வடதிசை வாயிலில் நின்று இராவணனை எதிர்நோக்கியிருந்து அவனைக் காணாத இராமன், தான் கருதியதனை வீடணனுக்கு எடுத்துரைத்தல்

7101.வள்ளலும் விரைவின் எய்தி,
    வடதிசை வாயில் முற்றி,
வெள்ளம் ஓர் ஏழு பத்துக்
    கணித்த வெஞ் சேனையோடும்,
கள்ளனை வரவு நோக்கி
    நின்றனன், காண்கிலாதான்,
‘ஒள்ளியது உணர்ந்தேன் ‘என்னா,
    வீடணற்கு உரைப்பது ஆனான்.
1

உரை
   
 
7102.‘தூதுவன் ஒருவன் தன்னை
    இவ்வழி விரைவில் தூண்டி,
“மாதினை விடுதியோ? “ என்று
    உணர்த்தவே, மறுக்கும் ஆகின்,
காதுதல் கடன் என்று உள்ளம்
    கருதியது, அறனும் அஃதே;
நீதியும் அஃதே ‘என்றான்
    கருணையின் நிலையம் அன்னான்.
2

உரை
   
 
இராமனது உரை கேட்ட வீடணனும் சுக்கிரீவனும் இலக்குவனும் தத்தம் கருத்தினைத் தரெிவித்தல்

7103.அரக்கர் கோன் அதனைக் கேட்டான்,
    ‘அழகிற்றே யாகும் ‘என்றான்;
குரங்கு இனத்து இறைவன் நின்றான்,
    ‘கொற்றவற்கு உற்றது ‘என்றான்;
‘இரக்கமது இழுக்கம் ‘என்றான்,
    இளையவன்; ‘இனி, நாம் அம்பு
துரக்குவது அல்லால், வேறு ஓர்
    சொல் உண்டோ? ‘என்னச் சொன்னான்.
3

உரை
   
 
இராவணன்பால் தூதனுப்பிச் சமாதானம் செய்து கொள்ளுதல் கூடாது என இலக்குவன் எடுத்துரைத்தல் (7104-7107)

7104.‘தேசியைச் சிறையில் வைத்தான்;
    தேவரை இடுக்கண் செய்தான்;
பூசுரர்க்கு அலக்கண் ஈந்தான்;
    மன்னுயிர் புடைத்துத் தின்றான்;
ஆசையின் அளவும், எல்லா
    உலகமும் தானே ஆள்வான்,
வாசவன் திருவும் கொண்டான்;
    வழி அலா வழிமேல் செல்வான்.
4

உரை
   
 
7105.‘வாழியாய்! நின்னை அன்று
    வரம்பு அறு துயரின் வைக,
சூழ்வு இலா மாயம் செய்து, உன்
    தேவியைப் பிரிவு சூழ்ந்தான்;
ஏழைபால் இரக்கம் நோக்கி,
    ஒரு தனி இகல் மேல் சென்ற,
ஊழி காண்கிற்கும் வாழ்நாள்
    உந்தையை உயிர் பண்டு உண்டான்.
5

உரை
   
 
7106.‘அன்னவன் தனக்கு, மாதை
    விடில், உயிர் அருளுவாயேல்,
“என்னுடை நாமம் நிற்கும்
    அளவு எலாம் இலங்கை மூதூர்
மன்னவன் நீயே ‘‘ என்று,
    வந்து அடைந்தவற்கு வாயால்
சொன்ன சொல் என் ஆம்? முன்னம்
    சூளுறவு என் ஆம்? தோன்றால்!
6

உரை
   
 
7107.‘அறம் தரு தவத்தை ஆயும்
    அருளினால், அவற்றை முற்றும்
மறந்தனை எனினும், மற்று இவ்
    இலங்கையின் வளமை நோக்கி,
“இறந்து இது போதல் தீது “ என்று
    இரங்கினை எனினும், எண்ணின்,
சிறந்தது போரே ‘என்றான்;
    சேவகன் முறுவல் செய்தான்.
7

