இரணியனது இயல்பும் ஆற்றலும் (6316-6333)

6316.வேதம் கண்ணிய பொருள் எலாம்
    விரிஞ்சனே ஈந்தான்;
போதம் கண்ணிய வரம் அவன் தரக்
    கொண்டு போந்தான்;
காதும் கண்ணுதல், மால், அயன்,
    கடைமுறை காணாப்
பூதம் கண்ணிய வலி எலாம்
    ஒருதனி பொறுத்தான்.
1

உரை
   
 
6317.‘எற்றை நாளினும் உளன் எனும்
    இறைவனும், அயனும்,
கற்றை அம் சடைக் கடவுளும்
    காத்து, அளித்து, அழிக்கும்
ஒற்றை அண்டத்தின் அளவனோ?
    அதன்புறத்து உலவா
மற்றை அண்டத்தும் தன் பெயரே
    சொல வாழ்ந்தான்.
2

உரை
   
 
6318.‘பாழி வன் தடம் திசை சுமந்து
    ஓங்கிய பணைக்கைப்
பூழி வன்கரி இரண்டு இருகை
    கொடு பொருத்தும்;
ஆழம் காணுதற்கு அரியவாய்,
    அகன்ற பேர் ஆழி
ஏழும் தன் இருதாள் அளவு
    எனக் கடந்து ஏறும்.
3

உரை
   
 
6319.‘வண்டல் தணெ்திரை ஆற்றுநீர்
    சில என்று மருவான்;
கொண்டல் கொண்டநீர் குளிர்ப்பு இல
    என்று அவை குடையான்;
பண்டைத் தணெ்திரைப் பரவை நீர்
    உவர் என்று படியான்;
அண்டத்தைப் பொதுத்து அப்புறத்து
    அப்புனல் ஆடும்.
4

உரை
   
 
6320.சாரும் மானத்தில், சந்திரன்
    தனிப்பதம் சரிக்கும்;
தேரின் மேவி நின்று இரவிதன்
    பெரும்பதம் செலுத்தும்;
பேரின் எண்திசைக் காவலர்
    கருமமும் பிடிக்கும்;
மேரு மால்வரை உச்சிமேல்
    அரசு வீற்றிருக்கும்.
5

உரை
   
 
6321.‘நிலனும், நீரும், வெங் கனலொடு
    காலும் ஆய், நிமிர்ந்த
தலனுள், நீடிய அவற்றின் அத்
    தலைவரை மாற்றி,
உலவும் காற்றொடு கடவுளர்
    பிறரும் ஆய், உலகின்
வலியும் செய்கையும் வருணன்தன்
    கருமமும் ஆற்றும்.
6

உரை
   
 
6322.‘தாமரைக் கண்ணன் தழல் கண்ணன்
    பேர் அவை தவிர,
நாமம் தன்னதே உலகங்கள்
    யாவையும் நவில,
தூம வெங் கனல் அந்தணர்
    முதலினர் சொரிந்த
ஓம வேள்வியுள் இமையவர்
    பேறு எலாம் உண்ணும்.
7

உரை
   
 
6323.‘காவல், காட்டுதல், துடைத்தல், என்று
    இத்தொழில் கடவ
மூவரும் அவை முடிக்கிலர்,
    பிடிக்கிலர் முறைமை;
ஏவர் மற்றவர்? யோக்கியர்
    உறுபதம் இழந்தார்;
தேவரும் அவன் தாள் அலால்
    அருச்சனை செய்யார்.
8

உரை
   
 
6324.‘மரபின், மாபெரும் புறக்கடல்
    மஞ்சனம் மருவி,
அரவின் நாட்டிடை மகளிரோடு
    இன் அமுது அருந்தி,
பரவும் இந்திரன் பதியிடைப்
    பகல்பொழுது அகற்றி
இரவின் ஓலக்கம் நான்முகன்
    உலகத்துள் இருக்கும்.
9

உரை
   
 
6325.‘பண்டு வானவர் தானவர்
    யாவரும் பற்றித்,
தணெ் திரைக் கடல் கடைதர,
    வலியது தேடிக்
கொண்ட மத்தினைக் கொற்றத் தன்
    குவவுத் தோட்கு அமைந்த
தண்டு எனக் கொளல் உற்று, ‘அது
    நொய்து ‘எனத் தவிர்ந்தான்.
10

உரை
   
 
6326.‘மண்டலம் தரு கதிரவன்
    வந்து போய் மறையும்
எண் தலம் தொடற்கு அரியன
    தடவரை இரண்டும்,
கண் தலம் பசும் பொன்னவன்
    முன்னவன் காதில்
குண்டலங்கள்; மற்று என், இனிப்
    பெருவிறல் கூறல்?
11

உரை
   
 
6327.‘மருக்கொள் தாமரை நான்முகன்
    முதலிய வானோர்
குருக்கேளாடு கற்று, ஓதுவது,
    அவன் பெருங் கொற்றம்;
சுருக்கு இல் நான்மறை தொன்றுதொட்டு
    உரைதொறும் தோன்றாது
இருக்கும் தயெ்வமும் ‘இரணியனே!
    நம! ‘என்னும்.
12

உரை
   
 
6328.‘மயரும், மன் நெடுஞ் சேவடி
    மண் இடை வைப்பின்;
அயரும், வாள் எயிற்று ஆயிரம்
    பணம் தலை அநந்தன்;
உயருமேல், அண்ட முகடு
    தன்முடி உற உயரும்;
பெயருமேல், நெடும் பூதங்கள்
    ஐந்தொடும் பெயரும்.
13

உரை
   
 
6329.‘பெண்ணின், பேர் எழில் ஆணினின்,
    அலியினின், பிறிதின்,
உள் நிற்கும் உயிர் உள்ளதின்,
    இல்லதின், உலவான்;
கண்ணின் காண்பன, கருதுவ,
    யாவினும் கழியான்;
மண்ணின் சாகிலன், வானினும்
    சாகிலன்; வரத்தால்.
14

உரை
   
 
6330.‘தேவர் ஆயினர் ஏவரும் திரிதரும் இயக்கர்
யாவர் ஆயினும் எண்ணவும் துதிக்கவும் இயன்ற
கோவை மால் அயன் மான் இடன் யாவரும் கொல்ல
ஆவி தீர்கிலன்; ஆற்றலும் தீர்கிலன் அனையான்.
15

உரை
   
 
6331.‘நீரின் சாகிலன்; நெருப்பினும்
    சாகிலன்; நிமிர்ந்த
மாருதத்தினும், மண்ணின் மற்று
    எவற்றினும், மாளான்;
ஓரும் தேவரும் முனிவரும்
    பிறர்களும் உரைப்பச்
சாரும் சாபமும், அன்னவன்
    தனைச் சென்று சாரா.
16

உரை
   
 
6332.‘உள்ளில் சாகிலன்; புறத்தினும்
    உலக்கிலன்; உலவாக்
கொள்ளைத் தயெ்வ வான் படைக்கலம்
    யாவையும் கொல்லா;
நள்ளில் சாகிலன்; பகலிடைச்
    சாகிலன்; நமனார்
கொள்ளச் சாகிலன்; ஆர் இனி
    அவன் உயிர் கொள்வார்?
17

உரை
   
 
6333.‘பூதம் ஐந்தொடும் பொருந்திய
    உணர்வினில் புணரா
வேதம் நான்கினும் விளம்பிய
    பொருள்களால் விளியான்;
தாதை தன்னைத்தான் தனிக்கொலை
    சூழினும் சாகான்;
ஈது அவன் நிலை; எவ்
    உலகங்கட்கும் இறைவன்.
18

உரை
   
 
இரணியன் மகன் பிரகலாதன் தன்மை

6334.‘ஆயவன் தனக்கு அருமகன்,
    அறிஞரின் அறிஞர்ன்,
தூயர் என்பவர் யாரினும்
    மறையினும் தூயன்,
நாயகன் தனி ஞானி, நல்
    அறத்துக்கு நாதன்,
தாயினி மன்னுயிர்க்கு அன்பினன்,
    உளன் ஒரு தக்கோன்.
19

உரை
   
 
இரணியன் தன் மகனை வேதம் ஓதுமாறு பணித்தல்

6335.‘வாழியான் அவன்தனைக் கண்டு
    மனம் மகிழ்ந்து உருகி,
“ஆழி ஐய! நீ அறிதியால்
    மறை “ என அறைந்தான்
ஊழியும் கடந்து உயர்கின்ற
    ஆயுளான், உலகம்
ஏழும் ஏழும் வந்து அடிதொழ,
    அரசு வீற்றிருந்தான்.
20

உரை
   
 
இரணியனது ஏவலால் அந்தணன் ஒருவன் பிரகலாதனுக்கு வேதம் ஓதுவிக்கத் தொடங்குதல்

6336.‘என்று, ஓர் அந்தணன் எல்லையில்,
    அறிஞனை ஏவி,
“நன்று நீ இவற்கு உதவுதி
    மறை “ என நவின்றான்.
சென்று மற்று அவன் தன்னொடும்
    ஒரு சிறை சேர்ந்தான்;
அன்று நான்மறை முதலிய
    ஓதுவான் அமைந்தான்.
21

உரை
   
 
ஆசிரியன் ‘இரணியாயநம ‘என்று கூறுமாறு பணிக்கப் பிரகலாதன் ‘ஓம் நமோநாராயணாய ‘என்று கூறுதல்

6337.‘ஓதம் புக்கு, அவன், “உந்தை பேர்
    உரை “ எனலோடும்,
போதத் தன் செவித்தொளை இரு
    கைகளால பொத்தி,
“மூதக்கோய்! இது நல்தவம்
    அன்று “ என மொழியா,
வேதத்து உச்சியின் மெய்ப்பொருள்
    பெயரினை விரித்தான்.
22

