இராம இலக்குவர் விடியலில் புறப்பட்டுப் போதல்

3743.நிலம் ‘பொறை ஈது! ‘என நிமிர்ந்த கற்பினாள்
நலம் பொறை கூர்தரு மயிலை நாடிய
அலம்புறு பறவையும் அழுவவாம் எனப்
புலம்புறு விடியலில் கடிது போயினார்.
1

உரை
   
 
கவந்தன் வனத்தைச் சேர்தல்

3744.ஐ ஐந்து அடுத்த யோசனையின்
    இரட்டி, அடவி புடைபடுத்த
வையம் திரிந்தார்; கதிரவனும்
    வானின் நாப்பண் வந்து உற்றான்;
எய்யும் சிலைக்கை இருவரும் சென்று,
    இருந்தே நீட்டி எவ் உயிரும்
கையின் வளைத்து வயிற்று அடக்கும்
    கவந்தன் வனத்தின்கண் உற்றார்.
2

உரை
   
 
கவந்தன் கைக்குள் புக்க பொருள்களின் இயல்பு
(3745-3747)

3745.எறும்பு இனம் கடை உற யானையே முதல்
உறுப்பு உடை உயிர் எலாம் உலைந்து சாய்ந்தன;
வெறிப்பு உறு நோக்கின வெருவுகின்றன;
பறிப்பு அரு வலை இடை பட்ட பான்மைய.
3

உரை
   
 
3746.மரபுளி நிறுத்திலன் புரக்கும் மாண்பு இலன்
உரன் இலன் ஒருவன் நாட்டு உயிர்கள் போல்வன
வெருவுவ சிந்துவ குவிவ விம்மலோடு
இரிவன மயங்குவ இயல்பு நோக்கினார்.
4

உரை
   
 
3747.மால்வரை உருண்டன வருவ மாமரம்
கால் பறிந்து இறுவன கான யாறுகள்
மேல் உள திசை ஒடு வெளிகள் ஆவன
சூல் முதிர் மேகங்கள் சுருண்டு வீழ்வன.
5

உரை
   
 
இராம இலக்குவர் கவந்தன் கைக்குள் புகுதல்
(3748-3749)

3748.நால் திசைப் பரவையும் இறுதி நாள் உறக்
காற்று இசைத்து எழ எழுந்து உலகைக் கால் பரந்து
ஏற்று இசைத்து உயர்ந்து வந்து இடுங்குகின்றன
போல் திசைச் சுற்றிய கரத்துப் புக்குளார்.
6

உரை
   
 
3749.தேமொழி திறத்தினால் அரக்கர் சேனை வந்து
ஏம் உற வளைந்தது என்று உவகை எய்தினார்;
நேமி மால் வரை என நெருக்குகின்றதே
ஆம் எனல் ஆய கைம் மதிட்குள் ஆயினார்.
7

உரை
   
 
மகிழ்ச்சியால் இராமன் இலக்குவனுக்குக் கூறுவது

3750.இளவலை நோக்கினன் இராமன் “ஏழையை
உளைவு செய் இராவணன் உறையும் ஊரும் இவ்
அளவையது ஆகுதல் அறிதி ஐய! நம்
கிளர் பெருந் துயரமும் கீண்டது ஆம் “ என்றான்.
8

உரை
   
 
இலக்குவன் சொல் (3751-3752)

3751.“முற்றிய அரக்கர்தம் முழங்கு தானையேல்
எற்றிய முரசு ஒலி ஏங்கும் சங்கு இசை
பெற்றிலது ஆகலின் பிறிது ஒன்று ஆம் “ எனச்
சொற்றனன் இளையவன் தொழுது முன் நின்றான்.
9

உரை
   
 
3752.“தெள்ளிய அமுது எழத் தேவர் வாங்கிய
வெள் எயிற்று அரவம்தான்? வேறு ஓர் நாகம்தான்?
தள்ளுரு வாலொடும் தலையினால் வளைத்து
உள் உறக் கவர்வதே ஒக்கும் ஊழியாய்! “
10