உரை
   
 
நீ கூறுவதே முடிவு ஆயினும் தூதனை அனுப்பி நமது கருத்தினைத் தரெிவித்தல் நீதியாகும் என இராமன் இலக்குவனுக்குக் கூறுதல்

7108.‘அயர்த்திலன்; முடிவும் அஃதே;
    ஆயினும் அறிஞர் ஆய்ந்த
நயத் துறை நூலின் நீதி
    நாம் துறந்து அமைதல் நன்றோ?
புயத்துறை வலியரேனும்,
    பொறையொடும் பொருந்தி வாழ்தல்
சயத் துறை; அறனும் அஃதே
    ‘என்று இவை சமையச் சொன்னான்.
8

உரை
   
 
அங்கதனைத் தூதனுப்புதல் நலம் என இராமன் வீடணன் முதலியோரிடத்துத் தரெிவித்தல்

7109.‘மாருதி இன்னும் செல்லின்,
    மற்று இவன் அன்றி வந்து
சாருநர் வலியோர் இல்லை
    என்பது சாரும் அன்றே?
ஆர், இனி ஏகத் தக்கார்?
    அங்கதன் அமையும்; ஒன்னார்
வீரமே விளைப்பரேனும்,
    தீது இன்றி, மீள வல்லான்.
9

உரை
   
 
யாவரும் நன்று என இசைய இராமன் அங்கதனை நோக்கி தூது சென்று வருக எனக்கூற, அவன் பெருமகிழ்ச்சியுறுதல்

7110.‘நன்று ‘என, அவனைக் கூவி,
    ‘நம்பி! நீ நண்ணலார்பால்
சென்று, இரண்டு உரையின் ஒன்றைச்
    செப்பினை தருதி ‘என்றான்;
அன்று அவன் அருளப் பெற்ற
    ஆண்தகை அலங்கல் பொன்தோள்
குன்றினும் உயர்ந்தது என்றால்,
    மன நிலை கூறலாமே?
10

உரை
   
 
இராவணனிடம் யான் கூறவேண்டுவது யாது ‘என வினவிய அங்கதனுக்கு இராமன் அவற்றைத் தொகுத்துரைத்தல் (7111-7112)

7111.‘என் அவற்கு உரைப்பது? ‘என்ன,
    ‘ஏந்திழையாளை விட்டுத்
தன் உயிர் பெறுதல் நன்றோ?
    அன்று எனின், தலைகள் பத்தும்
சின்ன பின்னங்கள் செய்ய,
    செருக்களம் சேர்தல் நன்றோ?
சொன்னவை இரண்டின் ஒன்றே
    துணிக ‘‘ எனச் சொல்லிடு ‘என்றான
11

உரை
   
 
7112.‘அறத் துறை அன்று, வீரர்க்கு
    அழகும் அன்று, ஆண்மை அன்று,
மறத் துறை அன்று, சேமம்
    மறைந்து உறைந்து ஒதுங்கி வாழ்தல்;
நிறத்து உற வாளி கோத்து
    நேர் வந்து நிற்கும் ஆகின்
புறத்து உற எதிரே வந்து
    போர்தரப் புகல்தி ‘என்றான்.
12

உரை
   
 
அங்கதன் இராவணன்பால் தூதனாக விரைந்து சேறல்

7113.பார்மிசை வணங்கிச் சீயம்
    விண்மிசைப் படர்வதே போல்,
வீரன் வெஞ் சிலையில் கோத்த
    அம்பு என, விசையின் போனான்,
“மாருதி அல்லன், ஆகின்,
    நீ ‘எனும் மாற்றம் பெற்றேன்;
யார் இனி என்னோடு ஒப்பார்? ‘
    என்பதோர் இன்பம் உற்றான்.
13

உரை
   
 
கடத்தற்கரிய இலங்கை மதிலைக் கடந்த அங்கதன் இராவணனது இருக்கையினை அடைதல்

7114.அயில் கடந்து எரிய நோக்கும்
    அரக்கரைக் கடக்க, ஆழித்
துயில் கடந்து அயோத்தி வந்தான்
    சொல் கடவாத தூதன்,
வெயில் கடந்திலாத காவல்,
    மேருவின் மேலும் நீண்ட
எயில் கடந்து, இலங்கை எய்தி,
    அரக்கனது இருக்கை புக்கான்.
14

