தூதுவர் பரதனுக்குத் தம் வரவு உணர்த்துவித்தல்

2191.பொருவு இல் தூதுவர் போயினர் பொய் இலார்
இரவும் நன் பகலும் கடிது ஏகினார்;
பரதன் கோயில் உற்றார்; “படிகாரிர்! எம்
வரவு சொல்லுதிர் மன்னவற்கே“ என்றார்.
1

உரை
   
 
பரதன் தந்தை நலம் கேட்டல்

2192.தூதர் வந்தனர் உந்தை சொல்லோடு எனக்
காதல் முந்திக் களிக்கின்ற சிந்தையான்
போதுக என்ன உள் புக்கவர் கைதொழத்
“தீது இலன் கொல்? திரு முடியோன்” என்றான்.
2

உரை
   
 
இராம இலக்குவர் நலம் கேட்டல்

2193.வலியன் என்று அவர் கூற மகிழ்ந்தனன்;
“இலைகொள் பூண் இளம் கோன் எம்பிரானொடும்
உலைவில் செல்வத்தனோ?“ என ‘உண்டு ‘எனத்
தலையின் ஏந்தினன் தாழ் தடக் கைகளே.
3

உரை
   
 
திருமுகம் கொடுத்தல்

2194.மற்றும் சுற்றத்து உளார்க்கும் வரன்முறை
உற்ற தன்மை வினாவி உவந்த பின்
“இற்றது ஆகும் எழுதரு மேனியாய்!
கொற்றவன் தன் திருமுகம் கொள்க“ என்றார்.
4

உரை
   
 
பரதன் திருமுகம் பெறுதல

2195.என்று கூறலும் ஏத்தி இறைஞ்சினான்
பொன் திணிந்த பொரு இல் தடக்கையால்
நின்று வாங்கி உருகிய நெஞ்சினான்
துன்று நாள் மலர்ச் சென்னியில் சூடினான்.
5

உரை
   
 
்பரதன் மகிழ்ச்சி (2196-2197)

2196.சூடிச் சாதனம் தோய்த்து உடைச் சுற்று மண்
மூடு தோட்டின் முடங்கல் நிமிர்த்தனன்
ஈடு நோக்கி வந்து எய்திய தூதர்க்குக்
கோடி மேலும் நிதியம் கொடுத்தனன்.
6

உரை
   
 
2197.வாள் நிலா நகை தோன்ற மயிர் புறம்
பூண வான் உயர் காதலில் பொங்கினான்;
தாள் நிலாம் மலர் தூவினன் தம்முனைக்
காணலாம் எனும் ஆசை கடாவவே.
7

உரை
   
 
பரதன் புறப்பாடு

2198.‘எழுக சேனை ‘என்று ஏவினன்; எய்தினன்
தொழுது கேகயர் கோமகன் சொல்லொடும்
தழுவு தேரிடைத் தம்பியொடு ஏறினான்;
பொழுதும் நாளும் குறித்திலன் போயினான்.
8

உரை
   
 
சேனை செல்லுகை (2199-2207)

2199.யானை சுற்றின; தேர் இரைத்து ஈண்டின;
மான வேந்தர் குழுமினர்; வாள் உடைத்
தானை சூழ்ந்தன; சங்கம் முரன்றன;
மீன வேலையின் விம்மின பேரியே.
9

உரை
   
 
2200.கொடி நெருங்கின; தொங்கல் குழுமின;
வடி நெடுங்கண் மடந்தையர் ஊர் மடப்
பிடி துவன்றின; பூண் ஒளி பேர்ந்தன;
இடி துவன்றின மின் என எங்குமே.
10

உரை
   
 
2201.பண்டி எங்கும் பரந்தன பல் இயம்
கொண்டு இயம்பின கொண்டலின்; கோதையில்
வண்டு இயம்பின; வாளியின் வாவுறும்
செண்டு இயங்கு பரியும் செறிந்தவே.
11

உரை
   
 
2202.தொளை முகத்தின் சுருதி விளம்பின;
உளை முகத்தின உம்பரின் ஏவிடில்
விளை முகத்தன வேலையின் மீதுசெல்
வளை முகத்தன வாசியும் வந்தவே.
12

உரை
   
 
2203.வில்லின் வேதியர் வாள் செறி வித்தகர்
மல்லின் மல்லர் சுரிகையின் வல்லவர்
கொல்லும் வேல் குந்தம் கற்று உயர் கொற்றவர்
தொல்லை வாரணப் பாகரும் சுற்றினார்.
13

உரை
   
 
2204.எறி பகட்டு இனம் ஆடுகள் ஏற்று இனம்
குறி கொள் கோழி சிவல் குறும்பூழ் நெடும்
பொறி மயிர்க் கவுதாரிகள் போற்றுறும்
நெறியின் மாக்களும் முந்தி நெருங்கினார்.
14

உரை
   
 
2205.நிறைந்த மாந்தர் நெருங்கினர் நெஞ்சினில்
‘பறந்து போதும் கொல்? ‘என்று பதைக்கின்றார்;
பிறந்து தேவர் உணர்ந்து பெயர்ந்து முன்
உறைந்த வான் உறுவார்களை ஒக்கின்றார்.
15

உரை
   
 
2206.ஊன் அளைந்த உடற்கு உயிர் ஆம் எனத்
தான் அளைந்து தழுவின தண்ணுமை;
தேன் அளைந்து செவி உற வார்த்து என
வான் அளைந்தது மாகதர் பாடலே.
16

உரை
   
 
2207.ஊறு கொண்ட முரசு உமிழ் ஓதையை
வீறு கொண்டன வேதியர் வாழ்த்து ஒலி;
ஏறு கொண்டு எழும் மல்லர் இடிப்பினை
மாறு கொண்டன வந்திகர் ஏத்து அரோ.
17

உரை
   
 
பரதன் கோசலநாட்டை அடைதல்

2208.ஆறும் கானும் அகல் மலையும் கடந்து
ஏறி ஏழ் பகல் நீந்திப் பின் எந்திரத்து
ஊறு பாகு மடை உடைத்து ஒள் முளை
நாறு பாய் வயல் கோசலம் நண்ணினான்.
18

உரை
   
 
கோசல நாட்டின் அழகு இழந்த தோற்றம் (2209-2217)

2209.ஏர் துறந்த வயல்; இள மைந்தர் தோள்
தார் துறந்தன; தண்டலை நெல்லினும்
நீர் துறந்தன; தாமரை நீத்து எனப்
பார் துறந்தனள் பங்கயச் செல்வியே.
19

