தயரதன் இராமனை மன்னர்க்குக் கையடை ஆக்குதல்

1396.மொழிந்தது கேட்டலும், மொய்த்து நெஞ்சினைப்
பொழிந்த பேர் உவகையன், பொங்கு காதலன்,
‘கழிந்தது என் துயர்’ எனக் களிக்கும் சிந்தையன்,
வழிந்த கண்ணீரினன், மன்னன் கூறுவான்.

     மொழிந்தது கேட்டலும் - அவ்வாறு அவையில் இருந்தவர்
கூறியதைக் கேட்டவுடனே;  மன்னன் - அரசனாகிய தயரதன்;  நெஞ்சினை
மொய்த்து -
மனத்தினில் முழுதும் நிரம்பி;பொழிந்த பேர் உவகையன் -
வெளிப்பட்ட மிக்க மகிழ்ச்சியையுடையவனும்;  பொங்குகாதலன் -
மேலிடுகின்ற அன்பையுடையவனும்;  கழிந்தது  என்துயர் என - ‘துன்பம்
நீங்கியவனானேன்’என்று; களிக்கும் சிந்தையன் - களிப்பை
வெளிப்படுத்தும் மனத்தை யுடையவனும்; வழிந்தகண்ணீரினன் -
மகிழ்ச்சியால் தானே வழிந்த கண்ணீரையுடையவனுமாகி;  கூறுவான் -
சொல்வான் ஆயினான்.

     நெஞ்சினை - வேறுமை மயக்கம்;   நெஞ்சில் என ஏழாம் வேற்றுமை
பொருளது.                                                   83