
    துளங்குகின்றதால்,
நோற்றனள் நங்கையும்,
    நொய்தின் ஐயன் வில்
ஏற்றுமேல், இடர்க் கடல்
    ஏற்றும்‘‘ என்றனன்.
1

உரை
   
 
சனகன் பணியாளரை ஏவ அவர்கள் விற்சாலையை
அணுகல்

751.என்றனன், ஏன்று தன்
    எதிர் நின்றாரை, ‘அக்
குன்று, உறழ் வரி சிலை
    கொணர்மின் ஈண்டு ‘என,
‘நன்று ‘என வணங்கினர்,
    நால்வர் ஓடினர்,
பொன் திணி கார்முகச்
    சாலை புக்கனர்.
2

உரை
   
 
சிவதனுசைப் பலர் சுமந்து வருதல்

752.உறு வலி யானையை
    ஒத்த மேனியர்,
செறி மயிர்க் கல் எனத்
    திரண்ட தோளினர்,
அறுபதி னாயிரர்,
    அளவு இல் ஆற்றலர்,
தறி மடுத்து இடையிடை
    தண்டின் தாங்கினர்.
3

உரை
   
 
சிவதனுசு சனகன் திருமுன் வந்து சேர்தல்

753.நெடு நில மகள் முதுகு
    ஆற்ற நின்று உயர்
தடம் நிமிர் வடவரை
    தானும் நாண் உற,
இடம் இலை உலகு
    என வந்தது, எங்கணும்
கடல் புரை திருநகர்
    இரைத்துக் காணவே.
4

உரை
   
 
மிதிலை மக்கள் கூற்று (754-758)

754.‘சங்கொடு சக்கரம் தரித்த
    செங்கை அச்
சிங்க ஏறு அல்லனேல்
    இதனைத் தீண்டுவான்
எங்கு உளன் ஒருவன்? இன்று
    ஏற்றின் இச் சிலை,
மங்கைதன் திரு மணம்
    வாழுமால் ‘என்பார்.
5

உரை
   
 
755.‘கைதவம் தனு எனல்,
    கனகக் குன்று ‘என்பார்;
‘எய்தவன் யாவனோ
    ஏற்றிப் பண்டு? ‘என்பார்;
‘செய்தது அத் திசைமுகன்
    தீண்டி அன்று, தன்
மொய் தவப் பெருமையின்
    முயற்சியால் ‘என்பார்.
6

உரை
   
 
756.‘திண் நெடு மேருவைத்
    திரட்டிற்றே? என்பார்;
‘வண்ண வான் கடல்
    பண்டு கடைந்த மத்து ‘என்பார்;
‘அண்ணல் வாள் அரவினுக்கு
    அரசனோ? ‘என்பார்;
‘விண் இடு நெடிய வில்
    வீழ்ந்ததோ? ‘என்பார்.
7

உரை
   
 
757.‘என் இது கொணர்க
    என இயம்பினான்? ‘என்பார்;
‘மன்னவர் உளர் கொலோ
    மதி கெட்டார்? ‘என்பார்;
‘முன்னை ஊழ் வினையினால்
    முடிக்கல் ஆம் ‘என்பார்;
‘கன்னியும் இச்சிலை
    காணுமோ? ‘என்பார்.
8

உரை
   
 
758.‘இச் சிலை உதைத்த கோற்கு
    இலக்கம் யாது? ‘என்பார்;
‘நச்சு இலை நங்கைமேல்
    நாட்டு வேந்து ‘என்பார்;
‘நிச்சயம் எடுக்குங்கொல்
    நேமியான்? ‘என்பார்
‘சிற்சிலர் விதி செய்த
    தீமைதான் ‘என்பார்.
9

உரை
   
 
759.மொய்த்தனர் இன்னணம்
    மொழிய, மன்னன் முன்
உய்த்தனர், நிலம் முதுகு
    உளுக்கிக் கீழ் உற
வைத்தனர்; ‘வாங்குநர்
    யாவரோ? ‘எனக்
கைத்தலம் விதிர்த்தனர்,
    கண்ட வேந்தரே.
10