உரை
   
 
இராவணனைக் காணுதல்

7115.அழுகின்ற கண்ணர் ஆகி,
    ‘அநுமன்கொல்? ‘என்ன அஞ்சித்
தொழுகின்ற சுற்றம் சுற்ற,
    சொல்லிய துறைகள் தோறும்
மொழிகின்ற வீரர் வார்த்தை
    முகம்தொறும் செவியின் மூழ்க,
எழுகின்ற சேனை நோக்கி,
    இயைந்து இருந்தானைக் கண்டான்.
15

உரை
   
 
இராவணனது ஆற்றலைக் கண்டு வியந்து நிற்றல்

7116.‘கல் உண்டு; மரம் உண்டு; ஏழைக்
    கடல் ஒன்றும் கடந்தேம் என்னும்
சொல் உண்டே; இவனை வெல்லத்
    தோற்றும் ஓர் கூற்றும் உண்டே?
எல் உண்ட படை கைக்கொண்டான்
    எதிர் உண்டே? இராமன் கையில்
வில் உண்டே உண்டு ‘என்று எண்ணி,
    ஆற்றவும் வியந்து நின்றான்.
16

உரை
   
 
இவனை வெல்லுதல் இராமனாலன்றி வேறொருவராலும் இயலாது ‘எனல்

7117.‘இன்று இவன் தன்னை எய்த
    நோக்கினேற்கு, எதிர்ந்த போரில்
வென்ற என் தாதை மார்பில்
    வில்லின்மேல் கணை ஒன்று ஏவிக்
கொன்றவன் தானே வந்தான் என்று
    உடன் குறிப்பின் அல்லால்
ஒன்று இவன் தன்னைச்
    செய்யவல்லரோ, உயிர்க்கு நல்லார்?
17

உரை
   
 
இராவணனது மகுடமணியைப் பறித்த தன் சிறிய தந்தையாகிய சுக்கிரீவனது ஆற்றலை வியத்தல்

7118.‘அணி பறித்து அழகு செய்யும்
    அணங்கின் மேல் வைத்த ஆசைப்
பிணி பறித்து, இவனை யாவர்
    முடிப்பவர் படிக் கண்? பேழ்வாய்ப்
பணி பறித்து எழுந்த மானக்
    கலுழனின், இவனைப் பற்றி
மணி பறித்து எழுந்த எந்தை
    யாரினும் வலியன் ‘அன்றே.
18

உரை
   
 
அங்கதன் இராவணனருகிற் சென்று நிற்றல்

7119.நெடுந்தகை விடுத்த தூதன்
    இவை இவை நிரம்ப எண்ணி,
கடுங் கனல் விடமும் கூற்றும்
    கலந்து கால் கரமும் காட்டி,
விடும் சுடர் மகுடம் மின்ன,
    விரிகடல் இருந்தது அன்ன
கொடுந் தொழில் மடங்கல் அன்னான்
    எதிர் சென்று குறுகி நின்றான்.
19

உரை
   
 
இராவணன் அங்கதனை நோக்கி ‘நீ யார் ‘என வினவுதல்

7120.நின்றவன் தன்னை, அன்னான்
    நெருப்பு எழ நிமிரப் பார்த்து, ‘இங்கு
இன்று, இவண் வந்த நீ யார்?
    எய்திய கருமம் என்னை?
கொன்று இவர் தின்னா முன்னம்
    கூறுதி தரெிய ‘என்றான்;
வன்திறல் வாலி சேயும்
    வாள் எயிறு இலங்க நக்கான்.
20

உரை
   
 
அங்கதன் தன்னை இராமதூதன் என அறிவித்தல்

7121.‘பூத நாயகன், நீர் சூழ்ந்த
    புவிக்கு நாயகன், அப் பூமேல்
சீதை நாயகன், வேறு உள்ள
    தயெ்வ நாயகன், நீ செப்பும்
வேத நாயகன், மேல் நின்ற
    விதிக்கு நாயகன். தான் விட்ட
தூதன் யான்; பணித்த மாற்றம்
    சொல்லிய வந்தேன் ‘என்றான்.
21