உரை
   
 
பிரகலாதனது திருமால் பத்தியைக் கண்டு ஆசிரியன் அஞ்சி நடுங்கி அவனைக் கடிந்துரைத்தல் (6338-6339)

6338.“ஓம் நமோ நாராயணாய! “ என்று
    உரைத்து, உளம் உருகி,
தான் அமைந்து, இரு தடக்கையும்
    தலையின்மேல் தாங்கி,
பூ நிறக் கண்கள் புனல் உக,
    மயிர் புறம் பொடிப்ப,
ஞான நாயகன் இருந்தனன்;
    அந்தணன் நடுங்கி.
23

உரை
   
 
6339.“கெடுத்து ஒழிந்தனை, என்னையும்
    உன்னையும்; கெடுவாய்!
படுத்து ஒழிந்தனை; பாவி!
    எத்தேவரும் பகர்தற்கு
அடுத்தது அன்றியே அயல் ஒன்று
    பகர, நின் அறிவின்
எடுத்தது என் இது? என் செய்த
    வண்ணம் நீ? ‘‘ என்றான்.
24

உரை
   
 
பிரகலாதன் குருவுக்கு ஏற்ற மறுமொழி கூறுதல்

6340.“‘என்னை உய்வித்தேன்; எந்தையை
    உய்வித்தேன்; நினைய
உன்னை உய்வித்து, இவ் உலகையும்
    உய்விப்பான் அமைந்து,
முன்னை வேதத்தின் முதல் பெயர்
    மொழிவது மொழிந்தேன்;
என்னை குற்றம் நான் இயம்பியது?
    இயம்புதி ‘‘ என்றான்.
25

உரை
   
 
அந்தணனாகிய குரு பிரகலாதனுக்கு
அறிவுரை கூறுதல்

6341.“‘முந்தை வானவர் யாவர்க்கும்,
    முதல்வர்க்கும் முதலோன்
உந்தை; மற்று அவன் திருப்பெயர்,
    உரைசெயற்கு உரிய;
அந்தணாளன் யான்; என்னினும்
    அறிதியோ? ஐயா!
இந்த! இப்பெயர் உரைத்து, எனைக்
    கெடுத்திடல் ‘‘ என்றான்.
26

உரை
   
 
பிரகலாதன் குருவின் சொல்லை மறுத்து, வேதப் பொருளாய் விளங்கும் திருமாலின் பெருமையை விரித்துரைத்தல் (6342-6348)

6342.“வேத பாரகன் அவ் உரை
    விளம்பலும், விமலன்,
“ஆதி நாயகன் பெயர் அன்றி,
    யான் பிறிது அறியேன்;
ஓத வேண்டுவது இல்லை; என்
    உணர்வினுக்கு ஒன்றும்
போதியாததும் இல்லை ‘‘ என்று,
    இவை இவை புகலும்.
27

உரை
   
 
6343.“‘தொல்லை நான்மறை வரன்முறை
    துணிபொருட்கு எல்லாம்
எல்லை கண்டவன் அகம் புகுந்து,
    இடம் கொண்டது என் உள்;
இல்லை, வேறு இனிப் பெரும் பதம்;
    யான் அறியாத,
வல்லையேல், இனி, ஓதுவி,
    நீதியின் வழாத.
28

உரை
   
 
6344.“‘ஆரைச் சொல்லுவது அந்தணர்
    அருமறை? அறிந்தோர்
ஓரச் சொல்லுவது எப்பொருள்,
    உபநிட தங்கள்,
தீரச் சொல்பொருள்; தேவரும்
    முனிவரும் செப்பும்
பேரைச் சொல்லுவது அல்லது
    பிறிதும் ஒன்று உளதோ?
29

உரை
   
 
6345.“‘வேதத்தானும், நல் வேள்வியினானும்,
    மெய் உணர்ந்த
போதத்தானும், அப்புறத்துள
    எப் பொருளானும்,
சாதிப்பார் பெறும் பெரும்பதம்
    தலைக்கொண்டு சமைந்தேன்;
ஓதிக் கேட்பது பரம்பொருள்;
    இன்னம் ஒன்று உளதோ?
30

உரை
   
 
6346.“‘காடு பற்றியும், கனவரை
    பற்றியும், கலைத் தோல்
மூடி முற்றியும், முண்டித்தும்,
    நீட்டியும், முறையால்
வீடு பெற்றவர், ‘பெற்றதின்
    விழுமிது ‘என்று உரைக்கும்
மாடு பெற்றனென், மற்று,
    இனிஎன் பெற வருந்தி?
31

உரை
   
 
6347.“‘செவிகளால் பல கேட்கிலர்
    ஆயினும், தேவர்க்கு
அவிகொள் நான்மறை அகப்பொருள்
    புறப்பொருள் அறிவார்;
கவிகள் ஆகுவார்; காண்குவார்,
    மெய்ப்பொருள்; காலால்
புவிகொள் நாயகற்கு அடியவர்க்கு
    அடிமையின் புக்கார்.
32

உரை
   
 
6348.“‘எனக்கும் நான்முகத்து ஒருவற்கும்,
    யாரினும் உயர்ந்த
தனக்கும் தன்நிலை அறிவு அரும்
    ஒரு தனித் தலைவன்,
மனக்கு வந்தனன்; வந்தன
    யாவையும்; மறையோய்!
உனக்கும் இன்னதின் நல்லது
    ஒன்று இல் ‘‘ என உரைத்தான்.
33

உரை
   
 
குரு இரணியனை அடைந்து நிகழ்ந்த செய்தியைக்
கூறுதல் (6349-6350)

6349.‘மாற்றம் யாது ஒன்றும் உரைத்திலன்,
    மறையவன்; மறுகி,
“ஏற்றம் என்? எனக்கு இறுதி வந்து
    எய்தியது “ என்னா,
ஊற்றம் இல்லவன் ஓடினன்,
    கனகனை உற்றான்;
தோற்ற வந்ததோர் கனவு கண்டான்
    எனச் சொன்னான்;
34

உரை
   
 
6350.“‘எந்தை! கேள் : எனக்கு இம்மைக்கும்
    மறுமைக்கும் இயம்பச்
சிந்தையால் இறை நினைதற்கும்
    அடாதன செப்பி,
‘முந்தையே உணர்ந்தேன் பொருள்
    முற்றும் ‘என்று உரைத்து, உன்
மைந்தன் ஓதிலன் வேதம் ‘‘ என்று
    உரைத்தனன், வணங்கி.
35

உரை
   
 
இரணியன் குருவை நோக்கித் தன் மகன் கூறிய சொல்லைக் கூறுமாறு பணித்தல்

6351.‘அன்ன கேட்டவன், “அந்தண!
    அந்தணர்க்கு அடாத,
முன்னர் யாவரும் மொழிதரும்
    முறைமையின் படாத,
தன்னது உள்ளுறும் உணர்ச்சியால்
    புதுவது தந்தது,
என்ன சொல்? அவன் இயம்பியது
    இயம்புதி ‘‘ என்றான்.
36

உரை
   
 
குரு ‘அச் சொல்லைக் கூறின் நான் நரகம் எய்துவேன் ‘எனக் கூறுதல்

6352.“அரசன் அன்னவை உரைசெய,
    மறையவன் அஞ்சி,
சிரதலம் கரம் சேர்த்திடா, “
    செவித்தொளை சேர்ந்த
உரகம் அன்ன சொல் யான் உனக்கு
    உரைசெயின், உரவோய்!
நரகம் எய்துவென்; நாவும் வெந்து
    உகும் ‘‘ என நவின்றான்.
37

உரை
   
 
இரணியனது ஏவலால் அழைக்கப்பட்டு வந்த பிரகலாதன் தன் தந்தையை வணங்குதல்

6353.“‘கொணர்க என் மைந்தனை வல் விரைந்து “
    என்றனன், கொடியோன்,
உணர்வு இல் நெஞ்சினன்; ஏவலர்
    கடிதினின் ஓடி,
கணனின் எய்தினர், “பணி “ என,
    தாதையைக் கண்டான்;
துணை இலான்தனைத் துணை என
    உடையவன் தொழுதான்.
38

உரை
   
 
இரணியன் தன்னை வணங்கிய மைந்தனை மார்போடணைத்து அருகிருத்தி ‘நீ குருவின்முன் சொல்லிய சொல்லினைக் கூறுக ‘எனப் பணித்தல்

6354.‘தொழுத மைந்தனை, சுடர்மணி
    மார்பிடைச் சுண்ணம்
எழுத, அன்பினோடு இறுகுறத்
    தழுவி, மாடு இருத்தி,
முழுதும் நோக்கி, “நீ, வேதியன்
    கேட்கிலன் முனிய,
பழுது சொல்லியது என்? அது
    பகருதி ‘‘ என்றான்.
39

உரை
   
 
பிரகலாதன் தான் சொல்லிய திருப்பெயரின் சிறப்பினைக் கூறுதல்

6355.“‘சுருதி ஆதியில் தொடங்கு உறும்
    எல்லையில் சொன்ன
ஒருவன், யாவர்க்கும் நாயகன்,
    திருப்பெயர், உணரக்
கருதக் கேட்டிடக் கட்டுரைத்து
    இடர்க் கடல் கடக்க
உரிய மற்று இதின் நல்லது ஒன்று
    இல் ‘‘ என உரைத்தான்.
40

உரை
   
 
இரணியன், அப்பெயரைக் குறித்துக் கூறுக எனப் பணித்தல்

6356.‘தேவர் செய்கையன் அங்ஙனம் உரைசெய தீயோன்
“தா இல் வேதியன் தக்கதே உரைசெயத் தக்கான்;
ஆவது ஆகுக; அன்று எனின் அறிகுவம் “ என்றே
“யாவது அவ் உரை? இயம்புதி இயம்புதி” என்றான்.
41

உரை
   
 
பிரகலாதன் திரு எட்டெழுத்தின் பெருமையை விரித்துரைத்தல் (6357-6361)

