கொணர்ந்த உணவைப் பாசறையில் சேர்த்த வீடணன் களத்தையடைதல்

8836.போயினள் தையல்; இப்பால்
    புரிக எனப் புலவர் கோமான்
ஏயின கருமம் நோக்கி,
    எய்திய இலங்கை வேந்தன்,
மேயின உணவு கொண்டு,
    மீண்டு, அவை உறையுள் விட்ட
ஆயின ஆக்கி, தான் வந்து,
    அமர் பெருங் களத்தன் ஆனானான்,
1

உரை
   
 
வீடணன் வானரசேனை முற்றும் மாய்ந்துள்ளமை கண்டு மயங்கி வீழ்தல்

8837.நோக்கினான் கண்டான் பண்டு, இவ்
    உலகங்கள் படைக்க நோற்றான்
வாக்கினால் மாண்டார் என்ன,
    வானர வீரர் முற்றும்
தாக்கினார் எல்லாம் பட்ட
    தன்மையை; விடத்தைத் தானே
தேக்கினான் என்ன நின்று
    தியங்கினான், உணர்வு தீர்ந்தான்.
2

உரை
   
 
வீழ்ந்த வீடணன் மெல்ல எழுந்து சென்று இராமன் இலக்குவனோடும் வீழ்ந்துகிடப்பதைக் காணுதல்

8838.விளைந்தவாறு உணர்ந்திலாதான்,
    ஏங்கினான், வெதும்பினான்; மெய்
உளைந்து உளைந்து உயிர்த்தான்; ‘ஆவி
    உண்டு, இலை ‘என்ன, ஓய்ந்தான்;
வளைந்த பேய்க் கணமும் நாயும்
    நரிகளும் இரிய, வந்தான்;
இளங்கிளையோடும் சாய்ந்த
    இராமனை இடையில் கண்டான்.
3

உரை
   
 
வீடணனது அன்பு அவன் கண்ணீரால் புலப்படுகின்றது

கவிக்கூற்று

8839.என்பு என்பது, யாக்கை என்பது,
    உயிர் என்பது இவைகள் எல்லாம்
பின்பு என்பது, அல்லது; என்றும்
    தம்முடைய நிலையின் பேரா
முன்பு என்பது, உளது; என்றாலும்
    முழுவதும் தரெிந்த ஆற்றால்
அன்பு என்பது ஒன்றின் தன்மை
    அமரரும் அறிந்தது இன்றால்
4

உரை
   
 
வீடணன் புலம்பாது விம்மி இராமன் மேனி கண்டு நடுக்கம் தீர்தல்

8840.ஆயினும், ‘இவருக்கு இல்லை
    அழிவு‘ எனும் அதனால் ஆவி
போயினது இல்லை; வாயால்
    புலம்பலன், பொருமி; பொங்கித்
தீயினும் எரியும் நெஞ்சின்
    வெருவலால் தரெிய நோக்கி
‘நாயகன் மேனிக்கு இல்லை
    வடு‘ என நடுக்கம் தீர்ந்தான்.
5

உரை
   
 
இராம இலக்குவர் வீழ்ந்து கிடத்திற்குக் காரணமும் தீர்வும் தேர்தல்

8841.அந்தணன் படையால் வந்தது
    என்பதும், ஆற்றல் சான்ற
இந்திரசித்தே எய்தான்
    என்பதும், இளவற்கு ஆக
நொந்தனன் இராமன் என்னும்
    நுண்மையும், நொய்தின் நோக்கி,
சிந்தையின் எண்ணி எண்ணி,
    தீர்வது ஓர் உபாயம் தேர்வான்.
6

உரை
   
 
இராமன் மூர்ச்சையுற்றமை நினைந்து வீடணன் கண்ணீர் சொரிதல் (8842-8843)

8842.‘உள்ளுறு துன்பம் ஊன்ற,
    உற்றனன் உறக்கம் அன்றோ?
தெள்ளிதின் உணர்ந்த பின்னை,
    சிந்தனை தரெிவது அன்றே;
வள்ளலோ, தம்பி மாய
    வாழ்கிலன்; மாய வாழ்க்கைக்
கள்ளனோ? என்றான்; என்னா,
    மழை எனக் கலுழும் கண்ணான்.
7

உரை
   
 
8843.பாசம் போய் இற்றாற் போலப்
    பதுமத்தோன் படையும் இன்னே
நாசம் போய் எய்தும்; நம்பி
    தம்பிக்கு நடுக்கம் இல்லை;
வீசும் போர்க் களத்து வீழ்ந்த
    சேனையும் மீளும்; வெய்ய
நீசன் போர் வெல்வது உண்டோ?
    என்று உளம் நிலையில் நின்றான்
8

உரை
   
 
இறவாதவர் யாரேனும் உளரோ என வீடணன் தேடச் செல்லுதல்

8844.‘உணர்வதன் முன்னம், இன்னே
    உற்றுழி உதவற்கு ஒத்த
துணைவர்கள், துஞ்சல் இல்லார்,
    உளரெனின், துருவித் தேடிக்
கொணர்குவென், விரைவின் ‘என்னா,
    கொள்ளி ஒன்று அங்கை கொண்டான்
புணரியின் குருதி வெள்ளத்து
    ஒருதனி விரைவில் போனான்.
9

உரை
   
 
வீடணன் அனுமன் வீழ்ந்துகிடப்பதைக் காணுதல்

8845.வாய் மடித்து, இரண்டு கையும்
    முறுக்கி, தன் வயிரச் செங்கண்
தீ உக, கனகக் குன்றின்
    திரண்டதோள் மழையைத் தீண்ட
ஆயிர கோடி யானைப்
    பெரும்பிணத்து அமளி மேலான்,
காய் சினத்து அனுமன் என்னும்
    கடல் கடந்தானைக் கண்டான்.
10

உரை
   
 
வீடணன் அனுமனுடம்பிலுள்ள அம்புகளை நீக்கி முகத்தை நீரால் குளிர்வித்தல்

8846.கண்டு, தன் கண்கள் ஊடு
    மழை எனக் கலுழி வார
‘உண்டு உயிர் ‘என்பது உன்னி,
    உடல் கணை ஒன்று ஒன்று ஆக,
விண்ட நீர்ப் புண்ணின் நின்று
    மெல்லென வாங்கிக் கையால்
கொண்டல் நீர் முகந்து கொண்டு
    முகத்தினைக் குளிரச் செய்தான்.
11

உரை
   
 
அனுமன் விழித்து இராம நாமத்தைச் சொல்லி
வாழ்த்துதல்

8847.உயிர்ப்பு முன் உதித்த, பின்னர்,
    உரோமங்கள் சிலிர்ப்ப, ஊறி
வியர்ப்பு உளதாக, கண்கள்
    விழித்தன, மேனி மெல்லப்
பெயர்த்து, வாய் புனல் வந்து ஊற,
    விக்கலும் பிறந்ததாக,
அயர்த்திலன் இராமன் நாமம்,
    வாழ்த்தினன்; அமரர் ஆர்த்தார்.
12

