1369.வள் உறை கழித்து ஒளிர்வன
     வாள் நிமிர் மதியம்
தள்ளுறச் சுமந்து, எழுதரும்
     தமனியக் கொம்பில், -
புள்ளி நுண் பனி பொடிப்பன,
     பொன்னிடைப் பொதிந்த,
எள்ளுடைப் பொரி விரவின, -
     உள சில இளநீர்.

     வள் உறை கழித்து - (இராமனைக் கண்டவுடன்) வாரினால் இயன்ற
உறைகளை நீக்கி ; ஒளிர்வன வாள் - ஒளிவீசுகின்ற வாள்களோடு ; நிமிர்
மதியம் தள்ளுறச் சுமந்து - நிமிர்ந்த சந்திரனைத் தள்ளாடியவாறு சுமந்து
கொண்டு ;  எழுதரும் தமனியக் கொம்பில் - எழுகின்ற பொன்னாலாகிய
கொம்புகளில் ;  உளசிலஇளநீர் - உள்ளனவாகிய இரண்டு இளநீர்கள் ;
புள்ளி நுண்பனி பொடிப்பன -புள்ளிகளாகிய நுண்ணிய வியர்வை
தோன்றுவனவும் ;  பொன்னிடைப் பொதிந்த -இடையிடையே பொற்
பொடி கலந்தனவுமாய் ;  எள்ளுடைப் பொரி விரவின - தேமலாகிய
எள்ளின் பொரிகள் ஆங்காங்கு விரியப் பெற்றன.

     மகளிரின் இமைகளை உறைகளாகவும், கண்களை வாளாகவும், முகத்தை
மதியாகவும், அவர்களைக் கொம்பாகவும், வியர்வையைப் புள்ளிகளாகவும்,
தேமலைப் பொன்னாகவும்,பசலையை எட்பொரியாகவும், நகில்களை
இளநீராகவும் உருவகித்தார். சில - ஈண்டு இரண்டு என்னும்பொருளில்
வந்தது.                                                      56