தொடக்கம்
இராமன் முதலியோர் சரபங்கமுனிவர் ஆச்சிரமத்தை அடைதல்
2678.
குரவம் குவி கோங்கு அலர் கொம்பினொடும்
இரவு அங்கு அணுகும்பொழுது எய்தினரால்;
சரவங்கன் இருந்து தவம் கருதும்
மரவம் கிளர் கோங்கு ஒளிர் வாச வனம்.
1
உரை
இந்திரன் வருதல்
2679.
செவ்வேலவர் சென்றனர் சேரல் உறும்
அவ்வேலையின் எய்தினன் ஆயிரம் ஆம்
தவ்வாது இரவும் பொலி தாமரையின்
வெவ்வேறு அலர் கண்ணினன் விண்ணவர் கோன்.
2
உரை
இந்திரனை வருணித்தல் (2680-2690)
2680.
அன்னச் செலவின் படிமேல் அயல் சூழ்
பொன்னின் பொலிவார் அணி பூண் ஒளிமேல்
மின்னின் செறி கற்றை விரிந்தன போல்
பின்னிச் சுடரும் பிறழ் பேர் ஒளியான்.
3
உரை
2681.
வானில் பொலி தோகையர் கண் மலர் வான்
கானில் படர் கண் களி வண்டொடு தார்
மேனித் திரு நாரதன் வீணை இசைத்
தேனில் படியும் செவி வண்டு உடையான்.
4
உரை
2682.
அனையின் துறை ஐம்பதொடு ஐம்பது நூல்
வினையின் தொகை வேள்வி நிரப்பிய மா
முனைவன் முது தேவரின் மூவர் அலார்
புனையும் முடி துன்று பொலம் கழலான்.
5
உரை
2683.
செம் மா மலராள் நிகர் தேவியொடும்
மும் மா மத வெண் நிறம் முன் உயர் தாள்
வெம் மா மிசையான் விரி வெள்ளி விளங்கு
அம் மா மலை அண்ணலையே அனையான்.
6
உரை
2684.
தான் நின்று, அயல் நின்று ஒளிர்
தண் கதிரோன்,
யான் நின்றது என்? என்று ஒளி
எஞ்சிட, மா
வான் நின்ற பெரும் பதம்
வந்து உருவாய்
மேல் நின்றென நின்று ஒளிர்
வெண் குடையான்.
7
உரை
2685.
திசை கட்டிய மால் கரி தடெ்ட மதப்
பசை கட்டின கிட்டின பற்பல போர்
விசை கட்டு அழி தானவர் விட்டு அகல் பேர்
இசை கட்டிய ஒத்து இவர் சாமரையான்.
8
உரை
2686.
தீர்வு இல் திரி செம் கதிர் தங்குவது ஓர்
ஊர் உற்றது எனப் பொலி ஒள் முடியான்;
போர் வித்தகன் நேமி பொறுத்தவன் மா
மார்வில் திருவின் பொலி மாலையினான்.
9
உரை
2687.
செற்றிக் கதிரின் பொலி செம் மணியின்
கற்றைச் சுடர் விட்டு எரி கஞ்சுகியான்
வெற்றித்திருவின் குளிர் வெண் நகை போல்
சுற்றிக் கிளரும் சுடர் தோள்வளையான்.
10
உரை
2688.
பல் ஆயிரம் மா மணி பாடம் உறும்
தொல் ஆர் அணி கால் சுடரின் தொகை தாம்
எல்லாம் உடனாய் எழலால் ஒரு தன்
வில்லால் ஒளிர் மேகம் எனப் பொலிவான்.
11
உரை
2689.
மானா உலகந்தனில் மன்றல் பொரும்
தேன் நாறு நலம் செறி தொங்கலினான்
மீனோடு கடுத்து உயர் வென்றிய ஆம்
வான் நாடியர் கண் எனும் வாள் உடையான்.
12
உரை
2690.
வெல்வான் நசையால் விசையால் விடும்நாள்
எல் வான் சுடர் மாலை இராவணன்மேல்
நெல்வாலும் அறாத நிறம் பிறழா
வல்வாய் மடியா வயிரப் படையான்.
13
உரை
முனிவர் இந்திரனை வினவுதல்
2691.
