1392. | இவ்வகை உரைசெய இருந்த வேந்து அவை. ‘செவ்வியோய்! நின் திருமகற்குத் தேயத்தோர் அவ்வவர்க்கு, அவ்வவர் ஆற்ற ஆற்றும் எவ்வம்இல் அன்பினை, இனிது கேள்’ எனா, |
இவ் வகை உரை செய - (தயரதன் ) இவ்வாறு வினவ; இருந்த வேந்து அவை -அங்கே இருந்த அரசர் கூட்டம்; செவ்வியோய் - (தயரதனை நோக்கி) செப்பமுடையோய்!; நின் திருமகற்கு - உன் மகன்மீது; தேயத்தோர் அவ்வவர்க்கு - அங்கங்கே பற்பலநாட்டில் உள்ளோரும்; அவ்வவர் ஆற்ற ஆற்றுறும் - அவரவர்களும் மிகவும் செய்கின்ற; எவ்வம் இல் அன்பினை - குறைவில்லாத அன்பினை; இனிது கேள் எனா - இன்பமாகக்கேட்பாய்’ என்று சொல்லி. இது முதல் நான்கு பாக்களும் ஒரு தொடர். திருமகற்கு - உருபு மயக்கம்; ‘கு’ ஏழனுருபில் வந்தது. 79 |