உரை
   
 
2210.பிதிர்ந்து சாறு பெருந் துறை மண்டிடச்
சிதர்ந்து சிந்தி அழிந்தன தேங்கனி;
முதிர்ந்து கொய்யுநர் இன்மையின் மூக்கு அவிழ்ந்து
உதிர்ந்து உலர்ந்தன ஒள் மலர் ஈட்டமே.
20

உரை
   
 
2211.‘ஏய்ந்த காலம் இது இதற்கு ஆம் ‘என
ஆய்ந்து மள்ளர் அரிகுநர் இன்மையால்
பாய்ந்த சூதப் பசுநறும் தேறலால்
சாய்ந்து ஒசிந்து முளைத்தன சாலியே.
21

உரை
   
 
2212.எள் குலாம் மலர் ஏசிய நாசியர்
புள் குலா வயல் பூசல் கடைசியர்
கட்கிலார் களை காதல் கொழுநரோடு
உள் கலாம் உடையாரின் உயங்கினார்.
22

உரை
   
 
2213.அலர்ந்த பைங் கூழ் அகன் குளக் கீழன
மலர்ந்த வாயில் புனல் வழங்காமையால்
உலர்ந்த; வன்கண் உலோபர் கடைத்தலைப்
புலர்ந்து நிற்கும் பரிசிலர் போலவே.
23

உரை
   
 
2214.ஓதுகின்றில கிள்ளையும்; ஓதிய
தூது சென்றில வந்தில தோழர் பால்;
மோது கின்றில பேரி முழா; விழாப்
போது கின்றில பொன் அணி வீதியே.
24

உரை
   
 
2215.பாடல் நீத்தன பண் தொடர் பாண் குழல்;
ஆடல் நீத்த அரங்கொடு அகன் புனல்;
சூடல் நீத்தன சூடிகை; சூளிகை
மாடம் நீத்தன மங்கல வள்ளையே.
25

உரை
   
 
2216.நகை இழந்தன வாள் முகம்; நாறு அகில்
புகை இழந்தன மாளிகை; பொங்கு அழல்
சிகை இழந்தன தீவிகை; தேம் மலர்த்
தொகை இழந்தன தோகையர் ஓதியே.
26

உரை
   
 
2217.நாவின் நீத்தரும் நல் வளம் துன்னிய
பூவி நீத்து என நாடு பொலிவு ஒரீஇத்
தேவி நீத்து அரும் சேண் நெறி சென்றிட
ஆவி நீத்த உடல் எனல் ஆயதே.
27

உரை
   
 
நாட்டின் நிலை கண்ட பரதன் நிலை

2218.என்ற நாட்டினை நோக்கி இடர் உழந்து
ஒன்றும் உற்றது உணர்ந்திலன் உன்னுவான்
‘சென்று கேட்பது ஒர் தீங்கு உளது ஆம் ‘எனா
நின்று நின்று நெடிது உயிர்த்தான் அரோ.
28

உரை
   
 
பரதன் நகரத்தின் நிலையை நோக்குதல் (2219-2225)

2219.மீண்டும் ஏகி அம் மெய் எனும் நல் அணி
பூண்ட வேந்தன் திருமகன் புந்திதான்
தூண்டு தேரினும் முந்து உறத் தூண்டுவான்
நீண்ட வாயில் நெடும் நகர் நோக்கினான்.
29

உரை
   
 
2220.“அண்டம் முற்றும் திரிந்து அயர்ந்தாய் அமுது
உண்டு போதி “ ; என்று ஒண் கதிர்ச் செல்வனை
விண் தொடர்ந்து விலக்குவ போல்வன
கண்டிலன் கொடியின் நெடுங் கானமே.
30

உரை
   
 
2221.‘ஈட்டும் நன் புகழ்க்கு ஈட்டிய யாவையும்
வேட்ட வேட்டவர் கொண்மின் விரைந்து ‘எனக்
கோட்டி மாக்களைக் கூவுவ போல்வன
கேட்டிலன் முரசின் கிளர் ஓதையே.
31

உரை
   
 
2222.கள்ளை மாக் கவர் கண்ணியன் கண்டிலன்
பிள்ளை மாக் களிறும் பிடி ஈட்டமும்
வள்ளல் மாக்கள் நிதியும் வயிரியர்
கொள்ளை மாக்களின் கொண்டனர் ஏகவே.
32

உரை
   
 
2223.காவல் மன்னவன் கால் முளை கண்டிலன்
ஆவும் மாவும் அழி கவுள் வேழமும்
மேவு காதல் நிதியின் வெறுக்கையும்
பூவின் வானவர் கொண்டனர் போகவே.
33

உரை
   
 
2224.சூழ் அமைந்த சுரும்பும் நரம்பும் தம்
ஏழ் அமைந்த இசை இசையாமையால்
மாழை உண்கண் மயில் எனும் சாயலார்
கூழை போன்ற பொருநர் குழாங்களே.
34

உரை
   
 
2225.தேரும் மாவும் களிறும் சிவிகையும்
ஊரும் பண்டியும் ஊருநர் இன்மையால்
யாரும் இன்றி எழில் இல வீதிகள்
வாரி இன்றிய வாலுக ஆற்றினே.
35

உரை
   
 
பரதன் சத்துருக்கனிடம் கூறல் (2226-2227)

2226.அன்ன தன்மை அகநகர் நோக்கினன்;
பின்னை அப்பெரியோர்தம் பெருந்தகை
‘மன்னன் வைகும் வளம் நகர் போலும் ஈது?
என்ன தன்மை! இளையவனே! ‘என்றான்.
36

உரை
   
 
2227.‘வேற்று அடங்கலர் ஊர் என மெல்லிதால்;
சூல் தடங் கருங் கார் புரை தோற்றத்தான்
சேல் தடங்கண் திருவொடும் நீங்கிய
பால் தடங்கடல் ஒத்தது பார் ‘என்றான்.
37

உரை
   
 
சத்துருக்கன் கூறல்

2228.குரு மணி பூண் அரசிளங் கோளரி
இரு கை கூப்பி இறைஞ்சினன் ‘எய்தியது
ஒரு வகைத்து அன்று உறுதுயர்; ஊழி வாழ்
திருநகர்த் திருத் தீர்ந்தனள் ஆம்? என்றான்.
38