நின்றான்; எதிர் நின்ற நெடுந்தவனும்
சென்றான் எதிர்கொண்டு சிறப்பு அமையா
என் தான் இவண் எய்திய ஆறு? எனலும்
பொன்றாத பொலம் கழலோன் புகலும்.
14
உரை
இந்திரன் மறுமொழி (2692-2694)
2692.
நின்னால் இயல் நீதி நெடுந்தவம் இன்று
என்னானும் விளம்பரிது என்று உணர்வான்
அந் நான்முகன் நின்னை அழைத்தனனால்
பொன் ஆர் சடை மாதவ! போதுதியால்.
15
உரை
2693.
எந்தாய்! உலகு யாவையும் எவ் உயிரும்
தந்தான் உறையும் நெறி தந்தனனால்
நந்தாத பெருந் தவ நாடு அது நீ
வந்தாய் எனின் நின் எதிரே வருவான்.
16
உரை
2694.
எல்லா உலகிற்கும் உயர்ந்தமை யான்
சொல்லா வகை நீ உணர் தொன்மையைால்
நல்லாளுடனே நட நீ எனலும்
அல்லேன் என வால் அறிவான் அறைவான்.
17
உரை
சரபங்கரது மறுமொழி (2695-2697)
2695.
சொல் பொங்கு பெரும் புகழோய்! தொழில் மாய்
சிற்பங்களின் வீவன சேர்குவெனோ?
அற்பம் கருதேன் என் அருந்தவமோ
கற்பம் பல சென்றது காணுதியால்!
18
உரை
2696.
சொற்றும் தரம் அன்று இது; சூழ் கழலாய்!
பெற்றும் பெறுகில்லது ஒர் பெற்றியதே;
மற்று என் பல சொல் : இவண் வந்து தவம்
முற்றும் பகல் தானும் முடித்தனனால்.
19
உரை
2697.
சிறு காலை இலா நிலையோ திரியா
குறுகா நெடுகா குணம் வேறுபடா
உறு கால் கிளர் பூதம் எலாம் உகினும்
மறுகா நெறி எய்துவென்; வானுடையாய்!
20
உரை
இராமன் முதலியோர் சரபங்காச்சிரமத்தினுள்
நிகழ்ந்துள்ளதை ஆராய்தல்
2698.
என்று இன்ன விளம்பிடும் எல்லையின்வாய்
வன் திண் சிலை வீரரும் வந்து அணுகா
ஒன்றும் கிளர் ஓதையினால் உணர்வார்
நின்று என்னை கொல் இன்னது? எனா நினைவார்.
21
உரை
சரபங்கரிடம் இந்திரன் வந்திருத்தலை உய்த்துணர்தல்
2699.
கொம்பு ஒத்தன நால் ஒளிர் கோள் வயிரக்
கம்பக் கரி நின்றது கண்டனமால்
இம்பர்த்தலை மாதவர்பால் இவன் ஆம்
உம்பர்க்கு அரசு எய்தினன் என்று உணரா.
22
உரை
இராமன் தனித்துச் சோலையுள் புகுதல்
2700.
மானே அனையாெளாடு மைந்தனை அப்
பூ நேர் பொழிலின் புறனே நிறுவா
ஆன் ஏறு என ஆள் அரி ஏறு இது எனத்
தானே அவ் அகன் பொழில் சாருதலும்.
23
உரை
இந்திரன் இராமனைக் காண்டல்
2701.
கண் தாம் அவை ஆயிரமும் கதுவக்
கண் தாமரை போல் கரு ஞாயிறு எனக்
கண்டான் இமையோர் இறை காசினியின்
கண் தான் அரும் நான்மறையின் கனியை.
24
உரை
இந்திரன் இராமனைத் தொழுதல்
2702.
காணா மனம் நொந்து கவன்றனனால்
ஆள் நாதனை அந்தணர் நாயகனை
நாள் நாளும் வணங்கிய நல் முடியால்
தூண் ஆகிய தோள் கொடு அவன் தொழுவான்.
25
உரை
இராமன் பெருமை பற்றிய கவிக்கூற்று
2703.
