வசிட்டன் இராமனுக்கு உரிய சடங்குகள் இயற்றல்

1429. நண்ணி, நாகணை வள்ளலை நான்மறைப்
புண்ணியப் புனல்ஆட்டி, புலமையோர்
எண்ணும் நல்வினை முற்றுவித்து, எற்றினான்,
வெண் நிறத்த தருப்பை விரித்து அரோ.

     நாகணை வள்ளலை நண்ணி - அரவணையில் அறிதுயில் அமர்ந்த
அண்ணலைச் சென்றடைந்து;(வழிபட்டு அவனக்கு முன் இராமனை) 
நான்மறை - நால் வேத முறைப்படி அமைந்த;  புண்ணியப்புனல்
ஆட்டி-
நன்மையுடைய தீர்த்தங்களால் நீராட்டி; புலமையோர் எண்ணும்-
அறிவுடையோர் எண்ணுகின்ற;  நல்வினை - நல்ல சடங்குகளை;
முற்றுவித்து - முடியச்செய்து;  வெண்நிறத்த- வெண்மையான;  தருப்பை
விரித்து -
தருப்பைப் புல்லைப் பரப்பி; ஏற்றினான்- அதன்மேல்
எழுந்தருளச் செய்தான்.

     பட்டம் பெற்று முடிசூடுவார்க்கு முன்னர் நிகழும் சடங்குகளில்
திருமால் கோயிலில்  நீராட்டுதலும்ஒன்று போலும். முதல்நாள் விரதம்
இருக்கச் செய்தலின் தருப்பையைப் பரப்பி அதன்மேல் ஏறச்செய்தான்.
‘ஆயிர மௌலியான்’ தானம் அடைந்து; நாகணை வள்ளலை - இராமனை,
புனல் ஆட்டி என நேரே கூறலும்ஒன்று. நண்ணினான். என மேல் முடிய
இங்கு நண்ணி எனத் தொடங்கியது அந்தாதித்தொடை. ‘அரோ’-ஈற்றசை. 31