படலத் தோற்றுவாய்

7762.அவ்வழி, கருணன் செய்த
    பேர் எழில் ஆண்மை எல்லாம்
செவ்வழி உணர்வு தோன்றச்
    செப்பினம்; சிறுமை தீரா
வெவ்வழி மாயை ஒன்று,
    வேறு இருந்து எண்ணி, வேட்கை,
இவ்வழி இலங்கை வேந்தன்
    இயற்றியது இயம்பல் உற்றாம்.
1

உரை
   
 
மகோதரனிடம் இராவணன் சீதையை அடையும் உபாயம் கேட்டல்

7763.மாதிரம் கடந்த தோளான்,
    மந்திர இருக்கை வந்த
மோதரன் என்னும் நாமத்து
    ஒருவனை முறையின் நோக்கி,
‘சீதையை எய்தி, உள்ளம்
    சிறுமையின் தீரும் செய்கை
யாது? எனக்கு உணர்த்தி, இன்று, என்
    இன்னுயிர் ஈதி ‘என்றான்.
2

உரை
   
 
மருத்தனைச் சனகனாக உருமாற்றிச் சிறைப்படுத்திக் கொணர்ந்து காட்டினால் சீதை நின் விருப்பத்திற்கிணங்குவாள் ‘என மகோதரன் கூறுதல்

7764.‘உணர்த்துவென், இன்று நன்று
    ஓர் உபாயத்தின் உறுதி மாயை
புணர்த்துவென், சீதை தானே
    புணர்வது ஓர் வினையம் போற்றி,
கணத்துவன் சனகன் தன்னைக்
    கட்டினன் கொணர்ந்து காட்ட
மண தொழில் புரியும் அன்றே?
    மருத்தனை உருவம் மாற்றி ‘
3

உரை
   
 
இராவணன், மகோதரனைப் பாராட்டி மாயாசனகனைச் சோலைக்குக் கொணர்க எனப் பணித்துச் சீதையிருக்கும் இடத்தை அடைதல் (7765-7767)

7765.என அவன் உரைத்தலோடும்,
    எழுந்து மார்பு இறுகப் புல்லி,
‘அனையவன் தன்னைக் கொண்டு
    ஆங்கு அணுகுதி, அன்ப! ‘என்னா,
புனை மலர்ச் சரளச் சோலை
    நோக்கினன், எழுந்து போனான்;
வினைகளைக் கற்பின் வென்ற
    விளக்கினை வெருவல் காண்பான்.
4

உரை
   
 
7766.மின் ஒளிர் மகுட கோடி
    வெயில் ஒளி விரித்து வீச,
துன் இருள் இரிந்து தோற்ப,
    சுடர்மணித் தோளில் தோன்றும்
பொன் அரி மாலை நீல
    மலையின் வீழ் அருவி பொற்ப,
நல் நெடுங்களி மால் யானை
    நாணுற, நடந்து வந்தான்.
5

உரை
   
 
7767.‘விளக்கு ஒரு விளக்கம் தாங்கி,
    மின் அணிந்து, அரவு சுற்றி,
இளைப்புறு மருங்கு நோவ,
    முலைசுமந்து இயங்கும் ‘என்ன,
முளைப் பிறை நெற்றி வான
    மடந்தையர், முன்னும் பின்னும்,
வளைத்தனர் வந்து சூழ,
    வந்திகர் வாழ்த்த, வந்தான்.
6

உரை
   
 
இராவணன் சீதையைக் காணுதல்

7768.பண்களால் கிளவி செய்து,
    பவளத்தால் அதரம் ஆக்கி,
பெண்கள் ஆனார்க்குள் நல்ல
    உறுப்பு எலாம் பெருக்கி ஈட்டி
எண்களால் அளவா மானக்
    குணம் தொகுத்து இயற்றினாளை,
கண்களால் அரக்கன் கண்டான்,
    அவளை ஓர் கலக்கம் காண்பான்.
7

உரை
   
 
இராவணன் ஏவலரால் அங்குக் கொணர்ந்து இடப்பட்ட பொன்னாசனத்தில் அமர்ந்து சீதையை நோக்கித் தன்னிலையினை எடுத்துரைத்தல் (7769-7777)

7769.இட்டது ஓர் இரண பீடத்து,
    அமரரை இருக்கை நின்றும்
கட்ட தோள் கானம் சுற்ற,
    கழல் ஒன்று கவானின் தோன்ற,
வட்ட வெண் கவிகை ஓங்க,
    சாமரை மருங்கு வீச,
தொட்டது ஓர் சுரிகையாளன்
    இருந்தனன், இனைய சொன்னான்.
8

உரை
   
 
7770.‘என்றுதான், அடியனேனுக்கு
    இரங்குவது? இந்து என்பான்
என்றுதான், இரவியோடும்
    வேற்றுமை தரெிவது என்பால்?
என்றுதான், அநங்க வாளிக்கு
    இலக்கு அலாது இருக்கல் ஆவது?
என்று, தான் உற்றது எல்லாம்
    இயம்புவான் எடுத்துக் கொண்டான்
9

உரை
   
 
7771.‘வஞ்சனேன் எனக்கு நானே,
    மாதரார் வடிவு கொண்ட
நஞ்சுதோய் அமுதம் உண்பான்
    நச்சினேன்; நாளும் தேய்ந்த;
நெஞ்சு நொந்து உம்மை நாயேன்
    நினைப்பு விட்டு, ஆவி நீக்க
அஞ்சினேன்; அடியனேன் நும்
    அடைக்கலம், அமுதின் வந்தீர்!
10

உரை
   
 
7772.‘தோற்பித்தீர்; மதிக்கு மேனி
    சுடுவித்தீர்; தனெ்றல் தூற்ற
வேர்ப்பித்தீர்; வயிரத் தோளை
    மெலிவித்தீர்; வேனில் வேளை
ஆர்ப்பித்தீர்; என்னை இன்னல்
    அறிவித்தீர்; அமரர் அச்சம்
தீர்ப்பித்தீர்; இன்னும் என் என்
    செய்வித்துத் தீர்திர் அம்மா!
11

