1481. | ‘மற்றும் நுந்தைக்கு வான் பகை பெரிது உள; மறத்தார் செற்றபோது, இவர் சென்று உதவார் எனில், செருவில் கொற்றம் என்பது ஒன்று, எவ் வழி உண்டு? அது கூறாய்! சுற்றமும் கெட, சுடு துயர்க் கடல் விழத் துணிந்தாய்! |
‘மற்றும்- மேற்சொல்லியதன்மேலும்; நுந்தைக்கு - உன் தந்தையாகிய கேகயனுக்கு;வான் பெரிது பகை உள - மிகப் பெரிய பகைகள் இருக்கின்றன; மறத்தார் - அப்பகைவர்கள்; செற்ற போது - (உன் தந்தையை அழிக்கப்) போரிட முனைந்தபோது; இவர்- கோசல நாட்டார்; சென்று உதவார் எனில் - (உன் தந்தைக்கு உதவி யாகச்) சென்றுபோரில் உதவாவிட்டால்; செருவில் - சண்டையில்; கொற்றம் என்பது ஒன்று - வெற்றி என்பதாகிய ஒன்று; எவ்வழி உண்டு? - எப்படி எவ்விதத்தில் (உன் தந்தைக்கு)உண்டாகும்; அது கூறாய் - அந்த வழியைச் சொல்லு (ஆகவே); சுற்றமும் கெட - உறவின்முறையாரும் அழிய; சுடு துயர்க்கடல் விழ - சுடுகின்ற துன்பக் கடலில் (நீயும்) விழுவதற்கு;துணிந்தாய் - உறுதி கொண்டு விட்டாய் ( போலும்).’ இறுதி வரியைவிளியாகவும் கொள்ளலாம். சனகன் போர் செய்யாவிடினும்வேறு அரசர்கள் உன் தந்தையோடு போர்செய்ய வரின் இராமன் உதவ வருவானோ? வாரான். எனவே, நீஉன் குலத்தையும் அழிக்க வழி செய்து கொண்டுள்ளாய்என்றாள் கூனி. கேகயனுக்குப் பகை மிகுதி உண்டு என்பதும் இதனால் போதரும். இவற்றால்உன் பெற்றோரைக் கருதியும் பரதனை அரசனாக்க வேண்டிய கட்டாயம் உனக்கு உளது என்றாளாம். 83 |