உரை
   
 
அனுமன் இராமனைப்பற்றி உசாவி அறிதல்

8848.அழுகையோடு உவகை உற்ற
    வீடணன் ஆர்வம் கூர,
தழுவினன் அவனை, தானும்
    அன்பொடு தழுவி, ‘தக்கோய்!
வழு இலன் அன்றே, வள்ளல்? ‘
    என்றனன்; ‘வலியன் ‘என்றான்;
தொழுதனன், உலகம் மூன்றும்
    தலையின்மேல் கொள்ளும் தூயான்.
13

உரை
   
 
இராமனது துன்பத்துயிலை உணர்ந்த அனுமன், சாம்பன் எங்குளன் என்றல்

8849.‘அன்பு தன் தம்பி மேலது
    அறிவினை மயக்க ஐயன்
துன்பொடும் துயிலன் ஆனான்;
    உணர்வு இனித் தொடர்ந்த பின்னை
என் புகுந்து எய்தும் என்பது
    அறிகிலம்! ‘என்றலோடும்,
‘தன் பெருந் தன்மைக்கு ஒத்த
    சாம்பன் எத் தலையன்? ‘என்றான்.
14

உரை
   
 
சாம்பனைத் தேடலாம் என அனுமன் கூறல்

8850.‘அறிந்திலென் அவனை; யாண்டும்
    கண்டிலென் “ஆவி யாக்கை
பிறிந்து இலன், உளன் ‘‘ என்று ஒன்றும்
    தரெிந்திலென், பெயர்ந்தேன் ‘என்று
செறிந்த தார் நிருதர் வேந்தன்
    உரைசெய, காலின் செம்மல்,
‘இறும் திறம் அவனுக்கு இல்லை;
    நாடுதும், ஏகி ‘என்றான்.
15

உரை
   
 
அனுமன் வீடணனோடு சென்று சாம்பனைச் சார்தல்

8851.‘அன்னவன் தன்னைக் கண்டால்
    ஆணையே, அரக்கர்க்கு எல்லாம்
மன்னவ! நம்மை ஈண்டு
    வாழ்விக்கும்; உபாயம் வல்லான் ‘
என்னலும், ‘உய்ந்தோம், ஐய!
    எகுதும். விரைவின் ‘என்றான்,
சில்நெறி இருளில் சென்றார்,
    சாம்பனை விரைவில் சேர்ந்தார்.
16

உரை
   
 
அவர் வருகையைச் சாம்பன் செவிவாயிலாக அறிதல்

8852.எரிகின்ற மூப்பினாலும்,
    ஏவுண்ட நோவினாலும்,
அரிகின்ற துன்பத்தாலும்,
    ஆர் உயிர்ப்பு அடங்கி, ஒன்றும்
தரெிகின்றது இல்லா மம்மர்ச்
    சிந்தையன் எனினும், வீரர்
வருகின்ற சுவட்டை ஓர்ந்தான்,
    செவிகளால் வயிரத் தோளான்.
17

உரை
   
 
வருபவர் யார் எனச் சாம்பன் கருதுதல்

8853.‘அரக்கனோ? என்னை ஆளும்
    அண்ணலோ? அனுமன் தானோ?
இரக்கம் உற்று அருள வந்த
    தேவரோ? முனிவரேயோ?
வரக் கடவார்கள் அல்லர்
    மாற்றலர் மலைந்து போனார்;
புரக்க உள்ளாரே! ‘என்னாக்
    கருதினன், பொருமல் தீர்ந்தான்.
18

உரை
   
 
உய்ந்தனம் ‘என்ற குரல்கேட்டு வீடணன் என்று சாம்பன் அறிதல் (8854-8855)

8854.வந்து அயல் நின்று, குன்றின்
    வார்ந்து வீழ் அருவி மானச்
சிந்திய கண்ணின் நீரர்
    ஏங்குவார் தம்மைத் தேற்றி,
‘அந்தமில் குணத்தீர் யாவிர்,
    அணுகினிர்? ‘என்றான்; ‘ஐய!
உய்ந்தனம்! உய்ந்தோம்! ‘என்ற
    வீடணன் உரையைக் கேட்டான்.
19

உரை
   
 
8855.‘மற்று அயல் நின்றான் யாவன்? ‘
    என்ன, மாருதியும், வாழி!
கொற்றவ! அனுமன் நின்றேன்;
    தொழுதனென் ‘என்று கூற
இற்றிலம், ஐய, எல்லேம்
    எழுந்தனம், எழுந்தேம்! ‘என்னா,
உற்ற பேர் உவகையாலே,
    ஓங்கினான், ஊற்றம் மிக்கான்.
20

உரை
   
 
இராமன் நிலையைச் சாம்பன் வினவியறிதல்

8856.‘விரிஞ்சன் வெம்படை என்றாலும்,
    வேதத்தின் வேதம் அன்ன
அரிந்தமன் தன்னை ஒன்றும்
    ஆற்றிலது என்னும் ஆற்றல்
தரெிந்தனென்; முன்னே, அன்னான்
    செய்தது என்? தரெித்தி ‘என்றான்;
‘பெருந்தகை துன்ப வெள்ளத்
    துயில் உளான், பெரும! ‘என்றான்.
21

உரை
   
 
சாம்பன் அனுமனை மருந்து கொணர்க எனல்

8857.‘அன்னவன் தன்மை கண்டால்
    ஆற்றுமே? யாக்கை வேறே;
இன்னுயிர் ஒன்றே மூலத்து
    இருவரும் ஒருவரே யால்;
இன்னது கடக்கத் தாழாது
    இப்பொழுது இமைப்பின் முன்னம்
கொன்னியல் வயிரத் தோளாய்
    மருந்துபோய்க் கொணர்தி ‘என்றான்.
22

உரை
   
 
மருந்து கொணர்வதால் உளதாம் பயன்

8858.‘எழுபது வெள்ளத்தோரும்,
    இராமனும், இளைய கோவும்,
முழுதும் இவ் உலகம் மூன்றும்,
    நல்லற மூர்த்தி தானும்,
வழுவல் இல் மறையும், உன்னால்
    வாழ்ந்தன ஆகும்; மைந்த!
பொழுது இறை தாழாது, என் சொல்
    நெறி தரக் கடிது போதி.
23

உரை
   
 
சாம்பன் மருத்துமலைக்கு வழிகூறல் (8859-8861)

8859.‘பின்பு உளது இக் கடல் என்னப் பெயர்ந்ததற்பின்
    யோசனைகள் பேச நின்ற
ஒன்பதினாயிரம் கடந்தால், இமயமெனும்
    குலவரையை உறுதி; உற்றால்,
தன்பெருமை ஓர் இரண்டாயிரம் உளது
    யோசனை; பின் தவிரப் போனால்,
முன்பு உள யோசனை எல்லாம்முற்றினை,
    பொன் கூடம் சென்று உறுதி ‘மொய்ம்ப!
24