உரை
   
 
பரதன் தயரதன் மாளிகையை அடைதல்

2229.அனைய வேலையில் அச்சுடைத் தேர் அரண்
மனையின் நீள் நெடு மங்கல வாயிலை
நினையு மாத்திரத்து எய்தலும் நேமியான்
தனையனும் தந்தை சார்விடம் மேவினான்.
39

உரை
   
 
பரதன், தந்தையைக் காணாது ஐயுறல்

2230.விருப்பின் எய்தினன் வெம் திறல் வேந்தனை
இருப்பு நல் இடம் எங்கணும் கண்டிலன்
‘அருப்பம் அன்று இது ‘என்று ஐயுறவு எய்தினான்;
பொருப்பும் நாண உயர்ந்த புயத்தினான்.
40

உரை
   
 
தாய் அழைப்பதாக ஒருத்தி கூறல்

2231.ஆய காலையில் ஐயனை நாடித் தன்
தூய கையில் தொழல் உறுவான் தனைக்
‘கூயள் அன்னை குறுகுதிர் ஈண்டு ‘என
வேய் கொள் தோளி ஒருத்தி விளம்பினாள்.
41

உரை
   
 
வணங்கிய பரதனைக் கைகேயி வினவல்

2232.வந்து தாயை அடியில் வணங்கலும்
சிந்தை ஆரத் தழுவினள் ‘தீது இலர்
எந்தை என் ஐயர் எங்கையர்? ‘என்றனள்;
அந்தம் இல் குணத்தான் உம் அது ஆம் என்றான்.
42

உரை
   
 
தயரதன் யாண்டுளன் எனப் பரதன் வினவல்

2233.‘மூண்டு எழு காதலான்
    முளரித் தாள் தொழ
வேண்டினென் எய்தினென்;
    உள்ளம் விம்முமால்;
ஆண்தகை நெடு முடி
    அரசர் கோமகன்
யாண்டையான்? பணித்திர்;‘ என்று
    இருகை கூப்பினான்.
43

உரை
   
 
கைகேயியின் விடை

2234.ஆனவன் உரைசெய அழிவு இல்
    சிந்தையாள்,
‘தானவர் வலி தவ நிமிர்ந்த
    தானை அத்
தேன் அமர் தரெியலான்,
    தேவர் கைதொழ,
வானகம் எய்தினான்;
    வருந்தல் நீ ‘என்றாள்.
44

உரை
   
 
தந்தை இறந்தது கேட்ட பரதன் நிலை

2235.எறிந்தன கடிய சொல் செவியுள் எய்தலும்
நெறிந்து அலர் குஞ்சியான் நெடிது வீழ்ந்தனன்;
அறிந்திலன் உயிர்த்திலன் அசனி ஏற்றினால்
மறிந்து உயர் மராமரம் மண் உற்றென்னவே.
45

உரை
   
 
பரதன் நொந்து கூறுதல்

2236.வாய் ஒளி மழுங்கத் தன் மலர்ந்த தாமரை
ஆய் அலர் நயனங்கள் அருவி சோர்தரத்
‘தீ எரி செவியில் வைத்து அனைய தீய சொல்
நீ அலது உரைசெய நினைப்பரோ? ‘என்றான்.
46

உரை
   
 
பரதன் தந்தையை நினைந்து வருந்திக் கூறுதல் (2237-2246)

2237.எழுந்தனன் ஏங்கினன் இரங்கிப் பின்னரும்
விழுந்தனன் விம்மினன் வெய்து உயிர்த்தனன்
அழிந்தனன் அரற்றினன் அரற்றி இன்னன
மொழிந்தனன் பின்னரும் முருகின் செவ்வியான்.
47

உரை
   
 
2238.‘அறம் தனை வேர் அறுத்து,
    அருளைக் கொன்றனை,
சிறந்த நின் தண் அளித்
    திருவைத் தேசு அழித்து,
இறந்தனை ஆம் எனில்,
    இறைவ! நீதியை
மறந்தனை; உனக்கு இதின்
    மாசு மேல் உண்டோ? ‘
48

உரை
   
 
2239.‘சினக் குறும்பு எறிந்து,
    எழு காமம் தீ அவித்து,
இனக் குறும்பு யாவையும்
    எற்றி, யாவர்க்கும்
மனக்கு உறும் நெறி செலும்
    வள்ளியோய்! மறந்து ‘
உனக்கு உறும் நெறி செலல்
    ஒழுக்கின் பாலதோ? ‘
49

உரை
   
 
2240.‘முதலவன் முதலிய முந்தையோர் பழங்
கதையையும் புதுக்கிய தலைவன் கண் உடை
நுதலவன் சிலை வில்லின் நோன்மை நூறிய
புதல்வனை எங்ஙனம் பிரிந்து போயினாய்?
50

உரை
   
 
2241.‘செவ் வழி உருட்டிய திகிரி மன்னவ!
எவ்வழி மருங்கினும் இரவலாளர்தாம்
இவ்வழி உலகினில்; இனிய நண்பினோர்;
அவ்வழி உலகினும் உளர் கொலோ? ஐயா!
51

உரை
   
 
2242.‘பல் பகல் நிழற்றும் நின் கவிகைப் பாய் நிழல்
நிற்பன பல் உயிர் உணங்க நீ நெடுங்
கற்பக நறுநிழல் காதலித்தியோ?
மல் பக மலர்ந்த தோள் மன்னர் மன்னனே!
52

உரை
   
 
2243.‘இம்பர் நின்று ஏகினை இருக்கும் சார்பு இழந்து
உம்பர் வந்து உன் கழல் ஒதுங்கினார் கொலாம்?
சம்பரன் அனைய அத் தானைத் தானவர்
அம்பரத்து இன்னமும் உளர் கொலோ? ஐயா!
53

உரை
   
 
2244.‘இயம் கெழு தானையர் இறுத்த மாத் திறை
உயங்கலின் மறையவர்க்கு உதவி உம்பரின்
அயம் கெழு வேள்வியோடு அமரர்க்கு ஆக்கிய
வயங்கு எரி வளர்த்தனை வைக வல்லையோ?
54

உரை
   
 
2245.‘ஏழ் உயர் மதக் களிற்று இறைவ! ஏகினை
வாழிய கரியவன் வறியன் கை எனப்
பாழி அம் புயத்து நின் பணியின் நீங்கலா
ஆழியை இனி அவற்கு அளிக்க எண்ணியோ?
55

உரை
   
 
2246.‘பற்றிய தவத்தினில் பயந்த மைந்தற்கு
முற்று உலகு அளித்து அது முறையின் எய்திய
கொற்றவன் முடிமணக் கோலம் காணவும்
பெற்றிலை போலும் நின் பெரிய கண்களால்!
56

