‘சொல் ஒன்று உரைத்தி; பொருள் ஆதி; தூய மறையும் துறந்து, திரிவாய்; வில் ஒன்று எடுத்தி; சரம் ஒன்று எடுத்தி; மிளிர் சங்கம் அங்கை உடையாய்; “கொல்” என்று உரைத்தி; கொலையுண்டு நிற்றி; கொடியாய்! உன் மாயை அறியேன்; அல் என்று, நிற்றி; பகல் ஆதி!-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்?
ஒன்று சொல் உரைத்தி - ஒப்பற்ற நாதவடிவினன் என்று சொல்லப்படுகிறாய்; பொருள் ஆதி - சொற்களின் பொருளும் ஆகிறாய்; தூய மறையும் துறந்து திரிவாய் - தூய்மையான வேதங்களையும் கடந்து விளங்குகிறாய்; வில் ஒன்று எடுத்தி சரம் ஒன்று எடுத்தி - (அறம் தலை நிறுத்துதற்காகக் கையில்) வில் ஒன்றை ஏந்தியுள்ளாய்; (அதில் வைத்துத் தொடுப்பதற்காக) ஒப்பற்ற அம்புகளையும் கைக்கொண்டு இருக்கிறாய்; அங்கை மிளிர் சங்கம் உடையாய் - அழகிய கைகளில் ஒளி பொருந்திய (பாஞ்ச சன்னியம் என்ற) சங்கினைக் கையில் ஏந்தியுள்ளாய்; கொல் என்று உரைத்தி - (தீயவர்க்குப் பகைவனாய் இருந்து) கொல்லுக என்று சொல்லுகிறாய்; கொலையுண்டு நிற்றி - (நீயே பகைவராய் இருந்து) கொல்லப்பட்டுக் கிடக்கிறாய்; கொடியாய் - (இவ்வாறு) முரண் பல கொண்டவனே; உன்மாயை அறியேன் - உனது மாயச் செயல்களை எவ்வகையிலும் என்னால் அறியமுடியவில்லை; அல் என்று நிற்றி - (நீ) இரவு என்று கூறும்படியும் நிற்கின்றாய்; இவ் அதிரேகமாயை - இந்த மிக்க மாயச்செயலை; ஆர் அறிவார் - யார் அறிவார்கள்.
இப்பாடல் முரண்களின் சேர்க்கையாக இறைவனை விளக்க முயல்கிறது. திருமால், சொல், பொருள், கொலை செய்பவன், கொல்லப்படுபவன், இரவு பகல் ஆகியவைகளாக இருக்கிறான் என்று கூறி அனைத்தும் கடவுளின் சொரூபம் என்று விளக்குகிறார்.