உரை
   
 
7773.‘பெண் எலாம் நீரே ஆக்கி,
    பேர் எலாம் உமதே ஆக்கி,
கண் எலாம் நும்கண் ஆக்கி,
    காம வேள் என்னும் நாமத்து
அண்ணல் எய்வானும் ஆக்கி,
    ஐங்கணை அரியத் தக்க
புண் எலாம் எனக்கே ஆக்கி,
    விபரீதம் புணர்த்து விட்டீர்.
12

உரை
   
 
7774.‘ஈசனே முதலா மற்றை
    மானுடர் இறுதி யாரும்
கூச, மூன்று உலகும் காக்கும்
    கொற்றத்தேன்; வீரக் கோட்டி
பேசுவார் ஒருவர்க்கு ஆவி
    தோற்றிலென்; பெண்பால் வைத்த
ஆசை நோய் கொன்றது என்றால்,
    ஆண்மைதான் மாசு உணாதோ?
13

உரை
   
 
7775.‘நோயினை நுகரவேயும், நுணங்கி
    நின்று உணங்கும் ஆவி,
நாய் உயிர் ஆகும் அன்றே,
    நாள் பல கழித்த காலை?
பாயிரம் உணர்ந்த நூலோர்
    காமத்துப் பகுத்த பத்தி
ஆயிரம் அல்ல போன
    ‘ஐயிரண்டு ‘என்பர் பொய்யே.
14

உரை
   
 
7776.‘அறம் தரும் செல்வம் அன்னீர்!
    அமிழ்தினும் இனியீர்! என்னைப்
பிறத்திலன் ஆக்க வந்தீர்;
    பேர் எழில் மானம் கொல்ல,
மறந்தன பெரிய, போன, வரம்
    எனும் மருந்து தன்னால்,
இறந்து இறந்து உய்கின்றேன் யான்;
    யார், இது தரெியும் ஈட்டார்?
15

உரை
   
 
7777.‘அந்தரம் உணரின், மேல்நாள்,
    அகலிகை என்பாள், காதல்
இந்திரன் உணர்த்த, நல்கி
    எய்தினாள், இழுக்கு உற்றாேளா?
மந்திரம் இல்லை, வேறு ஓர்
    மருந்து இல்லை, மையல் நோய்க்குச்
சுந்தரக் குமுதச் செவ்வாய்
    அமுது அலால்; அமுதச் சொல்லீர்! ‘
16

உரை
   
 
இராவணன், சீதையின்முன் நிலத்தில் வீழ்ந்து வணங்குதல்

7778.என்று உரைத்து, எழுந்து சென்று,
    அங்கு, இருபது என்று உரைக்கும் நீலக்
குன்று உரைத்தாலும் நேராக்
    குவவுத் தோள் நிலத்தைக் கூட,
மின்திரைத்து அருக்கன் தன்னை
    விரித்து மீன் தொகுத்தது ஒன்று
நின்று இமைக்கின்றது அன்ன
    முடி படி நெடிதின் வைத்தான்.
17

உரை
   
 
கலக்கமுற்ற சீதை தூர்த்தனாகிய இராவணனை நோக்காது அங்குக் கீழே கிடந்த துரும்பைப் பார்த்த வண்ணம் தன்னுள்ளத் திண்மையினை இராவணனுக்கு அறிவுறுத்தல் (7779-7785)

7779.வல்லியம் மருங்கு கண்ட
    மான் என மறுக்கம் உற்று,
மெல்லியல் ஆக்கை முற்றும்
    நடுங்கினள், விம்மு கின்றாள்,
‘கொல்லிய வரினும் உள்ளம்
    கூறுவென், தரெிய ‘என்னா,
புல்லிய கிடந்தது ஒன்றை
    நோக்கினாள், புகல்வ தானாள்
18

உரை
   
 
7780.“பழி இது; பாவம் “ என்று
    பார்க்கிலை; “பகரத் தக்க
மொழி இவை அல்ல ‘‘ என்பது
    உணர்கிலை; முறைமை நோக்காய்;
கிழிகிலை நெஞ்சம்; வஞ்சக்
    கிளையொடும் இன்று காறும்
அழிகிலை என்றபோது, என் கற்பு
    என்னாம்? அறம்தான் என்னாம்?
19

உரை
   
 
7781.வானுள, மறத்தின் தோற்று
    உன் சொல்வழி வழுவா; மண்ணின்
ஊனுள, உடம்புக்கு எல்லாம்
    உயிருள; உணர்வும் உண்டால்;
தானுள, பத்துப் பேழ்வாய்
    தகாதன உரைக்க, தக்க
யானுளன் கேட்க என்றால்,
    என்சொல்லாய்? யாது செய்யாய்?
20

உரை
   
 
7782.‘வாசவன், மலரின் மேலான்,
    மழுவலான் மைந்தன், மற்று அக்
கேசவன் என்ன நின்ற
    தன்மையோர் தன்மை கண்டாய்,
‘பூசலின் எதிர்ந்தேன் ‘என்றாய்;
    போர்க்களம் புக்கபோது என்
ஆசையின் கனியைக் கண்ணின்
    கண்டிலை போலும், அஞ்சி.
21

உரை
   
 
7783.‘ஊண் இலா யாக்கை பேணி,
    உயர்புகழ் சூடாது, உன் முன்
நாணிலாது இருந்தேன் அல்லேன்;
    நவை அறு குணங்கள் என்னும்
பூணெலாம் பொறுத்த மேனிப்
    புண்ணிய மூர்த்தி தன்னைக்
காணலாம் இன்னும் என்னும்
    காதலால் இருந்தேன் கண்டாய்.
22

உரை
   
 
7784.‘சென்று சென்று அழியும் ஆவி
    திரிக்குமால் செருவில் செம்பொன்
குன்று நின்றனைய தம்பி
    புறக் கொடை காத்து நிற்ப,
கொன்று, நின் தலைகள் சிந்தி,
    அரக்கர்தம் குலத்தை முற்றும்
வென்று நின்றருளும் கோலம்
    காணிய கிடந்த, வேட்கை.
23

