1328. ‘விரும்பிய மூப்பு எனும் வீடு கண்ட யான்,
இரும் பியல் அனந்தனும், இசைந்த யானையும்,
பெரும் பெயர்க் கிரிகளும் பெயர, தாங்கிய
அரும் பொறை இனிச் சிறிது ஆற்ற ஆற்றலேன்.

     ‘விரும்பிய மூப்பு எனும் வீடு - நெடுங்காலமாக விரும்பியிருந்த
மூப்புப் பருவமாகிய (அரச பதவியிலிருந்து) விடுதலை பெறுதற்குரிய
காலத்தை ; கண்ட யான் - அடைந்த யான்; இரும் பியல் அனந்தனும் -
பெரிய பிடரினையுடைய ஆதிசேடனாகியபாம்பும் ; இசைந்த யானையும்-
திக்குகளில் பொருந்திய யானைகளும் ;  பெரும் பெயர்க் கிரிகளும் -
மிக்க புகழ் வாய்ந்த எட்டுக் குல மலைகளும் ;  பெயர - (பூமியைச்
சுமக்கும் தொழிலிருந்து) நீங்க ;  தாங்கிய அரும் பொறை - யான்
சுமந்த அரிய பாரத்தை ;  இனிச் சிறிது ஆற்ற ஆற்றலேன் - இனிமேல்
சிறிதளவும் சுமக்க வல்லேனல்லேன்.’

     இரான் பிறந்தபின் தான் அரசாட்சியை விட்டுத் தவஞ் செய்யச் செல்ல
வேண்டும் என்ற விருப்பத்தோடு இருந்தவனாதலின் ‘விரும்பிய மூப்பு எனும்
வீடு’ என்றான். பியல்- பிடரி. திசை யானைகள் - ஐராவதம், புண்டரீகம்,
வாமனம், குமுதம், அஞ்சனம், புட்ப தந்தம்,சார்வ பௌமம், சுப்பிரதீபம்
என்பன. னுட்டுக் குலமலைகள் - இமயம், மந்தரம், கைலாசம்,விந்தம்,
நிடதம், ஏமகூடம், நீலம், கந்தமாதனம் என்பன.