உரை
   
 
பரதன் சிறிது தேறுதல்

2247.ஆற்றலன் இன்னன பன்னி ஆவலித்து
ஊற்று உறு கண்ணினன் உருகுவான்தனைத்
தேற்றினள் அன்னைதான்; சிறிது தேறிய
கூற்று உறழ் வரி சிலைக் குரிசில் கூறுவான்.
57

உரை
   
 
பரதன் இராமனை வணங்க வேண்டும் எனல்

2248.‘எந்தையும் யாயும் எம்பிரானும் எம்முனும்
அந்தம் இல் பெருங் குணத்து இராமன் ஆதலால்
வந்தனை அவன்கழல் வைத்தபோது அலால்
சிந்தை வெம் கொடுந் துயர் தீர்கலாது ‘என்றான்.
58

உரை
   
 
கைகேயி, அவன் கானத்தான் எனல்

2249.அவ் உரை கேட்டலும் அசனி ஏறு என
வெவ் உரை வல்லவள் மீட்டும் கூறுவாள்
“தவெ் அடு சிலையினாய்! தேவி தம்பி என்று
இவ் இருவோரொடும் கானத்தான் “ என்றாள்.
59

உரை
   
 
பரதன் நைந்து கூறல

2250.‘வனத்தினன் ‘என்று, அவள்
    இசைத்த மாற்றத்தை
நினைத்தனன், இருந்தனன்
    நெருப்பு உண்டான் என;
‘வினை திறம் யாது இனி
    விளைப்பது? இன்னமும்
எனைத்து உள கேட்பன
    துன்பம், யான்? ‘என்றான்.
60

உரை
   
 
்பரதன் வினா (2251-2252)

2251.ஏங்கினன் விம்மலோடு இருந்த ஏந்தல் ‘அப்
பூங்கழல் காலவன் வனத்துப் போயது
தீங்கு இழைத்ததனினோ? தயெ்வம் சீறியோ?
ஓங்கிய விதியினோ? யாதினோ? ‘எனா.
61

உரை
   
 
2252.“தீயன இராமனே செய்யுமேல்,
    அவை
தாய் செயல் அல்லவோ,
    தலத்து உேளார்க்கு எலாம்?
போயது தாதை
    விண் புக்க பின்னரோ?
ஆயதன் முன்னரோ?
    அருளுவீர்‘‘ என்றான்.
62

உரை
   
 
கைகேயியின் விடை

2253.“குருக்களை இகழ்தலின் அன்று;
    குன்றிய
செருக்கினால் அன்று; ஒரு
    தயெ்வத்தாலும் அன்று;
அருக்கனே அனைய அவ்
    அரசர் கோமகன்
இருக்கவே, வனத்து அவன்
    ஏகினான்‘‘ என்றாள்.
63

உரை
   
 
பரதன் வினா

2254.“குற்றம் ஒன்று இல்லையேல்,
    கொதித்து வேறு உேளார்
செற்றதும் இல்லையேல்
    தயெ்வத்தால் அன்றேல்
பெற்றவன் இருக்கவே
    பிள்ளை கான் புக
உற்றது என்? பின் அவன்
    உலந்தது என்?‘‘ என்றான்.
64

உரை
   
 
கைகேயியின் விடை

2255.‘வாக்கினால் வரம் தரக்
    கொண்டு, மைந்தனைப்
போக்கினேன் வனத்திடைப்
    போக்கிப் பார் உனக்கு
ஆக்கினேன்; அவன் அது
    பொறுக்கலாமையால்,
நீக்கினான் தன் உயிர்
    நேமி வேந்து ‘என்றாள்.
65

உரை
   
 
கைகேயி சொல் கேட்ட பரதன் சினநிலை (2256-2259)

2256.சூடின மலர்க்கரம் சொல்லின்முன் செவி
கூடின; புருவங்கள் குதித்துக் கூத்து நின்று
ஆடின; உயிர்ப்பினோடு அழல் கொழுந்துகள்
ஓடின; உமிழ்ந்தன உதிரம் கண்களே.
66

உரை
   
 
2257.துடித்தன கபோலங்கள்; சுற்றும் தீச்சுடர்
பொடித்தன மயிர்த் தொளை; புகையும் போர்த்தது;
மடித்தது வாய்; நெடு மழைக் கை மண் பக
அடித்தன ஒன்றொடு ஒன்று அசனி அஞ்சவே.
67

உரை
   
 
2258.பாதங்கள் பெயர்தொறும் பாரும் மேருவும்
போதம் கொள் நெடுந்தனிப் பொருவில் கூம்பொடு
மாதங்கம் வரு கலம் மறுகிக் கால் பொர
ஓதம் கொள் கடலினின்று உலைவ போன்றவே.
68

உரை
   
 
2259.அஞ்சினர் வானவர் அவுணர்; அச்சத்தால்
துஞ்சினர் ஏனையர்; சொரி மதத் தொளை
எஞ்சின திசை கரி; இரவி மீண்டனன்;
வெஞ்சினக் கூற்றும் தன் விழி புதைத்ததே.
69

உரை
   
 
கவிக் கூற்று

2260.கொடிய வெம் கோபத்தால் கொதித்த கோள் அரி
கடியவள் தாய் எனக் கருதுகின்றிலன்;
‘நெடியவன் முனியும் ‘என்று அஞ்சி நின்றனன்;
இடி உரும் அனைய வெம்மொழி இயம்புவான்.
70

உரை
   
 
பரதன் கைகேயியை இகழ்தல் (2261-2275)

2261.‘மாண்டனன் எந்தை என் தன்முன் மாதவம்
பூண்டனன் நின் கொடும் புணர்ப்பினால் என்றால்
கீண்டில் என் வாய்; அது கேட்டும் நின்ற யான்
ஆண்டனனே அன்றே அரசை ஆசையால்?
71

உரை
   
 
2262.‘நீ இனம் இருந்தனை யானும் நின்றனென்
‘ஏ ‘எனும் மாத்திரத்து எற்று கிற்றிலென்;
ஆயவன் முனியும் என்று அஞ்சினேன் அலால்
தாய் எனும் பெயர் எனைத் தடுக்கற் பாலதோ?
72

உரை
   
 
2263.‘மாளவும் உளன் ஒரு மன்னன் வன்சொலால்
மீளவும் உளன் ஒரு வீரன்; மேய பார்
ஆளவும் உளன் ஒரு பரதன் ஆயினால்
கோள் அலது அறநெறி; குறை உண்டாகுமோ?
73