உரை
   
 
760.போதகம் அனையவன்
    பொலிவு நோக்கி, அவ்
வேதனை தருகின்ற
    வில்லை நோக்கித், தன்
மாதினை நோக்குவான்
    மனத்தை நோக்கிய,
கோதமன் காதலன்,
    கூறல் மேயினான்.
11

உரை
   
 
761.‘இமையவில் வாங்கிய
    ஈசன், பங்கு உறை
உமையினை இகழ்ந்தனன்
    என்ன, ஓங்கிய
கமை அறு சினத்தன், இக்
    கார்முகம் கொளாச்,
சமையுறு தக்கனார்
    வேள்வி சாரவே.
12

உரை
   
 
762.‘உக்கன பல்லொடு கரங்கள் ஓடினர்
புக்கனர் வானவர் புகாத சூழல்கள்.
தக்கன் நல் வேள்வியில் தழலும் ஆறின
முக்கண் எண் தோளவன் முனிவும் ஆறினான்.
13

உரை
   
 
763.‘தாள் உடை வரி சிலை,
    சம்பு, உம்பர்தம்
நாள் உடைமையின், அவர்
    நடுக்கம் நோக்கி, இக்
கோள் உடை விடை அனான்
    குலத்துள் தோன்றிய
வாள் உடை உழவன் ஓர்
    மன்னன்பால் வைத்தான்.
14

உரை
   
 
சானகியின் வரலாறு

764.‘கார்முக வலியை யான் கழறல் வேண்டும் ஓ?
வார் சடை அரன் நிகர் வரத! நீ அலால்
யார் உளர் அறிபவர்? இவற்குத் தோன்றிய
தேர்முக அல்குலாள் செவ்வி கேள்! ‘எனா.
15

உரை
   
 
765.‘இரும்பு அனைய கரு நெடும் கோட்டு
    இணை ஏற்றின் பணை ஏற்ற
பெரும் பியலில், பளிக்கு நுகம் பிணைத்து,
    அதனோடு அணைத்து ஈர்க்கும்
வரம்பு இல் மணிப் பொன் கலப்பை
    வயிரத்திண் கொழு மடுத்திட்டு,
உரம் பொரு இல் நிலம், வேள்விக்கு,
    அலகு இல் பல சால், உழுதேம்.
16

உரை
   
 
766.‘உழுகின்ற கொழும் முகத்தின்,
    உதிக்கின்ற கதிரின் ஒளி
பொழிகின்ற புவி மடந்தை
    உரு வெளிப்பட்டு எனப், புணரி
எழுகின்ற தெள் அமுதோடு
    எழுந்தவளும் இழிந்து ஒதுங்கித்
தொழுகின்ற நல் நலத்துப்
    பெண் அரசி தோன்றினாள்.
17

உரை
   
 
767.‘குணங்களை என் கூறுவது?
    கொம்பினைச் சேர்ந்து அவை உய்யப்
பிணங்குவன; அழகு இவளைத்
    தவம் செய்து பெற்றது காண்!
கணம் குழையாள் எழுந்ததன்பின்,
    கதிர் வானில் கங்கை எனும்
அணங்கு இழியப் பொலிவு இழந்த
    ஆறு ஒத்தார் வேறு உற்றார்.
18

உரை
   
 
768.‘சித்திரம் இங்கு இது ஒப்பது எங்கு உண்டு? செய்வினை ஆல்
வித்தகமும் விதிவசமும் வேறு வேறு ஏ புறம் கிடப்ப
அத் திருவை அமரர் குலம் ஆதரித்தால் என அறிஞ!
இத் திருவை நில வேந்தர் எல்லாரும் காதலித்தார்.
19

உரை
   
 
769.“கலித் தானைக் கடலோடும்
    கைத் தானக் களிற்று அரசர்,
ஒலித்து ஆழி என வந்து மணம்
    மொழிந்தார்க்கு, ‘எதிர் உடுத்த
புலித் தானைக் களிற்று உரிவைப்
    போர்வையான் போர் வில்லை
வலித்தானே மங்கை திரு மணத்தான் ‘
    என்று, யாம் வலித்தேம்.‘‘
20