6357.“‘காமம் யாவையும் தருவதும் அப்பதம் கடந்தால்
சேம வீடு உறச் செய்வதும் செந்தழல் முகந்த
ஓம வேள்வியின் உறுபதம் உய்ப்பதும் ஒருவன்
நாமம்; அன்னது கேள்; நமோ நாராயணாய.
42

உரை
   
 
6358.“‘மண்ணின் நின்று மேல்
    மலர் அயன் உலகு உற வாழும்
எண்ணில் பூதங்கள், நிற்பன
    திரிவன, இவற்றின்
உள் நிறைந்துள, கரணத்தின்
    ஊங்கு உள உணர்வும்,
எண்ணுகின்றது, இவ் எட்டு
    எழுத்தே; பிறிது இல்லை.
43

உரை
   
 
6359.“‘முக்கண் தேவனும் நான்முகத்து ஒருவனும் முதலா
மக்கள் காறும் இம் மந்திரம் மறந்தவர் மறந்தார்;
புக்குக் காட்டுவது அரிது இது; பொதுவுறக் காண்பார்
ஒக்க நோக்கினர் அல்லவர் இதன் நிலை உணரார்.
44

உரை
   
 
6360.“‘தோற்றம் என்னும் அத் தொல்வினைத்
    தொடு கடல் சுழிநின்று
ஏற்று நன்கலன், அருங்கலன்,
    யாவர்க்கும் இனிய
மாற்ற மங்கலம், மாதவர்
    வேதத்தின் வரம்பின்
தேற்ற மெய்ப்பொருள், தரெிந்த மற்று
    இதின் இல்லை, சிறந்த.
45

உரை
   
 
6361.“‘உன் உயிர்க்கும் என் உயிர்க்கும் இவ்
    உலகத்தின் உள்ள
மன்னுயிர்க்கும் ஈது உறுதி என்று
    உணர்வுற மதித்துச்
சொன்னது இப்பெயர் ‘‘ என்றனன்,
    அறிஞரின் தூயோன்;
மின் உயிர்க்கும் வேல் இரணியன்
    தழல் எழ விழித்தான்.
46

உரை
   
 
இரணியன் பிரகலாதனை வெகுண்டுரைத்தல் (6362-6371)

6362.“‘அற்றை நாள்முதல், யான் உள
    நாள்வரை, அப்பேர்
சொற்ற வாயையும் கருதிய
    மனத்தையும் சுடும், என்
ஒற்றை ஆணை; மற்று, யார் உனக்கு
    இப்பெயர் உரைத்தார்?
கற்றது ஆரொடு? சொல்லுதி
    விரைந்து ‘‘ எனக் கனன்றான்.
47

உரை
   
 
6363.“‘முனைவர் வானவர் முதலினர்,
    மூன்று உலகத்தும்
எனைவர் உள்ளவர், யாவரும்,
    என் இரு கழலே
நினைவது; ஓதுவது என்பெயர்;
    நினக்கு இது நேர
அனையர் அஞ்சுவர்; மைந்த! நீ
    யாரிடை அறிந்தாய்?
48

உரை
   
 
6364.“‘மறம்கொள் வெஞ்செரு மலைகுவான்
    பல்முறை வந்தான்,
கறங்குவெஞ் சிறைக் கலுழன்தன்
    கடுமையின், கரந்தான்;
பிறங்கு தணெ்திரைப் பெருங்கடல்
    புக்கு, இ(ன்)னம் பெயராது,
உறங்குவான் பெயர் உறுதி என்று
    ஆர் உனக்கு உரைத்தார்?
49

உரை
   
 
6365.“‘பரவை நுண் மணல் எண்ணினும்
    எண்ண அரும் பரப்பின்
குரவர் நம்குலத்து உள்ளவர்
    அவன் கொ(ல்)லக் குறைந்தார்;
அரவின் நாமத்தை எலி இருந்து
    ஓதினால், அதற்கு
விரவும் நன்மை என்? துன்மதி!
    விளம்பு ‘‘ என வெகுண்டான்.
50

உரை
   
 
6366.“வயிற்றினுள் உலகு ஏழினோடு
    ஏழையும் வைக்கும்
அயிர்ப்பு இல் ஆற்றல் என் அனுசனை
    ஏனம் ஒன்று ஆகி
எயிற்றினால் எறிந்து இன் உயிர்
    உண்டவன் நாமம்
பயிற்றவோ நினைப் பயந்தது
    நான்? ‘‘ எனப் பகர்ந்தான்.
51

உரை
   
 
6367.“‘ஒருவன், யாவர்க்கும் எவற்றிற்கும்
    உலகிற்கும் முதல்வன்,
தருதல், காத்து, அவை தவிர்த்தல் என்று
    இவை செயத் தக்கோன்,
கருமத்தால் அன்றிக் காரணத்தால்
    உள்ள காட்சி
திருவிலீ! மற்று இது எம்மறைப்
    பொருள் எனத் தரெிந்தாய்?
52

உரை
   
 
6368.“‘ஆதி அந்தங்கள் இதனின் மற்று
    இல்லை, பேர் உலகில்;
வேதம் எங்ஙனம், அங்ஙனம்
    அவை சொன்ன விதியால்,
கோது இல் நல்வினை செய்தவர்
    உயர்குவர்; குறித்துத்
தீது செய்தவர் தாழ்குவர்;
    இது மெய்ம்மை, தரெியின்.
53

உரை
   
 
6369.“‘செய்த மாதவம் உடைமையின்
    அரி அயன் சிவன் என்று
எய்தினர் பதம் இழந்தனர்
    யான் தவம் இயற்றிப்
பொய் இல் நாயகம் பூண்டபின்,
    இனி அது புரிதல்
நொய்யது ஆகும் என்று,
    ஆரும் என் காவலின் நோலார்.
54

உரை
   
 
6370.“‘வேள்வி ஆதிய புண்ணியம்
    தவத்தொடும் விலக்கி,
கேள்வி யாவையும் தவிர்த்தனென்,
    ‘இவை கிளர்பகையைத்
தாழ்வியாதன செய்யும் ‘என்று;
    அனையவர் தம்பால்
வாழ்வு யாது? அயல் எவ் வழிப்
    புறங்கொண்டு வாழ்வார்?
55

உரை
   
 
6371.“‘பேதைப் பிள்ளை நீ; பிழைத்தது
    பொறுத்தனென்; பெயர்த்தும்,
ஏது இல் வார்த்தைகள் இனையன
    விளம்பலை; முனிவன்
யாது சொல்லினன், அவை அவை
    இதம் என எண்ணி,
ஓது; போதி ‘‘ என்று உரைத்தனன்
    உலகு எலாம் உயர்ந்தோன்.
56

உரை
   
 
பிரகலாதன், தன் தந்தையாகிய இரணியனுக்குத் திருமாலாகிய பரம்பொருளின் இயல்பினை அறிவுறுத்தல் (6372-6393)

6372.“‘உரை உளது உணர்த்துவது; உணர்ந்து கோடியேல்;
விரை உள அலங்கலாய்! வேத வேள்வியின்
கரை உளது; யாவரும் கற்கும் கல்வியின்
பிரை உளது “ என்பது மைந்தன் பேசினான்.
57

உரை
   
 
6373.“‘வித்து இன்றி விளைவது ஒன்று
    இல்லை; வேந்த! நின்
பித்து இன்றி உணர்தியேல்,
    அளவைப் பெய்குவன்;
‘உய்த்து ஒன்றும் ஒழிவு இன்றி
    உணர்தல் பாற்று! எனா,
கைத்து ஒன்று நெல்லி அம்
    கனியின் காண்டியால்.
58

உரை
   
 
6374.“‘தன்னுளே உலகங்கள் எவையும் தந்து அவை
தன்னுளே நின்று தான் அவற்றுள் தங்குவான்
பின் இலன் முன் இலன் ஒருவன்; பேர்கிலன்;
தொல் நிலை ஒருவரால் துணியற் பாலதோ?
59

உரை
   
 
6375.“‘சித்து என அருமறைச் சிரத்தின் தேறிய
தத்துவம் அவன்; அது தம்மைத் தாம் உணர்
வித்தகர் அறிகுவர்; வேறு வேறு உணர்
பித்தரும் உளர் சிலர்; வீடு பெற்றிலார்.
60

உரை
   
 
6376.“‘அளவையான் அளப்ப அரிது; அறிவின் அப்புறத்து
உளவை ஆய் உபநிடதங்கள் ஓதுவ;
கிளவியால் பொருள்களால் கிளக்குறாதவன்
களவை யார் அறிகுவார்? மெய்ம்மை கண்டிலார்.
61

உரை
   
 
6377.“‘மூவகை உலகும் ஆய் குணங்கள் மூன்றும் ஆய்
யாவையும் எவரும் ஆய் எண் இல் வேறுபட்டு
ஓவல் இல் ஒரு நிலை ஒருவன் செய்வினை
தேவரும் முனிவரும் உணரத் தேயுமோ?
62

உரை
   
 
6378.‘சாங்கியம் யோகம் என்று இரண்டு தன்மைய
வீங்கிய பொருள் எலாம் வேறு காண்பன;
ஆங்கு அவை உணர்ந்தவர்க்கு அன்றி அன்னவன்
ஓங்கிய மேல் நிலை உணரற் பாலதோ?
63

உரை
   
 
6379.“‘கருமமும் கருமத்தின் பயனும் அப்பயன்
தரு முதல் தலைவனும் தானும் ஆனவன்;
அருமையும் பெருமையும் அறிவரேல் அவர்
இருமை என்று உரைசெயும் கடல்நின்று ஏறுவார்.
64

உரை
   
 
6380.“‘மந்திரம் மாதவம் என்னும் மாலைய
தந்துறு பயன் இவை முறையின் சாற்றிய
நந்தல் இல் தயெ்வம் ஆய் நல்கும்; நான்மறை
அந்தம் இல் வேள்விமாட்டு அவிசும் ஆம்
65