உரை
   
 
கவந்தன் தோற்றம்

3753.என்று இவை விளம்பிய இளவல் வாசகம்
நன்று என நினைந்தனன் நடந்த நாயகன்;
ஒன்று இரண்டு யோசனை உள் புக்கு ஓங்கல்தான்
நின்று என இருந்த அக் கவந்தன் நேர் சென்றார்.
11

உரை
   
 
கண்ணும் வாயும்

3754.வெயில் சுடர் இரண்டினை மேருமால் வரை
குயிற்றியது ஆம் எனக் கொதிக்கும் கண்ணினன்
எயிற்று இடைக்கு இடை இரு காதம் ஈண்டிய
வயிறு இடை வாய் எனும் மகர வேலையான்.
12

உரை
   
 
கைகளின் நீட்சி

3755.ஈண்டிய புலவரோடு அவுணர் இந்துவைத்
தீண்டிய நெடுவரைத் தயெ்வ மத்தினைப்
பூண்டு உயர் வடம் இரு புடையும் வாங்கலின்
நீண்டன கிடந்து என நிமிர்ந்த கையினான்.
13

உரை
   
 
மூக்கும் நாக்கும்

3756.தொகைக் கனல் கருமகன் துருத்தித் தூம்பு எனப்
புகைக்கொடி கனலொடு பொடிக்கும் மூக்கினான்
பகைத் தகை நெடுங்கடல் பருகும் பாவகன்
சிகைக் கொழுந்து இது எனத் திருகு நாவினான்.
14

உரை
   
 
கோரப் பற்கள்

3757.புரண்டு பாம்பு இடைவர வெருவிப் புக்கு உறை
அரண் தனை நாடி ஓர் அருவி மால்வரை
முரண் தொகு முழைநுழை முழுவெண் திங்களை
இரண்டு கூறு இட்டு என இலங்கு எயிற்றினான்.
15

உரை
   
 
உடம்பின் இயல்பு

3758.ஓதம் நீர் மண் இவை முதல ஓதிய
பூதம் ஓர் ஐந்தினில் பொருந்திற்று அன்றியே
வேத நூல் வரன்முறை விதிக்கும் ஐம் பெரும்
பாதகம் திரண்டு உயிர் படைத்த பண்பினான்.
16

உரை
   
 
செவியும் வயிறும்

3759.வெய்ய வெங் கதிர்களை
    விழுங்கும் வெவ் அராச்
செய் தொழில் இல துயில்
    செவியின் தொள்ளையான்,
பொய் கிளர் வன்மையில்
    பிரியும் புன்மையோர்
வைகுறும் நரகையும்
    நகும் வயிற்றினான்.
17

உரை
   
 
வாய்

3760.முற்றிய உயிர் எலாம் முருங்க வாரித்தான்
பற்றிய கரத்தினன் பணைத்த பண்ணையில்
துற்றிய புகுதரும் தோற்றத்தால் யமன்
கொற்ற வாய்தல் செயல் குறித்த வாயினான்.
18

உரை
   
 
உடம்பு

3761.ஓலம் ஆர் கடல் என முழங்கும் ஓதையான்
ஆலமே என இருண்டு அழன்ற ஆக்கையான்
நீலமால் நேமியின் தலையை நீக்கிய
கால நேமியைப் பொரும் கவந்தக் காட்சியான்.
19

உரை
   
 
இருவரும் நோக்குதல்

3762.தாக்கிய தணப்பு இல் கால் எறியத் தன் உடை
மேக்கு உயர் கொடுமுடி இழந்த மேரு நேர்
ஆக்கையின் இருந்தவன் தன்னை அவ் வழி
நோக்கினார் இருவரும் நுணங்கு கேள்வியார்.
20

உரை
   
 
வாயைப் பார்த்து ஐயுறல்

3763.நீர் புகும் நெடுங்கடல் அடங்கும் நேமி சூழ்
பார் புகும் நெடும் பகு வாயைப் பார்த்தனர்;
“சூர் புகல் அரியது ஓர் அரக்கர் தொல் மதில்
ஊர் புகு வாயிலோ இது? “ என்று உன்னினார்.
21

உரை
   
 
இராம இலக்குவர் உரையாடல் (3764-3778)