உரை
   
 
8860.இம்மலைக்கும் ஒன்பதினாயிரம் உளதாம்
    யோசனையின் நிடதம் என்னும்
செம்மலைக்கும் உளவாய அத்தனை
    யோசனை கடந்தால் சென்று காண்டி
எம்மலைக்கும் பெரிது ஆய வடமலையை;
    அம்மலையின் அகலம் எண்ணின்,
மொய்மலைந்த திண்தோளாய்! முப்பத்து ஈர்
    ஆயிரம் யோசனையின் முற்றும்.
25

உரை
   
 
8861.மேருவினைக் கடந்து, அப்பால் ஒன்பதினாயிரம்
    உள யோசனையை விட்டால்,
நேர் அணுகும் நீலகிரி; தான் இரண்டாயிரம்
    உளயோ சனையின் நிற்கும்;
மாருதி! மற்று அதற்கு அப்பால் யோசனை
    நாலாயிரத்து மருந்து வைகும்
கார்வரையைக் காணுதி; மற்று அதுகாண
    இத்துயர்க்குக் கரையும் காண்டி.
26

உரை
   
 
நால்வகை மருந்துகளின் நல் இயல்பு கூறுதல்

8862.‘மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும்,
    உடல் வேறு வகிர்கள் ஆகக்
கீண்டாலும் பொருந்துவிக்கும் ஒரு மருந்தும்,
    படைக்கலங்கள் கிளைப்பது ஒன்றும்,
மீண்டேயும் தம் உருவை அருளுவது ஓர்
    மெய்ம்மருந்தும், உள; நீ, வீர!
ஆண்டு ஏகிக் கொணர்தி ‘என அடையாளத்தொடும்
    உரைத்தான், அறிவின் மிக்கான்.
27

உரை
   
 
சாம்பன் இம் மருந்துகளைப்பற்றித் தான் அறிந்த வரலாற்றைக் கூறியது (8863-8864)

8863.இன்ன மருந்து ஒரு நான்கும், பயோத்தியைக்
    கலக்கிய ஞான்று, எழுந்த; தேவர்
உன்னி அமைத்தனர்; மறைக்கும் எட்டாத
    பரஞ்சுடர் இவுலகம் மூன்றும்
தன் இரு தாள் உள்ளடக்கிப் பொலி போழ்தின்
    யான் முரசம் சாற்றும் வேலை,
அன்னவை கண்டு, உயாவுதலும், தொல்முனிவர்
    அவற்று இயல் எற்கு அறிவித்தாரால்.
28

உரை
   
 
8864.‘இம்மருந்து காத்து உறையும் தயெ்வங்கள்
    எண்ணிலவால்; இரங்கா, யார்க்கும்;
நெய்ம்மருங்கு படரகில்லா நெடுநேமிப்
    படையும் அவற்றுடனே நிற்கும்;
பொய்ம்மருங்கின் நில்லாதாய்! புரிகின்ற
    காரியத்தின் பொருளை நோக்கிக்
கைம்மருங்கு தொடர்ந்து உன்னைக் ‘காவாய்‘ என்று
    அப்புறம் போய்க் கரக்கும் என்றான்.
29

உரை
   
 
மாருதி மருத்துமலை கொணரப் பேருருவெடுத்தல்

8865.‘ஈங்கு இதுவே பணி ஆகில், இறந்தோரும்
    பிறந்தோரே : எம் கோற்கு யாதும்,
தீங்கு இடையூறு எய்தாமல், தரெுட்டுதிர் போய் ‘
    எனச் சொல்லி, அவரைத் தீர்ந்தான்
ஓங்கினன் வான் நெடு முகட்டை உற்றனன்,
    பொன் தோளிரண்டும் திசையோடு ஒக்க
வீங்கின; ஆகாயத்தை விழுங்கினனே
    என வளர்ந்தான் வேதம் போல்வான்.
30

உரை
   
 
அனுமனது பேருருவின் பெருமை

8866.கோேளாடு தாரகைகள், கோத்து அமைத்த
    மணி ஆரக் கோவை போன்ற;
தோேளாடு தோள் அகலம் ஆயிரம் யோசனை
    அளவு சொல்ல ஒண்ணா;
தாேளாடு தாள் பெயர்க்க, இடமிலது
    ஆயினது இலங்கை; தடக் கை வீச,
நீேளாடு திசை போதா; விசைத்து எழுவான்
    உருவத்தின் நிலை ஈது அம்மா.
31

உரை
   
 
8867.வால் விசைத்து, கை நிமிர்த்து, வாயினையும்
    சிறிது அகல வகுத்து, மானக்
கால் நிலத்தினிடை ஊன்றி, உரம் நெருக்கி
    கழுத்தினையும் சுருக்கிக் காட்டி
தோல் மயிர்க் குந்தளம் சிலிர்ப்ப, விசைத்து
    எழுந்தான், அவ் விலங்கை, துளங்கிச் சூழ்ந்த
வேலையில் புக்கு அழுந்தியது ஓர் மரக் கலம் போல்
    சுரித்து உலைய விசயத் தோளான்
32

உரை
   
 
அனுமனது வேகத்தால் நிகழ்ந்தவை (8868-8869)

8868.கிழிந்தன, மாமழைக் குலங்கள், கீண்டது, நீண்டு
    அகல் வேலை; கிழக்கும் மேற்கும்;
பொழிந்தன, மீன்; தொடர்ந்து எழுந்த, பொருப்பு
    இனமும், தருக் குலமும், பிறவும், பொங்கி;
அழிந்தன வானவர் மானம், ஆகாயத்
    திசையினில் பேர் அசனி என்ன
விழுந்தன, நீர்க் கடல் அழுந்த; ஏறின மேல்,
    கீறின போய்த் திசைகள் எல்லாம்.
33

உரை
   
 
8869.பாய்ந்தனன், அங்கு அப்பொழுதே;
    பருவரைகள் எனைப் பலவும் வடபாகத்துச்
சாய்ந்தன‘ பேருடல் பிறந்த
    சண்டமாருதம் வீசத் தாதை சால
ஓய்ந்தனன் ‘என்று உரை செய்ய,
    விசும்பூடு படர்கின்றான் உரு வேகத்தால்,
காய்ந்தன வேலைகள்; மேகம் கரிந்தன;
    வெந்து எரிந்த பெருங்கானம் எல்லாம்
34

உரை
   
 
அனுமன் பேருருவத்தை நோக்கித் தேவர் புகழ்தல்
(8870-8871)

8870.கடன் முன்னே நிமிர்ந்து ஓட, கால் பின்னே
    தொடர்ந்து ஓட, கடிதின் செல்வான்
உடல் முன்னே செல, உள்ளம் கடைக் குழையாய்ச்
    செல, செல்வான் உருவை நோக்கி,
‘அடல் முன்னே தொடங்கியநாள், ஆழ்கடல், சூழ்
    இலங்கை எனும் அரக்கர் வாழும்
திடல் முந்நீர் இடைப்படுத்து மறித்திலன்
    நம்துயர் என்றார் தேவரெல்லாம்.
35

உரை
   
 
8871.மேகத்தின் பதம் கடந்து, வெங்கதிரும்
    தண்கதிரும் விரைவில் செல்லும்
மாகத்தின் நெறிக்கு அப்பால், வானமீன்
    குலம் விளங்கும் வரம்பு நீங்கி,
போகத்தின் நெறி கடந்தார் புகலிடங்கள்
    பிற்படப் போய், ‘பூவின் வந்த
ஏகத்து அந்தணன் இருக்கை இனிச் சேய்த்து
    அன்றாம் ‘என்ன எழுந்து சென்றான்.
36

