இராவணன் தேரேறிப் போர்க்களம் புகுதல்

9672.‘சில்லி ஆயிரம், சில் உளை
    பரியொடும் சேர்ந்த,
எல்ல வன் கதிர் மண்டலம்
    மாறு கொண்டு இமைக்கும்,
செல்லும் தேர்மிசைச் சென்றனன்
    தேவரைத் தொலைத்த
வில்லும் வெங்கணைப் புட்டிலும்,
    கொற்றமும் விளங்க.
1

உரை
   
 
இராவணனுடன் சென்ற சேனைகள்

9673.நூறு கோடி தேர் நொறில்பரி நூறு இரு கோடி
ஆறுபோல் மத மா கரி ஐ இரு கோடி
ஏறுகோள் உறு பதாதியும் இவற்று இவற்று இரட்டி.
சீறு கோள் அரி ஏறு அனானுடன் அன்று சென்ற.
2

உரை
   
 
முரசம் முதலியன முழங்குதல்

9674.‘மூன்று வைப்பினும், அப்புறத்து,
    உலகினும், முனையின்
ஏன்று கோள் உறும், வீரர்கள்
    வம்மின்! ‘என்று இசைக்கும்
ஆன்ற பேரியும், அதிர்குரல்
    சங்கமும், அசனி
ஈன்ற காளமும், ஏழொடு
    ஏழ் உலகினும் இசைப்ப.
3

உரை
   
 
இராவணன் சேனையோடு வருவதை வானரர் காணுதல்

9675.அனையன் ஆகிய அரக்கர்க்கும்
    அரக்கனை அவுணர்
வினையை வானவர் வெவ்வினைப்
    பயத்தினை, வீரர்
நினையும் நெஞ்சையும் சுடுவதோர்
    நெருப்பினை, நிமிர்ந்து
கனையும் விண்ணையும் கடப்பதோர்
    கடலினை, கண்டார்.
4

உரை
   
 
இராவணனைக் கண்ட வானரர்களின் போர் ஆரவாரம்

9676.கண்டு, கைகேளாடு அணிவகுத்து,
    உரும் உறழ் கற்கள்
கொண்டு, கூற்றமும் நடுக்குறத்
    தோள்புடை கொட்டி,
அண்ட கோடிகள் அடுக்கு அழிந்து
    உலைவுற, ஆர்த்தார்,
‘மண்டு போர் இடை மடிவதே
    நலம் ‘என மதித்தார்.
5

உரை
   
 
இருபடையும் கைகலத்தல்

9677.அரக்கர் சேனையும், ஆருயிர்
    வழங்குவான் அமைந்த
குரக்கு வேலையும், ஒன்றொடு ஒன்று,
    எதிரெதிர் கோத்து,
நெருக்கு நேர்ந்தன; நெருப்பு இடை
    பொடித்தன; நெருப்பின்
உருக்கு செம்பு என, அம்பரத்து,
    ஓடினது, உதிரம்.
6

உரை
   
 
இறந்துபட்ட சேனையின் வருணனை (9677-9679)

9678.அற்றவன்தலை அறுகுறை எழுந்து
    எழுந்து அண்டத்து
ஒற்ற, வானகம் உதய
    மண்டலம் என ஒளிர,
சுற்றும் மேகத்தைத் தொத்திய
    குருதிநீர் துளிப்ப
முற்றும் வையகம் போர்க்களம்
    ஆம் என முரஞ்ச.
7

உரை
   
 
யானைகள்

9679.தூவி அம் பெடை அரி இனம் மறிதர சூழி
தூவி அம்பு எடை சோர்ந்தன சொரி உடல் சுரிப்ப
மே வியம் படை படப்படர் குருதியின் வீழ்ந்த
மேவி அம் படைக் கடலிடை குடரொடு மிதந்த.
8

உரை
   
 
வீரர் மனைவியர் உயிர் கணவர் உயிரோடு கலத்தல்

9680.கண் திறந்தன கணவர்தம்
    முகத்து அவர் முறுவல்
கண்டு இறந்து அன மடந்தையர்,
    உயிரொடும் கலந்தார்
பண்டு இறந்தன பழம் புணர்வு
    அகம் புகப் பன்னி,
பண் திறந்தன புலம்பு ஒலி,
    சிலம்பு ஒலி பணிப்ப.
9

