1329. | ‘நம் குலக் குரவர்கள், நவையின் நீங்கினார், தம் குலப் புதல்வரே தரணி தாங்கப் போய், வெங் குலப் புலன் கெட, வீடு நண்ணினார் ; எங்கு உலப்புறுவர், என்று எண்ணி, நோக்குகேன். |
‘நவையின் நீங்கினார் - குற்றங்களினின்று நீங்கியவர்களாகிய ; நம் குலக் குரவர்கள் - எம் குலத்தில் தோன்றிய பெரியோர்கள் ; தம்குலப் புதல்வரே - தம் மேலான பிள்ளைகளே ; தரணி தாங்க - நிலவுலகைப் போற்றிக் காக்க ; போய் - தாம் காட்டிற்குச் சென்று ; வெம்குலப்புலன் கெட - கொடிய கூட்டமாகிய ஐம்புல ஆசைகள் அற்று ஒழிய ; வீடு நண்ணினார் -வீடுபேறு அடைந்தவர்கள் ; எங்கு உலப்பு உறுவர் என்று- எங்கு எண்ணிக்கையில்முடிவு பெறுவர் என்று ; எண்ணி நோக்குகேன்- எண்ணிப் பார்க்கின்றேன்.’ எம் குலத்துப் பெரியோர்கள் குற்றத்தின் நீங்கி ஆட்சிபுரிந்து மூப்பு அடைந்த பின்னர்த் தம் பிள்ளைகள் ஆட்சிப் பொறுப்பினை ஏற்கத் தாம் தவஞ் செய்து வீடுபேறுபெற்றவர்களை எண்ணிப் பார்த்தால், அவர்கள் எண்ணிறந்த பலராய் இருக்கின்றார்கள் என்பதுகருத்து. நவை - காமம், வெகுளி, மயக்கம் என்னும் குற்றங்கள். ஐம்புலன் - சுவை, ஒளி, ஊறு,ஓசை, நாற்றம் என்பன. உலப்பு - முடிவு. 16 |