பம்பை வருணனை (3811-3831)

3811.தேன் படி மலரது செங்கண் வெங் கைம்மா
தான் படிகின்றது தெளிவு சான்றது
மீன் படி மேகமும் படிந்து வீங்கும் நீர்
வான் படிந்து உலகு இடைக் கிடந்த மாண்பது.
1

உரை
   
 
3812.ஈர்ந்த நுண் பளிங்கு எனத் தெளிந்த ஈர்ம் புனல்
பேர்ந்து ஒளிர் நவ மணி படர்ந்த பித்திகைச்
சேர்ந்துழிச் சேர்ந்துழி நிறத்தைச் சேர்தலால்
ஓர்ந்து உணர்வு இல்லவர் உள்ளம் ஒப்பது.
2

உரை
   
 
3813.குவால் மணித் தடம் தொறும் பவளக் கோல் இவர்
கவான் அரச அன்னமும் பெடையும் காண்டலில்
தவா நெடும் வானகம் தயங்கும் மீனொடும்
உவாமதி உலப்பு இல உதித்தது ஒத்தது.
3

உரை
   
 
3814.ஓதம் நீர் உலகமும் உயிர்கள் யாவையும்
வேத பாரகரையும் விதிக்க வேட்ட நாள்
சீத நீர் உவரியைச் செகுக்குமாறு ஒரு
காதி காதலன் தரு கடலின் அன்னது.
4

உரை
   
 
3815.எல் படர் நாகர் தம் இருக்கை ஈது எனக்
கிற்பது ஒர் காட்சியது எனினும் கீழ் உறக்
கற்பகம் அனைய அக் கவிஞர் நாட்டிய
சொல் பொருள் ஆம் எனத் தோன்றல் சான்றது.
5

உரை
   
 
3816.களம் நவில் அன்னமே முதல கண்ணகன்
தள மலர்ப் புள் ஒலி தழங்க இன்னதோர்
கிளவி என்று அறிவு அரும் கிளர்ச்சித்து; ஆதலால்
வள நகர்க் கூலமே போலும் மாண்பது.
6

உரை
   
 
3817.அரி மலர்ப் பங்கயத்து அன்னம் எங்கணும்
‘புரி குழல் புக்கிடம் புகல்கிலாத யாம்
திருமுகம் நோக்கலம் இறந்து தீர்தும் ‘என்று
எரி புகுவன எனத் தோன்றும் ஈட்டது.
7

உரை
   
 
3818.காசு அடை விளங்கிய காட்சித்து ஆயினும்
மாசு அடை பேதைமை இடை மயக்கலால்
ஆசு அடை நல் உணர்வு அனையது ஆம் எனப்
பாசு அடை வயின் தொறும் பரந்த பண்பது.
8

உரை
   
 
3819.களிப்பு அடா மனத்தவன் காணின் கற்பு எனும்
கிளிப் படா மொழியவள் விழியின் கேள் எனத்
துளிப் படா நயனங்கள் துளிப்பச் சோரும் என்று
ஒளிப் படாது ஆயிடை ஒளிக்கும் மீனது.
9

உரை
   
 
3820.கழை படு முத்தமும் கலுழிக் கார் மத
மழை படு தரளமும் மணியும் வாரி நேர்
இழை படர்ந்து அனைய நீர் அருவி எய்தலால்
குழை படு முகத்தியர் கோலம் ஒப்பது.
10

உரை
   
 
3821.பொங்கு வெம் கடம் கரி பொதுவின் ஆடலின்
கங்குலின் எதிர் பொரு கலவிப் பூசலின்
அங்கம் நொந்து அலசிய விலையின் ஆய் வளை
மங்கையர் வடிவு என வருந்தும் மெய்யது.
11

உரை
   
 
3822.விண் தொடர் நெடு வரைத் தேனும் வேழத்தின்
வண்டு உளர் நறு மத மழையும் மண்டலால்
உண்டவர் பெரும் களி உறலின் ஓதியர்
தொண்டை அம் கனி இதழ்த் துப்பின் சான்றது.
12

உரை
   
 
3823.ஆரியம் முதலிய பதினெண் பாடையில்
பூரியர் ஒருவழிப் புகுந்தது ஆம் என
ஓர்வு இல கிளவிகள் ஒன்றொடு ஒப்பு இல
சோர்வு இல விளம்பு புள் துவன்றுகின்றது.
13

