1341. | ‘பெருமகன் என்வயின் பிறக்க, சீதை ஆம் திருமகள் மணவினை தெரியக் கண்ட யான், அரு மகன் நிறை குணத்து அவனி மாது எனும் ஒருமகள் மணமும் கண்டு உவப்ப உன்னினேன். |
‘பெருமகன் என்வயின் பிறக்க - ஆடவர் திலகமாகிய இராமன் எனக்குமகனாகத் தோன்ற ; சீதை ஆம் திருமகள் மணவினை - சீதையாகிய திருமகளின்திருமணத்தை ; தெரியக் கண்ட யான் - கண்ணாரப் பார்த்து மகிழ்ந்த யான்; அரு மகன் - அந்த அரிய மகனாகிய இராமன் ; நிறை குணத்து அவனி மாது எனும் - நிறைந்த குணத்தையுடைய மண்மகள் என்கிற ; ஒரு மகள் மணமும் - ஒப்பற்ற பெண்ணை மணம்புரிந்து கொள்ளுதலையும் ; கண்டு உவப்ப உன்னினேன் - கண்ணாரக்கண்டு களிக்கக் கருதினேன்.’ தயரதன், “இராமனுக்குத் திருமணம் நடந்ததைக் கண்டு மகிழ்ந்த யான்,அரசுரிமை ஏற்றலையும் செய்விக்கப் பேரவாக் கொள்கிறேன்” என்கிறான். பெருமகன், திருமகள்,அவனிமாது ஆகிய சொற்கள், “பெருமாளுக்குத் தேவியர் இருவருள் திருமகள் கூடியதைக் கண்டு களித்தேன் ; இனி மண்மகள் கூடுவதனையும் காண விழைகிறேன்” என்னும் பொருளினைத்தெரிவிப்பனவாக அமைந்துள்ளன. இதுவரை தயரதன் தான் துறக்க விரும்பியதற்குக் காரணங் கூறி, இது முதல்இராமனுக்கு அவன் முடிசூட்ட விரும்பியதைக் கூறுகிறான். 28 |