1320. | காலமும் இடனும் ஏற்ற கருவியும் தெரிந்து கற்ற நூல் உற நோக்கி, தெய்வம் நுனித்து, அறம் குணித்த மேலோர் ; சீலமும், புகழ்க்கு வேண்டும் செய்கையும், தெரிந்துகொண்டு, பால்வரும் உறுதி யாவும் தலைவற்குப் பயக்கும் நீரார் ; |
ஏற்ற காலமும் இடனும் கருவியும் தெரிந்து - வினை செய்தற்குத் தக்ககாலத்தையும் இடத்தையும், அதற்குரிய கருவிகளையும் அறிந்து ; கற்ற நூல் உற நோக்கி- தாம் படித்த அரச நீதி நூல்களின் கருத்துகளோடு ஒப்பிட்டுக் கண்டு ; தெய்வம்நுனித்து - தெய்வத்தையும் தியானித்து ; அறம் குணித்த மேலோர்- அரசியல்அறத்தைப் பெருக்கிய மேலோர்கள்; சீலமும் புகழ்க்கு வேண்டும் செய்கையும் -ஒழுக்கத்தையும் புகழ் அடைவதற்குரிய செயல்களையும் ; தெரிந்துகொண்டு - ஆராய்ந்து அறிந்துகொண்டு ; பால் வரும் உறுதி யாவும் - அவ் வாராய்ச்சிகளின் பயனாக வரும் நற்பயன்கள் யாவற்றையும் ; தலைவற்குப் பயக்கும்நீரார் - தம் அரசனுக்குக் கொடுக்கின்ற தன்மையுடையவர்கள். இதனால் அமைச்சர்கள் பணிபுரியும் வகை உரைக்கப்பட்டது. இடன் - கடைப்போலி. நுனிதல் - நுட்பமாக அறிதல். பால்வரும் உறுதி - அந்த அந்தப் பகுதிகளால்விளையும் நன்மை. கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்ட தமைச்சு அருவினை என்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின் (குறள், 631, 483) 7 |