1488.‘இரு வரத்தினில், ஒன்றினால்
     அரசு கொண்டு, இராமன்
பெரு வனத்திடை ஏழ் - இரு
     பருவங்கள் பெயர்ந்து
திரிதரச் செய்தி, ஒன்றினால்;
     செழு நிலம் எல்லாம்.
ஒருவழிப்படும் உன் மகற்கு;
     உபாயம் ஈது’ என்றாள்.

     ‘இரு வரத்தினில் - அவ்விரண்டு வரங்களுள்; ஒன்றினால் - ஒரு
வரத்தால்;அரசு கொண்டு - அரசாட்சியை  உன் மகனதாக
ஆக்கிக்கொண்டு;  ஒன்றினால் - மற்றொன்றினால்;இராமன் -;
பெருவனத்திடை -
பெரிய காட்டின்கண்;  ஏழ் - இருபருவங்கள் -
பதினான்கு ஆண்டுகள்;  பெயர்ந்து  திரிதரச் செய்தி -
(அயோத்தியிலிருந்து)நீங்கி ஓரிடத்தில் இல்லாமல் சுற்றியலையச்
செய்வாயாக;  (செய்தால்) உன் மகற்கு -உன் மகனாகிய  பரதனுக்கு;
செழுநிலம் எல்லாம் - வளப்பமான உலகமுழுதும்;  ஒரு வழிப்படும்-
அடங்கி நேர்படும்;  ஈது  உபாயம் - இதுவே உபாயமாகும்;  என்றாள் -

     பருவம் என்பது  இங்கு ஆண்டைக் குறித்தது.  கூனிக்கு இராமன்பால்
உள்ள சீற்றம் இங்குவிளங்குகிறது. ‘பெருவனம்’ என்பதும், ‘திரிதரச் செய்தி’
என்பதும் அதைக் காட்டும், பரதனுக்குஅரசு கிடைப்பதைவிட, இராமன் காடு
செல்வதிலேயே கூனிக்கு நாட்டம். இராமன் ஏன் காடு செல்ல வேண்டும்
என்று கைகேயி கேட்கக் கூடும் என்று கருதி இராமன் இங்கேயே இருந்தால்
நாடு பரதன் வசப்படாது;ஆதலால்,  நாடு முழுவதும் பரதன் வசப்படி
வேண்டுமாயின் இராமன் கோசலத்தில் இல்லாமல் இருப்பதுதான்நல்லது
என்றாள் கூனி.  இராமன் காடு செல்ல வரம் கேட்டு அவனைக் காட்டுக்கு
அனுப்பிவிட்டால் இருப்பவருள் மூத்தவன் பரதன் நாடாள்வதில் சிக்கல்
இல்லை; முறையும் தவறாது என்று கருதினாள்எனலும் ஆம். இம்முறையில்
இராமனைக் காட்டுக்கு அனுப்ப ஒரு வரம் கேட்டலே  போதும் ‘செழுநிலம்
எல்லாம் உன் மகற்கு வழிப்படும்’ என்றும் கூனி நினைத்துரைத்தாள் எனலும்
ஆம்.                                                        90