உரை
   
 
7785.‘எனக்கு உயிர் பிறிது ஒன்று உண்டு
    என்று எண்ணலை; இரக்கம் அல்லால்
தனக்கு உயிர் வேறு இன்றாகி,
    தாமரைக் கண்ணது ஆகி,
கனக் கருமேகம் ஒன்று
    கார்முகம் தாங்கி, யார்க்கும்
மனக்கு இனிது ஆகி, நிற்கும்
    அஃது அன்றி வரம்பு இலாதாய்!
24

உரை
   
 
சீதையின் சொற்கேட்டு வெகுண்ட இராவணன் இராமனைக் கொல்வதோடன்றி அயோத்தியிலுள்ளாரையும் மிதிலையிலுள்ளாரையும் பற்றிக் கொணருமாறு தான் அரக்க வீரர்களை ஏவியிருப்பதாகக் கூறி அச்சுறுத்தல் (7786-7789)

7786.என்றனள்; என்றலோடும்,
    எரி உகு கண்ணன், தன்னைக்
கொன்று அன மானம் தோன்ற,
    கூற்று எனச் சீற்றம் கொண்டான்,
‘வென்று எனை, இராமன் உன்னை
    மீட்ட பின், அவனோடு ஆவி
ஒன்று என வாழ்தி போல் ‘என்று,
    இடி உரும் ஒக்க நக்கான்.
25

உரை
   
 
7787.‘இனத்துளார் உலகத்து உள்ளார்,
    இமையவர் முதலினோர், என்
சினத்துளார் யாவர் தீர்ந்தார்?
    தயரதன் சிறுவன், தன்னைப்
புனத் துழாய் மாலையான் என்று
    உவக்கின்ற ஒருவன், புக்கு உன்
மனத்துளான் எனினும் கொல்வென்;
    வாழுதி, பின்னை மன்னோ!
26

உரை
   
 
7788.“வளைத்தன மதிலை, வேலை
    வகுத்தன வரம்பு, வாயால்
உளைத்தன குரங்கு பல்கால் ‘‘
    என்று அகம் உவந்தது உண்டேல்,
இளைத்த நுண்மருங்குல் நங்காய்!
    என் எதிர் எய்திற்று எல்லாம்
விளக்கு எதிர் வீழ்ந்த விட்டில்
    பான்மைய; வியக்க வேண்டா.
27

உரை
   
 
7789.‘கொற்ற வாள் அரக்கர் தம்மை,
    “அயோத்தியர் குலத்தை முற்றும்
பற்றி நீர் தருதிர்; அன்றேல்,
    பசுந்தலை கொணர்திர்; பாரித்து
உற்றது ஒன்று இயற்றுவீர் ‘‘
    என்று உந்தினேன்; உந்தை மேலும்,
வெற்றியர் தம்மைச் செல்லச்
    சொல்லினென், விரைவின் ‘என்றான்
28

உரை
   
 
வஞ்சனையால் தன்னைக் கவர்ந்த கொடியோனாகிய இராவணனது சொற் கேட்டுச் சீதை வருந்துதல்

7790.என்று அவன் உரைத்த காலை,
    ‘என்னை இம்மாயம் செய்தாற்கு
ஒன்றும் இங்கு அரியது இல்லை ‘
    என்பது ஓர் துணுக்கம் உந்த,
நின்றுநின்று உயிர்த்து நெஞ்சம்
    வெதும்பினாள், நெருப்பை மீளத்
தின்று தின்று உமிழ்கின்றாரின்,
    துயருக்கே சேக்கை ஆனாள்.
29

உரை
   
 
7791.‘இத்தலை இன்ன செய்த
    விதியினார், என்னை, இன்னும்
அத்தலை அன்ன செய்யச்
    சிறியரோ? அளியர் அம்மா!
பொய்த்தலை உடையது எல்லாம்
    தருமமே போலும் ‘என்னாக்
கைத்தனள் உள்ளம், வெள்ளக்
    கண்ணின் நீர்க்கரை இலாதாள்.
30

உரை
   
 
மகோதரன் மாயாசனகனை அங்குப் பற்றிக் கொணர அது கண்டு சீதை ஆற்றா நிலையளாய் அரற்றி வருந்துதல் (7792-7808)

7792.ஆயது ஓர்காலத்து ஆங்கண்
    மருத்தனைச் சனகன் ஆக்கி,
வாய் திறந்து அரற்றப் பற்றி,
    மகோதரன் கடிதின் வந்து
காய் எரி அனையான் முன்னர்க்
    காட்டினன்; வணங்கக் கண்டாள்,
தாய் எரி வீழக் கண்ட
    பார்ப்பு எனத் தரிக்கிலாதாள்.
31

உரை
   
 
7793.கைகளை நெரித்தாள்; கண்ணில்
    மோதினாள்; கமலக் கால்கள்
நெய்யெரி மிதித்தால் என்ன
    நிலத்திடைப் பதைத்தாள்; நெஞ்சம்
மெய்யென எரிந்தாள்; ஏங்கி
    விம்மினாள்; நடுங்கி வீழ்ந்தாள்;
பொய் என உணராள் அன்பால்,
    புரண்டனள், பூசல் இட்டாள்.
32

உரை
   
 
7794.‘தயெ்வமோ! ‘என்னும்; ‘மெய்ம்மை
    சிதைந்ததோ? ‘என்னும்; ‘தீய
வைவலோ உலகை? ‘என்னும்;
    ‘வஞ்சமோ வலியது? ‘என்னும்;
‘உய்வலோ இன்னும்? ‘என்னும்;
    ஒன்று அல துயரம் உற்றாள்;
தையலோ? தருமமேயோ?
    ஆர் அதன் தன்மை தேர்வார்?
33

உரை
   
 
7795.‘எந்தையே! எந்தையே! இன்று
    என்பொருட்டு உனக்கும் இக்கோள்
வந்ததே! என்னைப் பெற்று
    வாழ்ந்தவாறு இதுவோ? மண்ணோர்
தந்தையே! தாயே! செய்த
    தருமமே! தவமே! ‘என்னும்;
வெந்துயர் வீங்கி, தீ வீழ்,
    விறகு என வெந்து வீழ்ந்தாள்.
34

