1464. | ‘பண்ணுறு கட கரிப் பரதன், பார் மகள் கண்ணுறு கவினராய் இனிது காத்த அம் மண்ணுறு முரசுடை மன்னர் மாலையில் எண்ணுறப் பிறந்திலன்; இறத்தல் நன்று’ என்றாள். |
‘பண்உறு-அலங்கரித்தல் அமைந்த; கடகரி - மத யானையையுடைய; பரதன்-; பார்மகள் கண்ணுறு கவினராய் - நிலமகள் விரும்பத் தக்க அழகுடையவராய்; இனிது காத்த - இனிமையாக அரசாண்ட; அம்மண்ணுறு முரசுடை மன்னர் மாலையில் -அந்த மார்ச்சனை செறிந்த முரசத்தினை உடைய அரசர் வரிசையில் வைத்து; எண்ணுற - நினைக்குமாறு(அரசனாக); பிறந்திலன் - பிறக்கவில்லை; இறத்தல் நன்று - (எனவே) உயிர்வாழ்வதனினும்இறப்பதே மேல்;’ என்றாள் - அரசனாகும் பேறு இல்லாதவன் அரசகுலத்தில் பிறந்து வாழ்வதைவிடச் சாவதே மேல் என்றுபரதனுக்காக இரங்கினாளாம். மன்னர் மாலை - அரச பரம்பரை வரிசை. அது குலமுறை கிளத்து படலத்திற்கூறியவாற்றான் உணர்க. மண் - மார்ச்சனை - அஃதாவது ஒலிச்செறிவு ஆகும். அது மண்பூசப் பெறுதலால்உளதாகும் என்பர். 66 |