1436. | மங்கையர் குறங்கு என வகுத்த, வாழைகள்;- அங்கு - அவர் கழுத்து எனக் கமுகம் ஆர்ந்தன; தங்கு ஒளி முறுவலின் தாமம் நான்றன; கொங்கையை நிகர்த்தன, கனக கும்பமே. |
அங்கு - அயோத்தியில்; மங்கையர் குறங்கு என- மாதரது தொடை போல; வாழைகள் - வாழை மரங்கள்; வகுத்த - நிறுத்தப் பட்டன; அவர் கழுத்து எனக்கமுகம் ஆர்ந்தன - அம்மகளிர் கழுத்துப் போலக் கமுக மரங்கள் நிறைந்தன; தங்கு ஒளி முறுவலின்- (அவரிடத்தே) வெள்ளொளி நிறைந்த புன்சிரிப்புப் போல; தாமம் நான்றன - முத்துமாலைகள் தொங்கின; கனகக் கும்பம் - பொன்மயமான பூர்ண கும்பங்கள்; கொங்கையை நிகர்த்தன - மகளிரது தனங்களை ஒத்து விளங்கின. வாழை, கமுகு நிறைத்து, முத்துமாலைகள் தொங்கவிட்டு, பூர்ண கும்பங்கள் வைத்து நகரைஅழுகுபடுத்தினர். பெண்களைப் பற்றிய உவமைகளே அனைத்துக்கும் கூறியது நயம். வாழை திரட்சிக்கும், கமுகு வரைக்கும் மென்மைக்கும், தாமம் வெண்மைக்கும் வரிசைக்கும், கும்பம் வடிவமைப்புக்கும், ஒளிக்கும்உவமையாயின, இங்கே மரபுவழி உவமைகள் உவமேயங்களாக வந்தமை காண்க. ‘ஏ’ காரம் ஈற்றசை. 38 |