உரை
   
 
2264.“‘சுழியுடைத் தாயுடைக் கொடிய
    சூழ்ச்சியால்,
வழி உடைத்தாய் வரும்
    மரபை மாய்த்து, ஒரு
பழி உடைத்து ஆக்கினன்,
    பரதன் பண்டு ‘‘ எனும்,
மொழி உடைத்து ஆக்கலின்
    முறைமை வேறு உண்டோ?‘
74

உரை
   
 
2265.‘கவ்வு அரவு இது என இருத்திர்;
    கற்பு எனும்
அவ் வரம்பு அழித்து, உமை
    அகத்துளே வைத்த
வெவ் அரம் பொருத வேல் அரசை
    வேர் அறுத்து,
இவ் வரம் கொண்ட நீர்,
    இனி என் கோடிரோ? ‘
75

உரை
   
 
2266.‘நோயீர் அல்லீர்; நும் கணவன்தன்
    உயிர் உண்டீர்;
பேயீரே! நீர் இன்னம் இருக்கப்
    பெறுவீரே?
மாயீர்! மாயா வன் பழி தந்தீர்!
    முலை தந்தீர்!
தாயீரே நீர்? இன்னும் எனக்கு
    என் தருவீரே?
76

உரை
   
 
2267.ஒன்றும் பொய்யா மன்னனை வாயால்,
    உயிரோடும்
தின்றும், தீரா வன் பழி கொண்டும்,
    திரு எய்தி,
என்றும் நீரே வாழ உவந்தீர்;
    அவன் ஏகக்
கன்றும் தாயும் போவன கண்டும்
    கழியீரே!
77

உரை
   
 
2268.“இறந்தான் தந்தை ‘ஈந்த
    வரத்திற்கு இழிவு ‘என்னா;
‘அறந்தான் ஈது ‘என்று அன்னவன்
    மைந்தன் அரசு எல்லாம்
துறந்தான்; ‘தாயின் சூழ்ச்சியின்
    ஞாலம் அவனோடும்
பிறந்தான், ஆண்டான் ‘என்னும்
    இது என்னால் பெறல் ஆமே?‘‘
78

உரை
   
 
2269.‘மாளும் என்றே தந்தையை
    உன்னான், வசை கொண்டாள்
கோளும் என்னாலே எனல்
    கொண்டான்; அது அன்றேல்;
மீளும் அன்றே? என்னையும்
    மெய்யே உலகு எல்லாம்
ஆளும் என்றே போயினன்
    அன்றே அரசு ஆள்வான்? ‘
79

உரை
   
 
2270.“ஓதா நின்ற தொல் குல
    மன்னன் உணர்வு அப்பால்
யாதானும்தான் ஆக;
    ‘எனக்கே பணி செய்வான்,
தீதா நின்ற சிந்தனை
    செய்தான் அவன் ‘என்னப்
போதாதோ, என் தாய் இவள்
    கொண்ட பொருள் அம்மா? ‘‘
80

உரை
   
 
2271.‘உய்யா நின்றேன் இன்னமும்;
    என்முன் உடன் வந்தான்,
கை ஆர் கல்லைப் புல் அடகு
    உண்ணக் கலம் ஏந்தி,
வெய்யோன் நான் இன் சாலியின்
    வெண் சோறு அமுது என்ன,
நெய்யோடு உண்ணா நின்றது,
    நின்றார் நினையாரோ? ‘
81

உரை
   
 
2272.“‘வில் ஆர் தோளான் மேவினன்
    வெம் கானகம் ‘என்ன,
நல்லான் அன்றே துஞ்சினன்;
    நஞ்சே அனையாளைக்
கொல்லேன், மாயேன்; வன்
    பழியாலே குறைவு அற்றேன்
அல்லேனோ யான்! அன்பு
    உடையார்போல் அழுகின்றேன்!‘‘
82

உரை
   
 
2273.‘பாரோர் கொள்ளார்; யான் உயிர்
    பேணிப் பழி பூணேன்
தீராது ஒன்றோ துன்பும்! இவ்
    ஊரில் திரு நில்லாள்;
ஆரோடு எண்ணிற்று? ஆர் உரை
    கொண்டாய்? அறம் எல்லாம்
வேரோடும் கேடு ஆக
    முடித்து, என் விளைவித்தாய்? ‘
83

உரை
   
 
2274.‘கொன்றேன் நான் என் தந்தையை,
    மற்று உன் கொலை வாயால்;
ஒன்றோ? கானத்து அண்ணலை
    உய்த்தேன்; உலகு ஆள்வான்
நின்றேன்; என்றால், நின் பிழை
    உண்டோ? பழி உண்டோ?
என்றேனும் தான் என் பழி
    மாயும் இடம் உண்டோ? ‘
84

உரை
   
 
2275.‘கண்ணாலே என் செய்வினை
    இன்னும் சில காண்பார்
மண்ணார்; பாராது எள்ளுவர்;
    வாளா பழி பூண்டேன்;
‘உண்ணா நஞ்சம் கொல்கிலது ‘
    என்னும் உரை உண்டு என்று
எண்ணா நின்றேன்; அன்றி
    இரேன் என் உயிரோடே.
85

உரை
   
 
2276.‘ஏன்று, உன் பாவிக் கும்பி
    வயிற்றின் இடை வைகித்
தோன்றும் தீராப் பாதகம்
    அற்று, என் துயர் தீரச்
சான்றும் தானே நல் அறம்
    ஆகத் தகை ஞாலம்
மூன்றும் காண, மாதவம்
    யானே முயல்கின்றேன். ‘
86

உரை
   
 
2277.‘சிறந்தார் சொல்லும் நல் உரை
    சொன்னேன்; செயல் எல்லாம்
மறந்தாய் செய்தாய் ஆகுதி;
    மாயா உயிர் தன்னைத்
துறந்தாய் ஆகின், தூயையும்
    ஆதி; உலகத்தே
பிறந்தாய் ஆதி; ஈது அலது
    இல்லை பிறிது ‘என்றான்.
87

உரை
   
 
பரதன் கோசையைத் தொழச் செல்லுதல்

2278.இன்னணம், இனையன
    இயம்பி, யானும் இப்
பன்னருங் கொடு மனப்
    பாவி பாடு இரேன்;
துன்னருங் துயர் கெடத்
    தூய கோசலை
பொன் அடி தொழுவன் ‘என்று
    எழுந்து போயினான்.
88

