தயரதன் நகரை அழகுசெய்ய ஆணையிடல்  

1430.ஏற்றிட, ஆண்தகை இனிது இருந்துழி,
நூல் தட மார்பனும், நொய்தின் எய்தப்போய்,
ஆற்றல் சால் அரசனுக்கு அறிவித்தான்; அவன்,
‘சாற்றுக, நகர் அணி சமைக்க’ என்றனன்.

     ஏற்றிட - (தர்ப்பாசனத்தில்) இருக்கச்செய்ய;  ஆண்தகை - இராமன்;
இனிது  இருந்துழி - (விரதாதி சடங்குகளைச் செய்து கொண்டு)
இனிமையாக இருந்தபொழுது; நூல்  தடமார்பனும் - முப்புரி  நூலைத்
தரித்த அகன்ற மார்பினை உடைய வசிட்டனம்; நொய்தின் எய்தப் போய்-
விரைவாக அடையச் சென்று; ஆற்றல்சால் அரசனுக்கு -வலிமை மிகுந்த
சக்கரவர்த்திக்கு; அறிவித்தான் - (செய்தியைத் ) தெரிவித்தான்;அவன் -
அம்மன்னவன்; ‘நகர் அணி சமைக்க - நகரத்தை அழகு செய்ய; சாற்றுக-
பறையறைவிப்பீராக;  என்றனன் - என்று சொன்னான்.

     இருந்த உழி - இருந்துழி,  விகாரம். எய்த - அருகில்,  வசிட்டன்
இராமனுக்கு உரிய சடங்குகள்நிறைவேற்றப்பட்ட செய்தியைத் தெரிவித்தான்.
அதன் பின்னர் முரசு அறைக என்றான் தயரதன்.                    32