வசிட்டன் இராமனிடம் ‘உனக்கு நாளை முடிசூட்டு விழா’ எனல்  

1411.ஒல்கல் இல் தவத்து உத்தமன், ஓது நூல்
மல்கு கேள்விய வள்ளலை நோக்கினான்;
‘புல்கு காதல் புரவலன், போர் வலாய்!
நல்கும் நானிலம் நாளை நினக்கு’ என்றான்.

     ஒல்கல் இல்தவத்து - தளர்ச்சி இல்லாத தவத்திற் சிறந்த;
உத்தமன்
-புண்ணியனாகிய  வசிட்டன்;  ஓதும் நூல் - கற்றற்குரிய
நூல்களையும்;  மல்குகேள்விய - நிரம்பிய கேள்வியறிவினையும் உடைய;
வள்ளலை - இராமனை; நோக்கினான்- பார்த்து;  போர்வலாய்! -
போரில் வல்லவனே!;  புல்கு காதல் புரவலன் -(உன்பால்)  நெருங்கிய
பிரியத்தை உடைய அரசன் தயரதன்;  நினக்கு - உனக்கு; நானிலம்-
அரசாட்சியை;  நாளை - நாளைக்கு;  நல்கும் - தருவான்; என்றான்-
என்று சொன்னான்.

     ஒல்குதல் - வளைதல்;  இங்கே தவத்துக்கு வளைதல் ஆவது 
தளர்ச்சியாதலின் தளர்ச்சியில்லாததவம் என்று உரை ஆயிற்று. கற்றறிவாகிய
நூற் கல்வியைக் கேள்வி பின்னும் அகலப்படுத்தலான்கேள்வியைப் பின்
வைத்தார். கேள்வியாவது - கேட்கப்படும்  நூல்களைக் கற்றறிந்தார் கூறக்
கேட்டல்.கற்றவழி அதனின் ஆய அறிவை வலியுத்தலானும், கல்லாத
வழியும் அதனை உண்டாக்குதலானும்  இது கல்வியின்பின்வைக்கப்பட்டது
என்ற பரிமேலழகர் உரையை இங்குக் கருதுக.  (குறள். 42ஆம் அதிகாரம்
முகவுரை).  நானிலம் - நால் நிலம் - முல்லை,  குறிஞ்சி, மருதம், நெய்தல்
என உலகம் நான்காகப்பகுக்கப்படுதலின் உலகத்தைக் குறிப்பதாயிற்று.
பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை.  அது ஈண்டு
உலகத்தை ஆளும் அரசாட்சியுரிமையைக் குறித்தது. ஆகுபெயர். கேள்விய -
கேள்விகளை உடைய - குறிப்புப் பெயரெச்சம்.                    13