1443. | காரொடு தொடர் மதக் களிறு சென்றன. வாரொடு தொடர் கழல் மைந்தர் ஆம் என; தாரொடு நடந்தன பிடிகள், தாழ் கலைத் தேரொடு நடக்கும் அத் தெரிவைமாரினே. |
வாரொடு தொடர் கழல் மைந்தர் ஆம் என - வார்கயிற்றாற் கட்டிய வீரக்கழலை உடைய வீரர் போல; காரொடு தொடர் மதக் களிறு சென்றன - மேகத்தோடு ஒப்புமை பற்றுகின்ற மதநீர் உடைய யானைகள் சென்றன; தாழ்கலைத் தேரொடு - தொங்கக்கூடிய மேகலை யணிந்த தேர் போன்ற அல்குலோடு; நடக்கும்-நடந்து செல்லும்; அத் தெரிவைமாரின்- அந்நாட்டுப்பெண்களைப் போல; பிடிகள் - பெண் யாணைகள்; தாரொடு நடந்தன - தம்மேல்கட்டிய கிண்கிணி மாலையுடன் சென்றன. அழகுபடுத்தப் பெற்ற களிறும் பிடியும் அந்நகரில் நடந்து சென்ற காட்சியை மைந்தரும் மாதரும் போல என்று வருணித்தார்; ‘வார்’ - தோற்கயிறு; வீரக் கழலைக் கட்டப் பயன்படுவது. தார் - கிண்கிணிச் சதங்கை கோத்த மாலை. ‘கலைத்தேர்’ அல்குலுக்கு வெளிப்படை. கலை - மேகலை, முதற்குறை, மேகலை யணிந்த தேர் எனவே அல்குலாயிற்று. இனி, இதனையே அந்நகரில் மைந்தர்களிறு போலச் சென்றனர் என்றும், தெரிவைமார் பிடிபோல நடந்தனர் எனவும் கொள்ள வைத்தநயம் அறிந்து மகிழற்பாலது, ‘ஏ’ காரம் ஈற்றசை. 45 |