உரை
   
 
விண்வழிச் செல்லும் அனுமனைக் கண்டு விண்ணவர் பலவாறு கூறுதல்

8872.வான நாட்டு உறைகின்றார், ‘வயக் கலுழன்
    வல்விசையால், மாயன் வைகும்
தான நாட்டு எழுகின்றான் ‘என்று உரைத்தார்
    சிலர் சிலர்கள் ‘விரிஞ்சன்தான் தன்
ஏனநாட்டு எழுகின்றான் ‘என்று உரைத்தார்
    சிலர் சிலர்கள் ‘ஈசன் அல்லால்
போன நாட்டிடை போக வல்லரோ?
    இவன் முக்கண் புனிதன் ‘என்றார்.
37

உரை
   
 
அனுமனைத் திருமாலாகவே எண்ணுதல்

8873.‘வேண்டு உருவம் கொண்டு எழுந்து,
    விளையாடுகின்றான், மெய் வேதம் நான்கும்
தீண்டு உருவன் அல்லாத திருமாலே
    இவன்‘ என்றார், ‘தரெிய நோக்கிக்
காண்டும்‘ என இமைப்பதன்முன் கண் புலமும்
    கடந்து அகலும்; இன்னும் காண்மின்,
மீண்டு வரும் தரம் அல்லன், வீட்டு உலகம்
    புகும்‘ என்றார், மேன்மேல் உள்ளார்.
38

உரை
   
 
அனுமனுருவைப் பற்றிப் பலவாறு எண்ணுதல்

8874.‘உரு‘ என்றார் சிலர்சிலர்கள்; ‘ஒளி‘ என்றார்.
    சிலர்சிலர்கள் ஒளிரு மேனி
‘அரு‘ என்றார்; சிலர்சிலர்கள் அண்டத்துக்கு
    அப்புறம் நின்று உலகம் ஆக்கும்
‘கரு‘ என்றார், சிலர்சிலர்கள்; ‘மற்று‘ என்றார்,
    சிலர்சிலர்கள்; கடலைத் தாவிச்
செரு வென்றான் நிலை ஒன்றும் தரெியகிலார்
    உலகு அனைத்தும் தரெியும் செல்வர்.
39

உரை
   
 
அனுமன் வேகத்தால் உண்டான ஒலி

8875.வாச நாள் மலரோன்தன் உலக அளவும்
    நிமிர்ந்தனன், மேல்வானம் ஆன
காசம் ஆயின எல்லாம் கரந்த தனது
    உரு இடையே கனகத் தோள்கள்
வீச, வான் முகடு உரிஞ்ச, விசைத்து எழுவான்
    உடல் பிறந்த முழக்கம் விம்ம
ஆசை காவலர் தலைகள் பொதிரெறிந்தார்
    விதிர் எறிந்தது அண்ட கோளம்.
40

உரை
   
 
அனுமன் பேருருவம் உலகளக்க எடுத்த பாதத்தை ஒத்துத் தோன்றல்

8876.தொடுத்த நாள் மாலை வானோர்
    முனிவரே முதல தொல்லோர்,
அடுத்த நான் மறைகள் ஓதி
    வாழ்த்த, வாள் அவுணர் வேந்தன்
கொடுத்த நாள், அளந்து கொண்ட
    குறளனார் குறிய பாதம்
எடுத்த நாள் ஒத்தது அண்ணல்
    எழுந்த நாள், உலகுக்கு எல்லாம்.
41

உரை
   
 
வானவர் முதலோர் சொரிந்த மலர் முதலியவற்றால் அனுமன் கற்பகத் தருப்போலத் தோன்றுதல்

8877.தேவரும் முனிவர் தாமும்,
    சித்தரும் தரெிவைமாரும்,
மூவுலகிடை உேளாரும்
    உவகையால் தொடர்ந்து மொய்த்தார்
தூவின மலரும் சாந்தும்
    சுண்ணமும் மணியும் தொத்த,
பூவுடை அமரர் தயெ்வத்
    தரு என, விசும்பில் போனான்.
42

உரை
   
 
அனுமன் கயிலைகண்டு மகிழ்ந்து போதல்

8878.இமய மால் வரையை உற்றான்;
    அங்கு உள இமைப்பு இலோரும்;
கமை உடை முனிவர், மற்றும்
    அறன்நெறி கலந்தோர்; எல்லாம்;
‘அமைக, நின் கருமம். “ என்று
    வாழ்த்தினர்; அதனுக்கு அப்பால்;
உமையொரு பாகன் வைகும்
    கயிலை கண்டு; உவகை உற்றான்.
43

உரை
   
 
சிவன் அனுமனை உமைக்குக்காட்டிக் கூறுதல்

8879.வடகுண திசையில் தோன்றும்,
    மழுவலான் ஆண்டு வைகும்
தடவரை அதனை நோக்கி,
    தாமரை கைகள் கூப்பி,
படர்குவான் தன்னை, அண்ணல்
    பரமனும் விரும்பிப் பார்த்துத்
தடமுலை உமைக்குக் காட்டி
    வாயுவின் தநயன் என்றான்.
44

உரை
   
 
உமையின் வினாவுக்குச் சிவன் விடை பகர்தல்

8880.‘என், இவன் எழுந்த தன்மை? ‘
    என்று, உலகு ஈன்றாள் கேட்ப
‘மன்னவன் இராமன் தூதன்
    மருந்தின்மேல் வந்தான்; வஞ்சர்
தனெ் நகர் இலங்கைத் தீமை
    தீர்வது திண்ணம்; சேர்ந்து,
நல் நுதல்! நாமும் வெம்போர்
    காணுதும், நாளை ‘என்றான்.
45

உரை
   
 
அனுமன் ஏமகூடத்தையும் நிடதத்தையும் முறையே
அடைதல்

8881.நாம யோசனைகள் கொண்டது
    ஆயிரம் நடுவு நீங்கி,
ஏம கூடத்தின் உம்பர்
    எய்தி நின்று, இறுதி இல்லாக்
காமமே நுகரும் செல்வக்
    கடவுளர் ஈட்டம் கண்டான்;
நேமியின் விசையின் செல்வான்
    நிடதத்தின் நெற்றி உற்றான்.
46

உரை
   
 
அனுமன் மேருமலையை அடைதல்

8882.எண்ணுக்கும், அளவு இலாத
    அறிவினோர் இருந்து நோக்கும்
கண்ணுக்கும், கருதும் தயெ்வ
    மனத்திற்கும் கடியன் ஆனான்,
மண்ணுக்கும், திசைகள் வைத்த
    வரம்பிற்கும், மலரோன் வைகும்
விண்ணுக்கும், அளவை ஆய
    மேருவின் மீது சென்றான்.
47

