1440. | ஆடல் மான் தேர்க் குழாம், அவனி காணிய, வீடு எனும் உலகின் வீழ் விமானம் போன்றன; ஓடை மாக் கட களிறு, உதய மால் வரை தேட அருங் கதிரொடும் திரிவ போன்றவே. |
ஆடல் மான் - பல்விதமான செலவுகளினால் நடனம் இடுவது போன்ற குதிரைகள் பூட்டப்பெற்ற; தேர்க் குழாம் - தேர்த் தொகுதிகள்; அவனி காணிய - மண்ணுலகினைக்காணும் பொருட்டு; வீடு எனும் உலகின் வீழ் - சுவர்க்கம் என்கின்ற உலகத்திருந்தும்இறங்கிய; விமானம் போன்றன - விமானத்தை ஒத்தன; ஓடை மாக் கட களிறு - முகபடாம் அணிந்த பெரிய மதம் உடைய யானைகள்; உதய மால் வரை - பெரிய உதயமலை; தேட அருங்கதிரொடும்- ஒப்புச் சொல்லுதற்கரிய சூரியனோடும்; திரிவ போன்ற - நகர வீதிகளில் திரிவனவற்றை ஒத்திருந்தன. வீதிகளில் குதிரை பூட்டிய தேர்களையும், முகபடாம் அணிந்த யானைகளையும் விமானம் ஆகவும்,உதய மலையாகவும் வருணித்தார். ஐங்கதி உடையமையால் ஆடல்மான் என்றார். ஐந்து கதியாவன; மல்ல கதி, மயூர கதி, வியாக்கிர கதி, வானர கதி, இடப கதி என்பன. பல்வேறு வகையான ஓட்டங்களைஇங்கே ஆடல் என்றார். ‘ஏ’ காரம் ஈற்றசை. 42 |