1331. | ‘பஞ்சி மென்தளிர் அடிப் பாவை கோல் கொள, வெஞ் சினத்து அவுணர் தேர் பத்தும் வென்றுளேற்கு, எஞ்சல் இல் மனம் எனும் இழுதை ஏறிய அஞ்சு தேர் வெல்லும் ஈது அருமை ஆவதோ? |
‘பஞ்சி மென் தளிர் அடிப் பாவை - செம்பஞ்சுக் குழம்பு பூசப்பட்ட மென்மையான தளிர்போலும் பாதங்களையுடைய கைகேயி ; கோல்கொள- சாட்டைகொண்டு தோரோட்ட ; வெம் சினத்து அவுணர்தேர் பத்தும் - கொடிய கோபத்தையுடைய அசுரர்களின் பத்துத் தேர்களையும் ; வென்று உளேற்கு - வென்றுள்ளவனாகிய எனக்கு ; எஞ்சல்இல் மனம் எனும் - குறைவு அற்ற மனம் என்னும் ; இழுதைஏறிய - பேய் ஏறிச்செலுத்துகிற ; அஞ்சு தேர் - பொறியாகியஐந்து தேர்களை ; வெல்லும்ஈது - வெல்லும் தொழிலாகியஇது ; அருமை ஆவதோ - அருமைப்பாடு உடையதுஆகுமோ? (ஆகாது)’ பஞ்சிமென் தளிர்அடி - பஞ்சினையும் தளிரினையும் நிகர்த்த அடிகள் எனலும் ஆம். கோல் கொள்ளுதலாகிய காரணம் தேரை ஓட்டுதலாகிய காரியத்தை உணர்த்தியதால்உபசார வழக்கு. இழுதை - பேய் ; “இழுதை நெஞ்சினோன்” (2201). பத்துத் தேர்களைவென்றவனுக்கு ஐந்து தேர்களை வெல்லுவது அரிதாவதோ என்றது நயம். 18 |