இராமன் வனம் புக்க காலநிலை

2088.பூரியர் புணர் மாதர்
    பொது மனம் என, மன்னும்
ஈரமும் உளது இல் என்று
    அறிவு அரும் இளவேனில்,
ஆரியன் வரலோடும்,
    அமுது அளவிய சீதக்
கார் உறு குறி வானம்
    காட்டியது அவண் எங்கும்.
1

உரை
   
 
இராமன் சென்ற வழியின் இயல்பு

2089.வெயில் இளம் நிலவே போல்
    விரி கதிர் இடை வீசப்
பயில் மரம் நிழல் ஈனப்
    பனி புரை துளி மேகம்
புயல் தர, இள மென் கால்
    பூ! அளவியது எய்த,
மயில் இனம் நடம் ஆடும்
    வழி இனியன போனார்.
2

உரை
   
 
இராமன் சீதாபிராட்டிக்கு வழியிடைக் காட்சி மகிழ்ந்து
காட்டல் (2090-2105)

2090.‘மன்றலின் மலி கோதை
    மயில் இயல் மடமானே!
இன் துயில் வதி கோபத்து
    இனம் விரவின எங்கும்
கொன்றைகள் சொரி போதின்
    குப்பைகள், குலம் மாலைப்
பொன் திணி மணி மானப்
    பொலிவன பல காணாய். ‘
3

உரை
   
 
2091.‘பாண் இனம் ஞிமிறு ஆகப்
    படும் மழை பணை ஆக,
நாணின தொகு பீலி
    கோலின நடம் ஆடல்,
பூண் இயல்! நின சாயல்
    பொலிவது, பல கண்ணில்
காணிய எனல் ஆகும்
    களி மயில் இவை காணாய். ‘
4

உரை
   
 
2092.‘சேந்து ஒளி விரி செவ்வாய்ப்
    பைங்கிளி செறி கோலக்
காந்தளின் மலர் ஏறிக்
    கோதுவ, கவின் ஆரும்
மாந் தளிர் நறுமேனி
    மங்கை! நின் மணி முன்கை
எந்தின எனல் ஆகும்
    இயல்பின இவை காணாய்!
5

உரை
   
 
2093.‘நெய்ஞ் ஞிறை நெடு வேலின்
    நிறம் உறு திறம் முற்றிக்
கைஞ் ஞிறை நிமிர் கண்ணாய்!
    கருதின இனம் என்றே
மெய்ஞ் ஞிறை விரி சாயல்
    கண்டு நின் விழி கண்டு
மஞ்ஞையும் மட மானும்
    வருவன இவை காணாய். ‘
6

உரை
   
 
2094.‘பூவலர் குரவோடும்
    புடை தவழ் பிடவு ஈனும்
மா அலர் சொரி சூழல்
    துயில் எழும் மயில் ஒன்றின்
தூவி இன் மணம் நாறத்
    துணை பிரி பெடைதான், அச்
சேவலொடு உற ஊடித்
    திரிவதன் இயல் காணாய். ‘
7

உரை
   
 
2095.‘அருந்ததி அனையாளே!
    அமுதினும் இனியாளே!
செருந்தியின் மலர் தாங்கும்
    செறி இதழின் அசோகம்,
பொருந்திய களி வண்டில்
    பொதிவன, பொன் ஊதும்
இருந்தையின் எழு தீ ஒத்து
    எழுவது ஒர் இயல் பாராய். ‘
8

உரை
   
 
2096.‘ஏந்து இளம் முலையாளே!
    எழுதரும் எழிலாளே!
காந்தளின் முகை கண்ணில்
    கண்டு, ஒரு களி மஞ்ஞை,
‘பாந்தள் இது ‘என உன்னிக்
    கவ்வியபடி பாராத்,
தேம் தளவுகள் செய்யும்
    சிறு குறு நகை காணாய். ‘
9

உரை
   
 
2097.‘குன்று உறை வய மாவின்
    குருளையும் இருள் சிந்திப்
பின்றின எனல் ஆகும்
    பிடி தரு சிறு மாவும்
அன்றல பிரிவு ஒல்லா
    அண்டர்தம் மனை ஆவின்
கன்றொடு விளையாடும்
    களியன பல காணாய். ‘
10

