1330. ‘வெள்ள நீர் உலகினில், விண்ணில், நாகரில்,
தள்ள அரும் பகை எலாம் தவிர்த்து நின்ற யான்,
கள்ளரின் கரந்து உறை காமம் ஆதி ஆம்
உள் உறை பகைஞருக்கு ஒதுங்கி வாழ்வெனோ?

     ‘வெள்ள நீர் உலகில் - கடலால் சூழப்பட்ட இந்த உலகத்திலும் ;
விண்ணில் - வானுலகத்திலும்; நாகரில் - நாகர்கள் வாழும் கீழுலகத்திலும்;
தள்ள அரு பகைஎலாம் - நீக்குதற்கு அரிய (புறப்) பகைவர்களை
எல்லாம் ;  தவிர்த்து நின்ற யான் - ஒழித்து வென்றுநின்ற யான் ;
கள்ளரின் -திருடர்களைப் போன்று ; கரந்துஉறை காமம் ஆதி ஆம்-
ஒளிந்து வாழும் காமம்முதலான ;  உள் உறு பகைஞருக்கு - உள்ளே
பொருந்திய பகைவர்களுக்கு ;  ஒதுங்கிவாழ்வெனோ - அஞ்சி அடங்கி
வாழ்வேனோ? (வாழேன்)

     புறப் பகையை வென்ற யான் அகப் பகையினுக்கு அஞ்சி
அடங்கமாட்டேன்என்பது கருத்து. காமம் ஆதிப் பகைவர்கள் :  காமம்,
குரோதம், லோபம் (கடும்பற்றுள்ளம்) மோகம், மதம், மாற்சரியம் என்பன ;
இவற்றை வடநூலார் அரிஷட்வர்க்கம்என்பர். இவ்வாறனையும் காமம்,
வெகுளி, மயக்கம் என்னும் மூன்றனுள் அடக்கிக் கூறுவது தமிழ்மரபு.

     தயரதன் மூவுலகும் வென்றவன் என்பது, “மாகமும் நாகமும்
மண்ணும் வென்றவாளான்”
(1515) என்று பின்னரும் சுட்டப்படுவது
காணலாம். ஓகாரம் எதிர்மறை.                                   17