உரை
   
 
6381.“‘முற்பயப் பயன் தரும் முன்னி நின்று அவர்
பிற்பயப் பயன் தரும் பின்பு போய் அவன்;
தன் பயன் தான் தரும் தருமம் இல்லை; அஃது
அற்புத மாயையால் அறிகிலார் பிறர்.
66

உரை
   
 
6382.“‘ஒரு வினை ஒரு பயன் அன்றி உய்க்குமோ?
இரு வினை என்பவை இயற்றி இட்டவை;
கருதின கருதின காட்டுகின்றது
தரு பரன் அருள்; இனிச் சான்று வேண்டுமோ?
67

உரை
   
 
6383.“‘ஒர் ஆவுதி கடைமுறை வேள்வி ஓம்புவோர்
அரா அணை அமலனுக்கு அளிப்பிரேல் அது
சராசரம் அனைத்தினும் சாரும் என்பது
பராவ அரும் மறைப் பொருள்; பயனும் அன்னதால்.
68

உரை
   
 
6384.“‘பகுதியின் உள் பயன் பயந்தது; அன்னதின்
விகுதியின் மிகுதிகள் எவையும் மேலவர்
வகுதியின் வசத்தன; வரவு போக்கு அது
புகுதி இல்லாதவர் புலத்திற்று ஆகுமோ?
69

உரை
   
 
6385.“‘எழுத்து இயல் நாளத்தின் எண் இலா வகை
முழுத் தனி நான்முகன் முதல முற்று உயிர்
வழுத்து அரும் பொகுட்டது ஓர் புரையின் வைகுமால்
விழுத் தனிப் பல் இதழ் விரை உலாம் முகிழ்.
70

உரை
   
 
6386.“‘கண்ணினும் கரந்து உளன்; கண்டு காட்டுவான்;
உள் நிறைந்திடும் உணர்வு ஆகி உண்மையான்;
மண்ணினும் வானினும் மற்றை மூன்றினும்
எண்ணினும் நெடியவன்; ஒருவன்; எண் இலான்
71

உரை
   
 
6387.“‘சிந்தையின் செய்கையின் சொல்லின் சேர்ந்துளன்;
இந்தியம் தொறும் உளன்; உற்றது எண்ணினால்
முந்தை ஓர் எழுத்து என வந்து மும்முறைச்
சந்தியும் பதமும் ஆய்த் தழைத்த தன்மையான்.
72

உரை
   
 
6388.“‘காமமும் வெகுளியும் முதல கண்ணிய
தீமையும் வன்மையும் தீர்க்கும் செய்கையான்
நாமமும் அவன் பிற நலிகொடா நெடுஞ்
சேமமும் பிறர்களாற் செப்பற் பாலவோ?
73

உரை
   
 
6389.“‘காலமும் கருவியும் இடனும் ஆய் கடைப்
பால் அமை பயனும் ஆய் பயன் துய்ப்பானும் ஆய்
சீலமும் அவைதரும் திருவும் ஆய் உளன்
ஆலமும் வித்தும் ஒத்து அடங்கும் ஆண்மையான்.
74

உரை
   
 
6390.“‘உள்ளுற உணர்வு இனிது உணர்ந்த ஓசை ஓர்
தெள்விளி யாழிடைத் தரெியும் செய்கையின்
உள் உளன்; புறத்து உளன்; ஒன்றும் நண்ணலான்;
தள்(ள) அரு மறைகளும் மருளும் தன்மையான்.
75

உரை
   
 
6391.“‘ஓம் எனும் ஓர் எழுத்து
    அதனின் உள் உயிர்
ஆம் அவன், அறிவினுக்கு
    அறிவும் ஆயினான்
தாம மூவுலகமும்
    தழுவிச் சார்தலால்,
தூமமும் கனலும்போல்
    தொடர்ந்த தோற்றத்தான்.
76

உரை
   
 
6392.“‘காலையின் நறுமலர் ஒன்றக் கட்டிய
மாலையின் மலர்புரை சமய வாதியர்
சூலையின் திருக்கு அலால் சொல்லுவோர்க்கு எலாம்
வேலையும் திரையும் போல் வேறுபாடு இலான்.
77

உரை
   
 
6393.“‘இன்னது ஓர் தன்மையன் இகழ்வுற்று எய்திய
நல் நெடுஞ் செல்வமும் நாளும் நாம் அற
மன்னுயிர் இழத்தி என்று அஞ்சி வாழ்த்தினேன்
சொன்னவன் நாமம் “ என்று உணரச் சொல்லினான்.
78

உரை
   
 
இரணியன் எல்லையற்ற வெகுளியுடையனாய்த் தன் புதல்வனைக் கொல்லுமாறு வீரர்களை ஏவுதலும் அவர்கள் பிரகலாதனைப் பற்றுதலும் (6394-6395)

6394.‘எதிரில் நின்று, அவன், இவை
    உரைத்திடுதலும், எவ் உலகமும் அஞ்ச,
முதிரும் வெம் கதம் மொழிகொடு
    மூண்டது, முது கடல் கடு ஏய்ப்ப;
கதிரும் வானமும் சுழன்றன;
    நெடுநிலம் கம்பித்த; கனகன் கண்
உதிரம் கான்றன; தோன்றின
    புகைக் கொடி; உமிழ்ந்தன கொடுந் தீயே.
79

உரை
   
 
6395.“‘வேறும் என்னொடு தரும்பகை
    பிறிது இனி வேண்டல் என்? வினையத்தால்
ஊறி, என்னுளே உதித்தது;
    குறிப்பு இனி உணர்குவது உளது அன்றால்;
ஈறு இல் என்பெரும் பகைஞனுக்கு
    அன்புசால் அடியென் யான் என்கின்றான்;
கோறிர் ‘‘ என்றனன்; என்றலும்
    பற்றினர், கூற்றினும் கொலை வல்லார்.
80

உரை
   
 
இரணியனது ஆணையினை மேற்கொண்ட அசுர வீரர்கள் பிரகலாதனைப் பல வழிகளில் கொல்ல முயலுதலும், பிரகலாதன் இறைவன் நாமத்தை இடைவிடாது எண்ணுதலால் அவ் விடையூறுகளிலிருந்து தப்பி உய்தலும் (6396-6431

6396.‘குன்று போல் மணிவாயிலின் பெரும் புறத்து
    உய்த்தனர், மழுக்கூர்வாள்,
ஒன்று போல்வன ஆயிரம் மீது எடுத்து
    ஓச்சினர், “உயிரோடும்
தின்று தீர்குதும் ‘‘ என்குநர், உரும் எனத்
    தழெிக்குநர், சின வேழக்
கன்று புல்லிய கோள் அரிக் குழு எனக்
    கனல்கின்ற தறுகண்ணார்.
81

உரை
   
 
6397.‘தாயின் மன்னுயிர்க்கு அன்பினன் தன்னை,
    அத் தவம் எனும் தகவு இல்லோர்
“ஏ “ என் மாத்திரத்து எய்தன எறிந்தன
    எறிதொறும் எறிதோறும்
தூயவன்தனைத் துணை என உடைய
    அவ் ஒருவனைத் துன்னாதார்
வாயின் வைதன ஒத்தன அத்துணை
    மழுவொடு கொலை வாளும்.
82

உரை
   
 
6398.‘எறிந்த, எய்தன, எற்றின, குற்றின,
    ஈர்ந்தன, படையாவும்
முறிந்த, நுண்பொடி ஆயின, முடிந்தன;
    முனிவு இலான் முழுமேனி
சொறிந்த தன்மையும் செய்தில ஆயின;
    தூயவன் துணிவு ஒன்றா
அறிந்த நாயகன் சேவடி மறந்திலன்;
    அயர்த்திலன், அவன் நாமம்.
83

உரை
   
 
6399.“‘உள்ள வான்பெரும் படைக்கலம் யாவையும்
    உக்கன - உரவோய் நின்
பிள்ளை மேனிக்கு ஓர் ஆனி வந்திலது; இனிச்
    செயல் என்கொல் பிறிது? ‘‘ என்ன,
“கள்ள உள்ளத்தன் கட்டினன் கருவிகள்;
    கதுமெனக் கனல் பொத்தித்
தள்ளுமின் ‘‘ என உரைத்தனன்; வயவரும்,
    அத்தொழில் தலை நின்றார்.
84

உரை
   
 
6400.‘குழியில் இந்தனம் அடுக்கினர்,
    குன்று என; குடம் தொறும் கொணர்ந்து எண்ணெய்
இழுது நெய் சொரிந்திட்டனர்;
    நெருப்பு எழுந்திட்டது, விசும்பு எட்ட,
அழுது நின்றவர் அயர்வுற,
    ஐயனைப் பெய்தனர்; ‘அரி ‘என்று
தொழுது நின்றனன், நாயகன்
    தாள் இணை; குளிர்ந்தது சுடுதீயே. ‘
85

உரை
   
 
6401.‘கால வெங்கனல் கதுவிய
    காலையில் - கற்புடையவள் சொற்ற
சீல நல் உரைச் சீதம் மிக்கு
    அடுத்தலின், கிழியொடு நெய் தீற்றி,
ஆலம் அன்ன நம் அரக்கர்கள்
    வயங்கு எரி மடுத்தலின் அனுமன்தன்
கூலம் ஆம் என, என்பு உறக்
    குளிர்ந்தது, அக் குருமணித் திருமேனி. ‘
86

உரை
   
 
6402.“‘சுட்டது இல்லை நின் தோன்றலை,
    சுடர்க் கனல் சுழிபடர் அழுவத்துள்
இட்ட போதினும்; என் இனிச்
    செயத்தக்கது? ‘‘ என்றனர், இகல் வெய்யோர்;
“கட்டி, தீயையும் கடுஞ்சிறை
    இடுமின்; அக் கள்வனைக் கவர்ந்து உண்ண
எட்டுப் பாம்பையும் விடுமின்கள் ‘‘
    என்றனன், எரி எழு தறுகண்ணான். ‘
87