உரை
   
 
2098.‘அகில் புரை குழல் மாதே!
    அணி இழை எனல் ஆகும்
நகும் மலர் நிறை மாலைக்
    கொம்புகள், நதி தோறும்
துகில் புரை நுரை நீரில்
    தோய்வன, துறை ஆடும்
முகிழ் இள முலையாரில்
    மூழ்குவ பல காணாய். ‘
11

உரை
   
 
2099.‘முற்றுறும் முகை கிண்டி
    முரல்கில சிறு தும்பி,
வில் திரு நுதல் மாதே!
    அம் மலர் விரி கோங்கின்
சுற்று உறும் மலர் ஏறித்
    துயில்வன சுடர் மின்னும்
பொன் தகடு உறும் நீலம்
    புரைவன பல காணாய். ‘
12

உரை
   
 
2100.‘கூடிய நறை வாயில்
    கொண்டன, விழிகொள்ளா
மூடிய களி மன்னும்
    முடுகின, நெறி காணா,
ஆடிய சிறை மா வண்டு
    அந்தரின் இசை முன்னம்
பாடிய பெடை கண்ணா
    வருவன, பல காணாய். ‘
13

உரை
   
 
2101.‘கன்னியர் அணி கோலம்
    கற்று அறிகுநர் என்னப்
பொன் அணி நற வேங்கை
    கோங்குகள் புது மென் பூ,
அன்னம் மெல் நடையாய்!
    நின் அளி வளர் அளகப் பூம்
சின்ன நல் மலர் மானச்
    சிந்துவ பல காணாய். ‘
14

உரை
   
 
2102.‘மணம் கிளர் மலர் வாரும்
    மாருதம் வர, வாசக்
கணம் கிளர்தரு சுண்ணம்
    கல் இடையன கானம் அத்து,
அணங்கினும் இனியாய்! உன்
    அணி வடம் முலை முன்றில்
சுணங்கு இனம் அவை மானத்
    துறுவன பல காணாய். ‘
15

உரை
   
 
2103.‘அடி இணை பொறை கல்லா
    என்று கொல், அதர் எங்கும்,
இடையிடை மலர் சிந்தும்
    இனம் மரம் இவை காணாய்!
கொடியினொடு இள வாசக்
    கொம்புகள், குயிலே! உன்
துடி புரை இடை மானத்
    துவள்வன இவை காணாய்! ‘
16

உரை
   
 
2104.‘வாள் புரை விழியாய்! உன்
    மலர் அடி அணி மானத்
தாள் புரை தளிர் வைகும்
    தகை ஞிமிறு இவை காணாய்!
கோள் புரை இருள் வாசக்
    குழல் புரை மழை காணாய்!
தோள் புரை இளம் வேயின்
    தொகுதிகள் இவை காணாய்!
17

உரை
   
 
2105.‘பூ நனை சினை துன்றிப்
    புள் இடையிடை பம்பி,
நால் நிற நளிர் வல்லி
    கொடி நவை இல பல்கி,
மான் இனம் மயில், மாலைக்
    குயில் இனம் வதி கானம்,
தீ நிகர் தொழில் ஆடைத்
    திரை பொருவன பாராய்! ‘
18

உரை
   
 
சூரியாத்தமனம்

2106.என்று, நல் மடவாேளாடு
    இனிதினின் விளையாடிப்
பொன் திணி திரள் தோளான்
    போயினன் நெறி; போதும்
சென்றது குடபால்; அத்
    திருமலை இது அன்றோ?
என்றனன், வினை வென்றோர்
    மேவு இடம் எனலோடும்
19

உரை
   
 
பரத்துவாச முனிவன் இராமனை எதிர்கொள்ளல்

2107.அருத்தியன் அகம் விம்மும்
    அன்பினன், ‘நெடும் நாளில்
திருத்திய வினை முற்றிற்று
    இன்று ‘எனல் தரெிகின்றான்,
பரத்துவன் எனும் நாமப்
    பரமுனி பவ நோயின்
மருத்துவன் அனையானை
    வரவு எதிர்கொள வந்தான்.
20

உரை
   
 
பரத்துவாச முனிவன் இயல்பு (2108-2109)