உரை
   
 
7796.‘இட்டு, உண்டாய்; அறங்கள் செய்தாய்;
    எதிர்ந்துேளார் இருக்கை எல்லாம்
சுட்டு, உண்டாட்டு அயர்ந்தாய்;
    வேள்வித் துறை எலாம் கரையும் கண்டாய்;
மட்டு உண்டார், மனிசர்த் தின்ற
    வஞ்சரால் வயிரத் திண்தோள்
கட்டுண்டாய்; என்னே, யானும்
    காண்கின்றேன் போலும் கண்ணால். ‘
35

உரை
   
 
7797.என்று, இன பலவும் பன்னி,
    எழுந்து வீழ்ந்து இடரில் தோய்ந்தாள்;
‘பொன்றினள் போலும் ‘என்ன பொறை
    அழிந்து, உயிர்ப்புப் போவாள்,
மின் தனிநிலத்து வீழ்ந்து
    புரள்கின்றது அனைய மெய்யாள்;
அன்றில் அம் பேடை போல,
    வாய் திறந்து அரற்றலுற்றாள்.
36

உரை
   
 
7798.‘பிறையுடை நுதலார்க்கு ஏற்ற
    பிறந்த இல் கடன்கள் செய்ய,
இறையுடை இருக்கை மூதூர்
    என்றும் வந்து இறுக்கலாதீர்,
சிறையிடைக் காண நீரும்
    சிறையொடும் சேர்ந்தவாறோ
மறையுடை வரம்பு நீங்கா
    வழிவந்த மன்னர் நீரே?
37

உரை
   
 
7799.“வன்சிறைப் பறவை ஊரும்
    வானவன், வரம்பு இல் மாயப்
புன் சிறைப் பிறவி தீர்ப்பான்
    உளன் ‘‘ எனப் புலவர் நின்றார்;
என்சிறை நீக்குவாரைக்
    காண்கிலேன்; என்னின் வந்த
உன்சிறை நீக்கற்பாலார்
    யாருளர், உலகத்து உள்ளார்?
38

உரை
   
 
7800.“பண் பெற்றாரோடு கூடாப்
    பகை பெற்றாய்; பகழி பாய
விண் பெற்றாய் எனினும் நன்றால்;
    வேந்தராய் உயர்ந்த மேலோர்
எண் பெற்றாய் பழியும் பெற்றாய்;
    இது நின்னால் பெற்றது அன்றால்;
பெண் பெற்றாய்; அதனால், பெற்றாய்;
    யார் இன்ன பேறு பெற்றார்?
39

உரை
   
 
7801.‘சுற்றுண்ட பாச நாஞ்சில்
    சுமையொடும் சூடுண்டு, ஆற்ற
எற்றுண்டும், அளற்று நீங்கா,
    விழு சிறு குண்டை என்ன,
பற்றுண்ட நாளே மாளாப்
    பாவியேன், உம்மை எல்லாம்
விற்று உண்டேன்; எனக்கு மீளும்
    விதி உண்டோ, நரகின் வீழ்ந்தால்?
40

உரை
   
 
7802.‘இருந்து நான் பகையை எல்லாம்
    ஈறு கண்டு, அளவு இல் இன்பம்
பொருந்தினேன் அல்லேன்; எம்கோன்
    திருவடி புனைந்தேன் அல்லேன்;
வருந்தினேன், நெடுநாள்; உம்மை
    வழியொடு முடித்தேன்; வாயால்
அருந்தினேன், அயோத்தி வந்த
    அரசர்தம் புகழை அம்மா?
41

உரை
   
 
7803.“கொல் “ எனக் கணவற்கு ஆங்கு ஓர்
    கொடும்பகை கொடுத்தேன்; எந்தை
கல் எனத் திரண்ட தோளைப்
    பாசத்தால் கட்டக் கண்டேன்;
இல் எனச் சிறந்து நின்ற
    இரண்டுக்கும் இன்னல் சூழ்ந்தேன்
அல்லெனோ? எளியெனோ,
    யான்? அளியத்தேன் இறக்கலாதேன்.
42

உரை
   
 
7804.‘இணை அறு வேள்வி மேல்நாள்
    இயற்றி, ஈன்று எடுத்த எந்தை
புணை உறு திரள்தோள் ஆர்த்து,
    பூழியில் புரளக் கண்டேன்;
மண வினை முடித்து, என் கையை
    மந்திர மரபின் தொட்ட
கணவனை இனைய கண்டால்
    அல்லது, கழிகின் றேனோ?
43

உரை
   
 
7805.‘அன்னைமீர்! ஐயன்மீர்! என்
    ஆருயிர்த் தங்கைமீரே!
என்னை ஈன்று எடுத்த எந்தைக்கு
    எய்தியது யாதும் ஒன்றும்
முன்னம் நீர் உணர்ந்திலீரோ?
    உமக்கும் வேறு உற்றது உண்டோ?
துன்(ன) அரு நெறியின் வந்து
    தொடர்ந்திலீர்; துஞ்சினீரோ?
44

உரை
   
 
7806.‘மேருவின் உம்பர்ச் சேர்ந்து
    விண்ணினை மீக்கொண்டாலும்,
நீருடைக் காவல் மூதூர்
    எய்தலாம் நெறியிற்று அன்றால்;
போரிடைக் கொண்டாரேனும்,
    வஞ்சனை புணர்த்தாரேனும்,
ஆர் உமக்கு அறையற்பாலார்?
    அனுமனும் உளனோ, நும்பால்?
45

உரை
   
 
7807.‘சரதம்; மற்று இவனைத் தந்தார்,
    தவம் புரிந்து ஆற்றல் தாழ்ந்த
பரதனைக் கொணர்தற்கு ஏதும்
    ஐயுறவு இல்லை; பல்நாள்
வரதனும் வாழ்வான் அல்லன்;
    தம்பியும் அனையன் வாழான்;
விரதம் உற்று, அறத்தில் நின்றார்க்கு
    இவைகொலாம் விளைவ மேன்மேல்?
46