உரை
   
 
தன் தானை தருக்கழியும் என இராவணன் கூறுதல்

9681.ஏழும் ஏழும் என்று உரைக்கின்ற
    உலகங்கள் யாவும்
ஊழி பேர்வதே ஒப்பது ஓர்
    உலைவு உற, உடற்றும்
நூழில் வெஞ்சமம் நோக்கி,
    அவ் இராவணன் நுவன்றான்
‘தாழ் இல் என்படை தருக்கு அறும் ‘
    என்பது ஓர் தன்மை.
10

உரை
   
 
இராவணன் தன் சேனை சிதைந்தது கண்டு கலங்கிக் கூறுதல் (9681-9684)

9682.‘மரமும் கல்லுமே வில்லொடு
    வாள், மழு, சூலம்,
அரமும், கல்லும் வேல் முதலிய
    அயில்படை அடக்கி
சிரமும் கல் எனச் சிந்தலின்,
    சிதைந்தது என் சேனை.
உரமும் கல்வியும் உடையவன்
    செரு நின்றது ஒருபால்.
11

உரை
   
 
9683.அழலும் கண்களிறு அணியொடும்
    துணிபடும்; ஆவி
சுழலும் பல்படைத் தொகுதியும்;
    அன்னதே சுடர் தேர்;
கழலும் சோரிநீர் ஆற்றொடும்
    கடல் இடைக் கலக்கும்;
குழலும் நூலும் போன்ம், அனுமனும்
    தானும் அக்குமரன்.
12

உரை
   
 
9684.‘வில்லும் கூற்றுவற்கு உண்டு ‘என,
    திரிகின்ற வீரன்
கொல்லும் கூற்று அறக் குறைக்கும்,
    இந் நிறைப் பெருங் குழுவை,
ஒல்லும் கோள் அரி, உருமன்ன
    குரங்கினது உகிரும்
பல்லும் கூர்க்கின்ற; கூர்க்கில
    அரக்கர்தம் படைகள்.
13

உரை
   
 
இராவணன் கொதிப்பு

9685.‘கண்டு நின்று, இறைப் பொழுது, இனிக்
    காலத்தைக் கழிப்பின்,
உண்டு கைவிடும் கூற்றுவன்,
    நிருதர் பேர் உயிரை;
மண்டு வெஞ் செரு நான் ஒரு
    கணத்திடை மடித்தே
கொண்டு மீள்குவென், கொற்றம் ‘என்று
    இராவணன் கொதித்தான்.
14

உரை
   
 
இராவணன் சுடுகணை விடுதல்

9686.ஊதை போல்வன, உரும் உறழ்
    திறலன, உருவிப்
பூதலங்களைப் பிளப்பன,
    அண்டத்தைப் பொதுப்ப,
மாதிரங்களை அளப்பன,
    மாற்ற அரும் கூற்றின்
தூது போல்வன, சுடுகணை
    முறைமுறை துரந்தான்.
15

உரை
   
 
வானர சேனை இரிந்தோடுதல்

9687.ஆளி போன்று உளன், எதிர்த்த போது,
    அமர்க் களத்து அடைந்த
ஞாளி போன்று உளது என்பது என்?
    நள் இருள் அடைந்த
காளி போன்றனன் இராவணன்
    வெள்ளிடைக் கலந்த
பூளை போன்றது, அப்பொரு சினத்து
    அரிகள்தம் புணரி.
16

உரை
   
 
இலக்குவன் இராவணனை எதிர்த்தல்

9688.இரியல் போகின்ற சேனையை
    இலக்குவன் விலக்கி
‘அரிகள்! அஞ்சன்மின், அஞ்சன்மின் ‘
    என்று அருள் வழங்கி,
திரியும் மாருதி தோள் எனும்
    தேர்மிசைச் சென்றான்;
எரியும் வெஞ்சினத்து இராவணன்
    எதிர்புகுந்து ஏற்றான்.
17

உரை
   
 
இராவணன் விட்ட அம்புகளை இலக்குவன் விலக்குதல்

9689.ஏற்றுக் கோடலும், இராவணன்
    எரிமுகப் பகழி
நூற்றுக் கோடியின்மேல் செலச்
    சிலைகொடு நூக்க,
காற்றுக்கு ஓடிய பஞ்சு எனத்
    திசைதொறும் கரக்க,
வேற்றுக் கோல்கொடு விலக்கினன்,
    இலக்குவன் விசையால்.
18