3764.அவ்வழி இளையவன் அமர்ந்து நோக்கியே
“வெவ்வியது ஒரு பெரும் பூதம் வில் வலாய்!
வவ்விய தன் கையின் வளைத்து வாய்ப் பெயும்;
செய்வது என் இவண்? “ எனச் செம்மல் சொல்லுவான்.
22

உரை
   
 
3765.“பாரிடமே இது பரவை சுற்றுறும்
பார் இடம் அரிது எனப் பரந்த மெய்யது
பார்! இடம் வலம் வரப் பரந்த கையது
பார் இடந்து எடுத்த மா அனைய பாழியாய்! “
23

உரை
   
 
3766.“தோகையும் பிரிந்தனள் எந்தை துஞ்சினன்
வேக வெம்பழி சுமந்து உழல வேண்டலேன்;
ஆகலின் யான் இனி இதனுக்கு ஆமிடம்;
ஏகுதி ஈண்டு நின்று இளவலே! “ என்றான்.
24

உரை
   
 
3767.“ஈன்றவர் இடர்ப்பட எம்பி துன்பு உறச்
சான்றவர் துயர் உறப் பழிக்குச் சார்வுமாய்த்
தோன்ற வல்லேன் உயிர் துறந்தபோது அலால்
ஊன்றிய பெரும்பழி துடைக்க ஒண்ணுமோ? “
25

உரை
   
 
3768.“‘இல் இயல்பு உடைய நீர்
    அளித்த இன்சொல் ஆம்
வல்லி அவ் அரக்கர் தம்
    மனை உளாள் ‘எனச்
சொல்லினென், மலை எனச்
    சுமந்த தூணியென்,
வில்லினென், செல்வெனோ
    மிதிலை வேந்தன்பால்? ‘‘
26

உரை
   
 
3769.“‘தளை அவிழ் கோதையைத்
    தாங்கல் ஆற்றலன்,
இளை புரந்து அளித்தல் மேல்
    இவர்ந்த காதலன்
உளன் ‘என உரைத்தலின்,
    ‘உம்பரான் ‘என
விளைதல் நன்று ஆதலின்,
    விளிதல் நன்று ‘‘ என்றான்.
27

உரை
   
 
3770.ஆண்டான் இன்னன பன்னிட,
    ஐயற்கு இள வீரன்,
“ஈண்டு யான் உன்பின் ஏகிய
    பின், இவ் இடர் வந்து
மூண்டால், முன்னே ஆர்
    உயிரோடும் முடியாதே
மீண்டே போதற்கு ஆம் எனின்
    நன்று என் வினை ‘‘ என்றான்.
28

உரை
   
 
3771.என்றான் என்னாப் பின்னும்
    இசைப்பான், “இடர் தன்னை
வென்றார் அன்றே வீரர்கள்
    ஆவார்? விரவாரின்,
தன் தாய் தந்தை தம்முன்
    எனும் தன்மையர் முன்னே
பொன்றான் என்றால், நீங்குவது
    அன்றோ புகழ் அம்மா? ‘‘
29

உரை
   
 
3772.“‘மானே அன்னாள் தன்னொடு
    தம் முன் வரை ஆரும்
கானே வைகக் கண் துயில்
    கொள்ளாது அயல் காத்தற்கு
ஆனான், என்னே! ‘என்றவர்
    முன்னே, ‘அவர் இன்றித்
தானே வந்தான் ‘என்றலின்
    வேறு ஓர் தவறு உண்டோ? ‘‘
30

உரை
   
 
3773.“என்தாய், ‘உன்முன் ஏவிய
    யாவும் இசை; இன்னல்
பின்றாது எய்திப் பேர்
    இசையாளற்கு அழிவு உண்டேல்,
பொன்றா முன்னம் பொன்றுதி ‘
    என்றாள்; உரை பொய்யா
நின்றால் அன்றோ நிற்பது
    வாய்மை நிலை அம்மா? ‘‘
31

உரை
   
 
3774.“என் பெற்றாளும் யானும்
    எனைத்து ஓர் வகையாலும்
நின் பெற்றாட்கும் நிற்கும்
    நினைப்புப் பிழையாமல்,
நல் பொன் தோளாய்! நல்லவர்
    பேண நனி நிற்கும்
சொல் பெற்றோம்; மற்று ஆருயிர்
    பேணித் துறவேமால். ‘‘
32

