1480. | ‘காதல் உன் பெருங் கணவனை அஞ்சி, அக் கனி வாய்ச் சீதை தந்தை, உன் தாதையைத் தெறுகிலன்; இராமன் மாதுலன் அவன்; நுந்தைக்கு வாழ்வு இனி உண்டோ? பேதை! உன்துணை யார் உளர் பழிபடப் பிறந்தார்? |
‘பேதை! - அறிவில்லாதவளே!; காதல் உன் பெருங்கணவனை அஞ்சி - உன்மேல்அளவிறந்த அன்புடைய உன் உயரிய நாயகனான தயரதனுக்குப் பயந்து; அக்கனி வாய்ச் சீதை தந்தை- அந்தக் கொவ்வைக் கனிபோலச்சிவந்த வாயையுடைய சீதையின் தந்தையாகிய சனகன்; உன் தாதையைத் தெறுகிலன் - உன்னுடையதந்தையாகிய கேகய ராசன் மீது படையெடுத்து அழித்திலன்; அவன் இராமன் மாதுலன் - அந்தசனகன் இராமனுக்கு மாமன்; நுந்தைக்கு இனி வாழ்வு உண்டோ!? - (இராமன் சக்கரவத்தியானால்சனகன் கை ஓங்கிவிடும்) உன் தந்தையாகிய கேகயனுக்கு இனி வாழ்வு உண்டா? (அழிவுதான்); உன்துணை- உன்னளவுக்கு; பழிபடப் பிறந்தார் யார் உளர்? - பழி உண்டாகும் படி பிறந்தவர்கள்யார் இருக்கின்றார்கள்’ (ஒருவரும் இல்லை). புகழ் இல்லாமற் போனாலும் போகட்டும் என்றால், பழியல்லவா உண்டாகும் போல் உள்ளதேஎன்றாள் கூனி, தசரதனுக்குக் கட்டுப்பட்டு சனகன் சும்மா இருக்கிறான்; எதிர்காலத்தில் இராமன்அரசனானால் சனகன் சும்மா இரான் என்றாள். சனகனுக்கும் கேகயனுக்கும் இயற்கையில் பகை உண்டு என்பதும்இதனால் விளங்கும். 82 |