உரை
   
 
இருவரும் மாறி மாறி அம்பு எய்தல்

9690.விலக்கினான் தடம் தோளினும்
    மார்பினும், விசிகம்,
உலக்க உய்த்தனன், இராவணன்,
    ஐந்தொடு ஐந்து; உருவக்
கலக்கம் உற்றிலன் இளவலும்,
    உள்ளத்தில் கனன்றான்,
அலக்கண் எய்துவித்தான், அடல்
    அரக்கனை, அம்பால்.
19

உரை
   
 
இலக்குவனை அம்பினால் வெல்ல இயலாது என இராவணன் எண்ணுதல்

9691.காக்கல் ஆகலாக் கடுப்பினில்
    தொடுப்பன கணைகள்
நூக்கினான்; கணை நுறுக்கினான்,
    அரக்கனும், ‘நூழில்
ஆக்கும் வெஞ்சமத்து அரிது இவன்தனை
    வெல்வது; அம்பால்
நீக்கி, என் இனிச் செய்வது? ‘என்று
    இராவணன் நினைந்தான்.
20

உரை
   
 
இராவணன் சிந்தனை

9692.‘கடவுள் மாப்படை தொடுக்கின் மற்று
    அவை முற்றும் கடக்க
விடவும் ஆற்றவும் வல்லன்
    எல்லாரையும் வெல்லும்,
தடவும் ஆற்றலைக் கூற்றையும்;
    தமையனைப் போலச்
சுடவும் ஆற்றும் எவ் உலகையும்;
    எவனுக்கும் தோலான்.
21

உரை
   
 
மோகப்படை தொடுக்க முடிவு செய்தல்

9693.‘கடவுள் மாப்படை தொடுக்கின் மற்று
    அவை முற்றும் கடக்க
விடவும் ஆற்றவும் வல்லன்
    எல்லாரையும் வெல்லும்,
தடவும் ஆற்றலைக் கூற்றையும்;
    தமையனைப் போலச்
சுடவும் ஆற்றும் எவ் உலகையும்;
    எவனுக்கும் தோலான்.
22

உரை
   
 
மோகன விஞ்சையை இராவணன் அனுப்ப இலக்குவன் நாரணன் படையால் அதனை அழித்தல்

9694.என்பது உன்னி, அவ் விஞ்சையை
    மனத்திடை எண்ணி,
முன்பன் மேல் வரத் துரந்தனன்,
    அதுகண்டு முடுகி,
அன்பின் வீடணன், ‘ஆழியான்
    படையினின் அறுத்தி!
என்பது ஓதினன்; இலக்குவன்
    அது தொடுத்து எய்தான்.
23

உரை
   
 
வீடணன் சொற்படி இலக்குவன் மோகத்தை நீக்கியது கண்டு இராவணன் வீடணன் மேல் சினங் கொள்ளுதல்

9695.வீடணன் சொல, விண்டுவின்
    படைக்கலம் விட்டான்,
மூடு வெஞ்சின மோகத்தை
    நீக்கலும், முனிந்தான்,
‘மாடு நின்றவன் உபாயங்கள்
    மதித்திட, வந்த
கேடு நம் தமக்கு ‘என்பது
    மனம் கொண்டு கிளர்ந்தான்.
24

உரை
   
 
வீடணனை வேலால் கொல்லக் கருதுதல்

9696.மயன் கொடுத்தது, மகெளாடு,
    வயங்கு அனல் வேள்வி;
அயன் படைத்து உளது; ஆழியும்
    குலிசமும் அனையது;
உயர்ந்த கொற்றமும் ஊழியும்
    கடந்து உளது உருவிச்
சயம்தனைப் பொரும் தம்பியை,
    உயிர் கொளச் சமைந்தான்.
25

உரை
   
 
இராவணன் வீடணன் மேல் வேலை வீசுதல்

9697.விட்ட போதினில் ஒருவனை
    வீட்டியே மீளும்,
பட்ட போது அவன் நான்முகன்
    ஆயினும் படுக்கும்,
வட்ட வேல் அது வலம் கொடு
    வணங்கினன் வாங்கி,
எட்ட நிற்கிலாத் தம்பிமேல்
    வல்விசைத்து எறிந்தான்.
26

