2273.வேதனை வெயிற்கதிர் தணிக்க, மென் மழைச்
சீதநீர் தொடு நெடுங் கொடியும் சென்றன;
கோதை வெஞ்சிலையவன் கோலம் காண்கிலா
மாதரி்ன் நுடங்குவ, வரம்பு இல் கோடியே.

     வேதனை- வருத்தத்தைத் தரும்;  வெயிற்கதிர் தணிக்க-
சூரியனால் ஆகியவெம்மையை (இராமனை அழைத்து வரச் செல்லும்
சேனைகளுக்கு) இல்லாதவாறு போக்க; (வானளாவிநின்று) மென்மழைச்
சீதநீர் தொடு -
மெல்லிய மேகங்களது  குளிர்ச்சி பொருந்தியநீரைத்
தொட்டுக் கொண்டு (கீழ்த் துளித்து);  சென்றன- (சேனைகளின் இடையே)
சென்றன வாகிய; வரம்பு இல் கோடி - கணக்கற்றகோடியளவான;
நெடுங்கொடியும் -நீண்ட கொடிகளும்; கோதை- கையுறை அணிந்த;
வெஞ்சிலையவன் - கொடிய(கோதண்டம் எனப்பெறும்)வில்லை ஏந்திய
இராமனது;  கோலம் - பட்டாபிடேகக்
கோலத்தை; காண்கிலா-
காணப்பெறாத;  மாதரின் -பெண்கள் போல; நுடங்குவ-
அசைகின்றனவாயின.

     கொடிகள் வானளாவி மேகத்தைத் தொடுவதும், அசைவதும்
சேனைகளின் வெயில் வெம்மை தணிக்கமேகத்தின் குளிர்நீர்
தெளிப்பதாகவும், இராமன் முடிசூடும் கோலம் காணாத மகளிர் என
அசைவதாகவும் கற்பனை செய்யப்பெற்றன. தற்குறிப்பேற்றவணி,
உவமையணி என முறையே காண்க. கோதை- கையுறை. விற்போர் செய்வார்
கைகளுக்குத் தோலாற் செய்த உறை அணிவர். ‘ஏ’ காரம்ஈற்றசை.      30