தயரதன் இராமனைத் தழுவுதல்  

1371.மாதவன்தனை வரன்முறை வணங்கி,
     வாள் உழவன்
பாத பங்கயம் பணிந்தனன் ; 
     பணிதலும், அனையான்,
காதல் பொங்கிட, கண் பனி உகுத்திட,
     கனி வாய்ச்
சீதை கொண்கனைத்
     திரு உறை மார்பகம் சேர்த்தான்.

     வரன்முறை மாதவன்தனை வணங்கி - தொன்றுதொட்டுவரும்
முறைப்படி பெரியதவமுனியாகிய வசிட்டனைத் தொழுது ;  வான் உழவன்
பாத பங்கயம் பணிந்தனன்
-வாட்போரில் வல்லவனான தயரத மன்னன்
திருவடியாகிய தாமரைகளை வணங்கினான் ;  பணிதலும் - அவ்வாறு
இராமன் வணங்கிய அளவில் ;  அனையான் - அவ்வாறுவணங்கப்பெற்ற
தயரதன் ;  காதல் பொங்கிட - இராமன் மீது கொண்ட பாசம்மேலிட ;
கண்பனி உகுத்திட - கண்கள் இன்பக் கண்ணீரைச் சொரிந்திட ;
கனிவாய்ச் சீதை கொண்கனை - கனிபோன்ற இதழ்களையுடைய சீதையின்
கணவனாகியஇராமனை ;  திருஉறை மார்பகம் சேர்த்தான் - திருத்
தங்கிய தன் மார்போடுஅணைத்துக் கொண்டான்.

     வாள் உழவர் - வாட்போரில் வல்லவர். வில்லேர் உழவர் என்று
திருவள்ளுவர் வீரர்களைக் குறித்தல் கருதத்தக்கது (குறள். 872) திரு -
அரசச் செல்வம்.                                               58