வெற்றிவிழாக் கொண்டாட இராவணன்
கட்டளையிடுதல்

8804.பொய்யார் தூதர் என்பதனால்,
    பொங்கி எழுந்த உவகையன் ஆய்
மெய்யார் நிதியின் பெருவெறுக்கை
    வெறுக்க வீசி, விளைந்தபடி
கை ஆர் வரைமேல் முரசு ஏற்றிச்
    சாற்றி நகரம் களி சிறப்ப
நெய் ஆர் ஆடல் கொள்க, என்று
    நிகழ்த்துக என்றான் நெறி இல்லான்.
1

உரை
   
 
இராவணன் கட்டளைப்படி மருத்தன் மாய்ந்த அரக்கருடலைக் கடலில் எறிதல்

8805.அந்த நெறியை அவர் செய்ய,
    அரக்கன் மருத்தன்தனைக் கூவி
‘முந்த நீ போய் அரக்கர் உடல்
    முழுதும் கடலில் முடுக்கிடு; நின்
சிந்தை ஒழியப் பிறர் அறியின்,
    சிரமும் வரமும் சிந்துவென்‘ என்று
உந்த; அவன்போய் அரக்கர் உடல்
    அடங்கக் கடலினுள் இட்டான்.
2

உரை
   
 
இராவணன் ஏவியபடி சீதையைக் களத்திற்குக் கொணர்தல்

8806.‘தயெ்வ மானத்திடை ஏற்றி
    மனிசர்க்கு உற்ற செயல் எல்லாம்
தையல் காணக் காட்டுமின்கள்;
    கண்டால் அன்றித் தனது உள்ளத்து
ஐயம் நீங்காள் ‘என்று உரைக்க,
    அரக்கர் மகளிர் இரைத்து ஈண்டி,
உய்யும் உணர்வு நீத்தாளை
    நெடும் போர்க் களத்தின் மிசை உய்த்தார்.
3

உரை
   
 
சீதை விமானத்திலிருந்தபடியே தரையில் வீழ்ந்து கிடக்கும் இராமனைக் கண்டு வருந்துதல்

8807.கண்டாள் கண்ணால் கணவன் உரு;
    அன்றி, ஒன்றும் காணாதாள்;
உண்டாள் விடத்தை என, உடலும்
    உணர்வும் உயிர்ப்பும் உடன் ஓய்ந்தாள்;
தண் தாமரைப்பூ நெருப்புற்ற
    தன்மை உற்றாள்; தரியாதாள்
பெண்தான் உற்ற பெரும்பீழை
    உலகுக்கு எல்லாம் பெரிது அன்றோ!
4

உரை
   
 
சீதை அழுதலும் அதுகண்டு பெண்டிருலகமே அழுதல்
(8808-8809)

8808.மங்கை அழலும் வான் நாட்டு
    மயில்கள் அழுதார்; மழ விடையோன்
பங்கின் உறையும் குயில் அழுதாள்;
    பதுமத்து இருந்த மாது அழுதாள்
கங்கை அழுதாள்; நாமடந்தை
    அழுதாள்; கமலத் தடங்கண்ணன்
தங்கை அழுதாள்; இரங்காத
    அரக்கிமாரும் தளர்ந்து அழுதார்.
5

உரை
   
 
8809.பொன்தாழ் குழையாள் தனை ஈன்ற
    பூ மா மடந்தை புரிந்து அழுதாள்;
குன்றா மறையும், தருமமும், மெய்
    குழைந்து குழைந்து விழுந்து அழுத;
பின்றாது உடற்றும் பெரும்பாவம்
    அழுத பின் என் பிறர் செய்கை?
நின்றார் நின்றபடி அழுதார்;
    நினைப்பும் உயிர்ப்பும் நீத்திட்டாள்.
6

உரை
   
 
சீதை தெளிந்து துன்புற்றேங்குதல் (8810-8812)