உரை
   
 
3824.தான் உயிர் உறத் தனி தழுவும் பேடையை
ஊன் உயிர் பிரிந்து என பிரிந்த ஓதிமம்
வான் அரமகளிர் தம் வயங்கு நூபுரத்
தேன் உகு மழலையைச் செவியின் ஓர்ப்பது.
14

உரை
   
 
3825.ஏறிடல் அரிய மால் வரை நின்று ஈர்த்து இழி
ஆறு இடு விரை அகில் ஆரம் ஆதிய
ஊறிட ஒண் நகர் உறைத்த ஒண் தளச்
சேறிடு பரணியில் திகழும் தேசது.
15

உரை
   
 
3826.நவ்வி நோக்கியர் இதழ் நிகர்
    குமுதத்து நறுந்தேன்
வவ்வி, மாந்தரில் களி மயக்கு
    உறுவன மகரம்
எவ்வம் ஓங்கிய இறப்பொடு
    பிறப்பு இவை என்னக்
கவ்வும் மீனொடு முழுகின
    எழுவன கரண்டம்.
16

உரை
   
 
3827.கவள யானை அன்னாற்கு அந்தக் கடி நறும் கமலத்து
அவளை ஈகிலம் ஆவது செய்தும் என்று அருளித்
திவள அன்னங்கள் திரு நடை காட்டுவ செங்கண்
குவளை காட்டுவ துவர் இதழ் காட்டுவ குமுதம்.
17

உரை
   
 
3828.பெய் கலன்களின் இலங்கு ஒளி
    மருங்கொடு பிறழ,
வைகலும் புனல் குடைபவர்
    வான் அரமகளிர்,
செய்கை அன்னங்கள் ஏந்திய
    சேடியர் என்னப்
பொய்கை அன்னங்கள் ஏந்திய
    பூங் கொம்பர் பொலிவ.
18

உரை
   
 
3829.ஏலும் நீர் நிழல் இடையிடை
    எறித்தலின், படிகம்
போலும் வார்புனல் புகுந்துளவாம்
    எனப் பொங்கி,
ஆலும் மீன் கணம் அஞ்சின
    அலமர, வஞ்சிக்
கூல மா மரத்து இருஞ்சிறை
    புலர்த்துவ குரண்டம்.
19

உரை
   
 
3830.அங்கு ஒர் பாகத்தில்,
    அஞ்சன மணி நிழல் அடையப்,
பங்கு பெற்று அதில்,
    பதுமராகத்து ஓளி பாயக்,
கங்குலும் பகலும் எனப்
    பொலிவு எய்து கரைய;
மங்கைமார் தடமுலை எனப்
    பொலிவன வாளம்.
20

உரை
   
 
3831.வலி நடத்திய வாள் என
    வாளைகள் பாய,
ஒலி நடத்திய திரை தொறும்
    உகள்வன நீர்நாய்,
கலிநடக் கழைக் கண்ணுளர்
    என நடம் கவினப்
பொலிவு உடைத்து எனத் தேரைகள்
    புகழ்வன போலும்.
21

உரை
   
 
இராமன் சீதையை நினைந்து புலம்புதல் (3832-3843)

3832.அன்னது ஆகிய அகன் புனல்
    பொய்கையை அணுகிக்
கன்னி அன்னமும் கமலமும்
    முதலிய கண்டான்,
தன்னின் நீங்கிய தளிர் இயற்கு
    உருகினன் தளர்வான்,
உன்னும் நல் உணர்வு ஒடுங்கிடப்
    புலம்புதல் உற்றான்.
22

உரை
   
 
3833.வரி ஆர் மணிக் கால் வாளமே!
    மட அன்னங்காள் எனை நீங்கத்
தரியாள் நடந்தாள்; இல்லளேல்,
    தளர்ந்த போதுந் தகைவேயோ?
எரியா நின்ற ஆர் உயிருக்கு
    இரங்கினால், ஈது இசையன்றோ!
பிரியாது இருந்தீர் ஒரு மாற்றம்
    பேசில் பூசல் பெரிது ஆமோ?
23

