1425. | ‘சீலம் அல்லன நீக்கி, செம்பொன் துலைத தாலம் அன்ன தனி நிலை தாங்கிய ஞால மன்னற்கு, நல்லவர் நோக்கிய காலம் அல்லது கண்ணும் உண்டாகுமோ? |
சீலம் அல்லன நீக்கி - நல்லொழுக்கத்திற்குப் படாதவைகளை நீக்கி; செம்பொன்துலைத் தாலம் அன்ன - சிவந்த பொன்னை நிறுத்துகின்ற தராசினது நடுநாவை ஒத்த; தனிநிலை- ஒப்பற்ற நடுவு நிலைமையை; தாங்கிய - உடைய; ஞால மன்னற்கு - உலகை ஆளும்அரசனுக்கு; நல்லவர் - அமைச்சர்கள்; நோக்கிய - ஆராய்ந்துரைத்த; காலம்அல்லது - பொழுது அல்லாமல்; கண்ணும் உண்டாகுமோ? - வேறு கண்ணும் உண்டாகுமோ?’ (இல்லை). நடுவு நிலைமை - பகை, நொதுமல், நட்பு என்னும் மூன்று திறத்தார் கண்ணும் அறத்தின் வழுவாதுஒப்ப நிற்கும் நிலைமை. தாலம் - தாலு - தாக்கு. துலையின் நடுமுள்ளை நாக்கு எனல் வழக்கு. நடுவு நிலைமைக்குத் துலாக்கோல் உவமையாதல்“சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் அமைந்து ஒருபாற், கோடாமை சான்றோர்க் கணி” என்பதிற் (குறல். 118) காண்க. பொன்னெடை என்பது மிகத் துல்லியமாக நிறுக்கப்படுவது; ஆதலின் ‘செம்பொன் துலை’ என்றார். நல்லவர் - இங்கு அமைச்சர். ‘காலமறிதல்’ என்னும் திருக்குறள்அதிகாரத்தின்கண் ‘காலம்’ அரசர்க்கு இன்றியமையாத சிறப்புடையது எனல் காண்க. 27 |