1334. ‘அருஞ் சிறப்பு அமைவரும் துறவும், அவ் வழித்
தெரிஞ்சு உறவு என மிகும் தெளிவும் ஆய், வரும்
பெருஞ் சிறை உள எனின், பிறவி என்னும் இவ்
இருஞ் சிறை கடத்தலின் இனியது யாவதோ?

     அருஞ் சிறப்பு அமைவரும் துறவும் - அரிய சிறப்புப் பொருந்திய
துறவும் ;  அவ் வழி தெரிஞ்சு - அந்த வழியை அறிந்து ;  உறபு என
மிகும்தெளிவும் ஆய்
- அதற்கு இனம் என்று சிறந்துள்ள மெய்யுணர்வும்
ஆகி ;  வரும்பெருஞ் சிறை உள எனின் - வருகின்ற பெரிய சிறகுகள்
உண்டானால் ;  பிறவிஎன்னும் இவ் இருஞ் சிறை - பிறப்பு என்னும்
இந்தப் பெரிய சிறைச்சாலையை ;  கடத்தலின் இனியது யாவதோ -
நீங்கிச் செல்லுவதினும் இனிமையான தொன்று வேறு எதுவோ?(எதுவும்
இல்லை).

     உயிராகிய பறவைக்குத் துறவு, மெய்யுணர்வு என்னும் இரு சிறகுகள்
முளைத்துவிட்டால் அது பிறவி ஆகிய கூண்டை விட்டுப் பறந்துவிடும்
என்பது கருத்து. அருஞ் சிறப்புஅமைவரும் - அடைவதற்கு அரிய
வீட்டினை அடைதற்குக் காரணமான எனலும் பொருந்தும். தெரிஞ்சு -
தெரிந்து என்பதன் போலி. திருவள்ளுவர் துறவையும் மெய்யுணர்தலையும்
அடுத்தடுத்து வைத்துள்ளமுறைமை துறந்தார்க்கே மெய்யுணர்வு தோன்றும்
எனத் தெரிவித்தல் ஈண்டுக் கருதத் தக்கது.                         21