உரை
   
 
இராவணன் இராமனைக் குறித்து இகழ்ந்துரைத்தல்

7122.‘அரன் கொலாம்? அரிகொலாம்? மற்று
    அயன்கொலாம்? என்பார் அன்றி,
குரங்கு எலாம் கூட்டி, வேலைக்
    குட்டத்தைச் சேது கட்டி,
இரங்குவான் ஆகின், ‘இன்னம்
    அறிதி ‘என்று உன்னை ஏவும்
நரன் கொலாம் உலக நாதன்? ‘
    என்று கொண்டு அரக்கன் நக்கான்.
22

உரை
   
 
அங்கதனை நோக்கி ‘மனிதனுக்குத் தூதனாகிய நீ யாவன் ‘என இராவணன் வினவுதல்

7123.‘கங்கையும் பிறையும் சூடும்
    கண்ணுதல், கரத்து நேமி
சங்கமும் தரித்த மால், மற்று
    இந்நகர் தன்னைச் சாரார்;
அங்கு அவர் தம்மையன்றி,
    மனிசனுக்கு ஆக, அஞ்சாது,
இங்கு வந்து இதனைச் சொன்ன
    தூதன் நீ யாவன்? ‘என்றான்.
23

உரை
   
 
அங்கதன், தன்னை இன்னான் எனத் தரெிவித்தல்

7124.‘இந்திரன் செம்மல், பண்டு, ஓர்
    இராவணன் என்பான் தன்னைச்
சுந்தரத் தோள்கேளாடும்
    வால் இடைத் தூங்கச் சுற்றி,
சிந்துரக் கிரிகள் தாவித்
    திரிந்தனன், தேவர் உண்ண
மந்தரக் கிரியால் வேலை
    கலக்கினான், மைந்தன் ‘என்றான்.
24

உரை
   
 
சூழ்ச்சியில் வல்ல இராவணன் அங்கதனை அன்புரைகளால் வேறுபடுத்தித் தன்னுடன் சேர்த்துக்கொள்ள முயலுதல் (7125-7127)

7125.‘உந்தை என் துணைவன் அன்றே?
    ஓங்கு அறம் சான்றும் உண்டால்;
நிந்தனை இதன்மேல் உண்டே,
    நீ அவன் தூதன் ஆதல்?
தந்தனென் நினக்கு யானே
    வானரத் தலைமை; தாழா
வந்தனை; நன்று செய்தாய்,
    என்னுடை மைந்த! ‘என்றான்.
25

உரை
   
 
7126.“‘தாதையைக் கொன்றான் பின்னே
    தலை சுமந்து, இருகை நாற்றி,
பேதையன் என்ன வாழ்ந்தாய் ‘‘
    என்பது ஓர் பிழையும் தீர்ந்தாய்;
சீதையைப் பெற்றேன்; உன்னைச்
    சிறுவனுமாகப் பெற்றேன்;
ஏது எனக்கு அரியது? ‘என்றான்
    இறுதியின் எல்லை கண்டான்.
26

உரை
   
 
7127.‘அந் நரர் இன்று, நாளை,
    அழிவதற்கு ஐயம் இல்லை;
உன் அரசு உனக்குத் தந்தேன்;
    ஆளுதி, ஊழி காலம்;
பொன் அரி சுமந்த பீடத்து,
    இமையவர் போற்றி செய்ய,
மன்னவன் ஆக, யானே
    சூட்டுவென் மகுடம் ‘என்றான்.
27

உரை
   
 
அங்கதன் நகைத்து இராவணன் மொழிகளை மறுத்து இகழ்தல் (7128-7129)