8810.நினைப்பும் உயிர்ப்பும் நீத்தாளை
    நீரால் தெளித்து, நெடும்பொழுதின்
இனத்தின் அரக்கர் மடவார்கள்
    எடுத்தார்; உயிர்வந்து ஏங்கினாள்;
கனத்தின் நிறத்தான்தனைப் பெயர்த்தும்
    கண்டாள்; கயலைக் கமலத்தால்
சினத்தின் அலைப்பாள் எனக் கண்ணைச்
    சிதையக் கையால் மோதினாள்.
7

உரை
   
 
8811.அடித்தாள் முலைமேல்; வயிறு அலைத்தாள்;
    அழுதாள்; தொழுதாள்; அனல் வீழ்ந்த
கொடித்தான் என்ன, மெய் சுருண்டாள்;
    கொதித்தாள்; பதைத்தாள்; குலைவுற்றாள்;
துடித்தாள்; மின்போல்; உயிர் கரப்பச்
    சோர்ந்தாள், சுழன்றாள்; துள்ளினாள்
குடித்தாள் துயரை, உயிரோடும்
    குழைத்தாள்; உழைத்தாள் குயில் அன்னாள்.
8

உரை
   
 
8812.விழுந்தாள்; புரண்டாள்; உடல்முழுதும்
    வியர்த்தாள்; அயர்த்தாள்; வெதும்பினாள்;
எழுந்தாள்; இருந்தாள்; தளிர்க்கரத்தை
    நெரித்தாள்; சிரித்தாள்; ஏங்கினாள்;
‘கொழுந்தா! ‘என்றாள், ‘அயோத்தியர்தம்
    கோவே! ‘என்றாள்; எவ் உலகும்
தொழும் தாள் அரசேயோ! ‘என்றாள்;
    சோர்ந்தாள் அரற்றத் தொடங்கினாள்.
9

உரை
   
 
சீதையின் அரற்றல் அறத்தை நோக்கிக் கூறியது

8813.‘உற மேவிய காதல் உனக்கு உடையார்
புறம் ஏதும் இலாரொடு பூணலையோ?
மறமே புரிவார் வசம் ஆயினையோ?
அறமே! கொடியாய்; இதுவோ அருள்தான்?
10

உரை
   
 
விதியை நோக்கிக் கூறியது

8814.முதியார் உணர் வேதம் மொழிந்த அலால்
கதி ஏதும் இலார் துயர் காணுதியோ?
மதியேன் மதியேன் உனை வாய்மை இலா;
விதியே! கொடியாய்; விளையாடுதியோ?
11

உரை
   
 
எமனை நோக்கிக் கூறியது

8815.கொடியேன் இவை காணகிலேன்; உயிர் கோள்
முடியாய் நமனே! முறையோ? முறையோ?
விடியா இருள்வாய் எனை வீசினையே!
அடியேன் உயிரே அருள் நாயகனே.
12

உரை
   
 
இராமனை நோக்கி அரற்றியது (8816-8820)

8816.‘எண்ணா மயலோடும் இருந்தது நின்
புண்ணாகிய மேனி பொருந்திடவோ?
மண்ணோர் உயிரே! இமையோர் வலியே!
கண்ணே! அமிழ்தே! கருணாகரனே!
உரை
   
 
8817.மேவிக் கனல் முன் மிதிலைத்தலை என்
பாவிக் கை பிடித்தது பண்ணவ! நின்
ஆவிக்கு ஒரு கோள் வரவோ? அலர் வாழ்
தேவிக்கு அமிழ்தே! மறையின் தெளிவே!
14

உரை
   
 
8818.‘உய்யாள் உயர் கோசலை தன் உயிரோ
ஐயா! இளையோர் உயிர் வாழ்கிலரால்
மெய்யே வினை எண்ணி விடுத்த கொடுங்
கைகேசி கருத்து இதுவோ? களிறே!
15