உரை
   
 
3775.“ஓதும் கால், அப்பல் பொருள்
    முற்று உற்று, ஒருவாத
வேதம் சொல்லும் தேவரும்
    வீயும் கடை வீயாய்;
மாதங்கம் தின்று உய்ந்து இவ்
    வனத்தின் தலை வாழும்
பூதம் கொல்லப் பொன்றுதி
    போலும்? பொருள் உண்டோ? ‘‘
33

உரை
   
 
3776.“கேட்டார் கொள்ளார், கண்டவர்
    பேணார், ‘கிளர் போரில்
தோட்டார் கோதைச் சோர் குழல்
    தன்னைத் துவளாமல்
மீட்டான் என்னும் பேர் இசை
    கொள்ளான் செரு வெல்ல
மாட்டான் மாண்டான் ‘என்றலின்
    மேலும் வசை உண்டோ? ‘‘
34

உரை
   
 
3777.“தணிக்கும் தன்மைத்து அன்று
    எனின் அன்று, இத்தகை வாளால்;
கணிக்கும் தன்மைத்து அன்று,
    விடத்தின் கனல் பூதம்
பிணிக்கும் கையும், பெய்
    பில வாயும் பிழையாமல்
துணிக்கும் வண்ணம் காணுதி;
    துன்பம் துற ‘‘ என்றான்.
35

உரை
   
 
3778.என்னா, முன்னே செல்லும்
    இளங்கோ; இளையோற்கு
முன்னே செல்லும் முன்னவன்;
    அன்னானினும் முந்தும்
தன்நேர் இல்லாத் தம்பி;
    தடுப்பார் பிறர் இல்லை;
அன்னோ! கண்டார் உம்பரும்,
    வெய்துற்று அழுதாரால்.
36

உரை
   
 
யார் என்று வினவிய கவந்தனை வெகுண்டு நிற்றல்

3779.இனையர் ஆகிய இருவரும்,
    முகத்து இரு கண் போல்,
கனையும் வார்கழல் வீரர் சென்று
    அணுகலும், கவந்தன்,
“வினையின் எய்தினிர் யாவர்
    கொலாம்? “ என்று வினவ,
நினையும் நெஞ்சினர், இமைத்திலர்,
    உருத்தனர், நின்றார்.
37

உரை
   
 
கவந்தன் இருதோள்களை இருவரும் அரிதல்

3780.“அழிந்து உளார் அலர்; இகழ்ந்தனர்
    என்னை “ என்று அழன்றான்;
பொழிந்த கோபத்தன்; புது பொறி
    மயிர்ப்புறம் பொடிப்ப,
“விழுங்குவேன் “ என விரைதலும்,
    விண் உற, வீரர்,
எழுந்த தோள்களை வாள்களால்
    அரிந்தனர், இட்டார்.
38

உரை
   
 
கவந்தன் கைகளற்ற தோற்றம்

3781.கைகள் அற்று, வெம் குருதி ஆறு
    ஒழுக்கிய கவந்தன்,
மெய்யின், மேற்கொடு கிழக்கு உற
    பெருநதி விரவும்,
சைய மா நெடுந் தாழ் வரைத்
    தனி வரை தன்னோடு
ஐயம் நீங்கிய பேர் எழில்
    உவமையன் ஆனான்.
39

உரை
   
 
கவந்தன் பழைய தயெ்வ உருவம் பெறல் (3782-3783)

3782.ஆளும் நாயகன் அம் கையில்
    தீண்டிய அதனால்,
மூளும் சாபத்தின் முந்திய
    தீவினை முடித்தான்;
தோளும் வாங்கிய தோம் உடை
    யாக்கையைத் துறவா,
நீளம் நீங்கிய பறவையின்
    விண் உற நிமிர்ந்தான்.
40

