3801.கண்ணிய தருதற்கு ஒத்த
    கற்பக தருவும் என்ன,
உண்ணிய நல்கும் செல்வம்
    உறுநறும் சோலை, ஞாலம்
எண்ணிய இன்பம் அன்றித்
    துன்பங்கள் இல்லையான
புண்ணியம் புரிந்தோர் வைகும்
    துறக்கமே போன்றது அன்றே!
1

உரை
   
 
3802.அன்னது ஆம் இருக்கை நண்ணி,
    ஆண்டு நின்று, அளவு இல் காலம்
தன்னையே நினைந்து நோற்கும்
    சவரியைத் தலைப்பட்டு, அன்னாட்கு
இன் உரை அருளித் “தீது இன்று
    இருந்தனை போலும்? “ என்றான்,
முன் இவற்கு இது என்று எண்ணல்
    ஆவது ஓர் மூலம் இல்லான்.
2

உரை
   
 
3803.ஆண்டு, அவள் அன்பின் ஏத்தி,
    அழுது இழி அருவிக் கண்ணள்,
“மாண்டது என் மாயப் பாசம்!
    வந்தது வரம்பு இல் காலம்
பூண்ட மா தவத்தின் செல்வம்!
    போயது பிறவி! ‘‘ என்பாள்,
வேண்டிய கொணர்ந்து நல்க,
    விருந்து செய்து இருந்த வேலை.
3

உரை
   
 
3804.“ஈசனும், கமலத் தோனும்,
    இமையவர் யாரும், எந்தை!
வாசவன் தானும் ஈண்டு
    வந்தனர், மகிழ்ந்து நோக்கி,
‘ஆசு அறு தவத்திற்கு எல்லை
    அணுகியது; இராமற்கு ஆய
பூசனை விரும்பி, எம்பால்
    போதுதி ‘என்று போனார். ‘‘
4

உரை
   
 
3805.“இருந்தனென், எந்தை! நீ ஈண்டு
    எய்துதி என்னும் தன்மை
பொருந்திட; இன்றுதான் என்
    புண்ணியம் பூத்தது ‘‘ என்ற
அருந் தவத்து அரசி தன்னை
    அன்பு உற நோக்கி, “எங்கள்
வருந்துறு துயரம் தீர்த்தாய்,
    அம்மனை! வாழி! ‘‘ என்றான்.
5

உரை
   
 
3806.அனகனும் இளைய கோவும்
    அன்று அவண் உறைந்த பின்றை,
வினை அறு நோன்பினாளும்
    மெய்ம்மையின் நோக்கி, வெய்ய
துனை பரித் தேரோன் மைந்தன்
    இருந்த அத் துளக்கு இல் குன்றம்
நினைவு அரிது ஆயற்கு ஒத்த
    நெறி எலாம் நினைந்து சொன்னாள்.
6

உரை
   
 
3807.வீட்டினுக்கு அமைவது ஆன
    மெய்ந்நெறி வெளியிற்று ஆகக்
காட்டுறும் அறிஞர் என்ன,
    அன்னவள் கழறிற்று எல்லாம்
கேட்டனன் என்ப மன்னோ,
    கேள்வியால் செவிகள் முற்றும்
தோட்டவர் உணர்வின் உண்ணும்
    அமுதத்தின் சுவையாய் நின்றான்.
7

உரை
   
 
3808.பின், அவள் உழந்து பெற்ற
    யோகத்தின் பெற்றியாலே
தன் உடல் துறந்து, வானம்
    தனிமையின் இனிது சார்ந்தாள்;
அன்னது கண்ட வீரர்
    அதிசயம் அளவு இன்று எய்திப்
பொன் அடிக் கழல்கள் ஆர்ப்பப்
    புகன்ற மா நெறியில் போனார்.
8

உரை
   
 
3809.தண் எனும் கானும் குன்றும்
    நதிகளும் தவிரப் போனார்,
மண் இடை வைகல் தோறும்
    வரம்பு இலா மாக்கள் ஆடக்
கண்ணிய வினைகள் என்னும்
    கட்டு அழல் கதுவலாலே
புண்ணியம் உருகிற்று அன்ன
    பம்பை ஆம் பொய்கை புக்கார்.
9

உரை
   
 
3810.மூன்று உரு எனக் குணம் மும்மை ஆம் முதல்
தோன்று உரு எவையும் அம்முதல; சொல்லுதற்கு
ஏன்ற உரு அமைந்தவும் இடையில் நின்றவும்
ஊன்று உரு உணர்வினுக்கு உணர்வும் ஆயினான்.
10

உரை