உரை
   
 
7808.“அடைத்தது கடலை, மேல்வந்து
    அடைந்தது மதிலை; ஆவி
துடைத்தது பகையை, சேனை ‘‘
    எனச் சிலர் சொல்லச் சொல்ல,
படைத்தது ஓர் உவகை தன்னை
    வேறு ஒரு வினையம் பண்ணி
உடைத்தது விதியே என்று
    என்று, உளைந்தனள், உணர்வு தீர்வாள்.
47

உரை
   
 
சீதையின் துயர்நிலையைக் கண்ட இராவணன் அவளது துயர்நீக்கி அவள் தன் விருப்பிற்கு இசையுமாறு அவளைப் பரிந்து வேண்டுதல் (7809-7815)

7809.ஏங்குவாள் இனைய பன்ன,
    இமையவர் ஏற்றம் எல்லாம்
வாங்கு வாள் அரக்கன், ஆற்ற
    மனம் மகிழ்ந்து, இனிதின் நோக்கி,
‘தாங்குவாள் அல்லள் துன்பம் ‘
    இவளையும் தாங்கித் தானும்
ஓங்குவான் என்ன உன்னி
    இனையன உரைக்கலுற்றான்.
48

உரை
   
 
7810.‘காரிகை! நின்னை எய்தும்
    காதலால், கருதல் ஆகாப்
பேர் இடர் இயற்றலுற்றேன்;
    பிழை இது பொறுத்தி; இன்னும்
வேர் அற மிதிலையோரை
    விளிகிலேன்; விளிந்தபோதும்
ஆருயிர் இவனை உண்ணேன்;
    அஞ்சலை, அன்னம் அன்னாய்!
49

உரை
   
 
7811.‘இமையவர் உலகமேதான்,
    இவ் உலகு ஏழுமேதான்,
அமைவரு புவனம் மூன்றில்
    என்னுடை ஆட்சியேதான்,
சமைவுறத் தருவென், மற்று
    இத் தாரணி மன்னற்கு; இன்னல்
சுமையுடைக் காம வெம் நோய்
    துடைத்தியேல் தொழுது வாழ்வேன்.
50

உரை
   
 
7812.‘இலங்கை ஊர் இவனுக்கு ஈந்து,
    வேறு இடத்து இருந்து வாழ்வேன்;
நலம் கிளர்நிதி இரண்டும்
    நல்குவென்; நாமத் தயெ்வப்
பொலம்கிளர் விமானம் தானே பொது
    அறக் கொடுப்பென்; புத்தேள்
வலம்கிளர் வாளும் வேண்டின்,
    வழங்குவென்; யாதும் மாற்றேன்.
51

உரை
   
 
7813.‘இந்திரன் கவித்த மௌலி,
    இமையவர் இறைஞ்சி ஏத்த,
மந்திர மரபின் சூட்டி,
    வானவர் மகளிர் யாரும்
பந்தரின் உரிமை செய்ய,
    யான் இவன் பணியில் நிற்பேன்
சுந்தரப் பவளம் வாய் ஓர்
    அருள்மொழி சிறிது சொல்லின்.
52

உரை
   
 
7814.‘எந்தை தன்தந்தை தாதை,
    இவ்வுலகு ஈன்ற முன்னோன்,
வந்து இவன்தானே வேட்ட
    வரமெலாம் வழங்கும்; மற்றை
அந்தகன் அடியார் செய்கை
    ஆற்றுமால்; அமிழ்தின் வந்த
செந்திரு நீர் அல்லீரேல்,
    அவளும் வந்து ஏவல் செய்யும்.
53

உரை
   
 
7815.‘தேவரே முதலா, மற்றைத்
    திண்திறல் நாகர் மண்ணோர்,
யாவரும் வந்து, நுந்தை
    அடிதொழுது, ஏவல் செய்வார்;
பாவை! நீ இவன் இல்
    வந்த பயன், பழுது ஆவது அன்றால்,
மூ உலகு ஆளும் செல்வம்
    கொடுத்தது; முடித்தி என்றான்
54

உரை
   
 
இராவணனது உரைகேட்டுச் சீதை
வெகுண்டுரைத்தல் (7816-7820)

7816.‘இத்திருப் பெறுகிற்பானும்,
    இந்திரன்; இலங்கை நுங்கள்
பொய்த் திருப் பெறுகிற்பானும்,
    வீடணன்; புலவர் கோமான்
கைத்திருச் சரங்கள் உன்தன்
    மார்பிடைக் கலக்கற்பால;
மைத் திரு நிறத்தான் தாள் என்
    தலைமிசை வைக்கற்பால. ‘
55

உரை
   
 
7817.‘நகுவன நின்னோடு, ஐயன்
    நாயகன் நாம வாளி;
புகுவன போழ்ந்து, உன் மார்பில்
    திறந்தன புண்கள் எல்லாம்
தகுவன இனிய சொல்லத்
    தக்கன; சாப நாணின்
உகுவன மலைகள் எஞ்ச,
    பிறப்பன ஒலிகள் அம்மா!
56

உரை
   
 
7818.‘சொல்லுவ மதுர மாற்றம்,
    துண்டத்தால் உண்டு, உன்கண்ணைக்
கல்லுவ, காகம்; வந்து
    கலப்பன, கமலக் கண்ணன்
வில் உமிழ் பகழி; பின்னர்,
    விலங்கு எழில் அலங்கல் மார்பம்
புல்லுவ, களிப்புக் கூர்ந்து,
    புலவு நாறு அலகை எல்லாம்
57

உரை
   
 
7819.‘விரும்பி நான் கேட்பது உண்டால்
    நின் உழை வார்த்தை “வீரன்
இரும்பு இயல் வயிரவாளி
    இடறிட, எயிற்றுப் பேழ்வாய்ப்
பெரும் பியல் தலைகள் சிந்திப்
    பிழைப்பு இலை முடிந்தாய் ‘‘ என்ன,
அரும்பு இயல் துளவப் பைந்தார்
    அனுமன் வந்து அளிக்கும் அந்நாள்.
58