உரை
   
 
3783.விண்ணில் நின்றவன், “விரிஞ்சனே
    முதலினர் யார்க்கும்
கண்ணில் நின்றவன் இவன் ‘‘ எனக்
    கருத்துற உணர்ந்தான்,
எண்ணில் அன்னவன் குணங்களை
    வாய் திறந்து, இசைத்தான்,
புண்ணியம் பயக்கின்றுழி
    அரியது எப்பொருளே?
41

உரை
   
 
இராமனைத் துதித்தல் (3784-3792)

3784.“ஈன்றவனோ எப்பொருளும்?
    எல்லைதீர் நல் அறத்தின்
சான்றவனோ? தேவர்
    தவத்தின் தனிப்பயனோ?
மூன்று கவடாய்
    முளைத்து எழுந்த மூலமோ?
தோன்றி, அருவினையேன்
    சாபத் துயர் துடைத்தாய்! ‘‘
42

உரை
   
 
3785.“மூலமே இல்லா முதல்வனே!
    நீ முயலும்
கோலமோ, யார்க்கும் தரெிவு அரிய
    கொள்கைத்தால்;
ஆலமோ? ஆலின் அடையோ?
    அடை கிடந்த
பாலனோ? வேலைப் பரப்போ?
    பகராயே! ‘‘
43

உரை
   
 
3786.“காண்பார்க்கும் காணப்படு பொருட்கும்
    கண் ஆகிப்
பூண்பாய் போல் நிற்றியால்,
    யாது ஒன்றும் பூணாதாய்!
மாண்பால் உலகை
    வயிற்று ஒளித்து வாங்குதியால்;
ஆண்பாலோ? பெண்பாலோ?
    அப்பாலோ? எப்பாலோ? ‘‘
44

உரை
   
 
3787.“‘ஆதிப் பிரமனும் நீ!
    ஆதிப் பரமனும் நீ!
ஆதி எனும் பொருளுக்கு
    அப்பால் உண்டாகிலும் நீ!
சோதிச் சுடர்ப் பிழம்பும் நீ ‘
    என்று சொல்லுகின்ற
வேதம் உரைசெய்தால் வெள்காரோ
    வேறு உள்ளார்? ‘‘
45

உரை
   
 
3788.“எண்திசையும் திண்சுவரா,
    ஏழ் ஏழ் நிலை வகுத்த
அண்டப் பெருங் கோயிற்கு எல்லாம்
    அழகு உடைய
மண்டலங்கள் மூன்றின்மேல்
    நின்று, மலராத
புண்டரிக மொட்டின் பொகுட்டே
    புரை; அம்மா! ‘‘
46

உரை
   
 
3789.“மண் பால் அமரர் வரம்பு ஆரும் காணாத
எண்பால் உயர்ந்த எரி ஓங்கு நல் வேள்வி
உண்பாய் நீ ஊட்டுவாய் நீ; இரண்டும் ஒக்கின்ற
பண்பு ஆர் அறிவார்? பகராய் பரமேட்டி! “
47

உரை
   
 
3790.“நிற்கும் நெடும் நீத்த நீரில் முளைத்து எழுந்த
மொக்குளே போல முரண் இற்ற அண்டங்கள்
ஒக்க உயர்ந்து உன் உளே தோன்றி ஒளிக்கின்ற
பக்கம் அறிதற்கு எளிதோ? பரம்பரனே! “
48

உரை
   
 
3791.நின் செய்கை கண்டு
    நினைந்தனவோ நீள் மறைகள்?
உன் செய்கை அன்னவைதாம்
    சொன்ன ஒழுக்கினவோ?
என் செய்தேன் முன்னம்?
    மறம் செய்கை எய்தினார்
பின் செல்வது இல்லாப்
    பெருஞ் செல்வம் நீ தந்தாய்.
49

உரை
   
 
3792.“மாயப் பிறவி
    மயல் நீக்கி, மாசு இலாக்
காயத்தை நல்கித்
    துயரின் கரை ஏற்றிப்
பேய் ஒத்தேன் பேதைப்
    பிணக்கு அறுத்த எம்பெருமான்!
நாய் ஒத்தேன், என்ன
    நலன் இழைத்தேன் நான்? ‘‘ என்றான்.
50

