1453.‘பராவ அரும் புதல்வரைப் பயக்க, யாவரும்
உராவ அருந் துயரை விட்டு, உறுதி காண்பரால்;
விராவ அரும் புவிக்கு எலாம் வேதமே அன
இராமனைப் பயந்த எற்கு இடர் உண்டோ?’ என்றாள்.

     ‘பராவ அரும் - புகழ்தற்கு அரிய;  (நற்குணம் உள்ள) புதல்வரைப்
பயக்க -
புத்திரரைப் பெறலால்;  யாவரும் - எல்லோரும்;  உராவ அருந்
துயரைவிட்டு -
பிறரால்நீங்குதற்கரிய வலிய துன்பத்தை விட்டு; உறுதி
காண்பர் -
நற்கதி அடைவர்; விராவ அரும் புவிக்கு எலாம் -
ஒன்றோடொன்று கலவாத தனி வேறான உலகங்களுக்கு எல்லாம்;வேதமே
அன
- வேதத்தைப் போன்று விளங்குகின்ற; இராமனைப் பயந்த எற்கு -
இராமனைப்பெற்றெடுத்த எனக்கு; இடர் உண்டோ? - துன்பம்
உளதாகுமோ?;’ என்றாள் - என்றும்கூறினாள்.

     புத்திரரைப் பெற்றவர்கள் பிறரால் நீக்குதற்கரிய ‘புத்’ என்னும் நரகத்
துன்பத்திலிருந்தும் நீங்குவார்கள்; நற்கதி அடைவார்கள் என்று அனைவரும்
கூறுவர்; எல்லா உலகங்களுக்கும் வேதமே போல் விளங்கும் இராமனைப்
பெற்ற எனக்குத் துன்பம் உண்டோ என்று வினாவினாள்; மேற்பாட்டில்
சிறுவர் என்று நால்வரையும் பொதுவாகச் சொன்னவள் இப்பாட்டில்
இராமனைப் பிரித்துப் பாராட்டி அன்பினால் நெகிழ்ந்தாளாம். ‘ஆல்’
ஈற்றசை.                                                     55