1341. ‘பெருமகன் என்வயின் பிறக்க, சீதை ஆம்
திருமகள் மணவினை தெரியக் கண்ட யான்,
அரு மகன் நிறை குணத்து அவனி மாது எனும்
ஒருமகள் மணமும் கண்டு உவப்ப உன்னினேன்.

     ‘பெருமகன் என்வயின் பிறக்க - ஆடவர் திலகமாகிய இராமன்
எனக்குமகனாகத் தோன்ற ;  சீதை ஆம் திருமகள் மணவினை -
சீதையாகிய திருமகளின்திருமணத்தை ;  தெரியக் கண்ட யான் -
கண்ணாரப் பார்த்து மகிழ்ந்த யான்; அரு மகன் - அந்த அரிய மகனாகிய
இராமன் ;  நிறை குணத்து அவனி மாது எனும் - நிறைந்த
குணத்தையுடைய மண்மகள் என்கிற ;  ஒரு மகள் மணமும் - ஒப்பற்ற
பெண்ணை மணம்புரிந்து கொள்ளுதலையும் ;  கண்டு உவப்ப
உன்னினேன்
- கண்ணாரக்கண்டு களிக்கக் கருதினேன்.’

     தயரதன், “இராமனுக்குத் திருமணம் நடந்ததைக் கண்டு மகிழ்ந்த
யான்,அரசுரிமை ஏற்றலையும் செய்விக்கப் பேரவாக் கொள்கிறேன்”
என்கிறான். பெருமகன், திருமகள்,அவனிமாது ஆகிய சொற்கள்,
“பெருமாளுக்குத் தேவியர் இருவருள் திருமகள் கூடியதைக் கண்டு
களித்தேன் ; இனி மண்மகள் கூடுவதனையும் காண விழைகிறேன்” என்னும்
பொருளினைத்தெரிவிப்பனவாக அமைந்துள்ளன.

     இதுவரை தயரதன் தான் துறக்க விரும்பியதற்குக் காரணங் கூறி, இது
முதல்இராமனுக்கு அவன் முடிசூட்ட விரும்பியதைக் கூறுகிறான்.       28