உரை
   
 
770.‘வல் வில்லுக்கு ஆற்றார்கள், மாரன்
    வேள் வளை கரும்பின்
மெல் வில்லுக்கு ஆற்றாராய்த்,
    தாம் எம்மை விளிகுற்றார்,
கல் வில்லோடு உடன் வந்த
    கணம் குழையைக் காதலித்துச்,
சொல் வில்லால் உலகு அளிப்பாய்!
    போர் செய்யத் தொடங்கினார். ‘
21

உரை
   
 
771.‘இம் மன்னன் பெரும் சேனை,
    ஈவுதனை மேல் கொண்ட
செம்மன்னர் புகழ் வேட்ட
    பொருளே போல் தேய்ந்தது ஆல்,
பொம் என்ன வண்டு அலம்பும்
    புரிகுழலைக் காதலித்த
அம் மன்னர் சேனை, தமது
    ஆசை போல், ஆயிற்று, ஆல்.‘
22

உரை
   
 
772.‘மல் காக்கும், மணிப் புயத்து
    மன்னன் இவன், மழ விடை யோன்
வில் காக்கும் வாள் அமருள்
    மெலிகின்றான் என இரங்கி,
எல் காக்கும் முடி விண்ணோர்
    படை ஈந்தார் என, வேந்தர்
அல் காக்கை கூகையைக் கண்டு
    அஞ்சின ஆம் என, அகன்றார். ‘
23

உரை
   
 
773.‘அன்று முதல் இன்று அளவும்
    ஆரும் இந்தச் சிலை அருகு
சென்றும் இலர்; போய் ஒளித்த
    தேர் வேந்தர் திரிந்தும் இலர்;
என்றும் இனி மணம் இல்லை
    என்று இருந்தேம்; இவன் ஏற்றின்
நன்று, மலர்க் குழல் சீதை
    நலம் பழுது ஆகாது, ‘ என்றான்.
24

உரை
   
 
774.‘நினைந்து முனி பகர்ந்த எலாம்
    நெறி உன்னி, அறிவனும் தன்
புனைந்த சடை முடி துளக்கிப்,
    போர் ஏற்றின் முகம் பார்த்தான்;
வனைந்து அனைய திரு மேனி
    வள்ளலும், அம் மாதவத்தோன்
நினைந்த எலாம் நினைந்து, அந்த
    நெடும் சிலையை நோக்கினான்.
25

உரை
   
 
இராமன் எழுதல்

775.பொழிந்த நெய் ஆகுதி வாய் வழி பொங்கி
எழுந்த கொழும் கனல் என்ன எழுந்தான்;
‘அழிந்தது வில் ‘என விண்ணவர் ஆர்த்தார்;
மொழிந்தனர் ஆசிகள் முப்பகை வென்றார்.
26

உரை
   
 
காமன் மங்கையர்மேல் கணை தொடுத்தல்

776.தூய தவங்கள் தொடங்கிய தொல்லோன்
ஏயவன் வல் வில் இறுப்பதன் முன்னம்
சேயிழை மங்கையர் சிந்தை தொறு எய்யா
ஆயிரம் வில்லை அனங்கன் இறுத்தான்.
27

உரை
   
 
மாதர்கள் கூற்று (777-780)

777.‘காணும் நெடும் சிலை
    கால் வலிது! ‘என்பார்;
‘நாண் உடை நங்கை
    நலம் கிளர் செங்கேழ்ப்
பாணி இவன்
    படர் செங்கை படாதேல்,
வாள் நுதல் மங்கையும்
    வாழ்வு இலள்! ‘என்பார்.
28

உரை
   
 
778.கரங்கள் குவித்து, இரு
    கண்கள் பனிப்ப,
‘இரும் களிறு இச் சிலை
    ஏற்றிலன் ஆயின்
நரந்தம் நறைக் குழல்
    நங்கையும் நாமும்
முருங்கு எரியில் புக
    மூழ்குதும்! ‘என்பார்.
29