உரை
   
 
7820.‘புன்மகன்! கேட்டி, கேட்டற்கு
    உரியது; புகுந்த போரின்
உன் மகன் உயிரை எம்மோய்
    சுமித்திரை உய்ய ஈன்ற
நன்மகன் வாளி நக்க,
    நாய் அவன் உடலை நக்க,
“என் மகன் இறந்தான் “ என்ன,
    நீ எடுத்து அரற்றல் ‘என்றாள்.
59

உரை
   
 
சினமுற்ற இராவணன், சீதையின்மேற் செல்ல மகோதரன் அவனைத் தடுத்து ‘தந்தை வேண்ட இவள் இசைவாள் ‘என்று கூறி அவனது வெகுளியைத் தணித்தல்

7821.வெய்யவன் அனைய கேளா,
    வெயில் உக விழித்து, வீரக்
கை பல பிசைந்து, பேழ்வாய்
    எயிறு புக்கு அழுந்தக் கவ்வி,
தையல் மேல் ஓடலோடும்,
    மகோதரன் தடுத்தான்; ‘ஈன்ற
மொய்கழல் தாதை வேண்ட
    இசையும்; நீ முனியல் ‘என்றான்
60

உரை
   
 
இராவணன் ஆசனத்திலமர்ந்திருக்க, மாயாசனகன் சீதையை நோக்கி இராவணனது விருப்பிற்கு இசையும்படி பரிந்து வேண்டுதல் (7822-7824)

7822.அன்று அவன் தகைப்ப மீண்டான்
    ஆசனம் அத்து இருக்க, ‘ஆவி
பொன்றினன் ஆகும் ‘என்னத்
    தரையிடைக் கிடந்த பொய்யன்,
‘இன்று இது நேராய் என்னின்,
    என்னை என் குலத்தினோடும்
கொன்றனை ஆதி ‘என்னா
    இனையன கூறலுற்றான்.
61

உரை
   
 
7823.‘பூவின்மேல் இருந்த தயெ்வத்
    தையலும் பொதுமை உற்றாள்;
பாவி யான் பயந்த நங்கை!
    நின் பொருட்டாகப் பட்டேன்;
ஆவிபோய் அழிதல் நன்றோ?
    அமரர்க்கும் அரசன் ஆவான்
தேவியாய் இருத்தல் தீதோ?
    சிறையிடைத் தேம்புகின்றாய்.
62

உரை
   
 
7824.‘என்னை என் குலத்தினோடும்
    இன்னுயிர் தாங்கி, ஈண்டு
நல் நெடுஞ்செல்வம் துய்ப்பேன்
    ஆக்கினை நல்கி, நாளும்
உன்னை வெஞ்சிறையின் நீக்கி,
    இன்பத்துள் உய்ப்பாய் ‘என்னா,
பொன் அடிமருங்கு வீழ்ந்தான்,
    உயிர் உகப் பொருமுகின்றான்.
63

உரை
   
 
மாயாசனகன் கூறிய மொழிகளைக் கேட்கப் பொறாளாகிய சீதை அவனை ஐயுற்றுக் கடிந்துரைத்தல் (7825-7830)

7825.அவ்வுரை கேட்ட நங்கை,
    செவிகளை அமையப் பொத்தி,
வெவ்வுயிர்த்து, ஆவி தள்ளி,
    வீங்கினள் வெகுளி பொங்க,
‘இவ்வுரை எந்தை கூறான்,
    இன் உயிர் வாழ்க்கை பேணி;
செவ்வுரை அன்று இது ‘என்னாச்
    சீறினள், உளையச் செப்பும்.
64

உரை
   
 
7826.அறம்கெட, வழக்கு நீங்க,
    அரசர்தம் மரபுக்கு ஆன்ற
மறம்கெட, மெய்ம்மை தேய,
    வசைவர மறைகள் ஓதும்
திறம்கெட, ஒழுக்கம் குன்ற,
    தேவரும் பேணத் தக்க
நிறம்கெட, இனைய சொன்னாய்;
    சனகன் கொல், நினையின், ஐயா!
65

உரை
   
 
7827.‘வழிகெட வரினும் தம்தம் வாழ்க்கை
    தேய்ந்து இறினும், மார்பம்
கிழிபட அயில்வேல் வந்து
    கிடைப்பினும், சான்றோர் கேட்கும்
மொழிகொடு வாழ்வது அல்லால்,
    முறை கெடப் புறம் நின்று ஆர்க்கும்
பழிகொடு வாழ்தல் செய்யும்
    பார்த்திபர் உளரோ? பாவம்!
66

உரை
   
 
7828.‘நீயும், நின் கிளையும், மற்று
    இந்நெடுநில வரைப்பும், நேரே
மாயினும், முறைமை குன்ற
    வாழ்வெனோ? வயிரத் திண்தோள்
ஆயிர நாமத்து ஆழி
    ஐயனுக்கு அடிமை செய்வேன்
நாயினை நோக்குவேனோ,
    நாண் துறந்து, ஆவி நச்சி?
67

உரை
   
 
7829.‘வரிசிலை ஒருவன் அல்லால்,
    மைந்தர் என்மருங்கு வந்தார்
எரியிடை வீழ்ந்த விட்டில்
    அல்லரோ? அரசுக்கு ஏற்ற
அரியொடும் வாழ்ந்த பேடை,
    அங்கணத்து அழுக்குத் தின்னும்
நரியொடும் வாழ்வது உண்டோ?
    நாயினும் கடைப்பட்டோனே!
68

உரை
   
 
7830.‘அல்லையே எந்தை; ஆனாய்
    ஆகதான்; அலங்கல் வீரன்
வில்லையே வாழ்த்தி, மீட்கின்
    மீளுதி; மீட்சி என்பது
இல்லையேல் இறந்து தீர்தி;
    இது அலால், இயம்பல் ஆகாச்
சொல்லையே உரைத்தாய்; என்றும்
    பழி கொண்டாய் ‘என்னச் சொன்னாள்
69

உரை
   
 
அந்நிலையில் இராவணன் சீதையை அச்சுறுத்தும் பொருட்டு மாயாசனகனைக் கொல்லுதற்கு வாளை உருவுதல்