உரை
   
 
வேல் வருவது கண்டு அஞ்சிய வீடணனை அஞ்சல் என்றுகூறி இலக்குவன் அவ்விடத்து வந்து நிற்றல்

9698.எறிந்த காலையில், வீடணன்
    அதன் நிலை எல்லாம்
அறிந்த சிந்தையன், ‘ஐய! ஈது
    என் உயிர் அழிக்கும் :
பிறிந்து செய்யல் ஆம் பொருளிலை ‘
    என்றதும், பெரியோன்;
‘அறிந்து போக்குவல்; அஞ்சல்நீ! ‘
    என்று இடை அணைந்தான்.
27

உரை
   
 
இலக்குவன் விட்ட அம்புகளால் அவ்வேல்
சிதையாது வருதல்

9699.எய்த வாளியும் ஏவின
    படைக்கலம் யாவும்,
செய்த மாதவத்து ஒருவனைச்
    சிறுதொழில் தீயோன்
வய்த வையினில் ஒழிந்தன;
    ‘வீடணன் மாண்டான்;
உய்தல் இல்லை ‘என்று உம்பரும்
    தம் மனம் உலைந்தார்.
28

உரை
   
 
இலக்குவன் அவ் வேலினைத் தம் மார்பில்
ஏற்க எதிர்தல்

9700.‘தோற்பென் என்னினும், புகழ் நிற்கும்;
    தருமமும் தொடரும்;
ஆர்ப்பர் நல்லவர்; அடைக்கலம்
    புகுந்தவன் அழியப்
பார்ப்பது என்? நெடும்பழி வந்து
    தொடர்வதன் முன்னம்,
ஏற்பென், என்தனி மார்பின் ‘என்று,
    இலக்குவன் எதிர்ந்தான்.
30

உரை
   
 
வேலை ஏற்க வீடணன், அங்கதன், சுக்கிரீவன்,
அனுமன் முந்துதல்

9701.இலக்குவற்கு முன் வீடணன்
    புகும்; இருவரையும்
விலக்கி, அங்கதன் மேற்செலும்;
    அவனையும் விலக்கி,
கலக்கும் வானரக் காவலன்;
    அனுமன்முன் கடுகும்;
அலக்கண் அன்னதை இன்னது என்று
    உரைசெயல் ஆமோ?
31

உரை
   
 
9702.முன்நின்றார் எலாம் பின் உற,
    காலினும் முடுகி,
‘நின்மின்; யான் இது விலக்குவென் ‘
    என்று உரை நேரா,
மின்னும் வேலினை, விண்ணவர்
    கண்புடைத்து இரங்க,
பொன்னின் மார்பிடை ஏற்றனன்,
    முதுகிடைப் போக.
32

உரை
   
 
வீடணன் சினந்தழெுந்து இராவணனது தேர்க் குதிரைகளையும் பாகனையும் தாக்குதல்

9703.‘எங்கு நீங்குதி நீ? ‘என
    வீடணன் எழுந்தான்,
சிங்க ஏறு அன்ன சீற்றத்தன்
    இராவணன் தேரில்
பொங்கு பாய்பரி சாரதியொடும்
    படப் புடைத்தான்
சங்க வானவர் தலை
    எடுத்திட, நெடுந் தண்டால்.
33

உரை
   
 
இராவணன் விசும்பில் எழுந்து இலங்கைக்குப் போதல்

9704.சேய்விசும்பினில் நிமிர்ந்துநின்று,
    இராவணன் சீறி,
பாய் கடுங்கணை பத்து அவன்
    உடல்புகப் பாய்ச்சி,
ஆயிரம் சரம் அனுமன்தன்
    உடலினில் அழுத்தி,
போயினன், ‘செருமுடிந்தது ‘
    என்று இலங்கை ஊர் புகுவான்.
34

உரை
   
 
வீடணன் இராவணனைத் தொடர்ந்து விண்ணில் எழுதல

9705.‘தேடிச் சேர்ந்த என் பொருட்டினால்,
    உலகுடைச் செல்வன்
வாடிப் போயினன்; நீ இனி
    வஞ்சனை மதியால்
ஓடிப் போகுவது எங்கு? அடா!
    உன்னொடும் உடனே
வீடிப் போவென் ‘என்று
    அரக்கன்மேல் வெகுண்டான்.
35

