வசிட்டன் இராமனுக்கு உரிய சடங்குகள் இயற்றல் 1429. | நண்ணி, நாகணை வள்ளலை நான்மறைப் புண்ணியப் புனல்ஆட்டி, புலமையோர் எண்ணும் நல்வினை முற்றுவித்து, எற்றினான், வெண் நிறத்த தருப்பை விரித்து அரோ. |
நாகணை வள்ளலை நண்ணி - அரவணையில் அறிதுயில் அமர்ந்த அண்ணலைச் சென்றடைந்து;(வழிபட்டு அவனக்கு முன் இராமனை) நான்மறை - நால் வேத முறைப்படி அமைந்த; புண்ணியப்புனல் ஆட்டி- நன்மையுடைய தீர்த்தங்களால் நீராட்டி; புலமையோர் எண்ணும்- அறிவுடையோர் எண்ணுகின்ற; நல்வினை - நல்ல சடங்குகளை; முற்றுவித்து - முடியச்செய்து; வெண்நிறத்த- வெண்மையான; தருப்பை விரித்து - தருப்பைப் புல்லைப் பரப்பி; ஏற்றினான்- அதன்மேல் எழுந்தருளச் செய்தான். பட்டம் பெற்று முடிசூடுவார்க்கு முன்னர் நிகழும் சடங்குகளில் திருமால் கோயிலில் நீராட்டுதலும்ஒன்று போலும். முதல்நாள் விரதம் இருக்கச் செய்தலின் தருப்பையைப் பரப்பி அதன்மேல் ஏறச்செய்தான். ‘ஆயிர மௌலியான்’ தானம் அடைந்து; நாகணை வள்ளலை - இராமனை, புனல் ஆட்டி என நேரே கூறலும்ஒன்று. நண்ணினான். என மேல் முடிய இங்கு நண்ணி எனத் தொடங்கியது அந்தாதித்தொடை. ‘அரோ’-ஈற்றசை. 31 |