உரை
   
 
779.“வள்ளல் மணத்தை மகிழ்ந்தனன் என்றால்
கொள்“ என முன்பு கொடுப்பதை அல்லால்
வெள்ளம் அணைத்தவன் வில்லை எடுத்து இப்
பிள்ளை முன் இட்டது பேதைமை! ‘என்பார்.
30

உரை
   
 
780.‘ஞான முனிக்கு ஒரு நாண் இலை! ‘என்பார்;
‘கோன் இவனில் கொடியார் இலை! ‘என்பார்;
‘மானவன் இச் சிலை கால் வளையானேல்
பீன தனத்தவள் பேறு இலள்! ‘என்பார்.
31

உரை
   
 
இராமன் வில்நோக்கி நடத்தல்

781.தோகையர் இன்னன சொல்லிட நல்லோர்
ஓகை விளம்பிட உம்பர் உவப்ப
மாக மடங்கலும் மால் விடையும் பொன்
நாகமும் நாகமும் நாண நடந்தான்.
32

உரை
   
 
இராமன் வில்லை எடுத்தல்

782.ஆடகம் மா மலை அன்னது தன்னைத்
‘தேட அரு மா மணி சீதை எனும் பொன்
சூடக வால் வளை சூட்டிட நீட்டும்
ஏடு அவிழ் மாலை இது ‘என்ன எடுத்தான்.
33

உரை
   
 
வில் ஒடிதல்

783.தடுத்து இமையாமல் இருந்தவர் தாளின்
மடுத்ததும் நாண் நுதி வைத்ததும் நோக்கார்
கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால்
எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்.
34

உரை
   
 
வில் முறிந்ததால் எழுந்த ஒலி

784.‘ஆர் இடைப் புகுதும் நாம்? ‘என்று
    அமரர்கள், ‘கமலத்தோன்தன்
பேர் உடை அண்டம் கோளம்
    பிளந்தது ‘என்று, ஏங்கி நைந்தார்;
பார் இடை உற்ற தன்மை
    பகர்வது என்? பாரைத் தாங்கி
வேர் எனக் கிடந்த நாகம்
    இடி என வெருவிற்று அன்றே!
35

உரை
   
 
தேவர்களின் மகிழ்ச்சி

785.பூமழை சொரிந்தார் விண்ணோர்;
    பொன் மழை பொழிந்த மேகம்;
பாம மா கடல்கள் எல்லாம்
    பல் மணி தூவி ஆர்த்த;
கோமுனிக் கணங்கள் எல்லாம்
    கூறின ஆசி; ‘கொற்ற
நாமம் வேல் சனகன் இன்று என்
    நல் வினை பயந்தது என்றான்.
36

உரை
   
 
நகர மாந்தரின் மகிழ்ச்சி (786-790)

786.‘மாலையும் இழையும் சாந்தும்
    சுண்ணமும் வாச நெய்யும்
வேலை வெண் முத்தும் பொன்னும்
    காசும் நுண் துகிலும் வீசிப்
பால் வளை அமிர்து அளாய
    பல் இயம் துவைப்ப, முந்நீர்
ஓல் கிளர்ந்து உவா உற்று என்ன,
    ஒலி நகர் கிளர்ந்தது அன்றே!
37

உரை
   
 
787.நல் இயல் மகர வீணைத்
    தேன் உக, நகையும் தோடும்
வில் இட, வாளும் வீச,
    வேல் கிடந்து அனைய நாட்டத்து,
எல் இயல் மதியம் அன்ன
    முகத்தியர், எழிலி தோன்றச்
சொல்லிய பருவம் நோக்கும்
    தோகையின், ஆடினாரே.
38

உரை
   
 
788.உண் நறவு அருந்தினாரின் சிவந்து
    ஒளிர் கருங்கண் மாதர்,
புண் உறு புலவி நீங்கக் கொழுநரைப்
    புல்லிக் கொண்டார்;
வெண்ணிற மேகம் மேல் மேல்
    விரி கடல் பருகுமா போல்,
மண் நிறை வேந்தன் செல்வம் வறியவர்
    முகந்து கொண்டார்.
39