உரை
   
 
வீடணனைக் கொன்று என்ன பயன் என்று இராவணன் திரும்பிப் பாராது இலங்கை புகுதல்

9706.‘வென்றி என்வயம் ஆனது;
    வீடணப் பசுவைக்
கொன்று, இனிப் பயன் இல்லை ‘என்று
    இராவணன் கொண்டான்;
நின்றிலன், ஒன்றும் நோக்கிலன்,
    முனிவு எலாம் நீத்தான்;
பொன் திணிந்தன மதிலுடை
    இலங்கை ஊர் புகுந்தான்.
36

உரை
   
 
வீடணன் அரற்றி அழுதல்

9707.அரக்கன் ஏகினான்; வீடணன்
    வாய்திறந்து அரற்றி
இரக்கம் தான் என இலக்குவன்
    இணை அடித் தலத்தில்,
கரக்கல் ஆகலாக் காதலின்
    வீழ்ந்தனன் கலுழ்ந்தான்;
குரக்கு வெள்ளமும் தலைவரும்
    துயரிடைக் குளித்தார்.
37

உரை
   
 
வீடணன் இறக்கத் துணியச் சாம்பன் நிறுத்தி
ஒன்று கூறுதல்

9708.‘பொன், அரும்புறு தார்ப் புயப்
    பொருப்பினான் பொன்ற
என் இருந்து நான்? இறப்பென்,
    இக்கணத்து; எனை ஆளும்
மன் இருந்து இனி வாழ்கிலன் ‘
    என்றனன் மறுக,
‘நில். நில் ‘என்றனன், சாம்பவன்
    உரை ஒன்று நிகழ்த்தும்.
38

உரை
   
 
அனுமன் மருத்துமலை கொணர இலக்குவன் எழுவான் எனல்

9709.‘அனுமன் நிற்க, நாம் ஆர் உயிர்க்கு
    இரங்குதல் அறிவோ?
நினையும் அத்துணை மாத்திரத்து,
    உலகு எலாம் நிமிர்வான்,
வினையின் நல்மருந்து அளிக்கின்றான்;
    உயிர்க்கின்றான், வீரன்;
தினையும் அல்லல் உற்று அழுங்கன்மின் ‘
    என்று இடர் தீர்த்தான்.
39

உரை
   
 
சாம்பன் அனுமனுக்கு உணர்த்த அனுமன் விரைதல்

9710.மருத்தின் காதலன் மார்பிடை
    அம்பு எலாம் வாங்கி,
‘இருத்தியோ, கடிது ஏகலை?
    இளவலை இங்ஙன்
வருத்தம் காணுமோ மன்னவன்? ‘
    என்றனன் சாம்பன்;
கருத்தை உன்னி, அம்மாருதி
    உலகு எலாம் கடந்தான்.
40

உரை
   
 
மாருதி மருந்து மலை கொணர்ந்தான்

9711.உத்தர திசைமேல் ஓடி
    உலகு எலாம் கடக்கப் பாய்ந்து,
மெய்த்தகு மருந்து தன்னை,
    வெற்பொடும் கொணர்ந்தான், வீரன்;
பொய்த்தல் இல் குறிகெடாமே
    பொது அற நோக்கி, பொன்போல்
வைத்தது வாங்கிக் கொண்டு
    வருதலில் வருத்தம் உண்டோ?
41

உரை
   
 
இலக்குவன் எழுதல்

9712.தந்த நன் மருந்து தன்னை;
    தாக்குதல் முன்னம் வேகம்
வந்தது, மாண்டார்க்கு எல்லாம்
    உயிர்தரும் வலத்தது என்றால்.
நொந்தவர் நோவு தீர்க்கச்
    சிறிது அன்றோ? நொடியின் முன்னே,
இந்திரன் உலகம் ஆர்க்க,
    எழுந்தனன் இளைய வீரன்.
42

உரை
   
 
எழுந்த இலக்குவன் அனுமனைத் தழுவி வீடணன் நலம் அறிந்து மகிழ்தல்

9713.எழுந்து நின்று அனுமன் தன்னை
    இருகையால் தழுவி, எந்தாய்!
விழுந்திலன் அன்றோ மற்று அவ்
    வீடணன்! ‘என்ன, விம்மித்
தொழுந் துணையவனை நோக்கி,
    துணுக்கமும், துயரும் நீங்கி,
‘கொழுந்தியும் மீண்டாள்; பட்டான்
    அரக்கன் ‘என்று உவகை கொண்டான்.
43