2108.குடையினன், நிமிர் கோலன்,
    குண்டிகையினன், மூரிச்
சடையினன், உரி மானின்
    சருமன், நல் மர நாரின்
உடையினன், மயிர் நாலும்
    உருவினன், உயிர் பேணும்
நடையினன், மறை நாலும்
    நடம் நவில்தரு நாவான்.
21

உரை
   
 
2109.செந்தழல் புரி செல்வன்,
    திசை முக முனி செவ்வே
தந்தன உயிர் எல்லாம்
    தன் உயிர் என நல்கும்
அந்தணன், ‘உலகு ஏழும்
    அமை ‘எனின், அமர ஈசன்
உந்தியின் உதவாமே
    உதவிடு தொழில் வல்லான்.
22

உரை
   
 
பரத்துவாச முனிவன் வருந்தல்

2110.அம்முனி வரலோடும்,
    அழகனும் மலர் தூவி
மும்முறை தொழுதான்; அம்
    முதல்வனும் எதிர் புல்லி,
‘இம்முறை உருவோ நான்
    காண்குவது? ‘என உள்ளம்
விம்மினன், இழி கண்ணீர்
    விழி வழி உக நின்றான்.
23

உரை
   
 
பரத்துவாசன் வினவுதல்

2111.“அகல் இடம் நெடிது ஆளும்
    அமைதியை, அது தீரப்
புகல் இடம் எமது ஆகும்
    புரை இடை, இது நாளில்,
தகவு இல தவ வேடம்
    தழுவினை வருவான் என்?
இகல் அடு சிலை வீர!
    இளையவனொடும்‘‘ என்றான்.
24

உரை
   
 
பரத்துவாசமுனிவன் இரங்குதல்

2112.உற்றுள பொருள் எல்லாம்
    உணர்வுற உரைசெய்தான்;
நல் தவ முனி, ‘அந்தோ!
    விதி தரும் நவை ‘என்பான்,
‘இற்றது; செயல் உண்டோ
    இனி? ‘என இடர்கொண்டான்,
‘பெற்றிலள் தவம் அந்தோ
    பெரும் நிலமகள் ‘என்றான்.
25

உரை
   
 
பரத்துவாச முனிவன் கூறுதல் (2113-2114)

2113.“துப்பு உறு துவர் வாயில்
    தூ மொழி இவேளாடும்
அப்பு உறு கடல் ஞாலம்
    ஆளுதி கடிது ‘என்னா,
ஒப்பு அறும் மகன் உன்னை,
    ‘உயர் வனம் உற ஏகு ‘என்று
எப் பரிவு உயிர் உய்ந்தான்
    என் துணை அவன்?‘‘ என்றான்.
26

உரை
   
 
2114.‘அல்லலும் உள, இன்பம்
    அணுகலும் உள, அன்றோ!
நல்லவும் உள, செய்யும்
    நவைகளும் உள, அன்றோ!
இல்லை ஒர் பயன் நான் இன்று
    இடர் உறும் இதின்,‘ என்னாப்
புல்லினன், உடனே கொண்டு
    இனிது உறை புரை புக்கான்.
27

உரை
   
 
பரத்துவாச முனிவன் விருந்தோம்பல்

2115.புக்கு, உறை இடம் நல்கிப்
    பூசனை முறை பேணித்
தக்கன கனி காயும்
    தந்து, உரை தரும் அன்பால்
தொக்க நல் முறை கூறித்
    தூயவன் உயிர்போலும்
மக்களின் அருள் உற்றான்;
    மைந்தரும் மகிழ்வுற்றார்.
28

உரை
   
 
பரத்துவாசன் நினைவும் செயலும்

2116.வைகினர்; கதிர் நாறும்
    அளவையின் மறையோனும்,
‘உய்குவென் இவனொடு யான்
    உடன் உறைதலின் ‘என்பான்.
செய்தனன் இனிது எல்லாம்,
    செல்வனை முகம் முன்னாக்
‘கொய் குல மலர் மார்ப!
    கூறுவது உளது ‘என்றான்.
29

உரை
   
 
பரத்துவாச முனிவன் வேண்டுகோள் (2117-2118)