7128.அங்கதன், அதனைக் கேளா,
    அங்கையோடு அங்கை தாக்கி,
துங்க வன்தோளும் மார்பும்
    இலங்கையும் துளங்க, நக்கான்;
“‘இங்கு நின்றார்கட்கு எல்லாம்
    இறுதியே “ என்பது உன்னி,
நுங்கள்பால் நின்றும் எம்பால்
    போந்தனன், நும்பி ‘என்றான்.
28

உரை
   
 
7129.‘வாய் தரத்தக்க சொல்லி,
    என்னை உன் வசம் செய்வாயேல்,
ஆய்தரத் தக்கது அன்றோ,
    தூது வந்து அரசது ஆள்கை?
நீ தரக் கொள்வேன் யானே?
    இதற்கு இனி நிகர்வேறு எண்ணின்,
நாய் தரக் கொள்ளும் சீயம்,
    நல் அரசு! ‘என்று நக்கான்.
29

உரை
   
 
நின்னைக் கொன்றொழிப்பேன் ‘என அங்கதனை வெகுண்ட இராவணன் ‘நீ வந்த காரியம் கூறுக ‘எனல்

7130.‘அடுவனே ‘என்னப் பொங்கி
    ஓங்கிய அரக்கன், அந்தோ!
தொடுவனே, குரங்கைச் சீறிச்
    சுடர்ப் படை? ‘என்று தோன்ற,
‘நடுவனே செய்யத்தக்க
    நாள் உலந்தாற்குத் தூத!
படுவதே துணிந்தாய் ஆயின்,
    வந்தது பகர்தி ‘என்றான்.
30

உரை
   
 
அங்கதன் இராமபிரான் கூறியவற்றை இராவணனுக்கு எடுத்துரைத்தல்

7131.‘கூவி இன்று என்னை, நீ போய்,
    “தன்குலம் முழுதும் கொல்லும்
பாவியை, அமருக்கு அஞ்சி
    அரண் புக்கு பதுங்கினானை,
தேவியை விடுக! அன்றேல்,
    செருக்களத்து எதிர்ந்து தன்கண்
ஆவியை விடுக! ‘‘ என்றான்,
    அருள் இனம் விடுகிலாதான்.
31

உரை
   
 
7132.“‘பருந்து உணப் பாட்டி யாக்கை
    படுத்த நாள், படைஞரோடும்
மருந்தினும் இனிய மாமன்
    மடிந்த நாள், வனத்துள் வைகி
இருந்துழி வந்த தங்கை
    இரும் செவி முலையும் மூக்கும்
அரிந்த நாள், வந்திலாதான்
    இனிச் செய்யும் ஆண்மை உண்டோ?
32

உரை
   
 
7133.“‘கிளையொடும் படைஞரோடும்.
    கேடு இலா உயிர்கட்கு எல்லாம்
களை அன தம்பிமாரை
    வேரொடும் களையக் கண்டும்,
இளையவன் பிரிய மாயம்
    இயற்றி, ஆயிழையை வௌவும்
வளை எயிற்று அரக்கன், வெம்போர்க்கு,
    இனி எதிர் வருவது உண்டோ?
33

உரை
   
 
7134.“‘ஏந்திழை தன்னைக் கண்ணுற்று,
    எதிர்ந்தவர் தம்மை எற்றி,
சாந்து எனப் புதல்வன் தன்னைத்
    தரை இடைத் தேய்த்து, தன் ஊர்
காந்து எரிமடுத்து, தானும்
    காணவே, கடலைத் தாவிப்
போந்த பின், வந்திலாதான்
    இனிப் பொரும் போரும் உண்டோ?
34

உரை
   
 
7135.“‘உடைக் குலத்து ஒற்றர் தம்பால்
    உயிர் கொடுத்து உள்ளக் கள்ளம்
துடைத்துழி, வருணன் வந்து
    தொழுதுழி, தொழாத கொற்றக்
குடைத் தொழில் தம்பி கொள்ளக்
    கொடுத்துழி, வேலை கோலி
அடைத்துழி வந்திலாதான், அமர்க்கு
    இனி வருவது உண்டோ?
35

