1441. | வளம் கெழு திரு நகர் - வைகும் வைகலும், பளிங்குடை நெடுஞ் சுவர் படுத்த பந்தியில் கிளர்ந்து எறி சுடர் மணி இருளைக் கீறலால், - வளர்ந்தில, பிறந்தில, செக்கர் வானமே. |
வளம் கெழு திருநகர் - வளம் பொருந்திய அழகிய அயோத்தி நகரில்; வைகும்- பொருந்திய; பளிங்குடை நெடுஞ்சுவர் - பளிங்குக் கற்களையுடைய பெரிய சுவர்களில்;படுத்த பந்தியில் கிளர்ந்து எறிசுடர்மணி - சேர்த்தமைத்த வரிசையாய் அமைந்துமிக்கு மேலேறிப் பிரகாசிக்கின்ற ஒளிபடைத்த செம்மணிகள்; வைகலும் - நாள்தோறும்; இருளைக் கீறலால் - மாலைப் பொழுதில் மேல் எழும் இருளைப் போக்குதலால்; செக்கர்வானம் - செவ்வானமானது; (அங்கு) பிறந்தில - புதிதாகத் தோன்றவில்லை; வளர்ந்தில- வளரவும் இல்லை. பளிங்குச் சுவரில் பதித்த செம்மணிகள் இருள் கீற ஒளிர்கின்றன. செவ்வானம் போல உள்ளன.மாலையில் தோன்றி மறையும் செவ்வானம் இந்நகரில் எப்பொழுதும் ஒரு தன்மையாக இருந்தது; தோன்றவும் வளரவும் இல்லை என்று படியாம். ‘ஏ’ காரம் ஈற்றசை. 43 |