உரை
   
 
789.வயிரியர் மதுர கீதம்,
    மங்கையர் அமுத கீதம்,
செயிரியர் மகர யாழின்
    தேம் பிழி தயெ்வ கீதம்,
பயிர் கிளை வேயின் கீதம், என்று
    இவை பருகி, விண்ணோர்
உயிர் உடை உடம்பும் எல்லாம்
    ஓவியம் ஒப்ப நின்றார்.
40

உரை
   
 
790.ஐயன் வில் இறுத்த ஆற்றல்
    காணிய, அமரர் நாட்டுத்
தையலார் இழிந்து பாரின்
    மகளிரைத் தழுவிக் கொண்டார்;
செய்கையின் வடிவின் ஆடல்
    பாடலில் தெளிதல் தேற்றார்;
மை அரி நெடுங்கண் நோக்கம்
    இமைத்தலும், மயங்கி நின்றார்.
41

உரை
   
 
நகரமாந்தர்கூற்று (791-792)

791.‘தயரதன் புதல்வன் ‘என்பார்;
    ‘தாமரைக் கண்ணன் ‘என்பார்;
‘புயல் இவன் மேனி ‘என்பார்;
    ‘பூவையும் பொருவும் ‘என்பார்;
‘மயல் உடைத்து உலகம் ‘என்பார்;
    ‘மானுடன் அல்லன் ‘என்பார்;
‘கயல் பொரு கடலுள் வைகும்
    கடவுளே காணும்! ‘என்பார்.
42

உரை
   
 
792.‘நம்பியைக் காண நங்கைக்கு
    ஆயிரம் நயனம் வேண்டும்,
கொம்பினைக் காணும் தோறும்
    குரிசிற்கும் அன்னதேயால்,
தம்பியைக் காண்மின்! ‘என்பார்;
    ‘தவம் உடைத்து உலகம் ‘என்பார்;
‘இம்பர் இந் நகரில் தந்த
    முனிவனை இறைஞ்சும்! ‘என்பார்.
43

உரை
   
 
சீதையின் நிலை (793-794)

793.இற்று இவண் இன்னது ஆக,
    மதியொடும் எல்லி நீங்கப்
பெற்று, உயிர் பின்னும் காணும்
    ஆசையால் சிறிது பெற்ற,
சிற்றிடைப் பெரிய கொங்கைச்
    சேய் அரிக் கரிய வாள் கண்
பொன் தொடி மடந்தைக்கு, அப்பால்
    உற்றது புகலல் உற்றாம்.
44

உரை
   
 
794.ஊசல் ஆடு உயிரினோடும்
    உருகு பூம் பள்ளி நீங்கிப்,
பாசிழை மகளிர் சூழப் போய்,
    ஒரு பளிக்கு மாடக்
காசு இல் தாமரையின் பொய்கைச்
    சந்திரகாந்தம் ஈன்ற
சீத நீர் தெளித்த மென் பூஞ்
    சேக்கையை, அரிதின் சேர்ந்தாள்.
45

உரை
   
 
சீதையின் ஆற்றாமைக் கூற்றுக்கள். (795-803)

795.“பெண் இவண் உற்றது என்னும்
    பெருமையால், அருமை ஆன
வண்ணமும் இலைகளாலே காட்டலால்,
    வாட்டம் தீர்ந்தேன்
தண் நறுங் கமலங்காள்! என்
    தளிர் நிறம் உண்ட கண்ணின்
உள் நிறம் காட்டினீர் என்
    உயிர் தர உலோவினீரே!‘‘
46

உரை
   
 
796.“நாண் உலாவு மேருவோடு
    நாண் உலாவு பாணியும்,
தூண் உலாவு தோளும், வாளி
    ஊடு உலாவு தூணியும்,
வாள் நிலாவின் நூல் உலாவும்
    மாலை மார்பும், மீளவும்
காணல் ஆகும் ஆகின், ஆவி
    காணல் ஆகுமே கொலாம்!‘‘
47

