1340. | “இறந்திலன் செருக் களத்து இராமன் தாதை ; தான், அறம்தலை நிரம்ப, மூப்பு அடைந்த பின்னரும், துறந்திலன்” என்பது ஓர் சொல் உண்டானபின், பிறந்திலென் என்பதின் பிறிது உண்டாகுமோ? |
இராமன் தாதை - இராமனுக்குத் தந்தையான தயரதன் ; செருக்களத்து இறந்திலன் - போர்க்களத்தில் உயிர் விட்டானில்லை ; தான்மூப்பு அடைந்த பின்னரும் - தான் கிழத்தனத்தை அடைந்த பிறகும் ; அறம் தலைநிரம்ப - அறம் முழுதும் நிறையும்படி ; துறந்திலன் - துறவு நெறியைமேற்கொண்டானில்லை ; என்பது ஓர் சொல் - என்பதாகிய ஒரு பழிச்சொல் ; உண்டான பின் - தோன்றிய பின்பு ; பிறந்திலென் என்பதின் -பிறந்திலேன் என்பதினும் ; பிறிது உண்டாகுமோ - வேறு உண்டோ? முனைமுகத்து விழுப்புண் பட்டு வீரசுவர்க்கம் அடைவது மன்னர்க்குச் சிறப்பு ; அது வாய்க்காது போயின், மூப்புப் பருவத்தில் துறந்து அதன் பயன் கோடல்தக்கதாம். இவ்விரண்டும் வாய்க்காது போயின் பிறந்தும் பயனில்லை ; பழிச்சொல்உண்டாகும் என்பது வற்புறுத்தப்பட்டது. பிறவிப் பயன் அடையாதார் பிறந்தும் பிறவாதாரே ஆவார்.‘இராமன் தாதை’ என்பது பிள்ளையைப் பெற்ற பின்னரும் துறந்திலன் என்னும் குறிப்பினை உட்கொண்டது. 27 |