மந்தரை உரைத்த உபாயம்  

1487.‘நாடி ஒன்று உனக்கு உரைசெய்வென்;
     நளிர் மணி நகையாய்!
தோடு இவர்ந்த தார்ச் சம்பரன்
     தொலைவுற்ற வேலை
ஆடல் வென்றியான் அருளிய வரம்
     அவை இரண்டும்
கோடி’ என்றனள், உள்ளமும்
     கோடிய கொடியாள்.

     உள்ளமும்  கோடிய கொடியாள் - உடம்பு வளைந்து  கூனி
யானாற்போல;  உள்ளமும் கோணிப்போனகொடியவளாய மந்தரை;
‘நளிர்மணி நகையாய்! - குளிர்ந்த முத்துமணியைப் போன்ற புன்சிரிப்பை
உடையவளே!;  உனக்கு -;  ஒன்று  நாடி உரைசெய்வென் - ஒரு
செய்தியை ஆராய்ந்துசொல்லுகிறேன்; தோடு இவர்ந்த தார்ச் சம்பரன்-
பூவிதழ் செறிந்த வெற்றிமாலை அணிந்தசம்பராசுரன்; தொலைவுற்ற
வேலை
- போரில் (தயரதன்பால்) தோல்வியுற்று அழிந்தபோது;ஆடல்
வென்றியான் -
விளையாட்டாகப் போரில் வெற்றி சூடும் தயரதன்;
அருளிய -உனக்குக் கொடுத்த;  வரம் அவை இரண்டும் - இரண்டு
வரங்களாகிய  அவற்றை; கோடி’ - (இப்போது அவனிடம்) கொள்வாயாக;’ 
என்றனள் - என்று  (உபாயம்) கூறினாள்.

     சம்பராகர யுத்தத்தில் தயரதனுக்குத் தேர்ச்சாரதியாக இருந்தவள்
கைகேயி. அப்போது ஓர்அபாயத்தில் தயரதனை மீட்டதற்கு அவன் உவந்து
அவளுக்கு இரு வரம் பெறுக எனக் கொடுத்தான். அவள்வேண்டும்போது
பெறுவதாகச் சொல்லி அப்போது கொள்ளாது அவ்வரங்களை விட்டாள்;
அவற்றை அவன்பால் இப்போது  கேட்டுப் பெறுக என்றாள் மந்தரை.
‘அருளிய’ என்றதனால் தயரதன் தானே உள்ள முவந்துதந்த வரங்கள்,
மறுக்க வொண்ணாதவை என்பது  போதரும். ‘உள்ளமும்’ என்ற உம்மை
எச்சவும்மை; உடலேயன்றி எனலின் இறந்தது  தழீஇய எச்சவும்மையாம்.
விளையாட்டுப் போல் வெற்றி பெறுபவன்என்பதனை ஆடல் வென்றியான்
என்றார் - போர்த் தொழில் எளிது என்பது தோன்ற. இனி ஆடல்- போர்த்
தொழிலில். வென்றியான் - வெற்றிசூடுபவன் எனவும் உரைக்கலாம்.      89