உரை
   
 
வானரத் தலைவர்கள் அனுமனைப் புகழ்ந்துவிட்டு இராமனைச் சார்தல்

9714.‘தருமம் என்று அறிஞர் சொல்லும்
    தனிப்பொருள் தன்னை இன்னே
கருமம் என்று அனுமன் ஆகக்
    காட்டிய தன்மை கண்டால்,
அருமை என் எமருக்கு? அம்மா!
    அறம் வெல்லும், பாவம் தோற்கும்,
இருமையும் நோக்கின் ‘என்னா,
    இராமன்பால் எழுந்து சென்றார்.
44

உரை
   
 
தன்னை வானரத் தலைவர் வணங்கக் கண்ட இராமன், ‘விளைந்தது என் ‘எனல்

9715.ஒன்று அல பல என்று ஓங்கும்
    உயர்பிணத்து உம்பர் ஒன்றும்
குன்றுகள் பலவும் சோரிக்
    குரைகடல் அனைத்தும், தாவிச்
சென்று அடைந்து, இராமன் தன்னைத்
    திருவடி வணக்கம் செய்தார்;
வென்றியின் தலைவர்க் கண்ட
    இராமன் ‘என் விளைந்தது? ‘என்றான்.
45

உரை
   
 
சாம்பனால் நிகழ்ந்ததறிந்து இராமன் அனுமனை வாழ்த்துதல்

9716.உற்றது முழுது நோக்கி
    ஒழிவு அற, உணர்வின் ஊன்றச்
சொற்றனன் சாம்பன்; வீரன்
    அனுமனைத் தொடரப் புல்லி,
பெற்றனென் உன்னை; என்னை
    பெறாதன? பெரியோய்! என்றும்
அற்று இடை ஈறு செல்லா
    ஆயுளை ஆக ‘என்றான்.
46

உரை
   
 
இலக்குவன் இராமனைச் சார்தல்

9717.புயல்பொழி அருவிக் கண்ணன்,
    பொருமலன் பொங்குகின்றான்,
உயிர்புறத்து ஒழிய நின்ற
    உடல் அன்ன உருவத் தம்பி
துயர்தமக்கு உதவி, மீளாத்
    துறக்கம் பெற்று உயர்ந்த தொல்லைத்
தயரதற் கண்டால் ஒத்த
    தம்முனைத் தொழுது சார்ந்தான்.
47

உரை
   
 
இராமன் இலக்குவனைத் தழுவிப் பாராட்டுதல்
(9717-9718)

9718.இளவலைத் தழுவி, ‘ஐய!
    இரவிதன் குலத்துக்கு ஏற்ற
அளவு, தம் அடைந்தோர்க்கு ஆகி,
    மன் உயிர் அளிக்கும் தன்மை;
துளவு இயல் தொங்கலாய்! நீ
    அன்னது துணிந்தாய் என்றால்,
அளவியல் அன்று; செய்தற்கு
    அடுப்பதே ஆகும் அன்றே.
48

உரை
   
 
9719.‘புறவு அதன் பொருட்டால் யாக்கை
    புண் உற அரிந்த புத்தேள்
அறவனும், ஐய! நின்னை நிகர்க்கிலன்;
    அப்பால் நின்ற
பிற இனி உரைப்பது என்னே?
    பேர் அருளாளர் என்பார்
கறவையும் கன்றும் ஒப்பார்,
    தமர்க்கு இடர் காணில் ‘என்றான்.
49

உரை
   
 
இராமன் இலக்குவனது போர்க்கோலம்
நீக்கி இளைப்பாறுதல்

9720.சாலிகை முதல ஆன போர்ப்பரம்
    தாங்கிற்று எல்லாம்
நீல் நிற ஞாயிறு அன்ன
    நெடியவன் முறையின் நீக்கி,
கோல் சொரி தனுவும் கொற்ற
    அனுமன் கைக் கொடுத்து, கொண்டல்
மேல்நிறை குன்றில் நின்று
    மெய்ம்மெலிவு ஆற்றல் உற்றான்.
50

உரை