1453. | ‘பராவ அரும் புதல்வரைப் பயக்க, யாவரும் உராவ அருந் துயரை விட்டு, உறுதி காண்பரால்; விராவ அரும் புவிக்கு எலாம் வேதமே அன இராமனைப் பயந்த எற்கு இடர் உண்டோ?’ என்றாள். |
‘பராவ அரும் - புகழ்தற்கு அரிய; (நற்குணம் உள்ள) புதல்வரைப் பயக்க -புத்திரரைப் பெறலால்; யாவரும் - எல்லோரும்; உராவ அருந் துயரைவிட்டு - பிறரால்நீங்குதற்கரிய வலிய துன்பத்தை விட்டு; உறுதி காண்பர் - நற்கதி அடைவர்; விராவ அரும் புவிக்கு எலாம் - ஒன்றோடொன்று கலவாத தனி வேறான உலகங்களுக்கு எல்லாம்;வேதமே அன - வேதத்தைப் போன்று விளங்குகின்ற; இராமனைப் பயந்த எற்கு - இராமனைப்பெற்றெடுத்த எனக்கு; இடர் உண்டோ? - துன்பம் உளதாகுமோ?;’ என்றாள் - என்றும்கூறினாள். புத்திரரைப் பெற்றவர்கள் பிறரால் நீக்குதற்கரிய ‘புத்’ என்னும் நரகத் துன்பத்திலிருந்தும் நீங்குவார்கள்; நற்கதி அடைவார்கள் என்று அனைவரும் கூறுவர்; எல்லா உலகங்களுக்கும் வேதமே போல் விளங்கும் இராமனைப் பெற்ற எனக்குத் துன்பம் உண்டோ என்று வினாவினாள்; மேற்பாட்டில் சிறுவர் என்று நால்வரையும் பொதுவாகச் சொன்னவள் இப்பாட்டில் இராமனைப் பிரித்துப் பாராட்டி அன்பினால் நெகிழ்ந்தாளாம். ‘ஆல்’ ஈற்றசை. 55 |