உரை
   
 
மேருமலையில் நாவல் மரத்தை அனுமன் பார்த்தல்

8883.‘யாவது நிலைமைத் தன்மை
    இன்னது, என்று ‘இமையா நாட்டத்
தேவரும் தரெிகிலாத
    வடமலைக்கு உம்பர்ச் சென்றான்;
நாவலம் பெருந்தீவு என்னா
    நளிர்கடல் வளாக வைப்பில்
காவல் மூன்று உலகம் ஓதும்
    கடவுள் மா மரத்தைக் கண்டான்.
48

உரை
   
 
மேருமலையின் நடுவில் உள்ள பிரமனைக்
கண்டு வணங்குதல்

8884.அன்ன மா மலையின் உம்பர்,
    உலகு எலாம் அமைத்த அண்ணல்
தன்னகர் அதனை நோக்கி,
    அதன் நடு நாப்பண் நாமப்
பொன்மலர்ப் பீடம் தன்மேல்
    நான்முகன் பொலியத் தோன்றும்
தன்மையும் கண்டு கையால்
    வணங்கினான் தருமம் போல்வான்.
49

உரை
   
 
அனுமன் வைகுண்டத்தில் நாரணனைக் கண்டுவணங்குதல்

8885.தருவனம் ஒன்றில் வானோர்
    தலைத் தலை மயங்கித் தாழ,
பொரு அரு முனிவர் வேதம்
    புகழ்ந்து உரை ஓதை பொங்க,
மரு விரி துளப மோலி
    மாநிலக் கிழத்தியோடும்
திருவொடும் இருந்த, மூலத்
    தேவையும் வணக்கம் செய்தான
50

உரை
   
 
ஈசனைக் கண்டு வணங்குதல்

8886.ஆயதன் வடகீழ் பாகத்து
    ஆயிரம் அருக்கர் ஆன்ற
காய்கதிர் பரப்பி, ஐந்து
    கதிர்முகக் கமலம் காட்டி
தூயபேர் உலகம் மூன்றும்
    தூவிய மலரின் சூழ்ந்த
சேயிழை பாகத்து, எண்தோள்
    ஒருவனை வணக்கம் செய்தான்.
51

உரை
   
 
திசை காவலரில் இந்திரனைக் கண்டு வணங்குதல்

8887.சந்திரன் அனைய கொற்றத்
    தனிக்குடை தலைமேல் ஓங்க,
சுந்தர மகளிர் அங்கைச்
    சாமரை தனெ்றல் தூவ,
அந்தர வான நாடர்
    அடிதொழ, முரசம் ஆர்ப்ப,
இந்திரன் இருந்த தன்மை
    கண்டு உவந்து, இறைஞ்சிப் போனான்.
52

உரை
   
 
திசைக் காப்போரைக் காண்டல்

8888.பூஅலர் மரத்தைப் போல
    அந்தரம் விரிந்து பொங்கும்
தேவர்தம் இருக்கையான
    மேருவின் சிகர வைப்பில்
மூவகை உலகம் சூழ்ந்த
    முரண் திசை முறையின் காக்கும்
காவலர் எண்மர் நின்ற
    தன்மையும் தரெியக் கண்டான்.
53

உரை
   
 
சூரியனைக் கண்டு துன்புறுதல்

8889.அத்தடங் கிரியை நீங்கி,
    அத்தலை அடைந்த அண்ணல்,
உத்தர குருவை உற்றான்;
    ஒளியவன் கதிர்கள் ஊன்றி,
செற்றிய இருள் இன்று ஆக்கி
    விளங்கிய செயலை நோக்கி
வித்தகன், ‘விடிந்தது ‘என்னா,
    ‘முடிந்தது என் வேகம் ‘என்றான்.
54

உரை
   
 
8890.‘ஆதியான் உணரா முன்னம்
    அருமருந்து உதவி, அல்லின்
பாதியால், அனைய துன்பம்
    அகற்றுவான் பாவித்தேற்குச்
சோதியான் உதயம் செய்தான்;
    உற்றதோ துணிதல் ஆற்றேன்;
ஏது யான் செய்வது? என்னா,
    இடர் உற்றான், இணை இலாதான்.
55

உரை
   
 
8891.கால் திசை சுருங்கச் செல்லும்
    கடுமையான் கதிரின் செல்வன்
மேல்திசை எழுவான் அல்லன்;
    விடிந்ததும் அன்று; மேரு
மாற்றினன் வடபால் தோன்றும்
    என்பது மறைகள் வல்லோர்
சாற்றினர் என்னத் துன்பம்
    தணிந்தனன் தவத்தின் மிக்கான்.
56

உரை
   
 
உத்தரகுரு நாட்டைக் காணுதல் (8892-8893)

8892.இருவரே தோன்றி என்றும்
    ஈறு இலா ஆயுள் எய்தி,
ஒருவரோடு ஒருவர், உள்ளம்
    உயிரொடும் ஒன்றே ஆகி,
பொரு அரும் இன்பம் துய்த்து,
    புண்ணியம் புரிந்தோர் வைகும்
திரு உறை கமலம் அன்ன
    நாட்டையும் தரெியக் கண்டான்.
57

உரை
   
 
8893.வன்னி நாட்டிய பொன் மௌலி
    வானவன், மலரின் மேலான்
கன்னி நாள் திருவைச் சேரும்
    கண்ணனும், ஆளுங் காணி
சென்னி நாள் தரெியல் வீரன்
    தியாகமா விநோதன் தயெ்வப்
பொன்னி நாட்டு உவமை வைப்பைப்
    புலன்கொள நோக்கிப் போனான்.
58

உரை
   
 
அனுமன் நீலமலையைக் காணுதல்

8894.விரியவன் மேரு என்னும்
    வெற்பினின் மீது செல்லும்
பெரியவன்; அயனார் செல்வம்
    பெற்றவன்; பிறப்பும் பேர்ந்தான்;
அரியவன், உலகம் எல்லாம்
    அளந்த நாள் வளர்ந்து தோன்றும்
கரியவன் என்ன நின்ற
    நீல மால் வரையைக் கண்டான்.
59

உரை
   
 
மருத்துமலையைக் காணுதல்

8895.அல் குன்ற அலங்கு சோதி
    அம்மலை அகலப் போனான்,
பொன்குன்றம் அனைய தோளான்
    நோக்கினான்; புலவன் சொன்ன
நல்குன்றம் அதனைக் கண்டான்,
    உணர்ந்தனன் ‘நாகம் உற்ற
எல் குன்ற எறியும் தயெ்வ
    மருந்து அடையாளம் ‘என்ன.
60

உரை
   
 
மருந்து காக்கும் தயெ்வங்கள் கேட்டவற்றை மாருதி விளக்குதல் (8896-8897)

8896.பாய்ந்தனன்; பாய்தலோடும்,
    அம்மலை பாதலத்துச்
சாய்ந்தது; காக்கும் தயெ்வம்
    சலித்தன; கடுத்து வந்து
காய்ந்தனை; நீதான் யாவன்?
    கருத்து என்கொல்? கழறுக என்ன
ஆய்ந்தவன்; உற்ற தன்மை
    அவற்றினுக்கு அறியச் சொன்னான்.
61