உரை
   
 
பரதன் கோசலையை வணங்கிப் புலம்புதல்

2279.ஆண்தகை கோசலை அருகர் எய்தினன்
மீண்டு மண் கிழிதர வீழ்ந்து கேழ் கிளர்
காண்தகு தடக்கையின் கமலச் சிறு அடி
பூண்டனன் கிடந்தனன் புலம்பினான் அரோ!
89

உரை
   
 
பரதன் புலம்பிக் கூறல் (2280-2284)

2280.‘எந்தை எவ் உலகு உளான்?
    எம்முன் யாண்டையான்?
வந்தது, தமியென், இம்
    மறுக்கம் காணவோ?
சிந்தையின் உறுதுயர்
    தீர்த்திரால் ‘எனும்
அந்தரத்து அமரரும்
    அழுது சோரவே.
90

உரை
   
 
2281.‘அடித்தலம் கண்டிலென் யான் என் ஐயனை;
படித்தலம் காவலன் பெயரற் பாலனோ?
பிடித்திலிர் போலும் நீர்; பிழைத்திரால் ‘எனும்
பொடித்தலம் தோள் உறப் புரண்டு சோர்கின்றான்.
91

உரை
   
 
2282.‘கொடியவர் யாவரும் குலங்கள் வேர் அற
நொடிகிலர்; யான் அது நுவல்வது எங்ஙனம்?
கடியவள் வயிற்றினில் பிறந்த கள்வனேன்
முடிகுவென் அருந்துயர் முடிய ‘என்னுமால்.
92

உரை
   
 
2283.‘இரதம் ஒன்று ஊர்ந்து பார் இருளை நீக்கும் அவ்
வரதனில் ஒளி பெற மலர்ந்த தொல் குலம்
பரதன் என்று ஒரு பழி படைத்தது ‘என்னுமால்
மரகத மலை என வளர்ந்த தோளினான்.
93

உரை
   
 
2284.‘வாள் தொடு தானையான் வானில் வைகிடக்
காடு ஒரு தலைமகன் எய்தக் கண் இலா
நாடு ஒரு துயரிடை நைவதே? ‘எனும்
தாள் தொடு தடக்கை அத் தருமமே அனான்.
94

உரை
   
 
பரதன் தூயன் என்பதைக் கோசலை உணர்தல்

2285.புலம்பு உறு குரிசில் தன் புலர்வு நோக்கினாள்
குலம் பொறை கற்பு இவை சுமந்த கோசலை
‘நிலம் பொறை ஆற்றலன் நெஞ்சம் தூய்து ‘எனாச்
சலம் பிறிது உற மனம் தளர்ந்து கூறுவாள்.
95

உரை
   
 
கோசலையின் வினா

2286.மை அறு மனத்து ஒரு மாசு உளான் அலன்;
செய்யனே என்பது தேரும் சிந்தையாள்
‘கைகயர் கோமகள் இழைத்த கைதவம்
ஐய! நீ அறிந்திலை போலுமால்? ‘என்றாள்.
96

உரை
   
 
பரதன் சூள் கூறத் தொடங்கல்

2287.தாள் உறு குரிசில் அத் தாய் சொல் கேட்டலும்
கோள் உறு மடங்கலில் குமுறி விம்முவான்
நாள் உறு நல் அறம் நடுங்க நாவினால்
சூள் உறு கட்டுரை சொல்லல் மேயினான்.
97

உரை
   
 
பரதன் சூளுரைகள் (2288-2307)

2288.‘அறம் கெட முயன்றவன்,
    அருள் இல் நெஞ்சினன்,
பிறன் கடை நின்றவன்,
    பிறரைச் சீறினோன்,
மறம் கொடு மன் உயிர்
    கொன்று வாழ்ந்தவன்,
துறந்த மாதவர்க்கு அருந்
    துயரம் சூழ்ந்துேளான். ‘
98

உரை
   
 
2289.‘குரவரை மகளிரை வாளில் கொன்றுேளான்
புரவலன் உறு பொருள் புனைவில் வாரினோன்
விரவலர் வெரிந் இடை விழிக்க மீண்டுேளான்
இரவலர் அருநிதி எறிந்து வௌவினோன்.
99

உரை
   
 
2290.‘தழைத்த தண் துளவினோன்
    தலைவன் அல்லன் என்று
அழைத்தவன், அற நெறி
    அந்தணாளரில்
பிழைத்தவன், பிழைப்பு இலா
    மறையைப் பேணலாது,
இழைத்த வன் பொய் எனும்
    இழுதை நெஞ்சினோன் ‘
100

உரை
   
 
2291.‘தாய் பசி உழந்து உயிர் தளரத் தான் தனிப்
பாய் பெரும் பாழ் வயிறு அளிக்கும் பாவியும்
நாயகன் பட நடந்தவனும் நண்ணும் அத்
தீ எரி நரகத்துக் கடிது செல்க யான்.
101

உரை
   
 
2292.‘தாளினில் அடைந்தவர் தம்மைத் தற்கு ஒரு
கோள் உற அஞ்சினன் கொடுத்த பேதையும்
நாளினும் அறம் மறந்தவனும் நண் உறும்
மீளரு நரகு இடைக் கடிது வீழ்க யான்.
102

உரை
   
 
2293.‘பொய்க் கரி கூறினோன்,
    போருக்கு அஞ்சினோன்,
கை கொளும் அடைக்கலம்
    கரந்து வவ்வினோன்,
எய்த்த இடத்து இடர் செய்தோன்,
    என்று இன்னோர் புகும்
மெய்க் கொடு நரகு இடை
    விரைவின் வீழ்க யான். ‘
103

உரை
   
 
2294.அந்தணர் உறையுளை
    அனலி ஊட்டினோன்,
மைந்தரைக் கொன்றுேளான்,
    வழக்கில் பொய்த்துேளான்,
நிந்தனை தேவரை
    நிகழ்த்தினோன், புகும்
வெந்துயர் நரகத்து
    வீழ்க யானுமே.
104

உரை
   
 
2295.‘கன்று உயிர் ஓய்ந்து உகக்
    கறந்து பால் உண்டோன்,
மன்று இடைப் பிறர் பொருள்
    மறைத்து வவ்வினோன்,
நன்றியை மறந்திடும்
    நயம் இல் நாவினோன்,
என்று இவர் உறும் நரகு
    என்னது ஆகவே. ‘
105