உரை
   
 
3834.வண்ண நறும் தாமரை மலரும்
    வாசக் குவளை நாள் மலரும்
புண்ணின் எரியும் ஒரு நெஞ்சம்
    பொதியும் மருந்தின் தரும் பொய்காய்!
கண்ணும் முகமும் காட்டுவாய்;
    வடிவும் ஒருகால் காட்டாயோ?
ஒண்ணும் என்னின் அஃது உதவாது
    உலோவினாரும் உயர்ந்தாரோ?
24

உரை
   
 
3835.விரிந்த குவளை சேதாம்பல்
    விரை மென் கமலம் கொடிவள்ளை
தரங்கம் நெருங்கு வரால் ஆமை
    என்று இத்தகையதமை நோக்கி,
மருந்தின் அனையாள் அவயவங்கள்
    அவை நிற்கண்டேன்; வல் அரக்கன்
அருந்தி அகல்வான் சிந்தினவோ?
    ஆவி! உரைத்தி ஆம் அன்றே.
25

உரை
   
 
3836.ஓடாநின்ற களி மயிலே!
    சாயற்கு ஒதுங்கி, உள் அழிந்து
கூடாதாரில் திரிகின்ற
    நீயும் ஆகம் குளிர்ந்தாயோ!
தேடா நின்ற என் உயிரைத்
    தரெியக் கண்டாய்! சிந்தை உவந்து
ஆடா நின்றாய், ஆயிரம் கண்
    உடையாய்க்கு ஒளிக்குமாறு உண்டோ?
26

உரை
   
 
3837.அடையீர் எனினும் ஒரு மாற்றம்
    அறிந்தது உரையீர் அன்னத்தின்
பெடையீர்! ஒன்றும் பேசீரோ?
    பிழையா தேற்குப் பிழைத்தீரோ!
நடை நீர் அழியச் செய்தாரே
    நடு இலாதார்; நனி அவரோடு
உடையீர் பகைதான், உமை நோக்கி
    உவக்கின்றேனை முனிவீரோ.
27

உரை
   
 
3838.பொன் பால் பொருவும் விரை அல்லி
    புல்லிப் பொலிந்த பொலம் தாது
தன்பால் தழுவும் குழல் வண்டு
    தமிழ்ப் பாட்டு இசைக்கும் தாமரையே!
என்பால் இல்லை; அப்பாலோ
    இருப்பாரல்லர்; விருப்பு உடைய
உன்பால் இல்லை என்றபோது
    ஒளிப்பாரோடும் உறவு உண்டோ?
28

உரை
   
 
3839.ஒரு வாசகத்தை வாய் திறந்திட்டு
    உதவாப் பொய்கைக் குவிந்து ஒடுங்கும்
திருவாய் அனைய சேதாம்பற்கு
    அயலே கிடந்த செங்கிடையே!
வெருவாது எதிர் நின்று அமுது உயிர்து
    விளங்கும் செவ்விக் கொழுங் கனிவாய்
தருவாய், அவ் வாய் முகிழ் நகையும்
    தண் என் மொழியும் தாராயோ.
29

உரை
   
 
3840.அலக்கண் உற்றேற்கு உற்று உதவற்கு
    அடைவு உண்டன்றோ! கொடிவள்ளாய்!
மலர்க் கொம்பு அனைய மடச் சீதை
    காதே, மற்றொன்று அல்லையால்
பொலக் குண்டலமும் கொடுங்குழையும்
    புனைதாழ் முத்தின் பொன்தோடும்
விலக்கி வந்தாய் காட்டாயோ?
    இன்னும் பூசல் விரும்புதியோ?
30

உரை
   
 
3841.பஞ்சு பூத்த விரல் பதுமம்
    பவளம் பூத்த அடியாள் என்
நெஞ்சு பூத்த தாமரையின்
    நிலையம் பூத்தாள், நிறம் பூத்த
மஞ்சு பூத்த மலர் பூத்த
    குழலாள் கண்போல் மணிக் குவளாய்!
நஞ்சு பூத்தது ஆம் அன்ன
    நகையால் என்னை நலிவாயோ.
31