உரை
   
 
797.“விண் தலம் கலந்து இலங்கு
    திங்கேளாடு மீது சூழ்
வண்டு அலம்பு அலங்கல் தங்கு
    பங்கியோடும் வார்சிலைக்
கொண்டல் ஒன்று இரண்டு கண்ணின்
    மொண்டுகொண்டு என் ஆவியை
உண்டது உண்டு, என் நெஞ்சின் இன்றும்
    உண்டு, அது என்றும் உண்டு, அரோ!‘‘
48

உரை
   
 
798.“பஞ்சு அரங்கு தீயின், ஆவி
    பற்ற நீடு கொற்ற வில்
வெம் சரங்கள், நெஞ்சு அரங்க
    வெய்ய காமன் எய்யவே,
சஞ்சலம் கலந்த போது,
    தையலாரை உய்ய வந்து,
‘அஞ்சல்! அஞ்சல்! ‘என்கிலாத
    ஆண்மை, என்ன ஆண்மையே?“
49

உரை
   
 
799.“இளைக்கலாத கொங்கைகாள்!
    எழுந்து விம்மி என் செய்தீர்?
முளைக்கலா மதிக் கொழுந்து
    போலும் வாள் முகத்தினான்,
வளைக்கலாத வில் கையாளி,
    வள்ளல், மார்பின் உள் உறத்
திளைக்கல் ஆகும் ஆகில், ஆன
    செய் தவங்கள் செய்ம்மினே!‘‘
50

உரை
   
 
800.“எங்கு நின்று எழுந்தது இந்த
    இந்து வந்து? என் நெஞ்சு உலாய்
அங்கி என்று அனங்கன் எய்த
    அம்பின் வந்த சிந்தை நோய்
பொங்குகின்ற கொங்கைமேல் விடம்
    பொழிந்தது என்னினும்
கங்குல்வந்த திங்கள் அன்று,
    அகம் களங்கம் இல்லையே! ‘‘
51

உரை
   
 
801.“அடர்ந்து வந்து அனங்கன் நெஞ்சு
    அழன்று சிந்தும் அம்பு எனும்
விடம் குடைந்த மெய்யின் நின்று
    வெந்திடாது எழுந்து, வெம்
கடம் துதைந்த காரியானை அன்ன
    காளை தாள் அடைந்து
உடன் தொடர்ந்து போன ஆவி,
    வந்த ஆறு என்? உள்ளமே!‘‘
52

உரை
   
 
802.“விண்ணுளே எழுந்த மேகம்,
    மார்பின் நூலின் மின்னொடு இம்
மண்ணுளே இழிந்தது என்ன,
    வந்து போன மைந்தனார்,
எண்ணுளே ஏ இருந்தபோதும்
    யாவர் என்று தேர்கிலேன்,
கண்ணுளே ஏ இருந்தபோதும்
    என் கொல் காண்கிலாதவே?‘‘
53

உரை
   
 
803.“பெய் கடல் பிறந்து அயல்
    பிறக்க ஒணா மருந்து பெற்று,
ஐய பொன் கலத்தொடு
    அங்கை விட்டு இருந்த ஆதர் போல்,
மொய் கிடக்கும் அண்ணல் தோள்
    முயங்கிடாது, முன்னமே
கை கடக்க விட்டு இருந்து,
    கட்டு உரைப்பது என் கொலோ?‘‘
54

உரை
   
 
கவிக்கூற்று

804.என்று கொண்டு, உள் நைந்து நைந்து,
    இரங்கி விம்மி விம்மியே,
பொன் திணிந்த கொங்கை மங்கை
    இடரின் மூழ்கு போழ்தின்வாய்,
குன்றம் அன்ன சிலை முறிந்த கொள்கை
    கண்டு, குளிர் மனத்து
ஒன்றும் உண் கண் மதி முகத்து
    ஒருத்தி செய்தது, உரை செய்வாம்.
55

உரை
   
 
தோழி நீலமாலை வருதல்

805.வடங்களும் குழைகளும் வான வில் இடத்
தொடர்ந்து பூங் குழல்களும் துகிலும் சோர்தர
நுடங்கிய மின் என நொய்தின் எய்தினாள்
நெடுந்தடம் கிடந்த கண் நீலமாலையே.
56