உரை
   
 
மருந்தினை மீட்டுங் கொணர்க எனச் சொல்லித் தயெ்வங்கள் மறைதல்

8897.கேட்டு அவை, ‘ஐய! வேண்டிற்று
    இயற்றி, பின் கெடாமல் எம்பால்
காட்டு‘ என உரைத்து, வாழ்த்திக்
    கரந்தன, கமலக் கண்ணன்
வாள் தலை நேமி தோன்றி,
    மறைந்தது; மண்ணில் நின்றும்
தோட்டனன், அனுமன் மற்று அக்
    குன்றினை, வயிரத் தோளால்.
62

உரை
   
 
மருத்துமலையைக் கையால் அசைத்தல்

8898.‘இங்கு நின்று இன்னன மருந்து என்று எண்ணினால்
சிங்குமால் காலம்’என்று உணரும் சிந்தையான்
அங்கு அதை வேரொடும் அங்கை தாக்கினான்
பொங்கிய விசும்பிடைக் கடிது போகுவான்.
63

உரை
   
 
மாருதி மருத்துமலையை ஒரு கையில் ஏந்திச் செல்லுதல் (8899-8900)

8899.ஆயிரம் யோசனை அகன்று மீது உயர்ந்து
ஆயிரம் யோசனை சூழ்ந்தது அம்மலை
‘ஏ’எனும் மாத்திரத்து ஒரு கை ஏந்தினான்
தாயினன் உலகு எலாம் தவழ்ந்த சீர்த்தியான்.
64

உரை
   
 
8900.அத்தலை அன்னவன் அனையன் ஆம்துணை
இத்தலை இருவரும் விரைவின் எய்தினார்
கைத்தலத்தால் அடி வருடும் காலையில்
உத்தமற்கு உற்றதை உணர்த்து வாம் அரோ.
65

உரை
   
 
இராமன் கண் மலர்தல்

8901.விண்டன மடந்தையர் மனத்தை வேரொடும்
கண்டன களவு அறும் கருணைத்து ஆம் எனக்
கொண்டன கொடுப்பன வரங்கள் கோள் இலா
புண்டரீகம் துணை நயனம் பூத்தன.
66

உரை
   
 
இராமன் சாம்பனையும் வீடணனையும் காணுதல்

8902.நோக்கினன் கரடிகட்கு அரசும் நோன்புகழ்
ஆக்கிய நிருதனும் அழுத கண்ணினர்
தூக்கிய தலையினர் தொழுத கையினர்
ஏக்கமுற்று அருகு இருந்து இரங்குவார்களை;
67

உரை
   
 
இராமன் அவ் விருவரையும் உசாவுதல் (8903-8905)

8903.‘ஏவிய காரியம் இயற்றி எய்தினை
நோவிலை; வீடணா! என்று நோக்கிப் பின்
சாவு அரும் பெரும்புகழ்ச் சாம்பன்தன்னை நீ
ஆவி வந்தனை கொல்? ‘என்று அருளினான் அரோ.
68

உரை
   
 
8904.‘ஐயன்மீர்; நமக்கு உற்ற அழிவு இது ஆதலின்
செய்வகை பிறிது இலை; உயிரின் தீர்ந்தவர்
உய்கிலர்; இனிச் செயற்கு உரியது உண்டு எனின்
பொய்யிலீர்! புகலுதிர் புலமை உள்ளத்தீர்!
69

உரை
   
 
8905.சீதை என்று ஒருத்தியால் உள்ளம் தேம்பிய
பேதையேன் சிறுமையால் உற்ற பெற்றியை
யாது என உணர்த்துகேன்! உலகம் ஓதிடும்
காதை வன் பழியொடும் திருத்திக் காட்டினேன்.
70

உரை
   
 
இராமன் பெண்சொல் கேட்ட தன்பேதைமை நினைந்து வருந்துதல்

8906.“மாயை இம்மான் ” என எம்பி வாய்மையால்
தூயன உறுதிகள் சொன்ன சொல் கொளேன்
போயினென் பெண் உரை மறாது; போகலால்
ஆனது இப்பழியுடை மரணம் அன்பினீர்!
71

உரை
   
 
இராவணனைக் கண்டு அமர்புரிந்தும் கொல்லாதுவிட்டதை நினைந்து வருந்தியது

8907.‘கண்டனென் இராவணன் தன்னைக் கண்களால்;
மண்டு அமர் புரிந்தனென் வலியின்; ஆருயிர்
கொண்டிலென் உறவு எலாம் கொடுத்து மாள நான்
பண்டுடைத் தீவினை பயந்த பண்பினால்.
72

உரை
   
 
இலக்குவனைப் பிரமாத்திரம் தொடுக்கலாகாதனெ்றது நினைந்திரங்கியது

8908.“தேவர்தம் படைக்கலம் தொடுத்து தீயவன்
சாவது காண்டும் “ என்று இளவல் சாற்றவும்
ஆவதை இசைந்திலன் அழிவது என்வயின்
மேவுதல் உறுவது ஓர் விதியின் வெம்மையால்.
73

உரை
   
 
இராமன் இலக்குவனுடன் நில்லாது போயதற்கு வருந்துதல்

8909.“நின்றிலென் உடன் எறிபடைக்கு நீதியால்
ஒன்றிய பூசனை இயற்ற உன்னினேன்;
பொன்றினர் நமரெலாம்; இளவல் போயினான்;
வென்றிலன் அரக்கனை விதியின் மேன்மையால்.
74

உரை
   
 
இராமன் இறத்தலே நலமென எண்ணுதல்

8910.ஈண்டு இருந்து இவை இவை இயம்பும் ஏழைமை
வேண்டுவது அன்று; இனி அமரின் வீடிய
ஆண்தகை அன்பரை அமரர் நாட்டிடைக்
காண்டலே நலம்; பிற கண்டது இல்லையால்.
75

உரை
   
 
எம்பியை இழந்தபின் ஏதும் வேண்டேன் எனல்
(8911-8915)

8911.‘எம்பியைத் துணைவரை இழந்த நான் இனி
வெம்புபோர் அரக்கரை முருக்கி வேர் அறுத்து
அம்பினால் இராவணன் ஆவி பாழ்படுத்து
உம்பருக்கு உதவி மேல் உறுவது என் அரோ?
76

உரை
   
 
8912.‘இளையவன் இறந்தபின் எவரும் என் எனக்கு?
அளவு அறு சீர்த்தி என்? அறமென்? ஆண்மை என்?
கிளை உறு சுற்றமென்? அரசு என்? கேண்மை என்?
விளைவுதான் என்? மறை விதி என்? மெய்ம்மை என்?
77

உரை
   
 
8913.‘இரக்கமும் பாழ்பட எம்பி ஈறு கண்டு
அரக்கரை வென்று நின்று ஆண்மை ஆள்வனேல்
மரக் கண் வன்கள்வனே! வஞ்சர் என்னில் ஆர்?
கரக்குமது அல்லது ஓர் கடன் உண்டாகுமோ?
78