உரை
   
 
3842.என்று அயா உயிர்க்கின்றவன் ஏடு அவிழ்
கொன்றை ஆவிப் புறத்து இவை கூறி யான்
பொன்ற யாதும் புகல்கிலை போலுமால்
வன் தயா இலி என்று வருந்தினான்.
32

உரை
   
 
3843.வார் அளித் தழை மாப் பிடி வாய் இடை
கார் அளிக் கலுழிக் கருங்கைம் மலை
நீர் அளிப்பது நோக்கினன் நின்றனன்
பேர் அளிக்குப் பிறந்த இல் ஆயினான்.
33

உரை
   
 
இலக்குவன் இராமனை மாலைக்கடன்
இறுக்குமாறு தூண்டுதல்

3844.ஆண்டு அவ் வள்ளலை அன்பு எனும் ஆர் அணி
பூண்ட தம்பி பொழுது கழிந்ததால்
ஈண்டு இரும் புனல் தோய்ந்து உன் இசை என
நீண்டவன் கழல் தாழ் நெடியோய் என்றான்.
34

உரை
   
 
இராமன் நீராடி மாலைக்கடனிறுத்தல் (3845-3847)

3845.அரைசும் அவ் வழி நின்று அரிது ஏகி அத்
திரை செய் தீர்த்தமும் செய் தவம் உண்மையால்
வரை செய் மும்முத வாரணம் நாண் உற
விரைசெய் பூம் புனல் ஆடலை மேயினான்.
35

உரை
   
 
3846.நீத்த நீரில் நெடியவன் மூழ்கலும்
தீத்த காமத் தறெு கதிர்த் தீயினால்
காய்த்து இரும்பைக் கருமகக் கம்மியன்
தோய்த்த தண் புனல் ஒத்தது தோயமே.
36

உரை
   
 
3847.ஆடினான் அன்னமாய் அருமறைகள் பாடினான்
நீடுநீர் முன்னை நூல் நெறி முறையின் நேமி தாள்
சூடினான் முனிவர் தம் தொகுதி சேர் சோலைவாய்
மாடுதான் வைகினான்; எரி கதிரும் வைகினான்.
37

உரை
   
 
மதி தோன்றுதல்

3848.அந்தியாள் வந்து தான் அணுக அங்கு அணுகுறாச்
சந்தம் ஆர் கொங்கையாள் தனிமைதான் நாயகன்
சிந்தியா நொந்து தேய்பொழுது தறெு சீத நீர்
இந்து வான் உந்துவான் எரி கதிரினான் என.
38

உரை
   
 
இரவில் யாவும் துயில இராமன் துயிலாமை (3849-3850)

3849.பூ ஒடுங்கின; விரவு
    புள் ஒடுங்கின, பொழில்கள்;
மா ஒடுங்கின; மரனும்
    இலை ஒடுங்கின; கிளிகள்,
நா ஒடுங்கின; மயில்கள்
    நடம் ஒடுங்கின; குயில்கள்
கூ ஒடுங்கின; பிளிறு
    குரல் ஒடுங்கின களிறு.
39

உரை
   
 
3850.மண் துயின்றன; நிலைய
    மலை துயின்றன; மறு இல்
பண் துயின்றன; விரவு
    பணி துயின்றன; பகரும்
விண் துயின்றன; கழுதும்
    விழி துயின்றன; பழுது இல்
கண் துயின்றில, நெடிய
    கடல் துயின்றது ஒர் களிறு.
40

உரை
   
 
சூரியன் உதித்தல்

3851.பொங்கி முற்றிய உணர்வு
    புணர்தலும் பகையினொடு
பங்கம் உற்று அளவு இல் வினை
    பரிவு உறும் படி முடிவு இல்
கங்குல் இற்றது கமலம்
    முகம் எடுத்தன; கடலில்
வெம் கதிர்க் கடவுள் எழ,
    விமலன் வெம் துயரின் எழ.
41

உரை
   
 
இராம இலக்குவர் சீதையைத் தேடிச் செல்லுதல்

3852.காலையே கடிது நெடிது ஏகினார் கடல் கவினு
சோலை ஏய் மலை தழுவு கான நீள் நெறி தொலைய
ஆலை ஏய் துழனி அகன் நாடர் ஆர்கலி அமிழ்து
போலவே உரை செய் புன மானை நாடுதல் புரிஞர்.
42

உரை