உரை
   
 
2296.‘ஆறு தன் உடன் வரும்
    அம் சொல் மாதரை
ஊறு கொண்டு அலைக்கத் தன்
    உயிர் கொண்டு ஓடினோன்,
சோறு தன் அயல் உேளார்
    பசிக்கத் துய்த்துேளான்
ஏறும் அக் கதியிடை
    யானும் ஏறவே. ‘
106

உரை
   
 
2297.‘எஃகு எறி செரு முகத்து
    ஏற்ற தவெ்வருக்கு
ஒஃகினன், உயிர் வளர்த்து
    உண்ணும் ஆசையான்,
அஃகல் இல் அற நெறி
    ஆக்கியோன்
பொருள் வெஃகிய மன்னன்,
    வீழ் நரகின் வீழ்க யான். ‘
107

உரை
   
 
2298.‘அழி வரும் அரசியல் எய்தி ஆகும் என்று
இழி வரு சிறு தொழில் இயற்றி ஆண்டு தன்
வழி வரு தருமத்தை மறந்து மற்று ஒரு
பழி வரு நெறி படர் பதகன் ஆக யான்.
108

உரை
   
 
2299.‘தஞ்சு என ஒதுங்கினர் தனது பார் உேளார்
எஞ்சல் இல் மறுக்கினோடு இரியல் போயுற
வஞ்சி சென்று இறுத்தவன் வாகை மீக்கொள
அஞ்சின மன்னவன் ஆக யானுமே.
109

உரை
   
 
2300.‘கன்னியை அழிசெயக் கருதினோன் குரு
பன்னியை நோக்கினோன் பருகினோன் நறை
பொன் இகழ் களவினில் பொருந்தினோன் என
இன்னவர் உறு கதி என்னது ஆகவே.
110

உரை
   
 
2301.‘ஊண் நல உண் வழி
    நாயின் உண்டவன்,
‘ஆண் அலன், பெண் அலன்,
    ஆர் கொல் ஆம்? ‘என
நாணலன், நரகம் உண்டு
    என்னும் நல் உரை
பேணலன் பிறர் பழி
    பிதற்றி, ஆக யான். ‘
111

உரை
   
 
2302.‘மறு இல் தொல் குலங்களை மாசு இட்டு ஏற்றினோன்
சிறு விலை எளியவர் உணவு சிந்தினோன்
நறியன அயலவர் நாவின் நீர்வர
உறு பதம் நுங்கிய ஒருவன் ஆக யான்.
112

உரை
   
 
2303.‘வில்லினும் வாளினும்
    விரிந்த ஆண் தொழில்
புல்லிடை உகுத்தனென்
    பொய்ம்மை யாக்கையைச்
சில் பகல் ஓம்புவான்
    செறுநர் சீறிய
இல் இடை இடு பதம்
    ஏற்க, என் கையால். ‘
113

உரை
   
 
2304.‘ஏற்றவற்கு ஒருபொருள் உள்ளது,
    இன்று என்று
மாற்றலன், உதவலன், வரம்பு இல்
    பல் பகல்
ஆற்றினன் உழற்றும் ஓர் ஆதன்
    எய்தும் அக்
கூற்று உறு நரகின் ஓர் கூறு
    கொள்க யான். ‘
114

உரை
   
 
2305.பிணிக்கு உறும் முடை உடல்
    பேணிப் பேணலார்த்
துணிக்குறு வயிர வாள் தடக்கை
    தூக்கிப் போய்,
மணிக் குறு நகை இள
    மங்கைமார் கண்முன்,
தணிக்குறு பகைஞரைத்
    தாழ்க, என் தலை. ‘
115

உரை
   
 
2306.‘கரும்பு அலர் செந் நெல் அம்
    கழனிக் கான நாடு
அரும் பகை கவர்ந்து உண,
    ஆவி பேணினென்,
இரும்பு அலர் நெடும் தளை
    ஈர்த்த காலொடும்
விரும்பலர் முகத்து எதிர்
    விழித்து நிற்க யான். ‘
116

உரை
   
 
2307.‘தீ அன கொடியவள் செய்த செய்கையை
நாயினேன் உணரின் நல் நெறியில் நீங்கலாத்
தூயவர்க்கு இடர் இழைத்து உழலும் தோம் உடை
ஆயவர் வீழ்கதி அதனின் வீழ்க யான்.
117

உரை
   
 
கோசலை பரதனைத் தழுவிப் பாராட்டல் (2308-2310)

2308.தூய வாசகம் சொன்ன தோன்றலைத்
தீய கானகம் திருவின் நீங்கி முன்
போயினான் வரக் கண்ட பொம்மலாள்
ஆய காதலால் அழுது புல்லினாள்.
118

உரை
   
 
2309.செம்மை நல் மனத்து அண்ணல் செய்கையும்
அம்மை தீமையும் அறிதல் தேற்றினாள்;
கொம்மை வெம் முலை குமுறு பால் உக
விம்மி விம்மி நின்று அழுது வீங்கினாள்.
119

உரை
   
 
2310.‘முன்னை நும் குல முதலுேளார்கள்தாம்
நின்னை யாவரே நிகர்க்கும் நீர்மையார்?
மன்னர் மன்னவா! ‘என்று வாழ்த்தினாள்
உன்ன உன்ன நைந்து உருகி விம்முவாள்.
120

உரை
   
 
கோசலை பரதனைத் தந்தைக்கு இறுதிக்கடன் செய்க எனல்

2311.‘மறு இல் மைந்தனே! வள்ளல் உந்தையார்
இறுதி எய்தி நாள் ஏழ் இரண்டின;
சிறுவர் செய் கடன் செய்து தீர்த்தி ‘என்று
உறுவல் மேயினாள் உரையின் ஏயினாள்.
121

உரை
   
 
பரதன் வசிட்டனோடு சென்று தயரதன் உடலைக் காணுதல்

2312.அன்னை ஏவினாள் அடி இறைஞ்சினான்
பொன்னின் வார் சடை புனிதனோடும் போய்த்
தன்னை நல்கி அத் தரும் நல்கினான்
பன்னு தொல் அறப் படிவம் நோக்கினான்.
122

உரை
   
 
பரதன் அழுகை

2313.மண்ணின்மேல் விழுந்து அலறி மாழ்குவான்
அண்ணல் ஆழியான் அவனி காவலான்
எண்ணெய் உண்ட பொன் எழில் கொள் மேனியைக்
கண்ண நீரினால் கழுவி ஆட்டினான்.
123