2117.‘நிறையும் நீர் மலர் நெடுங்கனி
    கிழங்கு காய் கிடந்த;
குறையும் தீயவை; தூயவை
    குறைவு இல; எம்மோடு
உறையும் இவ் வழி, ஒருங்கினில்
    உயர் தவம் முயல்வார்க்கு
இறையும் ஈது அலாது, இனியது ஓர்
    இடம் அரிது; இன்னும்.
30

உரை
   
 
2118.“கங்கையாெளாடு கரியவள்
    நாமகள் கலந்த
சங்கம் ஆதலின் பிரியலென்;
    தாமரைச் செங்கண்
அம் கண் நாயக! அயனுக்கும்
    அரும் பெறல் தீர்த்தம்
எங்கள் போலியர் தரத்தது அன்று;
    இருத்தி ஈண்டு‘‘ என்றான்.
31

உரை
   
 
இராமன் கூறிய மறுமாற்றம்

2119.பூண்ட மாதவன் அம்மொழி
    விரும்பினன் புகல,
‘நீண்டது அன்று இது, நிறை புனல்
    நாட்டுக்கு நடு ஆம்;
மாண்ட சிந்தைய! இவ் வழி
    வைகுவென் என்றால்,
ஈண்ட யாவரும் நெருங்குவர் ‘
    என்றனன், இராமன்.
32

உரை
   
 
பரத்துவாச முனிவன் மீட்டும் பகர்தல்

2120.‘ஆவது உள்ளதே! ஐய! கேள்,
    ஐயிரண்டு அமைந்த
காவதப் பொழிற்கு அப்புறம்
    கழிந்தபின் காண்டி,
மேவு காதலின் வைகுதி,
    விண்ணினும் இனிதாத்
தேவர் கைதொழும் சித்திர
    கூடம் என்று உளதால். ‘
33

உரை
   
 
இராமன் முதலியோர் பரத்துவாசமுனிவனிடம் விடைபெற்றுச்
சென்று யமுனைக்கரை அடைதல்

2121.என்று காதலின் ஏயினன்;
    அடி தொழுது, ஏகிக்
கொன்றை அம் குழல் கோவலர்
    முல்லையும் குறுகிச்
சென்று, செங்கதிர்ச் செல்வனும்
    நடு உறச் சிறு மான்
கன்று நின்று உகள் கரை உடைக்
    காளிந்தி கண்டார்.
34

உரை
   
 
இராமன் முதலியோர் யமுனை நதியைக் கண்டு
கடத்தல் (2122-2123)

2122.ஆறு கண்டனர், அகம் மகிழ்ந்து
    இறைஞ்சினர், அறிந்து,
நீறு தோய் மணி மேனியர்,
    நெடும் புனல் படிந்தார்,
ஊறும் மென் கனி கிழங்கினோடு
    உண்டு நீர் உண்டார்;
‘ஏறி ஏகுவது எங்ஙனம்? ‘
    என்றலும் இளையோன்.
35

உரை
   
 
2123.வாங்கு வெம் கழை துணித்தனன்,
    மாணையின் கொடியால்
ஓங்கு தபெ்பம் ஒன்று அமைத்து, அதின்,
    உம்பரின் உலம்போல்
வீங்கு தோள் அண்ணல் தேவியொடு
    இனிது வீற்றிருப்ப,
நீங்கினன் அந்த நெடு நதி
    இரு கையால் நீந்தி.
36

உரை
   
 
இலக்குவன் நீந்தியதன் விளைவு

2124.ஆலை பாய் வயல் அயோத்தியர்
    ஆண்டகைக்கு இளையான்
மாலை மால் வரைத் தோள் எனும்
    மந்தரம் திரியக்
காலை வேலையின் உற்றது,
    கழிந்த நீர்; கடிதின்
மேலை வேலையில் பாய்ந்தது;
    மீண்ட நீர் வெள்ளம்.
37

உரை
   
 
சுரம் புகுதல்

2125.அனையர் அப் புனல் ஏறினர்,
    அக்கரை அணைந்தார்,
புனையும் வற்கலைப் பொற்பினர்,
    நெடு நெறி போனார்,
சினையும் மூலமும் முகடும் வெந்து
    இரு நிலம் தீய்ந்து
நினையும் நெஞ்சமும் சுடுவதோர்
    நெடுஞ்சுரம் நேர்ந்தார்.
38