துவசம் ஆர் தொல் அமருள் துன்னாரைச் செற்றும்
சுருதிப் பெருங் கடலின் சொல் பொருள் கற்பித்தும்
திவசம் ஆம் நல் அறத்தின் செம் நெறியின் உய்த்தும்
திரு அளித்தும் வீடு அளித்தும் சிங்காமைத் தங்கள்
கவசமாய் ஆருயிராய்க் கண்ணாய் மெய்த் தவமாய்க்
கடை இலா ஞானமாய்க் காப்பானைக் காணா
அவசமாய்ச் சிந்தை அழிந்து அயலே நின்றான்
அறியாதான் போல அறிந்த எலாம் சொல்வான்.
26
உரை
இந்திரன் இராமனைத் துதித்தல் (2704-2708)
2704.
தோய்ந்தும் பொருள் அனைத்தும் தோயாது நின்ற
சுடரே! தொடக்கு அறுத்தோர் சுற்றமே! பற்றி,
நீந்த அரிய நெடுங் கருணைக்கு எல்லாம்
நிலயமே! வேதநெறி முறையின் நேடி
ஆய்ந்த உணர்வின் உணர்வே! பகையால்
அலைப்புண்டு அடியேம் அடிபோற்ற, அந்நாள்
ஈந்த வரம் உதவ எய்தினையே! எந்தாய்!
இரு நிலத்தவோ நின் இணை அடித் தாமரை? தாம்.
27
உரை
2705.
மேவாதவர் இல்லை, மேவினரும் இல்லை,
வெளியோடு இருள் இல்லை, மேல் கீழும் இல்லை,
மூவாமை இல்லை, மூத்தமையும் இல்லை, முதல்
இடையோடு ஈறு இல்லை, முன்னொடு பின் இல்லை,
தேவா இங்கு இவ்வோ நின் தொன்று நிலை என்றால்,
சிலை ஏந்தி வந்து எம்மைச் சேவடிகள் நோவக்
காவாது ஒழியின் பழி பெரிதோ அன்றேல்
கருங் கடலில் கண்வளராய்! கைம்மாறும் உண்டோ?
28
உரை
2706.
நாழி நவை தீர் உலகு எலாம் ஆக,
நளினத்து நீ தந்த நான்முகனார் தாமே,
ஊழி பல பலவும் நின்று அளந்தால், ஒன்றும்
உலவாப் பெருங்குணத்த உத்தமனே! மேல் நாள்,
தாழி தரை ஆகத் தண் தயிர் நீர் ஆகத்
தடவரையே மத்து ஆகத் தாமரைக்கை நோவ,
ஆழி கடைந்து அமுதம் எங்களுக்கே ஈந்தாய்;
அவுணர்கள்தாம் நின் அடிமை அல்லாமை உண்டோ?
29
உரை
2707.
ஒன்று ஆகி மூலத்து உருவம் பல ஆகி
உணர்வும் உயிரும் பிறிது ஆகி ஊழி
சென்று ஆசு அறும் காலத்து அந்நிலையது ஆகித்
திறத்து உலகம் தான் ஆகிச் செஞ்செவே நின்ற
நன்று ஆய ஞானத் தனிக்கொழுந்தே! நங்கள்
நவை தீர்க்கும் நாயகமே நல்வினையே நோக்கி
நின்றாரைக் காத்தி அயலோரைக் காய்தி
நிலை இல்லாத் தீவினையும் நீ தந்தது அன்றே?
30
உரை
2708.
வல்லை வரம்பு இல்லாத மாயவினைதன்னால்
மயங்கினரோடு எய்தி, மதிமயங்கி, மேல் நாள்,
அல்லை இறையவன் நீ ஆதி எனப் பேதுற்று
அலமருவேம், முன்னை அறப்பயன் உண்டாக,
எல்லை வலயங்கள் நின்னுழை என்று, அந்நாள்,
எரியோனைத் தீண்டி எழுவர் என நின்ற
தொல்லை முதல் முனிவர் சூளுற்ற போதே
தொகை நின்ற ஐயம் துடைத்திலையோ? எந்தாய்!
31
உரை
இந்திரன் தன்னுலகு சென்றமை
2709.
இன்னன பல நினைந்து ஏத்தினன் இயம்பாத்
துன்னுதல் இடை உளது என நனி துணிவான்
தன் நிகர் முனிவனைத் தர விடை என்னாப்
பொன் ஒளிர் நெடு முடிப் புரந்தரன் போனான்.