உரை
   
 
தயரதன் உடம்பை விமானத்து ஏற்றுதல்

2314.பற்றி அவ் வயின் பரிவின் வாங்கினார்;
சுற்றும் நால் மறை துறை செய் கேள்வியார்
கொற்ற மண் கணை குமுற மன்னனை
மற்று ஒர் பொன்னின் மா மானம் ஏற்றினார்.
124

உரை
   
 
தயரதன் உடம்பை யானை மேல் வைத்துக்கொண்டு போதல்

2315.கரை செய் வேலை போல் நகரி கை எடுத்து
உரை செய் பூசல் இட்டு உயிர் துளங்குற
அரச வேலை சூழ்ந்து அழுது கை தொழ
புரசை யானையில் கொண்டு போயினார்.
125

உரை
   
 
வாத்தியங்களின் இரக்க ஒலி

2316.சங்கு பேரியும் தழுவு சின்னமும்
எங்கும் எங்கும் நின்று இரங்கி ஏங்குவ
மங்குல் தோய் நகர் மகளிர் ஆம் எனப்
பொங்கு கண் புடைத்து அழுவ போன்றவே.
126

உரை
   
 
தயரதன் உடலம் கொண்டு சரயு நதியை அடைதல்

2317.மாவும் யானையும் வயங்கு தேர்களும்
கோவும் நான்மறைக் குழுவும் முன்செலத்
தேவிமாரொடும் கொண்டு தெள் திரை
தாவு வார் புனல் சரயு எய்தினார்.
127

உரை
   
 
ஈமப் பள்ளியில் தயரதனை ஏற்றிப் பரதனைக்
கடன் செய அழைத்தல்

2318.எய்தி நூல் உேளார் மொழிந்த யாவையும்
செய்து தீக்கலம் திருத்திச் செல்வனை
வெய்தின் ஏற்றினார்; ‘வீர! நுந்தைபால்
பொய் இல் மாக் கடன் கழித்தி போந்து ‘என்றார்.
128

உரை
   
 
கடன்செய எழுந்த பரதனை வசிட்டன் தடுத்தல்

2319.என்னும் வேலையில் எழுந்த வீரனை
‘அன்னை தீமையால் அரசன் நின்னையும்
துன்னு துன்பத்தால் துறந்து போயினான்
முன்னரே ‘என முனிவன் கூறினான்.
129

உரை
   
 
பரதன் துயர்நிலை (2320-2324)

2320.‘துறந்து போயினான் ‘எனவே ‘தோன்றல் நீ
பிறந்து பேர் அறம் பிழைத்தது ‘என்றல் போல்
இறந்து போயினான்; இருந்தது ஆண்டு அது
மறந்து வேறு ஒரு மைந்தன் ஆம் கொலாம்!
131

உரை
   
 
2321.இடிக்கண் வாள் அரா இடைவது ஆம் எனாப்
படிக்கண் வீழ்ந்து அகம் பதைக்கும் நெஞ்சினான்
தடுக்கல் ஆகலாத் துயரம் தன் உளே
துடிக்க விம்மி நின்று அழுது சொல்லுவான்.
131

உரை
   
 
2322.‘உரைசெய் மன்னர் மற்று உன்னில் என்னில் யார்?
இரவி தன் குலத்து எந்தை முந்தையோர்
பிரத பூசனைக்கு உரிய பேறு இலேன்
அரசு செய்யவோ ஆவது ஆயினேன்?
132

உரை
   
 
2323.‘பூவில் நால் முகன் புதல்வன் ஆதியாம்
தாவு இல் மன்னர் தம் தரும நீதியால்
தேவர் ஆயினார்; சிறுவன் ஆகியே
ஆவ! நான் பிறந்து அவத்தன் ஆனவா!
133

உரை
   
 
2324.‘துன்னு தாள் வளம் சுமந்த தாழையில்
பன்னு வான் குலைப் பதடி ஆயினேன்
என்னை என்னையே ஈன்று காத்த என்
அன்னையார் எனக்கு அழகு செய்தவா!
134

உரை
   
 
சத்துருக்கனால் இறுதிக்கடனை நிறைவேற்றுதல்

2325.என்று கூறி நின்று இடரில் மூழ்கும் அத்
துன்று தாரவற்கு இளைய தோன்றலால்
அன்று நேர் கடன் அமைவது ஆக்கினான்
நின்று நான்மறை நெறிசெய் நீர்மையான்.
135

உரை
   
 
தயரதனுடைய தேவிமார் அறுபதினாயிரவரும் தீப்புகுதல்

2326.இழையும் ஆரமும் இடையும் மின்னிடக்
குழையும் மா மலர்க் கொம்பு அனார்கள் தாம்
தழை இல் முண்டகம் தழுவு கான் இடை
நுழையும் மஞ்ஞை போல் எரியில் மூழ்கினார்.
136

உரை
   
 
2327.அங்கி நீரினும் குளிர அம்புயத்
திங்கள் வாள் முகம் திரு விளங்குறச்
சங்கை தீர்ந்து தம் கணவர்பின் செலும்
நங்கைமார் புகும் உலகம் நண்ணினார்.
137

உரை
   
 
ஈமக்கடன் முடித்த பரதன் மனையை அடைதல்

2328.அனைய செய்கையால் அரசர் கோமகற்கு
இனைய தன்மையால் இயைவ செய்து பின்
மனையின் எய்தினான் மரபின் வாழ்வினை
வினையின் எய்தும் ஓர் பிணியின் வெஃகலான்.
138

உரை
   
 
பரதன் இறுதிக்கடனை முடித்தல

2329.ஐந்தும் ஐந்தும் நாள் ஊழி ஆம் என
மைந்தன் வெம் துயர்க் கடலின் வைகினான்;
தந்தை தன் வயின் தருமம் யாவையும்
முந்து நூலுேளார் முறையின் முற்றினான்.
139

உரை
   
 
வசிட்டன் பரதனை அடைதல்

2330.முற்றும் முற்றுவித்து உதவி மும்மை நூல்
சுற்றம் யாவையும் தொடரத் தோன்றினான்;
வெற்றி மாதவன் வினை முடித்த அக்
கொற்ற வேல் நெடுங் குமரற் கூடினான்.
140

உரை
   
 
மந்திரிமார் நகரப் பெருமக்கேளாடு பரதனை அடைதல்

2331.‘மன்னர் இன்றியே வையம் வைகல் தான்
தொன்மை அன்று ‘எனத் துணியும் நெஞ்சினார்
அன்ன மாநிலத்து அறிஞர் தம்மொடும்
முன்னை மந்திரம் கிழவர் முந்தினார்.
141

உரை