இராமன் தயரதனைச் சந்தித்தல்  

1370.ஆயது, அவ்வழி நிகழ்தர, ஆடவர் எல்லாம்
தாயை முன்னிய கன்று என நின்று உயிர் தளிர்ப்ப,
தூய தம்பியும், தானும், அச் சுமந்திரன் தேர்மேல்
போய், அகம் குளிர் புரவலன் இருந்துழிப் புக்கான்.

     ஆயது அவ் வழி நிகழ்தர - அத்தகைய செயல் அவ்விடத்து
நடைபெற ; ஆடவர் எல்லாம் - இராமனைக் கண்ட ஆண்கள்
எல்லாரும் ;  தாயை முன்னிய கன்றுஎன நின்று - தாய்ப்பசுவை
நினைந்த கன்று போல நின்று ;  உயிர் தளிர்ப்ப- உயிர் மகிழ்ச்சியடைய;
தூய தம்பியும் தானும் - தூய்மை நிறைந்த தம்பியானஇலக்குவனும்
தானும் ;  அச் சுமந்திரன் தேர்மேல் போய் - அந்தச் சுமந்திரனது
தேரில் ஏறிச் சென்று ;  அகம் குளிர் புரவலன் இருந்துழி - மனம்
மகிழ்ந்திருக்கின்ற தயரதன் இருந்த மண்டபத்துள் ;  புக்கான் - புகுந்தான்.

     உள்ளத்தின் தளிர்ப்புஉயிரின் தளிர்ப்பாகக் கூறப்பட்டது. தம்பியும்
தானும் புக்கான் - சிறப்பினால் ஒருமை வினைக்கொண்டு முடிந்தது,
“வேயுயர் கானில் தானும்தம்பியும் மிதிலைப் பொன்னும் போயினன்
என்றான்” என்பது
போல(தைலமாட்டுப் படலம், 60). இருந்தஉழி
- இருந்துழி புக்கான் - புகு என்னும் பகுதி இரட்டித்துக் காலம்
காட்டிற்று.                                      57