1347. ‘நிருப ! நின் குல மன்னவர் நேமி பண்டு உருட்டிப்
பெருமை எய்தினர் ; யாவரே இராமனைப்பெற்றார்?
கருமமும் இது ; கற்று உணர்ந்தோய்க்கு இனிக் கடவ
தருமமும் இது ; தக்கதே உரைத்தனை ; - தகவோய் !

     ‘நிருப - மன்னவனே!  தகவோய் - தகுதியுடையோனே! பண்டு -
முற்காலத்தில் ;  நின் குல மன்னர் நேமி உருட்டி - உன்குலத்தில்
தோன்றிய அரசர்கள் ஆணைச் சக்கரத்தைச் செலுத்தி ;  பெருமை
பெற்றனர்
- பெருமை அடைந்தார்கள் ; யாவரே இராமனைப் பெற்றார்-
அவர்களுள்இராமனைப் போன்ற மைந்தனைப் பெற்றவர் எவர்? (ஒருவரும்
இலர்) ; கற்று உணர்ந்தோய்க்கு- கற்பதற்குரிய நூல்களைக் கற்று
அவற்றின் பொருளை உணர்ந்த உனக்கு ;  கருமமும்இது - இப்பொழுது
செய்தற்குரியதும் இதுவே ;  இனி கடவ தருமமும் இது - இனிச்
செய்வதற்குரிய அறச்செயலும் இதுவே ;  தக்கதே நினைந்தனை -
தகுதியுடைய செயலையேபுரியக் கருதினாய்.’

     மன்னன் ஆணையைச் சக்கரம் என்றல் மரபு. ‘யாவரே இராமனைப்
பெற்றார்’என்பது இராமன் தனிச் சிறப்புகள் பல பெற்றவன் என்பதனைக்
குறித்தது. கருமம் தன் நலம்குறித்துச் செய்வது ;  தருமம் - யாவர்க்கும்
பயன் தரும்படி செய்வது.                                       34