1408. | ‘பொருந்து நாள் நாளை, நின் புதல்வற்கு’ என்றனர், திருந்தினார்; அன்ன சொல் கேட்ட செய் கழல் பெருந் திண் மால் யானையான், ‘பிழைப்பு இல் செய் தவம் வருந்தினான் வருக’ என, வசிட்டன் எய்தினான். |
திருந்தினார் - (நூல்களில்) தேறியவர்களாகிய கணித நூல் அறிஞர்கள்; ‘நின்புதல்வற்கு - உன் மகனுக்கு, (முடி சூட்டுவதற்கு); பொருந்தும் - பொருத்தமான; நாள்- நல்ல நாள்; நாளை - நாளைக்கேயாகும்;’ என்றனர் - என்று சொன்னார்கள்; அன்ன சொல் கேட்ட - அந்த வார்த்தையைக் கேட்ட; செய்கழல் - புனைந்த வீரக்கழலணிந்த; பெருந்திண்மால் யானையான் - பெரிய வலிய மதமயக்கமுடைய யானையையுடையதயரதன்; ‘பிழைப்பு இல் செய்தவம் - தவறில்லாத தவத்தைச் செய்து; வருந்தினான்- வருத்திய மேனி உடைய வசிட்டன்; வருக என - வருக’ என்று அழைக்க; வசிட்டன்- வசிட்ட முனிவன்; எய்தினான் - வந்து சேர்ந்தான். திருந்தினார் என்றது கற்றறிவில் முற்றத்துறைபோய் அதன் பயனாய் வாழ்க்கையை முறைப்படுத்திக் கொண்டவர்கள். கடுமையான தவம் செய்தவன் என்பது தோன்ற ‘செய்தவம் வருந்தினான்’ என்று கூறினார். 10 |