உரை
   
 
7136.“‘மறிப்பு உண்ட தேவர் காண,
    மணி வரைத் தோளின் வைகும்
நெறிப் புண்டரீகம் அன்ன
    முகத்தியர் முன்னே, நென்னல்,
பொறிப் புண்டரீகம் போலும்
    ஒருவனால், புனைந்த மோலி
பறிப்பு உண்டும், வந்திலாதான்
    இனிப் பொரும் பான்மை உண்டோ?
36

உரை
   
 
அங்கதன் இராவணனை நோக்கி ‘சீதையைச் சிறைவீடு செய்தல் அல்லது போருக்குப் புறப்படுதல் இரண்டில் ஒன்றைச் செய்க ‘என முடிவாகக் கூறுதல்

7137.“‘என்று இவை இயம்பி வா “ என்று
    ஏவினன் என்னை; எண்ணி
ஒன்று உனக்கு உறுவது உன்னித்
    துணிந்து உரை; உறுதி பார்க்கின்,
துன்று இருங் குழலை விட்டுத்
    தொழுது வாழ்; சுற்றத்தோடும்
பொன்றுதி ஆயின், என்பின்,
    வாயிலில் புறப்படு ‘என்றான்.
37

உரை
   
 
நீ போருக்குப் புறப்படாது உன் ஊரில் பதுங்கியிருத்தல் பழி ‘என இராவணனது மனம் வருந்தச் சொல்லுதல்

7138.‘நீரிலே பட்ட, சூழ்ந்த
    நெருப்பிலே பட்ட, நீண்ட
பாரிலே பட்ட, வானப்
    பரப்பிலே பட்ட எல்லாம்,
போரிலே பட்டு வீழப் பொருத நீ,
    ஒளித்துப் புக்கு உன்
ஊரிலே பட்டாய் என்றால், பழி ‘
    என உளையச் சொன்னான்.
38

உரை
   
 
சினங்கொண்ட இராவணன் அங்கதனைப் பற்றுமாறு அரக்கர் நால்வரை ஏவுதல்

7139.சொற்ற வார்த்தையைக் கேட்டலும் தொல் உயிர்
முற்றும் உண்பது போலும் முனிவின் ஆன்
‘பற்றுமின் கடிதின்; நெடும் பார் மிசை
எற்றுமின் ‘என நால்வரை ஏவினான்.
39

உரை
   
 
அங்கதன் தன்னைப் பற்றிய அரக்கர் நால்வரையும் அவர்கள் தலை சிதறும்படி கோபுர வாயிலில் வீசி எறிந்துவிட்டு இலங்கை நகரத்தாரைப் புறத்தே ஓடி உய்யுமாறு சொல்லி மீளுதல் (7140-7141)

7140.ஏவினார் பிடித்தாரை எடுத்து எழத்
தாவினான் அவர் தம் தலை போய் அறக்
கூவினான் அவன் கோபுர வாயிலில்
தூவினான் துகைத்தான் இவை சொல்லினான்.
40

உரை
   
 
7141.‘ஏமம் சார எளியவர் யாவிரும்
தூமம் கால்வன வீரன் சுடுசரம்
வேம் மின் போல்வன வீழ்வதன் முன்னமே
போமின் போமின் புறத்து ‘என்று போயினான்.
41

உரை
   
 
அங்கதன் வான்வழியே வந்து இராமனையடைந்து அவன் திருவடிகளை வணங்குதல்

7142.அந்தரத்திடை ஆர்த்து எழுந்தான் அவர்
சிந்து அரத்தம் துதைந்து எழும் செச்சையான்
இந்து விண் நின்று இழிந்து உளதாம் என
வந்து வீரன் அடியின் வணங்கினான்.
42

உரை
   
 
இராவணன் கருத்து இன்னது என இராமனுக்குத் தரெிவித்தல்

7143.உற்றபோது ‘அவன் உள்ளக் கருத்து எலாம் ‘
கொற்ற வீரன் ‘உணர்த்து ‘என்று கூறலும்
‘முற்ற ஓதி என்? மூர்க்கன் முடித் தலை
அற்றபோது அன்றி ஆசை அறான் ‘என்றான்.
43

உரை