உரை
   
 
8819.“‘தகைவாள் நகர் நீ தவிர்வாய் ” எனவும்
வகையாது தொடர்ந்து ஒரு மான் முதலா
புகையாடிய காடு புகுந்து; உடனே
பகை ஆடியவா! பரிவு ஏதுமிலேன்.
16

உரை
   
 
8820.“இன்று ஈகிலையேல் இறவு இவ் இடை; மான்
அன்று ஈ “ எனவே பரிவோடு அடியேன்
நின்று ஈவது நின்னை நெடுஞ் செருவில்
கொன்று ஈவது ஓர் தீமை குறித்தலினோ?
17

உரை
   
 
இலக்குவனை நோக்கி அரற்றியது (8821-8822)

8821.மேதா! இளையோய்! விதியார் விளைவால்
போதா நெறி எம்மொடு போதுறுநாள்
“மூது ஆனவன் முன்னம் முடிந்திடு ” எனும்
மாதா உரையின் வழி நின்றனையோ?
18

உரை
   
 
8822.‘பூவும் தளிரும் தொகு பொங்கு அணைமேல்
கோவும் துயில தவிர்வாய்! கொடியார்
ஏவின் தலைவந்த இருங் கணையால்
மேவும் குளிர் மெல் அணை மேவினையோ?
19

உரை
   
 
மீண்டும் இராமனை நோக்கிக் கூறியது

8823.‘நெய்யார் பெருவேள்வி நிரப்பி நெடுஞ்
செய்யார் புனல்நாடு திருத்துதியால்;
மெய் ஆகிய வாசகமும் விதியும்
பொய் ஆன என்மேனி பொருந்துதலால்.
20

உரை
   
 
இராமன் மேனிமீது விழச் சீதை எழுதலும் திரிசடை விலக்கலும்

8824.‘மழுவாள் உறினும் பிளவா மனன் உண்டு
அழுவேன் இனி ஏன்? இடர் ஆறிட யான்
விழுவேன் அவன் மேனியின் மீதின் ‘எனா
எழுவாளை விலக்கி இயம்பினளால்.
21

உரை
   
 
சீதையைத் தழுவிச் செவியிடைத் திரிசடை கூறியது

8825.‘மாடு உற வளைந்து நின்ற
    வளை எயிற்று அரக்கிமாரைப்
பாடுற நீக்கி, நின்ற,
    பாவையைத் தழுவிக் கொண்டு,
கூடினள் என்ன நின்று
    செவியிடை, குறுகிச் சொன்னாள்
தேடிய தவமே அன்ன ‘
    திரிசடை மறுக்கம் தீர்ப்பாள்.
22

உரை
   
 
திரிசடை சொன்னது அரக்கர் மாயம் என்று தேற்றியது

8826.‘மாய மான் விடுத்தவாறும்,
    சனகனை வகுத்தவாறும்,
போய மா நாக பாசம்
    பிணித்தது போனவாறும்,
நீ அமா! நினையாய்; மாள
    நினைதியோ? நெறி இலாரால்
ஆய மா மாயம் ஒன்றும்
    அறிகிலை, அன்னம் அன்னாய்
23

உரை
   
 
முன்கண்ட கனவு முதலியன காட்டித் தேற்றியது

8827.கண்டன கனவும் பெற்ற
    நிமித்தமும், நினது கற்பும்,
தண்ட வாள் அரக்கர் பாவச்
    செய்கையும், தருமம் தாங்கும்
அண்டர் நாயகன்தன் வீரத்
    தன்மையும் அயர்க்கலாமோ?
புண்டரீகற்கும் உண்டோ,
    இறுதி இப் புலையர்க்கு அல்லால்.
24

உரை
   
 
இராமன் மேனியில் புண் இன்மை காட்டித் தேற்றியது

8828.ஆழியான் ஆக்கை தன்னில்
    அம்பு ஒன்றும் உறுகிலாமை
ஏழை நீ காண்டி அன்றே?
    இளையவன் வதனம் இன்னும்
ஊழிநாள் இரவி என்ன
    ஒளிர்கின்றது; உயிருக்கு இன்னல்
வாழியார்க்கு இல்லை; வாளா
    மயங்கலை மண்ணில் வந்தாய்.
25