7831.வன்திறல் அரக்கன் அன்ன
    வாசகம் மனத்துக் கொள்ளா,
‘நின்றது நிற்க; மேன்மேல்
    நிகழ்ந்தவா நிகழ்க; நின் முன்
நின்றவன் அல்லன் போலாம்
    சனகன்? இக் கணத்தின் நின்முன்
கொன்று உயிர் குடிப்பென் ‘என்னா,
    சுரிகைவாள் உருவிக் கொண்டான்.
70

உரை
   
 
உன்னால் ஒன்றும் இயலாது, முடிவில் இராமனது அம்பினால் இறந்தொழிவாய் எனச் சீதை இராவணனை நோக்கி அஞ்சாது கூறுதல்

7832.‘என்னையும் கொல்லாய்; இன்னே
    இவனையும் கொல்லாய்; இன்னும்
உன்னையும் கொல்லாய்; மற்று
    இவ் உலகையும் கொல்லாய்; யானோ
இன்னுயிர் நீங்கி, என்றும்
    கெடாப் புகழ் எய்துகின்றேன்;
பின்னையும் எம்கோன் அம்பின்
    கிளையொடும் பிழையாய் ‘என்றாள்.
71

உரை
   
 
மாயாசனகனைக் கொல்லச் சென்ற இராவணனை மகோதரன் தடுத்தல்

7833.‘இரந்தனன் வேண்டிற்று அல்லால்,
    இவன் பிழை இழைத்தது உண்டோ?
புரந்தரன் செல்வத்து ஐயா,
    கொல்கை ஓர் பொருளிற்றோதான்?
பரந்த வெம்பகையை வென்றால்,
    நின்வழிப் படரும் நங்கை;
அரந்தையள் ஆகும் அன்றே,
    தந்தையை நலிவதாயின்?
72

உரை
   
 
அந்நிலையில், கும்பகருணன் இறந்தது கண்டு வானரரும் வானவரும் ஆர்த்த பேரொலி இராவணன் செவியிற்பட அவன் சிந்தித்து வருந்துதல் (7834-7835)

7834.என்று அவன் விலக்க, மீண்டு,
    ஆண்டு இருந்தது ஓர் இறுதியின்கண்,
குன்று என நீண்ட
    கும்பகருணனை இராமன் கொல்ல,
வன்திறல் குரங்கின் தானை
    வான் உற ஆர்த்த ஓசை,
சென்றன செவியின் ஊடு,
    தேவர்கள் ஆர்ப்பும் செல்ல.
73

உரை
   
 
7835.‘உகும் திறல் அமரர்
    நாடும், வானர யூகத்தோரும்,
மிகும் திறம் வேறொன்று இல்லா
    இருவர் நாண் ஒலியும் விஞ்ச,
தகும் திறன் நினைந்தேன்;
    எம்பிக்கு அமரிடைத் தனிமைப்பாடு
புகுந்துளது உண்டு ‘என்று
    உள்ளம் பொருமல் வந்து உற்ற போழ்தின்.
74

உரை
   
 
கும்பகருணன் இறந்தான் எனத் தூதுவர் இராவணனையணுகி மெல்லத் தரெிவிக்கக் கேட்ட இராவணன் பெருந் துயரால் நிலத்தில் வீழ்ந்து அழுது அரற்றுதல் (7836-7847)

7836.புறந்தரு சேனை முந்நீர்
    இருஞ் சிறைபோக்கி, போதப்
பறந்தனர் அனைய தூதர்
    செவி மருங்கு எய்தி, பைய,
‘திறம்திறம் ஆக நின்ற
    கவிப் பெருங்கடலைச் சிந்தி,
இறந்தனன் உம்பி; அம்பின்
    கொன்றனன் இராமன் ‘என்றார்.
75

உரை
   
 
7837.ஊரொடும் பொருந்தித் தோன்றும்
    ஒளியவன் என்ன, ஒண்பொன்
தாரொடும் புனைந்த மௌலி
    தரையொடும் பொருந்த, தள்ளி,
பாரொடும் பொருந்தி நின்ற
    மராமரம், பணைகேளாடும்
வேரொடும் பறிந்து, மண்மேல்
    வீழ்வதே போல, வீழ்ந்தான்.
76

உரை
   
 
7838.பிறிவு எனும் பீழை தாங்கள்
    பிறந்த நாள் தொடங்கி என்றும்
உறுவது ஒன்று இன்றி, ஆவி
    ஒன்று என நினைந்து நின்றான்,
எறிவரும் செருவில் தம்பி
    தன்பொருட்டு இறந்தான் என்ன
அறிவு அழிந்து, அவசன் ஆகி,
    அரற்றினான், அண்டம் முற்ற.
77

உரை
   
 
7839.‘தம்பியோ! வானவர் ஆம்
    தாமரையின் காடு உழக்கும்
தும்பியோ! நான்முகத்தோன்
    சேய் மதலை தோன்றாலோ!
நம்பியோ! இந்திரனை
    நாமப் பொறி துடைத்த
எம்பியோ! யான் உன்னை
    இவ் உரையும் கேட்டேனோ!
78

உரை
   
 
7840.‘மின் இலைய வேலோனே!
    யான் உன் விழி காணேன்,
நின் நிலை யாது என்னேன்,
    உயிர் பேணி நிற்கின்றேன்;
உன் நிலைமை ஈது
    ஆயின் ஓடைக் களிறு உந்திப்
பொன்னுலகம் மீளப்
    புகாரோ, புரந்தரனார்?
79

உரை
   
 
7841.‘வல்நெஞ்சின் என்னை நீ
    நீத்துப் போய், வான் அடைந்தால்,
இன்னம் சிலரோடு ஒரு
    வயிற்றின் யார் பிறப்பார்?
மின் அஞ்சும் வேலோய்!
    விழி அஞ்சி வாழ்கின்றார்,
தம் நெஞ்சம் தாமே
    தடவாரோ, தானவர்கள்?
80

உரை
   
 
7842.‘கல் அன்றோ, நீராடும்
    காலத்து, உன் கால்தேய்க்கும்,
மல் ஒன்று தோளாய்!
    வடமேரு? மானுடவன்
வில் ஒன்று நின்னை
    விளிவித்துளது என்னும்
சொல் அன்றோ என்னைச்
    சுடுகின்றது, தோன்றால்!
81