உரை
   
 
8914.“தாதையை இழந்தபின் சடாயு வீய்ந்தபின்
காதலின் துணைவரும் முடிய காத்து உழல்
கோது அறு தம்பியும் விளிய கோள் இலன்
சீதையை உவந்துளன் “ என்பர் சீரியோர்.
79

உரை
   
 
8915.வென்றனென் அரக்கரை வேரும் வீய்ந்து அறக்
கொன்றனென் அயோத்தியைக் குறுகினேன் குணத்து
இன்துணைத் தம்பியை இன்றி யான் உளேன்
நன்று அரசு ஆளுமா சால நன்று அரோ.
80

உரை
   
 
இராமன் இறப்பேன் எனக் கூறச் சாம்பன் கூறுவது உளதனெல்

8916.படியின்மேல் காதலின் யாதும் பார்க்கலன்
‘முடிகுவென் உடன்’என முடியக் கூறலும்
அடி இணை வணங்கிய சாம்பன் ‘ஆழியாய்!
நொடிகுவது உளது’என நுவல்வதாயினான்.
81

உரை
   
 
சாம்பவன் சொன்னது (8917-8926)

8917.‘உன்னை நீ உணர்கிலை; அடியனேன் உனை
முன்னமே அறிகுவேன்; மொழிதல் தீது அது;
என்னெனில் இமையவர் எண்ணுக்கு ஈனமாம்;
பின்னரே தரெிகுதி; தரெிவு இல் பெற்றியோய்
82

உரை
   
 
8918.‘அம் புயத்து அயன் படை ஆதல் தேறினேன்
உம்பியை உலப்பு அரும் வலத்தை ஒத்தது
வெம்பு போர்க் களத்திடை விழுத்த வென்றியால்;
எம் பெருந் தலைவ! ஈது எண்ணம் உண்மையால்.
83

உரை
   
 
8919.‘அன்னவன் படைக்கலம் அமரர் தானவர்
தன்னையும் விடின் உயிர் குடிக்கும்; தற்பர!
உன்னை ஒன்று இழைக்கிலது ஒழிந்து நீங்கியது;
இன்னமும் அளவை ஒன்று எண்ண வேண்டுமோ?
84

உரை
   
 
8920.‘பெருந்திறல் அனுமன் ஈண்டு உணர்வு பெற்றுளான்
அருந்துயர் முடுக்குறும் அளவு இல் ஆற்றலான்
“மருந்து இறைப் பொழுதினில் கொணர்குவாய்! ” என
பொருந்தினன் வடதிசைக் கடிது போயினான்.
85

உரை
   
 
8921.‘பனிவரை கடந்தனன் பருப்பதங்களின்
தனி அரசு அதன்புறம் தவிர்ந்து சார்ந்துளான்
இனி ஒரு கணத்தின் வந்து எய்தும்; ஈண்டுறும்
துனிவரு துன்பம் நீ துடைத்தி தொல்லையோய்!
86

உரை
   
 
8922.‘யான் அலால் எந்தையாய் உலகை ஈன்றுளான்
தான் அலால் சிவன் அலால் நேமி தாங்கிய
கோன் அலால் எனைவரும் உணரும் கோள் இலர்
வேனலான் மேனியாய்! மருந்தை மெய்யுற.
87

உரை
   
 
8923.‘ஆர்கலி கடைந்த நாள் அமிழ்தின் வந்தன;
கார்நிறத்து அண்ணல்தன் நேமி காப்பன;
மேருவின் உத்தர குருவின் மேல் உள;
யாரும் உற்று உணர்கிலா அரணம் எய்தின.
88

உரை
   
 
8924.தோன்றிய நாள்முதல் யாரும் தொட்டில;
ஆன்ற பேர் அண்ணலே! அவற்றின் ஆற்றல் கேள்
மூன்று என ஒன்றிய உலகம் முன்னை நாள்
ஈன்றவன் இறப்பினும் ஆவி ஈயுமால்.
89

உரை
   
 
8925.‘சல்லியம் அகற்றுவது ஒன்று; சந்துகள்
புல்லுறப் பொருத்துவது ஒன்று; போயின
நல்லுயிர் நல்குவது ஒன்று; நல் நிறம்
தொல்லையது ஆக்குவது ஒன்று; தொல்லையோய்!
90

உரை
   
 
8926.‘வருவது திண்ணம்; நீ வருந்தல்; மாருதி
தருநெறி தருமமே காட்ட தாழ்க்கிலன்;
அருமையது அன்று ‘எனா அடி வணங்கினான்;
இருமையும் துடைப்பவன் ஏம்பல் எய்தினான்.
91

உரை
   
 
இராமன் சாம்பனதுரையை ஏற்கின்றபோது வடதிசையில் ஒலியெழுதல்

8927.“பொன்மலை மீதுபோய் போக பூமியின்
நல் மருந்து உதவும் “ என்று உரைத்த நல்லுரைக்கு
அன்வயம் இல்லை என்று அயிர்க்கின்றேன் அலேன்
என்னலும் வடதிசை எழுந்தது ஓங்கு ஒலி.
92

உரை
   
 
வடதிசையில் சண்ட மாருதம் தோன்றுதல்

8928.கடல் கிளர்ந்து எழுந்து மேல்படர கார்வரை
இடை இடை பறிந்து விண் ஏற இற்று இடை
தடை இலது உடற்றுறு சண்ட மாருதம்
வடதிசை தோன்றிய மறுக்கம் உற்றதால்.
93

உரை
   
 
விண்மீன் முதலியன நிலைகுலைதல்

8929.மீன்குலம் குலைந்து உக வெயிலின் மண்டிலம்
தான்குலைந்து உயர்மதி தழுவ தன் உழை
மான்குலம் வெருக் கொள மயங்கி மண்டி வான்
தேன்குலம் கலங்கிய நறவின் சென்றவால்.
94

உரை
   
 
அனுமன் ஆர்த்தல்

8930.வேர்த் துணர் தூரொடு விசும்பை மீச் செலப்
போர்த்தன மலையொடு மரனும் முன்புபோல்
தூர்த்தன வேலையை; காலின் தோன்றலும்
ஆர்த்தனன் அனையவர் அரந்தை ஆற்றுவான்.
95

உரை
   
 
அனுமன் ஆர்ப்பொலியின் சிறப்பு

8931.மழைகளும் கடல்களும் மற்றும் முற்றும் மண்
உழையவும் விசும்பவும் ஒலித்தற்கு ஒத்துள
குழீஇயின குமுறின கொள்கை கொண்டதால்
உழுவையின் சினத்தவன் ஆர்த்த ஓசையே.
96

உரை
   
 
அனுமன் கருடனை ஒத்துத் தோன்றுதல்

8932.எறிதிரைப் பெருங்கடல் கடைய ஏற்ற நாள்
‘செறிசுடர் மந்தரம் தருதி சென்று’என
‘வெறிது கொல் ‘எனக்கொடு விசும்பின் மீச்செலும்
உறுவலிக் கலுழனே ஒத்துத் தோன்றினான்.
97

உரை
   
 
அனுமன் வாயுவைப் போலுதல்

8933.பூதரத்து அரவொடு மலைந்து போன நாள்
ஓதிய வென்றியன் உடற்றும் ஊற்றத்தான்
ஏதம் இல் இலங்கை அம் கிரிகொடு எய்திய
தாதையும் ஒத்தனன் உவமை தனக்கு இலான்.
98