உரை
   
 
உலகம் அழியாமை காட்டித் தேற்றியது

8829.ஓய்ந்துளன், இராமன், என்னின்,
    உலகம் ஓர் ஏழும் ஏழும்
தீய்ந்துறும்; இரவி பின்னும்
    திரியுமோ? தயெ்வம் என்னாம்?
வீய்ந்துறும் விரிஞ்சன் முன்னா
    உயிரெலாம்; வெருவல், அன்னை!
ஆய்ந்தவை உள்ள போதே,
    அவர் உளர்; அறமும் உண்டால்.
26

உரை
   
 
அனுமனைக் காட்டித் தேற்றியது

8830.‘மாருதிக்கு இல்லை அன்றே,
    மங்கை நின் வரத்தினாலே
ஆருயிர் நீங்கல்! நின்பால்
    கற்புக்கும் அழிவு உண்டாமோ?
சீரியது அன்று, இது ஒன்றும்;
    திசைமுகன் படையின் செய்கை
பேரும், இப்பொழுதே; தேவர்
    எண்ணமும் பிழைப்பது உண்டோ?
27

உரை
   
 
தேவரைக் காட்டித் தேற்றியது

8831.‘தேவரைக் கண்டேன்; பைம்பொன்
    செங்கரம் சிரத்தில் சேர்த்தி,
மூவரைக் கண்டால் என்ன,
    இருவரை முறையின் நோக்கி,
ஆவலிப்பு எய்து கின்றார்;
    அயர்ந்திலர்; அஞ்சல்; அன்னை!
“கூவலில் புக்கு; வேலை
    கோள் படும் “ என்று கொள்ளேல்.
28

உரை
   
 
விமானத்தின் தன்மை கூறித் தேற்றியது

8832.‘மங்கலம் நீங்கினாரை
    ஆருயிர் வாங்கினாரை,
நங்கை! இக்கடவுள் மானம்
    தாங்குறும் நவையிற்று அன்றால்,
இங்கு இவை அளவை ஆக,
    இடர்க்கடல் கடத்தி ‘என்றாள்;
சங்கையள் ஆய தையல்
    சிறிது உயிர் தரிப்பதானாள்.
29

உரை
   
 
சீதையின் மறுமொழி

8833.‘அன்னை! நீ உரைத்தது ஒன்றும்
    அழிந்திலது ஆதலானே
உன்னையே தயெ்வமாக் கொண்டு,
    இத்தனை காலம் உய்ந்தேன்;
இன்னம் இவ்விரவு முற்றும்
    இருக்கின்றேன்; இறத்தல் என்பால்
முன்னமே முடிந்தது அன்றே? ‘
    என்றனள் முளரி நீத்தாள்.
30

உரை
   
 
8834.‘நாண் எலாம் துறந்தேன்; இல்லின்
    நன்மையின் நல்லார்க்கு ஏய்ந்த
பூண் எலாம் துறந்தேன்; என்தன்
    பொருசிலை மேகம் தன்னைக்
காணலாம் என்னும் ஆசை
    தடுக்க, என் ஆவி காத்தேன்;
ஏண் இலா உடலின் நீங்கல்
    எளிது, எனக்கு எனவும் சொன்னாள்.
31

உரை
   
 
சீதையை அரக்கியர் மீண்டும் அசோகவனத்திற்குச் செலுத்துதல்

8835.தையலை, இராமன் மேனி
    தைத்த வேல் தடங் கணாளை,
கைகளில் பற்றிக் கொண்டார்,
    விமானத்தைக் கடவுகின்றார்,
மெய்யுயிர் உலகத்து ஆக,
    விதியையும் வலித்து, விண்மேல்
பொய்யுடல் கொண்டு செல்லும்
    நமனுடைத் தூதர் போன்றார்.
32

உரை