உரை
   
 
7843.‘மாண்டனவாம் சூலமும்,
    சக்கரமும், வச்சிரமும்;
தீண்டினவா ஒன்றும்
    செயல் ஆற்றாவாம்; தறெித்து
மீண்டனவாம்; மானுடவன்
    மெல் அம்பு மெய் உருவ,
நீண்டனவாம்; தாம் இன்னும்
    நின்றாராம், தோள் நோக்கி!
82

உரை
   
 
7844.‘நோக்கு அறவும் எம்பியர்கள்
    மாளவும், இந் நொய்து இலங்கை
போக்கு அறவும், மாதுலனார்
    பொன்றவும், என் பின் பிறந்தாள்
மூக்கு அறவும் வாழ்ந்தேன்
    ஒருத்தி முலைக் கிடந்த
ஏக்கறவால்; இன்னம்
    இரேனோ, உனை இழந்தும்?
83

உரை
   
 
7845.‘தன்னைத்தான், தம்பியைத்தான்,
    தானைத் தலைவனைத் தான்,
மன்னைத்தான், மைந்தனைத்தான்,
    மாருதத்தின் காதலைத்தான்,
பின்னைக் கரடிக்கு இறையைத்தான்,
    பேர் மாய்த்தாய்
என்னத்தான் கேட்டிலேன்;
    என் ஆனவாறு இதுவே!
84

உரை
   
 
7846.‘ஏழை மகளிர்
    அடி வருட, ஈர்ந் தனெ்றல்
வாழும் மணி அரங்கில்
    பூம் பள்ளி வைகுவாய்!
சூழும் அலகை
    துணங்கைப் பறை துவைப்ப,
பூழி அணைமேல்
    துயின்றனையோ, போர்க் களத்தே?
85

உரை
   
 
7847.‘செந்தேன் பருகித் திசை திசையும் நீ வாழ
உய்ந்தேன்; இனி இன்று நானும் உனக்கு ஆவி
தந்தேன் பிரியேன் தனி போகத் தாழ்க்கிலேன்
வந்தேன் தொடர; மதக் களிறே! வந்தேனே.
86

உரை
   
 
சீதை தன் உள்ளத்துள்ளே மகிழ்தல் (7848-7850)

7848.அண்டத்து அளவும்
    இனைய பகர்ந்து அழைத்து,
பண்டைத் தன் நாமத்தின்
    காரணத்தைப் பாரித்தான்;
தொண்டைக் கனிவாய்
    துடிப்ப, மயிர் பொடிப்ப,
கெண்டைத் தடம் கண்ணாள்
    உள்ளே கிளுகிளுத்தாள்.
87

உரை
   
 
7849.வீங்கினாள் கொங்கை; மெலிந்த மெலிவு அகல
ஓங்கினாள்; உள்ளம் உவந்தாள்; உயிர் புகுந்தாள்;
தீங்கு இலாக் கற்பின் திரு மடந்தை; சேடியாம்
பாங்கினாள் உற்றதனை யாரே பகர்கிற்பார்?
88

உரை
   
 
7850.கண்டாள், கருணனை, தன்
    கண் கடந்த தோளானை;
கொண்டாள், ஒரு துணுக்கம்;
    அன்னவனைக் கொற்றவனார்
தண்டாத வாளி
    தடிந்த தனி வார்த்தை
உண்டாள், உடல் தடித்தாள்;
    வேறு ஒருத்தி ஒக்கின்றாள்.
89

உரை
   
 
இராவணன் சீற்றம்

7851.‘தாவு அரிய பேர் உலகத்து
    எம்பி சவத்தொடும்,
யாவரையும் கொன்று அடுக்கி,
    என்றும் இறவாத
மூவரையும், மேலைநாள்
    மூவா மருந்து உண்ட
தேவரையும் வைப்பேன்
    சிறை ‘என்னச் சீறினான்.
90

உரை
   
 
மந்திரியர் தேற்றத் தேறிய இராவணன் அவ்விடத்தைவிட்டுச் செல்லுதல்

7852.அக்கணத்து மந்திரியர்
    ஆற்ற, சிறிது ஆறி,
‘இக்கணத்து மானுடவர்
    ஈரக் குருதியால்
முக்கைப் புனல் உகுப்பென்
    எம்பிக்கு ‘என முனியா,
திக்கு அனைத்தும் போர் கடந்தான்,
    போயினான், தீ விழியான்
91

உரை
   
 
மகோதரன் மற்றொரு பக்கமாக அவ்விடத்தைவிட்டுப்
போதல்

7853.‘கூறோம் இனி நாம் அக் கும்பகருணனார்
பாறு ஆடு வெங் களத்துப் பட்டார் ‘எனப் பதையா
‘வேறு ஓர் சிறை இவனை வைம்மின் விரைந்து ‘என்ன
மாறு ஓர் திசை நோக்கிப் போனார் மகோதரனார்.
92

உரை
   
 
திரிசடை சீதையைத் தேற்றுதல் (7854-7855)

7854.வரிசடை நறுமலர் வண்டு பாடு இலாத்
துரிசு அடை புரிகுழல் சும்மை சுற்றிய
ஒருசடை உடையவட்கு உடைய அன்பினாள்
திரிசடை தரெுட்டுவாள் இனைய செப்புவாள்.
93

உரை
   
 
7855.‘உந்தை என்று உனக்கு எதிர் உருவம் மாற்றியே
வந்தவன் மருத்தன் என்று உளன் ஓர் மாயையான்;
அந்தம் இல் கொடுந் தொழில் அரக்கனாம் ‘எனா
சிந்தையின் உணர்த்தினள் அமுதின் செம்மையாள்.
94

உரை
   
 
கவிக்கூற்று

7856.நங்கையும் அவள் உரை நாளும் தேறுவாள்
சங்கையும் இன்னலும் துயரும் தள்ளினாள்;
இங்கு நின்று ஏகிய இலங்கை காவலன்
அங்கு நின்று இயற்றியது அறைகுவாம் அரோ.
95

உரை