உரை
   
 
பணிந்துநின்ற கவந்தனை இராமன் காணுதல்

3793.என்று ஆங்கு இனிது இயம்பி
    “இன்று அறியக் கூறுவெனேல்
ஒன்றாது தேவர்
    உறுதிக்கு ‘‘ என உன்னாத்
தன்தாயைக் கண்ணுற்ற
    கன்று அனைய தன்மையனாய்
நின்றானைக் கண்டான்,
    நெறிநின்றார் நேர்நின்றான்.
51

உரை
   
 
இலக்குவனுக்கு அவனைக்காட்டி ஆராய்க எனல்

3794.“பாராய் இளையவனே!
    பட்ட இவன், வேறே ஓர்
பேராளன் தானாய்,
    ஒளி ஓங்கும் பெற்றியனாய்;
நேர் ஆகாயத்தில்
    நிற்கின்றான்; நீ, இவனை
ஆராய்! ‘‘ என, அவனும்
    ‘‘ஆர்கொலோ நீ? ‘‘ என்றான்.
52

உரை
   
 
கவந்தன் தன் வரலாறு கூறுதல்

3795.“சந்தம் பூண் அலங்கல் வீர!
    தனு எனும் நாமத்தேன் ஓர்
கந்தர்ப்பன்; சாபத்தால், இக்
    கடைப்படு பிறவி கண்டேன்;
வந்து உற்றீர் மலர்க்கை தீண்ட,
    முன் உடை வடிவம் பெற்றேன்;
எந்தைக்கும் எந்தை நீரே!
    இசைப்பது கேண்மின்! ‘‘ என்றான்.
53

உரை
   
 
துணை இன்றியமையாதது எனல் (3796-3797)

3796.“கணை உலாம் சிலையினீரைக்
    காக்குநர் இல்லை ஏனும்,
இணை இலாள் தன்னை நாடற்கு,
    ஏயன செய்தற்கு ஏற்கும்;
புணை இலாதவற்கு வேலை
    போக்கு அரிது; அன்னதே போல்,
துணை இலாதவற்கும், இன்றால்,
    பகைப்புலம் தொலைத்து நீக்கல். ‘‘
54

உரை
   
 
3797.“பழிப்பு அறும் நிலைமை, ஆண்மை;
    பகர்வது என்? பதும பீடத்து
உழிப் பெருந்தகைமை சான்ற
    அந்தணன் உயிர்த்த எல்லாம்
அழிப்பதற்கு ஒருவனான
    அண்ணலும், அறிதிர் அன்றே
ஒழிப்பு அருந்திறல் பல்பூத
    கணத்தொடும் உறையும் உண்மை. ‘‘
55

உரை
   
 
வழி கூறுதல்

3798.“ஆயது செய்கை என்பது,
    அறத்துறை நெறியின் எண்ணித்
தீயவர்ச் சேர்க்கிலாது,
    செவ்வியோர்ச் சேர்த்துச் செய்தல்!
தாயினும் உயிர்க்கு நல்கும்
    சவரியைத் தலைப்பட்டு, அன்னாள்
ஏயதோர் நெறியின் எய்தி,
    இரலையின் குன்றம் ஏறி. ‘‘
56

உரை
   
 
சுக்கிரீவனைத் துணையாகக் கொள்க எனல்

3799.“கதிரவன் சிறுவன் ஆய
    கனக வாள் நிறத்தினானை
எதிர் உற தழுவி நட்பின்
    இனிது அமர்ந்து அவனின் நீண்ட
வெதிர் பொரு தோளினாளை
    நாடுதல் விழுமிது ‘‘ என்றான்;
அதிர் கழல் வீரர் தாமும்
    அன்னதே அமையும் என்றார்.
57

உரை
   
 
இராம இலக்குவர் மதங்கன் இருக்கை சேர்தல்

3800.ஆனபின் தொழுது, வாழ்த்தி,
    அந்தரத்து அவனும் போனான்;
மானவக் குமரர் தாமும்
    அத்திசை வழிக் கொண்டு ஏகிக்,
கானமும் மலையும் நீங்கிக்,
    கங்குல் வந்து இறுத்த காலை,
யானையின் இருக்கை அன்ன
    மதங்கனது இருக்கை சேர்ந்தார்.
58

உரை