1378. | ‘ஒருத்தலைப் பரத்து ஒருத்தலைப் பங்குவின் ஊர்தி எருத்தின், ஈங்கு நின்று, இயல்வரக் குழைந்து, இடர்உழக்கும் வருத்தம் நீங்கி, அவ் வரம்பு அறு திருவினை மருவும் அருந்தி உண்டு, எனக்கு ; ஐய ! ஈது அருளிடவேண்டும். |
ஒரு தலைப் பரத்து - ஒரு பக்கத்தில் பாரத்தையும் ; ஒருதலை - மற்றொரு பக்கத்தில் ; பங்குவின் - நொண்டியாய் இருக்கும் தன்மையையும் கொண்ட ; ஊர்தி எருத்தின் - மனிதன் ஊர்ந்து செல்லும் வண்டியில்பூட்டப்பட்ட பொதிமாட்டைப் போல ; ஈங்கு நின்று - இவ்வுலகிலிருந்து ; இயல்வரக் குழைந்து - தன்மை பொருந்த வருந்தி ; இடர் உழக்கும் வருத்தம்நீங்கி - துன்பப்படும் அரசபாரமாகிய வருத்தத்தினின்றும் அகன்று ; அவ்வரம்புஅறு திருவினை - அந்த எல்லையில்லாத முத்திச் செல்வத்தை; மருவும் அருத்திஎனக்கு உண்டு- பொருந்தும் ஆசை எனக்கு உள்ளது ; ஐய! ஈது அருளிடவேண்டும் - ஐயனே ! இதனை நீ கொடுக்க வேண்டும்.’ ஒரு பக்கம் சுமக்கமுடியாத பாரமும், மற்றொரு பக்கம் நொண்டிக் காலும்பெற்ற பொதிமாடு படும் பாட்டை ஆட்சிச் சுமையாலும், வயோதிகத்தாலும் தான் படுவதாகத் தயரதன்அறிவிக்கிறான். ஒருத்தலை - ஒருதலை என்பதன் விகாரம். பரம் - பாரம். ‘அந்தமில் இன்பம்’என்று சிலம்பும் ‘சென்றடையாத திரு’ என்று தேவாரமும் வீடுபேற்றினைக் குறித்தமை இங்குஒப்புநோக்கத்தக்கது. 65 |