உரை
   
 
6403.அனந்தனே முதலாகிய நாகங்கள்,
    “அருள் என் கொல் “ என, அன்னான்
நினைந்த மாத்திரத்து எய்தின, நொய்தினின்;
    நெருப்பு உகு பகு வாயால்,
வனைந்ததாம் அன்ன மேனியினான் தன்மேல்,
    வாள் எயிறு உற ஊன்றிச்
சினம் தலைக் கொளக் கடித்தன;
    துடித்திலன், திருப்பெயர் மறவாதான்.
88

உரை
   
 
6404.‘பக்கம் நின்று அவை பயத்தினின்
    புயல் கறை பசும்புனல் பகுவாயின்
கக்க, வெஞ்சினக் கலுழனும்
    நடுக்குற, கவ்விய காலத்து,
செக்கர் மேகத்துச் சிறு பிறை
    நுழைந்து அ(ன்)ன செய்கைய, வலி சிந்தி
உக்க, பற்குலம்; ஒழுகின
    எயிற்று இரும் புரைதொறும் அமிழ்து ஊறி.
89

உரை
   
 
6405.“‘சூழப் பற்றின சுற்றும் எயிற்றின்
போழக் கிற்றில “ என்று புகன்றார்;
“வாழித் திக்கின் மயக்கின் மதம் தாழ்
வேழத்துக்கு இடுமின் “ என விட்டான்.
90

உரை
   
 
6406.‘பசையில் தங்கல் இல் சிந்தையர் பல்லோர்
திசையில் சென்றனர்; ‘செப்பினன் ‘என்னும்
இசையின் தந்தனன் இந்திரன் என்பான்
விசையின் திண்பணை வெஞ்சின வேழம்.
91

உரை
   
 
6407.‘கையில் கால்களில் மார்பு கழுத்தில்
தயெ்வப் பாசம் உறப் பிணி செய்தார்;
மையல் காய் கரி முன் உற வைத்தார்;
பொய் அற்றானும் இது ஒன்று புகன்றான்.
92

உரை
   
 
6408.“‘எந்தாய்! பண்டு ஒர் இடங்கர் விழுங்க
முந்தாய் நின்ற முதற் பொருளே! “ என்று
உம் தாய் தந்தை இனத்தவன் ஓத
வந்தான் என்றன் மனத்தினன் என்றான்.
93

உரை
   
 
6409.‘என்னா முன்னம் இருங் களிறும் தன்
பொன் ஆர் ஓடை பொருந்த நிலத்தின்
அன்னானைத் தொழுது அஞ்சி அகன்றது;
ஒன்னார் அத்திறம் எய்தி உரைத்தார்.
94

உரை
   
 
6410.“‘வல் வீரைத் துயில்வானை மதித்து என்
நல் வீரத்தை அழித்தது; நண்ணுற்று
ஒல்வீர்! ஒற்றை உரக் கரி தன்னைக்
கொல்வீர் “ என்றனன் நெஞ்சு கொதிப்பான்.
95

உரை
   
 
6411.‘தன்னைக் கொல்லுநர் சாருதலோடும்
பொன்னைக் கொல்லும் ஒளிப் புகழ் பொய்யா
மன்னைக் கொல்லிய வந்தது; வாரா
மின்னைக் கொல்லும் வெயில் தின் எயிற்றால்.
96

உரை
   
 
6412.‘வீரத் திண்திறல் மார்பினில் வெள் கோடு
ஆரக் குத்தி அழுத்தியது ஆக
வாரத் தண் குலை வாழை மடல் சூழ்
ஈரத் தண்டு என இற்றன எல்லாம்.
97

உரை
   
 
6413.‘வெண் கோடு இற்றன மேவலர் செய்யும்
கண்கோடல் பொறியின் கடிது ஏகி
‘எண் கோடற்கு அரிது ‘என்ன வெகுண்டான்
திண் கோடைக் கதிரின் தறெு கண்ணான்.
98

உரை
   
 
6414.“‘தள்ளத் தக்கு இல் பெருஞ் சயிலத்தோடு
எள்ளக் கட்டி எடுத்து விசித்து
கள்ளத்து இங்கு இவனைக் கரை காணா
வெள்ளத்து உய்த்திடுவீர் “ என விட்டான்.
99

உரை
   
 
6415.“‘ஒட்டிக் கொல்ல உணர்ந்து வெகுண்டான்;
விட்டிட்டான் அலன் “ என்று விரைந்தார்
கட்டிக் கல்லொடு கால் விசையின்போய்
இட்டிட்டார் கடலின் நடு எந்தாய்!’
100

உரை
   
 
6416.‘நடு ஒக்கும் தனி நாயகன் நாமம்
விடுகிற்கின்றிலன் ஆதலின் வேலை
மடு ஒத்து அங்கு அதின் வங்கமும் அன்றாய்
குடுவைத் தன்மையது ஆயது குன்றம்.
101

உரை
   
 
6417.‘மோதுற்று ஆர் திரை வேலையில் மூழ்கான்
மீதுற்று ஆர் சிலைமீது கிடந்தான்
ஆதிப் பண்ணவன் ஆயிர நாமம்
ஓதுற்றான் மறை எல்லை உணர்ந்தான்’
102

உரை
   
 
6418.‘தலையில் கொண்ட தடக் கையினான் தன்
நிலையின் தீர்வு இல் மனத்தின் நினைந்தான்;
சிலையில் தண்புனலில் சினை ஆலின்
இலையில் பிள்ளை எனப் பொலிகின்றான்.
103

உரை
   
 
6419.“‘அடியார் அடியேன் எனும் ஆர்வம் அலால்
ஒடியா வலி யான் உடையேன் உளெனோ?
கொடியாய்! குறியாய்! குணம் ஏதும் இலாய்! “
நெடியாய்! அடியேன் நிலை நேர்குதியோ?
104

உரை
   
 
6420.“‘கள்ளம் திரிவாரவர் கைதவன் நீ;
உள்ளம் தரெியாத உனக்கு உளவோ? “
துள்ளும் பொறியின் நிலை சோதனைதான்
வெள்ளம் தரும் இன் அமுதே! விதியோ?’
105

உரை
   
 
6421.“‘வரு நான்முகனே முதல் வானவர்தாம்
திரு நான்மறையின் நெறியே திரிவார்
பெரு நாள் தரெிகின்றிலர்; பேதைமையேன்
ஒரு நாள் உனை எங்ஙனம் உள்ளுவெனோ?
106

உரை
   
 
6422.“‘செய்யாதனவோ இலை தீவினைதான்
பொய்யாதன வந்து புணர்ந்திடுமால்;
மெய்யே உயிர் தீர்வது ஒர் மேல்வினை நீ
ஐயா! ஒரு நாளும் அயர்த்தனையோ?
107

உரை
   
 
6423.“‘ஆயப்பெறும் நல்நெறி தம் அறிவு என்று
ஏயப்பெறும் ஈசர்கள் எண்ணிலரால்;
நீ அப்புறம் நிற்க நினைக்கிலர்; நின்
மாயப் பொறி புக்கு மயங்குவரால்.
108

உரை
   
 
6424.“‘தாமே தனி நாயகராய் ‘எவையும்
போமே பொருள் ‘என்ற புராதனர் தாம்
‘யாமே பரம் ‘என்றனர்; என்ற அவர்க்கு
ஆமே? பிறர் நின் அலது ஆர் உளரே?
109

உரை
   
 
6425.“‘ஆதிப் பரம் ஆம் எனில் அன்று எனல் ஆய்
ஓது அப்பொருள் நூல்கள் உலப்பு இலவால்;
பேதிப்பன; நீ அவை பேர்கிலையால்;
வேதப் பொருளே! விளையாடுதியோ?
110

உரை
   
 
6426.“‘அம்போருகனார் அரனார் அறியார்;
எம்போலியர் எண்ணிடின் என் பலவா?
கொம்போடு அடை பூ கனி காய் எனினும்
வம்போ ‘மரம் ஒன்று ‘எனும் வாசகமே?
111

உரை
   
 
6427.“‘நின்னின் பிறிதாய் நிலையின் திரியா
தன்னின் பிறிது ஆயினதாம் எனினும்
உன்னின் பிறிது ஆயினவோ உலகம்?
பொன்னின் பிறிது ஆகில பொற்கலனே.
112

உரை
   
 
6428.“‘தாய் தந்தை எனும் தகை வந்தனைதான்
நீ தந்தனை; நீ உறு நெஞ்சினன் நான்;
நோய் தந்தவனே நுவல் தீர்வும் “ எனா
வாய் தந்தன சொல்லி வணங்கினனால்.
113

உரை
   
 
6429.‘அத்தன்மை அறிந்த அருந் திறலோன்
“உய்த்து உய்ம்மின் என்முன் ” என உய்த்தனரால்;
“பித்துண்டது பேர்வுறுமா பெறுதும்;
கைத்தும் கடு நஞ்சின் “ எனக் கனலா
114

உரை
   
 
6430.‘இட்டார் கடு வல்விடம்; எண்ணுடையான்
தொட்டான் நுகரா ஒரு சோர்வு இலனால்;
கட்டு ஆர் கடு மத்திகை கண் கொடியோன்
விட்டான்; அவன்மேல் அவர் வீசினரால்.
115

உரை
   
 
6431.‘வெய்யார் முடிவு இல்லவர் வீசியபோது
“உய்யான் ” எனும் வேலையின் “உள் உறைவோன்
கை ஆயிரம் அல்ல; கணக்கு இல “ என்று
எய்யா உலகு யாவையும் எண்ணினனால்.
116