32
உரை
முனிவன் இராமனை எதிர்சென்று உழைத்துச்
சிறப்பித்தல்
2710.
போனவன் அகநிலை புலமையின் உணர்வான்
வானவர் தலைவனை வர எதிர்கொண்டான்;
ஆனவன் அடி தொழ அருள்வர அழுதான்
தான் உடை இடவகை தழுவினன் நுழைவான்.
33
உரை
இராமன் முதலிய மூவரும் சரபங்கன்
ஆச்சிரமத்தை அடைதல்
2711.
ஏழையும் இளவலும் வருக என இனிதா
வாழிய அவரொடும் வந்தனன் மகிழ்வால்
ஊழியின் முதல் முனி உறையுளை அணுக
ஆழியில் அறிதுயிலவன் என மகிழ்வான்.
34
உரை
முனிவன் அறவுரை பகர்தல்
2712.
அவ்வயின் அழகனும் வைகினன் அறிஞன்
செவ்விய அறவுரை செவிவயின் நுகரா
நவ்வியின் விழியவெளாடும் நனி இருளைக்
கவ்விய நிசி ஒரு கடையுறும் அளவில்.
35
உரை
கதிரவன் தோற்றம்
2713.
விலகிடும் நிழலினன் வெயில் விரி அயில் வாள்
இலகிடு சுடரவன் இசையன திசை தோய்
அலகிடல் அரிய தன் அவிர் கரநிரையால்
உலகிடு நிறை இருள் உறையினை உரிவான்.
36
உரை
முனிவன் எரிபுகுதற்குத் துணிதல்
2714.
ஆயிடை அறிஞனும் அவன் எதிர் அழுவத்
தீயிடை நுழைவது ஒர் தெளிவினை உடையான்
நீ விடை தருகென நிறுவினன் நெறியால்
காய் எரி வரன்முறை கடிதினில் இடுவான்.
37
உரை
முனிவன், தீப்புகுதற்கு இராமனிடம் விடை கேட்டல்
2715.
வரி சிலை உழவனும் மறை உழவனை நீ
புரி தொழில் எனை? அது புகலுதி எனலும்
திருமகள் தலைவ! செய் திருவினை உற யான்
எரி புக நினைகுவென் அருள்கென இறைவன்.
38
உரை
இராமன் வினாவும் முனிவன் விடையும் (2716-2718)
2716.
யான் வரும் அமைதியின் இது செயல் எவனோ?
மான் வரு தனி உரி மார்பினை! எனலும்
மீன் வரு கொடியவன் விறல் அடு மறவோன்
ஊன் வரும் உவகையின் உரை நனி புரிவான்.
39
உரை
2717.
ஆயிரம் முகம் உள தவம் அயர்குவென் யான்
நீ இவண் வருதிகொல் எனும் நிலை உடையேன்;
போயின இரு வினை புகலுறு விதியால்
மேயினை; இனி ஒரு வினை இலை விறலோய்!
40
உரை
2718.
இந்திரன் அருளினன் இறுதிசெய் பகலா
வந்தனன் மருவுதி மலர் அயன் உலகம்
தந்தனன் என அது சாரலென் உரவோய்!
அந்தம் இல் உயர் பதம் அடைதலை முயல்வேன்.
41
உரை
சரபங்கன் தீயிடைப் புக்கு வீடுபெறுதல் (2719-2720)
2719.
ஆதலின் இது பெற அருள் என உரையாக்
காதலி அவெளாடு கதழ் எரி முழுகிப்
போதலை மருவினன்; ஒரு நெறி புகலா
வேதமும் அறிவரு மிகு பொருள் உணர்வோன்.
42
உரை
2720.
தேவரும் முனிவரும் உறுவது தரெிவோர்
யாவரும் நறு விரை மலர் அயன் முதலோர்
ஏவரும் அறிவினில் இரு வினை ஒருவிப்
போவது கருதும் அவ் அரு நெறி புக்கான்.
43
உரை
சரபங்கனது பேறு பற்றிய கவிக்கூற்று
2721.
அண்டமும் அகிலமும் அறிவரும் நெறியால்
உண்டவன் ஒரு பெயர் உணர்குநர் உறு பேறு
எண் தவ நெடிது எனின் இறுதியில் அவனைக்
கண்டவர் உறு பொருள் கருதுவது எளிதோ?
44
உரை