1415. | அனையர் ஆதலின், ஐய! இவ் வெய்ய தீ - வினையின் நீங்கிய மேலவர் தாள் இணை புனையும் சென்னியையாய்ப் புகழ்ந்து ஏத்துதி; இனிய கூறி நின்று ஏயின செய்தியால். |
‘ஐய! - இராமனே; அனையர் ஆதலின் - (அந்தணர்) அத்தன்மையர் ஆகையால்; வெய்ய தீவினையின்நீங்கிய - கொடிய தீவினையிலிருந்து விலகிய; இம் மேலவர் - இந்த அந்தணரின்; தாள் இணை - திருவடி இணைகளை; புனையும் சென்னியையாய் - முடிமேல் சூடிக்கொண்டு; புகழ்ந்து ஏத்துதி - புகழ்ந்து துதித்து; இனிய கூறி - இன்மொழிகளைக் கூறிஅவர்களை உபசரித்து; ஏயின - அவர்கள் ஏவிய பணிகளை; நின்று - இருந்து; செய்தி - செய்வாயாக. அந்தணரிடம் நடந்துகொள்ளவேண்டிய முறைகளை இங்குக் கூறினார் வசிட்டர் என்க. ‘ஆல்’அசை. 17 |