உரை
   
 
இராமன் நினைவால் பாலை மாறிய பரிசு (2126-2130)

2126.‘நீங்கல் ஆற்றலள் சனகி ‘என்று
    அண்ணலும் நினைந்தான்,
ஓங்கு வெய்யவன் உடுபதி
    எனக் கதிர் உகுத்தான்;
தாங்கு வெம் கடந்து உலவைகள்
    தழை கொண்டு தழைத்த;
பாங்கு வெம் கனல் பங்கய
    வனங்களாய்ப் பரந்த!
39

உரை
   
 
2127.வறுத்து வித்திய அனையன
    வல் அயில் பரல்கள்,
பறித்து வித்திய மலர் எனக்
    குளிர்ந்தன பசைந்த;
இறுத்து எரிந்தன வல்லிகள்
    இளம் தளிர் ஈன்ற;
கறுத்த வாள் அரவு எயிற்றின் ஊடு
    அமுது உகக் களித்த,
40

உரை
   
 
2128.குழுமி மேகங்கள் குமுறின
    குளிர் துளி கொணர்ந்த;
முழு வில் வேடரும் முனிவரின்
    முனிகிலர்; உயிரைத்
தழுவி நின்றன பசி இல
    பகை இல தணிந்த;
உழுவையின் முலை மான் இளம்
    கன்றுகள் உண்ட.
41

உரை
   
 
2129.கல் அளைக் கிடந்து அகடு வெந்து
    அயர்கின்ற கதழ் பாம்பு
அல்லல் உற்று இல, அலை புனல்
    கிடந்தன அனைய;
வல்லை உற்ற வேய் புற்றொடும்
    எரிவன, மணிவாழ்
புல் எயிற்று இளம் கன்னியர்
    தோள் எனப் பொலிந்த.
42

உரை
   
 
2130.படர்ந்து எழுந்த புல், பசு நிறக்
    கம்பளம் பரப்பிக்
கிடந்த போன்றன; கேகயம்,
    தோகைகள் கிளர,
மடந்தைமார் என நாடகம்
    வயின் தொறும் நவின்ற;
தொடர்ந்து பாணரில் பாங்கு இசை
    முரன்றன தும்பி.
43

உரை
   
 
பாலை வெம்மை நீங்கிய காரணம்

2131.காலம் இன்றியும் கனிந்தன
    கனி; நெடுங் கந்தம்
மூலம் இன்றியும் முகிழ்த்தன;
    நிலன் உற முழுதும்
கோல மங்கையர் ஒத்தன
    கொம்பர்கள்; இம்பர்ச்
சீலம் அன்றியும் செய் தவம்
    வேறும் ஒன்று உளதோ?
44

உரை
   
 
2132.எயினர் தங்கு இடம் இருடிகள்
    இருப்பிடம் ஏய்ந்த;
வயின் வயின் தொறும் மணி நிறக்
    கோபங்கள் மலர்ந்த;
பயில் மரம் தொறும் பிரிந்தன
    பேடையைப் பயிரும்
குயில் இரங்கின; குருந்தம் நின்று
    அரும்பின முருந்தம்.
45

உரை
   
 
பாலை வெம்மை நீங்கிக் குளிர்ந்தமை

2133.பந்தம் ஞாட்பு உறு பாசறை
    பொருள் வயின் பருவம்
தந்த கேள்வரை உயிர் உறத்
    தழுவினர் பிரிந்த
கந்த ஓதியர் சிந்தையில்
    கொதித்தது, அக் கழலோர்
வந்த போது அவர் மனம் எனக்
    குளிர்ந்தது அவ் வனமே.
46

உரை
   
 
இராமன் முதலியோர் சித்திரகூட மலையைக் காணுதல்

2134.வெளிறு நீங்கிய பாலையை
    மெல் எனப் போனார்,
ஒளிறு வான் மதிக் குழவி தன்
    சூல் வயிற்று உதைப்பப்
பிளிறும் மேகத்தைப் பிடியெனப்
    பெரும் பனைத் தடக்கை
களிறு நீட்டும் அச் சித்திர
    கூடத்தைக் கண்டார்.
47

உரை