இராமன் தயரதனைச் சந்தித்தல் 1370. | ஆயது, அவ்வழி நிகழ்தர, ஆடவர் எல்லாம் தாயை முன்னிய கன்று என நின்று உயிர் தளிர்ப்ப, தூய தம்பியும், தானும், அச் சுமந்திரன் தேர்மேல் போய், அகம் குளிர் புரவலன் இருந்துழிப் புக்கான். |
ஆயது அவ் வழி நிகழ்தர - அத்தகைய செயல் அவ்விடத்து நடைபெற ; ஆடவர் எல்லாம் - இராமனைக் கண்ட ஆண்கள் எல்லாரும் ; தாயை முன்னிய கன்றுஎன நின்று - தாய்ப்பசுவை நினைந்த கன்று போல நின்று ; உயிர் தளிர்ப்ப- உயிர் மகிழ்ச்சியடைய; தூய தம்பியும் தானும் - தூய்மை நிறைந்த தம்பியானஇலக்குவனும் தானும் ; அச் சுமந்திரன் தேர்மேல் போய் - அந்தச் சுமந்திரனது தேரில் ஏறிச் சென்று ; அகம் குளிர் புரவலன் இருந்துழி - மனம் மகிழ்ந்திருக்கின்ற தயரதன் இருந்த மண்டபத்துள் ; புக்கான் - புகுந்தான். உள்ளத்தின் தளிர்ப்புஉயிரின் தளிர்ப்பாகக் கூறப்பட்டது. தம்பியும் தானும் புக்கான் - சிறப்பினால் ஒருமை வினைக்கொண்டு முடிந்தது, “வேயுயர் கானில் தானும்தம்பியும் மிதிலைப் பொன்னும் போயினன் என்றான்” என்பது போல(தைலமாட்டுப் படலம், 60). இருந்தஉழி - இருந்துழி புக்கான் - புகு என்னும் பகுதி இரட்டித்துக் காலம் காட்டிற்று. 57 |