1334. | ‘அருஞ் சிறப்பு அமைவரும் துறவும், அவ் வழித் தெரிஞ்சு உறவு என மிகும் தெளிவும் ஆய், வரும் பெருஞ் சிறை உள எனின், பிறவி என்னும் இவ் இருஞ் சிறை கடத்தலின் இனியது யாவதோ? |
அருஞ் சிறப்பு அமைவரும் துறவும் - அரிய சிறப்புப் பொருந்திய துறவும் ; அவ் வழி தெரிஞ்சு - அந்த வழியை அறிந்து ; உறபு என மிகும்தெளிவும் ஆய் - அதற்கு இனம் என்று சிறந்துள்ள மெய்யுணர்வும் ஆகி ; வரும்பெருஞ் சிறை உள எனின் - வருகின்ற பெரிய சிறகுகள் உண்டானால் ; பிறவிஎன்னும் இவ் இருஞ் சிறை - பிறப்பு என்னும் இந்தப் பெரிய சிறைச்சாலையை ; கடத்தலின் இனியது யாவதோ - நீங்கிச் செல்லுவதினும் இனிமையான தொன்று வேறு எதுவோ?(எதுவும் இல்லை). உயிராகிய பறவைக்குத் துறவு, மெய்யுணர்வு என்னும் இரு சிறகுகள் முளைத்துவிட்டால் அது பிறவி ஆகிய கூண்டை விட்டுப் பறந்துவிடும் என்பது கருத்து. அருஞ் சிறப்புஅமைவரும் - அடைவதற்கு அரிய வீட்டினை அடைதற்குக் காரணமான எனலும் பொருந்தும். தெரிஞ்சு - தெரிந்து என்பதன் போலி. திருவள்ளுவர் துறவையும் மெய்யுணர்தலையும் அடுத்தடுத்து வைத்துள்ளமுறைமை துறந்தார்க்கே மெய்யுணர்வு தோன்றும் எனத் தெரிவித்தல் ஈண்டுக் கருதத் தக்கது. 21 |