உரை
   
 
பிரகலாதனைப் பலவகையாகக் கொல்ல முயன்றும் அவன் இறவாமையை அறிந்த இரணியன் ‘யானே இவனுயிரை உண்பேன் ‘என அவனை நெருங்குதல்

6432.“‘ஊனோடு உயிர் வேறுபடா உபயம்
தானே உடையன் தனி மாயையினால்;
யானே உயிர் உண்பல் “ எனக் கனலா
வான் ஏழும் நடுங்கிட வந்தனனால்.
117

உரை
   
 
பிரகலாதனுக்கும் இரணியனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் (6433-6441)

6433.‘வந்தானை வணங்கி “என் மன்னுயிர்தான்
எந்தாய்! கொள எண்ணினையேல் இதுதான்
உந்தா; அரிது அன்று; உலகு யாவும் உடன்
தந்தார் கொள நின்றதுதான் “ எனலும்.
118

உரை
   
 
6434.“‘ஏவரே உலகம் தந்தார்?
    என் பெயர் ஏத்தி வாழும்
மூவரே? அல்லர் ஆகின்
    முனிவரே? முழுதும் தோற்ற
தேவரே? பிறரே? யாரே?
    செப்புதி தரெிய ‘‘ என்றான்,
கோவம் மூண்டு எழுந்தும் கொல்லான்,
    காட்டுமேல் காட்சி கொள்வான்.
119

உரை
   
 
6435.“‘உலகு தந்தானும், பல்வேறு உயிர்கள்
    தந்தானும், உள் உற்று,
உலைவு இலா உயிர்கள் தோறும்
    அங்கு அங்கே உறைகின்றானும்,
மலரினில் வெறியும் எள்ளில்
    எண்ணெயும் மான, எங்கும்
அலகு இல் பல் பொருளும் பற்றி
    முற்றிய அரிகாண் அத்தா
120

உரை
   
 
6436.‘என்கணால் நோக்கிக் காணாய்,
    எங்கணும் உளன்காண், எந்தை!
உன்கண் நான் அன்பிற் சொன்னால்
    உறுதி என்று ஒன்றும் கொள்ளாய்;
நின் கணால் நோக்கிக் காண்டற்கு
    எளியனோ? நினக்குப் பின்னோன்
பொன் கணான் ஆவி உண்ட
    புண்டரீகக் கண் அம்மான்.
121

உரை
   
 
6437.“‘மூன்று அவன் குணங்கள்; செய்கை
    மூன்று; அவன் உருவம் மூன்று;
மூன்று கண், சுடர்கொள் சோதி மூன்று;
    அவன் உலகம் மூன்று;
தோன்றலும் இடையும் ஈறும்
    தொடங்கிய பொருள்கட்கு எல்லாம்
சான்று அவன்; இதுவே வேத முடிவு :
    இது சரதம் ‘‘ என்றான்.
122

உரை
   
 
6438.என்றலும் அவுணர் வேந்தன்
    எயிற்று அரும்பு இலங்க நக்கான்,
“ஒன்றல் இல் பொருள்கள் எல்லாம்
    ஒருவன் புக்கு உறைவன் ‘என்றாய்;
நன்று, அது கண்டு பின்னர்
    நல்லவா புரிது; தூணின்
நின்றுளன் என்னின், கள்வன்,
    நிரப்புதி நிலைமை ‘‘ என்றான்.
123

உரை
   
 
6439.“‘சாணினும் உளன்; ஓர் தன்மை
    அணுவினைச் சதகூறு இட்ட
கோணினும் உளன்; மாமேருக்
    குன்றினும் உளன்; இந் நின்ற
தூணினும் உளன்; நீ சொன்ன
    சொல்லினும் உளன்; இத்தன்மை
காணுதி விரைவின் ‘என்றான்;
    ‘நன்று ‘எனக் கனகன் சொன்னான் :
124

உரை
   
 
6440.“‘உம்பர்க்கும் உனக்கும் ஒத்து, இவ்
    உலகு எங்கும் பரந்துளானை,
கம்பத்தின் வழியே காண,
    காட்டுதி; காட்டாய் ஆகில்,
கும்பத்திண் கரியைக் கோள்மாக்
    கொன்றென, நின்னைக் கொன்று உன்
செம்பு ஒத்த குருதி தேக்கி,
    உடலையும் தின்பென் ‘‘ என்றான்.
125

உரை
   
 
6441.“‘என் உயிர் நின்னால் கோறற்கு
    எளியது ஒன்று அன்று; யான் முன்
சொன்னவன் தொட்ட தொட்ட
    இடந்தொறும் தோன்றான் ஆயின்,
என் உயிர் யானே மாய்ப்பல்;
    பின்னும் வாழ்வு உகப்பல் என்னின்,
அன்னவற்கு அடியேன் அல்லேன் ‘‘
    என்றனன் அறிவின் மிக்கான்.
126

உரை
   
 
இரணியன், அங்குள்ள தூண்களில் ஒன்றினைத் தன் கையினால் அறைந்து தாக்க அத்தூணின்கண்ணே நரசிங்கம் தோன்றிச் சிரித்தல்

6442.‘நசை திறந்து இலங்கப் பொங்கி,
    “நன்று, நன்று “ என்ன நக்கு,
விசை திறந்து உருமு வீழ்ந்தது
    என்ன ஓர் தூணின், வென்றி
இசை திறந்து உயர்ந்த கையால்
    எற்றினான்; எற்றலோடும்,
திசை திறந்து அண்டம் கீறச் சிரித்தது,
    அச் செங்கண் சீயம்.
127

உரை
   
 
சிங்கத்தின் சிரிப்பொலி கேட்டுப்
பிரகலாதன் மகிழ்தல்

6443.“‘நாடி நான் தருவென் “ என்ற
    நல் அறிவாளன், நாளும்
தேடி நான்முகனும் காணாச்
    சேயவன் சிரித்தலோடும்,
ஆடினான்; அழுதான்; பாடி
    அரற்றினான்; சிரத்தில் செங்கை
சூடினான்; தொழுதான்; ஓடி
    உலகெலாம் துகைத்தான், துள்ளி.
128

உரை
   
 
தூணினுள் நின்று சிரித்த இறைவனைப் போருக்குப் புறப்படுக என இரணியன் அறைகூவி அழைத்தல்

6444.“‘ஆர் அடா சிரித்தாய்? சொன்ன
    அரிகொலோ? அஞ்சிப் புக்க
நீர், அடா, போதாது என்று,
    நெடுந்தறி நேடினாயோ?
போர் அடா பொருதி ஆயின்,
    புறப்படு! புறப்படு! ‘‘ என்றான்
பேர் அடா நின்ற தாேளாடு
    உலகு எலாம் பெயரப் பேர்வான்.
129

உரை
   
 
நரசிங்கப்பிரான் தூணைப் பிளந்து வெளிப்பட்டுப் பேருருவம் கொள்ளுதல்

6445.‘பிளந்தது தூணும்; ஆங்கே
    பிறந்தது, சீயம்; பின்னை
வளர்ந்தது, திசைகள் எட்டும்;
    பகிரண்டம் முதல மற்றும்
அளந்தது; அப்புறத்துச் செய்கை
    யார் அறிந்து அறையகிற்பார்?
கிளர்ந்தது; ககனமுட்டை
    கிழிந்தது கீழும் மேலும்.
130

உரை
   
 
நரசிங்கமூர்த்தியின் பேருருவத் தோற்றம் (6446-6451)

6446.‘மன்றல் அம் துளபம் மாலை
    மானிட மடங்கல், வானில்
சென்றது தரெிதல் தேற்றாம்;
    சேவடி படியில் தீண்ட
நின்றது ஓர் பொழுதின், அண்ட
    நெடு முகட்டு இருந்த முன்னோன்
அன்று அவன் உந்தி
    வந்தானாம் எனத் தோன்றினானால்
131

உரை
   
 
6447.“‘எத்துணை போதும் கை? “ என்று
    இயம்பினால் எண்ணற்கு ஏற்ற
வித்தகர் உளரோ? அந்தத்
    தானவர் விரிந்த சேனை
பத்து நூறு அமைந்த கோடி
    வெள்ளத்தால் பகுதி செய்த
அத்தனை கடலும் மாளத்
    தனித்தனி அள்ளிக் கொண்ட.
132

உரை
   
 
6448.‘ஆயிரம் கோடி வெள்ளத்து அயில்
    எயிற்று அவுணர்க்கு அங்கு அங்கு
ஏயின ஒருவர்க்கு ஓர் ஓர் திருமுகம்,
    இரட்டி பொன் தோள்,
தீ எனக் கனலும் செங்கண்
    சிரம் தொறும் மூன்று, தயெ்வ
வாய் எனில், கடல்கள் ஏழும்,
    மலைகளும், மற்றும், முற்றும்.
133

உரை
   
 
6449.‘முடங்கு வார் உளை, அ(வ்)
    அண்டம் முழுவதும் முடிவின் உண்ணும்
கடம் கொள் வெம் காலச் செந்தீ
    அதனை வந்து அழிக்கும்; கால
மடங்கலின் உயிர்ப்பு, மற்று
    அக்காற்றினை மாற்றும்; ஆனால்,
அடங்கலும் பகுவாய் யாக்கை
    அப்புறத்து அகத்தது அம்மா!
134

உரை
   
 
6450.‘குயிற்றிய அண்டம் குஞ்சை
    இட்டிலா முட்டை முட்டப்
பயிற்றிய பருவம் ஒத்த
    காலத்துள் அமுது பல்கும்
எயிற்று வன் பகு வாயுள் புக்கு
    இருக்குந இருக்கை எய்தி;
வயிற்றின் வந்து அந்நாள் இந்நாள்
    வாழும் மன்னுயிர்கள் மன்னோ.
135

