மன்னர்களிடம் இராமன் முடிபுனைதலைத் தயரதன் தெரிவித்தல்

1386.உரிய மா தவன் ஒள்ளிது என்று
     உவந்ததன், விரைந்து ஓர்
பொரு இல் தேர்மிசை,
     அந்தனர் குழாத்தொடும் போக,-
‘நிருபர்! கேண்மின்கள்,
     இராமற்கு நெறி முறைமையினால்
திருவும் பூமியும்
     சீதையின் சிறுந்தன’ என்றான்.

     உரிய மா தவன் - முடிசூட்டுதற்கு உரிய பெரிய தவத்தைச்
செய்தவனான வசிட்ட முனிவன்;ஒள்ளிது என்று உவந்தனன் - நல்லது
என்று சொல்லி மகிழ்ந்தவனாய்;  விரைந்து -விரைவாக;  ஓர் பொரு இல்
தேர்மிசை -
ஒப்பற்ற ஒரு தேரில் ஏறி;  அந்தணர்  குழாத்தொடும்
போக
- வேதியர் கூட்டத்தோடும் செல்ல;  ‘நிருபர் கேண்மின்கள் -
(தயரதன் தன்அருகே இருந்த அரசர்களைப் பார்த்து) அரசர்களே! 
கேளுங்கள்; நெறி முறைமையினால் - அரச நீதி முறைப்படி; இராமற்குத்
திருவும் பூமியும் -
இராமனுக்கு அரசச்செல்வமும் நாடும்; சீதையின்
சிறந்தன -
  சீதைபோலச் சிறந்தனவாய் உள்ளன;’  என்றான் -  என்று
சொன்னான்.

     இங்குக் குறிக்கப்படும் அரசர்கள் ஓலை பெற்று வந்தவர் அல்லர்; 
தயரதன் அருகில் திறை செலுத்தவும்,  காணவும் வந்தவர்கள் ஆவர். 
நிருபர்,  அண்மைவிளி.  சீதையின் -  ‘இன்’ ஒப்புப்பொருளில்வந்தது;
உறழ்ச்சிப் பொருளில் வந்ததாகவும் கொள்ளலாம்.                   73