உரை
   
 
சீதை தோழியை வினாதல்

806.வந்து அடி வணங்கிலள் வழங்கும் ஓதையள்
அந்தம் இல் உவகையள் ஆடிப் பாடினாள்;
‘சிந்தையுள் மகிழ்ச்சியும் புகுந்த செய்கையும்
சுந்தரி! சொல் ‘எனத் தொழுது சொல்லுவாள்.
57

உரை
   
 
வில் முறிந்ததை நீலமாலை கூறுதல் (807-810)

807.“கயரத துரக மாக்
    கடலன், கல்வியன்,
தயரதன் எனும் பெயர்த்
    தனிச் செல் நேமியான்,
புயல் பொழி தட கையான்
    புதல்வன், பூங்கணை
மயல் விளை மதனற்கும்
    வடிவு மேன்மையான்.‘‘
58

உரை
   
 
808.“மரமாமரம் இவை என
    வலிய தோளினான்,
அரா அணை அமலன் என்று
    அயிர்க்கும் ஆற்றலான்,
இராமன் என்பது பெயர்,
    இளைய கோவொடும்
பரா வரு முனியொடும்
    பதி வந்து எய்தினான்.‘‘
59

உரை
   
 
809.“பூண் இயல் மொய்ம்பினன்,
    ‘புனிதன் எய்தவில்
காணிய வந்தனன் ‘என்னக்,
    காவலன்
ஆணையின் அடைந்த வில்
    அதனை, ஆண் தகை
நாண் இனிது ஏற்றினான்,
    நடுங்கிற்று உம்பரே.‘‘
60

உரை
   
 
810.“மாத்திரை அளவில் தாள்
    மடுத்து, முன் பயில்
சூத்திரம் இது எனத்
    தோளின் வாங்கினான்;
ஏத்தினர் இமையவர்,
    இழிந்த பூ மழை,
வேத்து அவை நடுக்கு உற
    முறிந்து வீழ்ந்ததே!‘‘
61

உரை
   
 
சீதை ஐயம் நீங்குதல்

811.கோமுனி உடன் வரு
    கொண்டல் என்ற பின்,
தாமரைக் கண்ணினான் என்ற
    தன்மையால்,
‘ஆம் அவனே கொல்! ‘என்று
    ஐயம் நீங்கினாள்,
வாம மேகலை இற
    வளர்ந்தது அல்குலே.
62

உரை
   
 
சீதையின் உறுதிப்பாடு

812.இல்லையே நுசுப்பு என்பார்
    உண்டு உண்டு என்னவும்,
மெல் இயல் முலைகளும்
    விம்ம விம்முவாள்,
‘சொல்லிய குறியின், அத்
    தோன்றலே அவன்!
அல்லனேல், இறப்பன்! ‘என்று,
    அகத்துள் உன்னினாள்.
63

உரை
   
 
சனகன் கோசிகனை நோக்கிக் கூறத் தொடங்குதல்

813.ஆசை உற்று அயர்பவள் அன்னள் ஆயினள்
பாசடைக் கமலத்தோன் படைத்த வில் இறும்
ஓசையின் பெரியது ஓர் உவகை எய்தி அக்
கோசிகற்கு ஒரு மொழி சனகன் கூறுவான்.
64

உரை
   
 
சனகன் கூறிய மொழி

814.‘உரைசெய் எம்பெரும!
    உன் புதல்வன் வேள்விதான்
விரைவின் இன்று ஒரு பகல்
    முடித்தல் வேட்கையோ?
முரசு எறிந்து, அதிர் கழல்
    முழங்கு தானை அவ்
அரசையும் இவ் வழி
    அழைத்தல், வேட்கையோ? ‘
65

உரை
   
 
815.மல் வலான் அவ் உரை பகர மாதவன்
‘ஒல்லையில் அவனும் வந்து உறுதல் நன்று ‘என
எல்லை இல் உவகையான் ‘இயைந்த ஆறு எலாம்
சொல்லுக ‘என்று ஓலையும் தூதும் போக்கினான்.
66

உரை