உரை
   
 
6451.‘நன்மையின் தொடர்ந்தார்க்கு உண்டோ,
    கேடு? நான்முகத்தோன் ஆதி
தொன்மையின் தொடர்ந்த வாய்மை
    அறம் அத்து ஒடும் தொடர்ந்திலோரை
அன்வயித்து, ஓரும் தீய
    அவுணர் அல்லாரை அந்நாள்
தன் வயிறு அகத்து வைத்துத் தந்தது,
    அச் சீயம், தாயின்.
136

உரை
   
 
நரசிங்கமூர்த்தி அசுரர்களை அழித்தல் (6452-6458)

6452.‘பேர் உடை அவுணர் தம்மைப்
    பிறை எயிற்று அடக்கும்; பேரா,
பார் இடைத் தேய்க்கும்; மீளப்
    பகிரண்டத்து அடிக்கும்; பற்றி,
மேருவில் புடைக்கும்; மாள
    விரல்களின் பிசையும்; வேலை
நீர் இடை குமிழி ஊட்டும்;
    நெருப்பு இடைச் சுரிக்க நீட்டும்;
137

உரை
   
 
6453.‘வகிர்படத் துணிக்கும்; பற்றி
    வாய்களைப் பிளக்கும்; வன்தோல்
சுகிர்படுத்து உரிக்கும்; செந்தீக்
    கண்களைச் சூலும்; சுற்றிப்
பகிர்படக் குடரைக் கொய்யும்;
    பசை அறப் பிசையும்; பல்கால்
உகிர்புரைப் புக்கோர் தம்மை
    உகிர்களால் உறக்கும், ஊன்றி;
138

உரை
   
 
6454.“யானையும், தேரும், மாவும்,
    யாவையும், உயிர் இராமை,
ஊனொடும் தின்னும்; பின்னை,
    ஒலிதிரைப் பரவை ஏழும்
மீனொடும் குடிக்கும்; மேகத்து
    உருமொடும் விழுங்கும் விண்ணில்;
“தான் ஒடுங்காது “ என்று, அஞ்சித்
    தருமமும் சலித்தது அம்மா!
139

உரை
   
 
6455.‘ஆழி மால் வரையோடு எற்றும்,
    சிலவரை; அண்ட கோளச்
சூழ் இருஞ் சுவரில் தேய்க்கும்,
    சிலவரை; துளக்கு இல் குன்றம்
ஏழினோடு எற்றிக் கொல்லும்,
    சிலவரை; எட்டுத் திக்கும்
தாழ் இருட் பிழம்பின் தேய்க்கும்,
    சிலவரைத் தடக்கை தாக்கி.
140

உரை
   
 
6456.‘மலைகளின் புரண்டு வீழ,
    வள் உகிர் நுதியால், வாங்கி,
தலைகளைக் கிள்ளும்; அள்ளித்
    தழல் எழப் பிசையும்; தக்க
கொலைகளின் கொல்லும்; வாங்கி
    உயிர்களைக் குடிக்கும்; வன
நிலைகளில் பரக்க, வேலை
    நீர்களை நிரம்பத் தூர்க்கும்;
141

உரை
   
 
6457.‘முப்புறத்து உலகத் துள்ளும்
    ஒழிவு அற முற்றும் பற்றி,
தப்பு உறல் இன்றிக் கொன்று,
    தையலார் கருவும் தள்ளி,
இப்புறத்து அண்டத்து யாரும்
    அவுணர் இல்லாமை எற்றி,
அப்புறத்து அண்டம் தோறும்
    தடவின, சிலகை அம்மா!
142

உரை
   
 
6458.‘கனகனும், அவனில் வந்த
    வானவர் களைகண் ஆன
அனகனும் ஒழிய, பல்வேறு
    அவுணர் ஆனவரை எல்லாம்
நினைவதன் முன்னம் கொன்று
    நின்றது அந்நெடுங்கண் சீயம்
வனைகழலவனும், மற்று அ(ம்)
    மடங்கலின் வரவு நோக்கி,
143

உரை
   
 
சினமிக்க இரணியன், வாளும் கேடகமும் ஏந்தி நரசிங்கத்துடன் போர் செய்யப் புறப்படுதல்

6459.‘வயிர வாள் உறையின் வாங்கி,
    வானகம் மறைக்கும் வட்டச்
செயிர் அறு கிடுகும் பற்றி,
    வானவர் உள்ளம் தீய,
அயிர் படர் வேலை ஏழும்
    மலைகளும் அஞ்ச, ஆர்த்து, அங்கு
உயிருடை மேரு என்ன
    வாய் மடித்து, உருத்து நின்றான்.
144

உரை
   
 
அது கண்ட பிரகலாதன், நரசிங்கப்பிரானைப் பணிந்து உய்தி பெறுமாறு இரணியனுக்கு அறிவுறுத்தல்

6460.‘நின்றவன் தன்னை நோக்கி,
    “நிலை இது கண்டு, நீயும்
ஒன்றும் உன் உள்ளத்து யாதும்
    உணர்ந்திலை போலும் அன்றே;
வன்தொழில் ஆழி வேந்தை
    வணங்குதி; வணங்கவே, உன்
புன்தொழில் பொறுக்கும் ‘‘ என்றான்
    உலகு எலாம் புகழ நின்றான்.
145

உரை
   
 
அதற்கு உடம்படாமல் இரணியன் பிரகலாதனைச் சினந்து சூளுரைத்து நகுதல்

6461.“‘கேள், இது; நீயும் காண,
    கிளர்ந்த கோள் அரியின் கேழ் இல்
தோெளாடு தாளும் நீக்கி,
    நின்னையும் துணித்து, பின், என்
வாளினைத் தொழுவது அல்லால்,
    வணங்குதல் மகளிர் ஊடல்
நாளினும் உளதோ? ‘‘ என்னா
    அண்டங்கள் நடுங்க நக்கான்.
146

உரை
   
 
நரசிங்கப்பிரான் இரணியனது மார்பைப் பிளந்து அவனது உயிரைப் போக்குதல் (6462-6468)

6462.‘நகை செயா, வாயும் கண்ணும்
    வாெளாடு நடந்த தாளும்
புகைசெயா, நெடுந் தீப் பொங்க
    உருத்து எதிர்பொருந்தப் புக்கான்;
தொகை செயற்கு அரிய தோளால்
    தாள்களால் சுற்றிச் சூழ்ந்தான்;
மிகை செய்வார் வினைகட்கு எல்லாம்
    மேற்செயும் வினையம் வல்லான்.
147

உரை
   
 
6463.‘இருவரும் பொருந்தப் பற்றி,
    எவ் உலகுக்கும் மேலாய்,
‘ஒருவரும் காணா வண்ணம்
    உயர்ந்ததற்கு உவமை கூறின்,
வெரு வரு தோற்றத்து, அஞ்சா,
    வெஞ்சின, அவுணன், மேரு
அருவரை ஒத்தான்; அண்ணல்,
    அல்லவை எல்லாம் ஒத்தான்.
148

உரை
   
 
6464.‘ஆர்ப்பு ஒலி முழக்கின் வெவ் வாய்
    வள் உகிர்ப் பாரம் ஆன்ற
ஏற்று அருங் கரத்தின், பல்வேறு
    எறிதிரைப் பரப்பின் உற்ற,
பாற்கடல், பரந்து பொங்கிப்
    பங்கயத்து ஒருவன் நாட்டின்
மேல் சென்றது ஒத்தான் மாயன்;
    கனகனும் மேரு ஒத்தான்.
149

உரை
   
 
6465.‘வாெளாடு தோளும், கையும்,
    மகுடமும், மலரோன் வைத்த
நீள் இருங் ககன முட்டை
    நெடுஞ்சுவர் தேய்ப்ப, நேமி
கோெளாடும் திரிவது என்னக்
    குலமணிக் கொடும் பூண் மின்ன,
தாள் இணை இரண்டும் பற்றிச்
    சுழற்றினன்; தடக்கை ஒன்றால்.
150

உரை
   
 
6466.‘சுழற்றிய காலை, காதில்
    தூங்கு குண்டலங்கள் நீங்கி,
கிழக்கொடு மேற்கின் ஓடி
    விழுந்தன கிடந்த, இன்றும்
அழல்தரு கதிரோன் தோன்றும்
    உதயத்தோடு அத்தம் ஆன;
நிழல் தரும், காலை மாலை,
    நெடு மணிச் சுடரின் நீத்தம்.
151

உரை
   
 
6467.“‘போன்றன இனைய தன்மை;
    பொருவியது இனையது “ என்று
தான் தனி ஒருவன், தன்னை
    உரைசெயும் தரத்தினானோ?
வான்தரு வள்ளல் வெள்ளை
    வள் உகிர் வயிர மார்பின்
ஊன்றலும், உதிர வெள்ளம்
    பரந்துளது, உலகம் எங்கும்.
152

உரை
   
 
6468.‘ஆயவன் தன்னை, மாயன்
    அந்தியின், அவன் பொன் கோயில்
வாயிலில், மணிக் கவான்மேல்,
    வயிர வாள் உகிரின், வானின்
மீ எழு குருதி பொங்க,
    வெயில் விரி வயிர மார்பு
தீ எழப் பிளந்து நீக்கி,
    தேவர்கள் இடுக்கண் தீர்த்தான். ‘
153

உரை
   
 
முன்பு இரணியனுக்கு அஞ்சியோடி ஒளிந்திருந்த தேவர்கள் அவன் இறந்த நிலையில் அங்கு வந்து குழுமி நரசிங்கத்தின் தோற்றத்தைக் கண்டு அஞ்சி நிற்றல்(6469-6470)

6469.‘முக்கணான் எண்கணானும்,
    முளரி ஆயிரக் கணானும்,
திக்கண் ஆம் தேவரோடு
    முனிவரும், பிறரும், தேடிப்
புக்க நாடு அறிகுறாமல்
    திரிகின்றார், புகுந்து மொய்த்தார்;
“எக்கணால் காண்டும் எந்தை
    உருவம்“ என்று இரங்கி நின்றார். ‘
154