உரை
   
 
அனுமன் தரையில் அடிவைத்தல்

8934.‘தோன்றினன் ‘என்னும் அச்சொல்லின் முன்னம் வந்து
ஊன்றினன் நிலத்து அடி; கடவுள் ஒங்கல்தான்
வான்தனி நின்றது வஞ்சர் ஊர் வர
ஏன்றிலது ஆதலின்; அனுமன் எய்தினான்.
99

உரை
   
 
மருத்துமலையின் காற்றுப்பட்டவுடன் எல்லோரும் உயிர்ப்பெற்றெழுதல் (8935-8936)

8935.காற்று வந்து அசைதலும் கடவுள் நாட்டவர்
போற்றிட விருந்து உவந்து இருந்த புண்ணியர்
ஏற்றமும் பெருவலி அழகொடு எய்தினார்
கூற்றினை வென்று தம் உருவம் கூடினார்.
100

உரை
   
 
8936.அரக்கர்தம் யாக்கைகள் அழிவு இல் ஆழியில்
கரக்கல் உற்று ஒழிந்தன ஓழிய கண்டன
மரக் குலம் முதலவும் உய்ந்து வாழ்ந்தன;
குரக்கு இனம் உய்ந்தது கூறல் வேண்டுமோ?
101

உரை
   
 
இலக்குவன் உணர்வு பெறுதல்

8937.கழன்ற நெடுங்கணை கரந்த புண்; கடுத்து
அழன்றன குளிர்ந்தன அங்கம்; செங்கண்கள்
சுழன்றன; உலகு எலாம் தொழுதது ஓங்கலை;
குழன்ற பூங் குஞ்சியான் உணர்வும் கூடினான்.
102

உரை
   
 
மற்றவர்களும் உயிர்பெற்றெழுதல்

8938.யாவரும் எழுந்தனர் ஆர்த்த ஏழ்கடல்
தாவரும் பேரொலி செவியில் சார்தலும்
தேவர்தம் வாழ்த்தொலி கேட்ட செங்கணான்
யோகம் நீங்கினன் என இளவல் ஓங்கினான்.
103

உரை
   
 
இராமன் இலக்குவனைத் தழுவித் துயர்தீர்தல்

8939.ஓங்கிய தம்பியை; உயிர் வந்து உள்ளுற
வீங்கிய தோள்களால் தழுவி வெந்துயர்
நீங்கினன் இராமனும்; உலகில் நின்றில
தீங்கு உள; தேவரும் மறுக்கம் தீர்ந்தனர்.
104

உரை
   
 
மகிழ்ச்சி ஆரவாரம் (8940-8941)

8940.அரம்பையர் ஆடினர்; அமிழ்த ஏழ் இசை
நரம்பு இயல் கின்னரம் முதல நன்மையே
நிரம்பின; உலகு எலாம் உவகை நெய் விழா
பரம்பின! முனிவரும் வேதம் பாடினார்.
105

உரை
   
 
8941.வேதம் நின்று ஆர்த்தன; வேத வேதியர்
போதம் நின்று ஆர்த்தன; புகழும் ஆர்த்தன;
ஓதம் நின்று ஆர்த்தன; ஓத வேலையின்
சீதம் நின்று ஆர்த்தன; தேவர் சிந்தனை.
106

உரை
   
 
பிரமாத்திரம் இராமனை வணங்கிச் செல்லுதல்

8942.உந்தின பின் கொலை ஒழிவு இல் உண்மையும்
தந்தனை நீ; அது நினக்குச் சான்று எனா
சுந்தர வில்லியைத் தொழுது சூழவந்து
அந்தணன் படையும் நின்று அகன்று போயதால்.
107

உரை
   
 
மருந்து கொணர்ந்துதவிய மாருதியைத் தழுவுதல்

8943.ஆய காலையின் அமரர் ஆர்த்து எழ
தாயின் அன்பனைத் தழுவினான் தனி
நாயகன் பெருந்துயரம் நாம் அற
தூய காதல்நீர் துளும்பு கண்ணினான்.
108

உரை
   
 
தன்னைத் தழுவிய இராமனை அனுமன் தொழுதல்

8944.எழுது குங்குமத் திருவின் ஏந்து கோடு
உழுத மார்பினான் உருகி உள்ளுறத்
தழுவி நிற்றலும் தாழ்ந்து தாளுறத்
தொழுத மாருதிக்கு இனைய சொல்லினான்.
109

உரை
   
 
இராமன் அனுமனைப் புகழ்ந்து வாழ்த்துதல்
(8945-8948)

8945.முன்னின் தோன்றினோர் முறையின் நீங்கலாது
என்னின் தோன்றிய துயரின் ஈறு சேர்
மன்னின் தோன்றினோம் முன்னம்; மாண்டுேளாம்
நின்னின் தோன்றினோம் நெறியின் தோன்றினாய்.
110

உரை
   
 
8946.‘அழியுங்கால் தரும் உதவி ஐயனே!
மொழியுங்கால் தரும் உயிரின் முற்றுமோ?
பழியும் காத்து அரும் பகையும் காத்து எமை
வழியும் காத்து நன் மறையும் காத்தனை.
111

உரை
   
 
8947.‘தாழ்வும் இங்கு இறைப் பொழுது தாழ்ந்ததேல்
வாழி எம்பிமேல் அன்பு மாட்ட வான்
ஏழும் வீயும்; என் பகர்வது? எல்லை நாள்
ஊழி காண நீ உதவினாய் அரோ!
112

உரை
   
 
8948.‘இன்று வீகிலாது எவரும் எம்மொடு
நின்று வாழுமா நெடிது நல்கினாய்;
ஒன்றும் இன்னல் நோய் உறுகிலாது நீ
என்றும் வாழ்தியால் இனிது என் ஏவலால்!
113

உரை
   
 
மற்றையோரும் அனுமனை வாழ்த்துதல்

8949.மற்றையோர்களும் அனுமன் வண்மையால்
பெற்ற ஆயுளார் பிறந்த காதலார்
சுற்றும் மேவினார்; தொழுது வாழ்த்தினார்;
உற்றவாறு எலாம் உணரக் கூறினான்.
114

உரை
   
 
மருத்துமலையை உரிய இடத்தில் கொண்டுபோய் வைக்குமாறு சாம்பன் கூறுதல் (8950-8951)

8950.உய்த்த மா மருந்து உதவ ஒன்னலார்
பொய்த்த சிந்தையார் இறுதல் பொய்க்குமால்
மொய்த்த குன்றை அம் மூல ஊழிவாய்
வைத்து மீடியால் வரம்பு இல் ஆற்றலாய்.
115

உரை
   
 
8951.என்று சாம்பவன் இயம்ப ஈது அரோ
நன்று சால! என்று உவந்து ஒர்நாழிகை
சென்று மீள்வென் என்று எழுந்து தயெ்வமாக்
குன்று தாங்கி அக் குரிசில் போயினான்.
116

உரை