உரை
   
 
6470.‘நோக்கினார் நோக்கினார் முன்,
    நோக்குறு முகமும் கையும்
ஆக்கையும் தாளும் ஆகி,
    எங்கணும் தானே ஆகி,
வாக்கினால் மனத்தினால் மற்று
    அறிவினால் அளக்க வாரா,
மேக்கு உயர் சீயம் தன்னைக்
    கண்டனர் வெருவு கின்றார். ‘
155

உரை
   
 
பிரமதேவன் நரசிங்கப்பிரானைத் துதித்தல் (6471-6475)

6471.‘பல்லொடு பல்லுக்கு எல்லை
    ஆயிரக் காதப் பத்தி,
சொல்லிய வதனம் கோடி
    கோடி மேல் விளங்கித் தோன்ற,
எல்லை இல் உருவிற்று ஆகி
    இருந்ததை எதிர நோக்கி,
அல்லி அம் கமலத்து அண்ணல்
    அவன் புகழ் விரிப்பதானான். ‘
156

உரை
   
 
6472.“‘தன்னைப் படைத்ததுவும்
    தானே எனும் தன்மை
பின்னைப் படைத்ததுவே
    காட்டும்; பெரும் பெருமை
உன்னைப் படைத்தாய் நீ
    என்றால், உயிர் படைப்பான்
என்னைப் படைத்தாய் நீ
    எனும் இதுவும் ஏத்து ஆமோ?
157

உரை
   
 
6473.“‘பல் ஆயிரங்கோடி
    அண்டம், பனிக் கடலுள்
நில்லாத மொக்குள் எனத்
    தோன்றுமால், நின்னுழையே;
எல்லா உருவமும் நீ
    என்றக்கால், இவ் உருவம்
வல்லே குறித்தால்,
    வரம்பு இன்மை வாராதோ?
158

உரை
   
 
6474.“‘பேரை ஒரு பொருட்கே
    பல் வகையால் பேர்த்து எண்ணும்
தாரை நிலையை;
    தமியை; பிறர் இல்லை;
யாரைப் படைக்கின்றது?
    யாரை அளிக்கின்றது?
ஆரைத் துடைக்கின்றது?
    ஐயா! அறியேமால்.
159

உரை
   
 
6475.“‘நின்னுளே என்னை
    நிருமித்தாய்; நின் அருளால்,
என்னுளே, எப்பொருளும்
    யாவரையும் யான் ஈன்றேன்;
பின் இலேன்; முன் இலேன்;
    எந்தை பெருமானே!
பொன்னுளே தோன்றியது ஓர்
    பொன் கலனே போல்கின்றேன்.
160

உரை
   
 
நரசிங்கப்பிரான் சீற்றம் தணிந்து தேவர்கட்கு அபயம் அளித்தல் (6476-6477)

6476.‘என்று ஆங்கு இயம்பி இமையாத எண் கணனும்
வன்தாள் மழுவோனும் யாரும் வணங்கினார்;
நின்றார் இருமருங்கும்; நேமிப் பெருமானும்
ஒன்றாத சீற்றத்தை உள்ளே ஒடுக்கினான்.
161

உரை
   
 
திருமகளாகிய பெரிய பிராட்டியை நரசிங்கப்பிரான் அருகில் செல்லுமாறு தேவர்கள் வேண்டியனுப்ப, அப் பிராட்டியைச் சிங்கப்பிரான் அருெளாடு நோக்குதல் (6478-6479)

6477.“எஞ்சும், உலகு அனைத்தும்
    இப்பொழுதே “ என்று என்று,
நெஞ்சு நடுங்கும் நெடுந்
    தேவரை நோக்கி,
“அஞ்சன்மின் “ என்னா,
    அருள் சுரந்த நோக்கினான்,
கஞ்ச மலர் பழிக்கும்
    கை அபயம் காட்டினான்.
162

உரை
   
 
6478.‘பூவில் திருவை, அழகின் புனைகலத்தை,
யாவர்க்கும் செல்வத்தை, வீடு ஈனும் இன்பத்தை,
ஆவித் துணையை, அமுதின் பிறந்தாளை,
தேவர்க்கும் தம் மோயை, ஏவினார், பாற் செல்ல.
163

உரை
   
 
6479.‘செந் தாமரைப் பொகுட்டில்
    செம்மாந்து வீற்றிருக்கும்
நந்தா விளக்கை,
    நறுந்தாள் இளங் கொழுந்தை,
முந்தா உலகும்
    உயிரும் முறை முறையே
தந்தாளை நோக்கினான்,
    தன் ஒப்பு ஒன்று இல்லாதான்.
164

உரை
   
 
நரசிங்கப்பிரான் தன்பால் அன்புடைய பிரகலாதனை நோக்கி அருள் செய்தல் (6480-6483)

6480.‘தீது இலா ஆக உலகு ஈன்ற தயெ்வத்தைக்
காதலால் நோக்கினான்; கண்ட முனிக் கணங்கள்
ஓதினார் சீர்த்தி; உயர்ந்த பரஞ்சுடரும்
நோதல் ஆங்கு இல்லாத அன்பனையே நோக்கினான்.
165

உரை
   
 
6481.“‘உந்தையை உன்முன்னே
    கொன்று, உடலைப் பிளந்து அளைய,
சிந்தை தளராது,
    அறம் பிழையாச் செய்கையாய்!
அந்தம் இலா அன்பு என்மேல்
    வைத்தாய்! அளியத்தாய்!
எந்தை! இனி இதற்குக்
    கைம்மாறு யாது? ‘‘ என்றான்
166

உரை
   
 
6482.“‘அயிரா இமைப்பினை ஓர்
    ஆயிரம் கூறு இட்ட
செயிரின் ஒரு பொழுதின்
    உந்தையை யான் சீறி,
உயிர் நேடுவேன் போல்,
    உடல் அளையக், கண்டும்
செயிர் சேரா உள்ளத்தாய்க்கு,
    என் இனியான் செய்கேனே?
167

உரை
   
 
6483.“‘கொல்லேன், இனி உன்
    குலத்தோரை, குற்றங்கள்
எல்லை இலாதன
    செய்தாரே என்றாலும்;
நல்லேன், உனக்கு; என்னை
    நாணாமல் நான் செய்வது
ஒல்லை உளதேல்,
    இயம்புதியால் ‘‘ என்று உரைத்தான்.
168

உரை
   
 
பிரகலாதன் அன்பே பெரும்பேறென வேண்டுதல்

6484.“‘முன்பு பெறப் பெற்ற பேறோ முடிவு இல்லை;
பின்பு பெறும் பேறும் உண்டோ? பெறுவேனேல்
என்பு பெறாத இழிபிறவி எய்திடினும்
அன்பு பெறும் பேறு அடியேற்கு அருள் “ என்றான்.
169

உரை
   
 
நரசிங்கப்பிரான் அருள்புரிதல் (6485-6488)

6485.‘அன்னானை நோக்கி அருள் சுரந்த நெஞ்சினன் ஆய்
“என் ஆனை வல்லன் ” என மகிழ்ந்த பேர் ஈசன்
“முன் ஆன பூதங்கள் யாவையும் முற்றிடினும்
உன் நாள் உலவாய் நீ என்போல் உளை “ என்றான்.
170

உரை
   
 
6486.“‘மின்னைத் தொழு வளைத்தது அன்ன மிளிர் ஒளியாய்!
முன்னைத் தொழும்புக்கே ஆம் அன்றோ மூ உலகும்?
என்னைத் தொழுது ஏத்தி எய்தும் பயன் எய்தி
உன்னைத் தொழுது ஏத்தி உய்க உலகு எல்லாம்.
171

உரை
   
 
6487.“‘ஏனவர்க்கு வேண்டின்,
    எளிது ஒன்றோ? எற்கு அன்பர்
ஆனவர்கள் எல்லாம்
    நினக்கு அன்பர் ஆயினார்;
தானவர்க்கு வேந்தன் நீ
    என்னும் தரத்தாயோ?
வானவர்க்கும் நீயே
    இறை - தொல்மறை வல்லோய்!
172

உரை
   
 
6488.“‘நல் அறமும், மெய்ம்மையும்,
    நான்மறையும், நல் அருளும்,
எல்லை இலா ஞானமும்,
    ஈறு இலா எப்பொருளும்,
தொல்லை சால் எண்குணனும்,
    நின் சொல் தொழில் செய்க;
நல்ல உரு ஒளியாய்,
    நாளும் வளர்க நீ.
173

உரை
   
 
நரசிங்கப்பிரான் தேவர்களை நோக்கிப் பிரகலாதனுக்கு முடிசூட்டுவதற்கு ஆவன செய்யுமாறு பணித்தல்

6489.‘என்று வரம் அருளி எவ் உலகும் கை கூப்ப
முன்றில் முரசம் முழங்க முடி சூட்ட
“நின்ற அமரர் அனைவீரும் நேர்ந்து இவனுக்கு
ஒன்று பெருமை உரிமை புரிக “ என்றான்.
174

உரை
   
 
பிரகலாதன் முடிசூட்டப் பெறுதல்

6490.‘தே மன் உரிமை புரிய திசை முகத்தோன்
ஓமம் இயற்ற உடையான் முடி சூட்ட
கோ மன்னவன் ஆகி மூ உலகும் கைக் கொண்டான்;
நாம மறை ஓதாது ஓதி நனி உணர்ந்தான்.
175

உரை
   
 
வீடணன் இராவணனை நோக்கிக் கூறிய முடிப்புரை

6491.“‘ஈது ஆகும், முன் நிகழ்ந்தது;
    எம் பெருமான்! என் மாற்றம்
யாதானும் ஆக
    நினையாது, இகழ்தியேல்,
தீது ஆய் விளைதல் நனி
    திண்ணம் ‘‘ எனச் செப்பினான்,
மேதாவிகட்கு எல்லாம்
    மேலாய மேன்மையான்.
176

உரை